“சரி டா, நீ போய் பேர் கொடு”, என்று மதன் சொல்ல சந்தோஷமாக போனை வைத்தான் ராகவன்.
“என்ன ராகவா? அப்பா சரின்னு சொல்லிட்டாங்களா?”, என்று அவன் சந்தோசத்தைப் பார்த்துக் கேட்டார் சிதம்பரம்.
“ஆமா சார், பேர் கொடுக்கச் சொல்லிட்டாங்க”
“சரி உன் பேரை நான் அனுப்பிறேன்”
“சரி சார்”
“ஓகே இன்னைல இருந்தே ஓடி எடுத்துகோ. நல்லா பிரிப்பர் பண்ணு. என்ன ஹெல்ப் வேணும்னாலும் என் கிட்ட கேளு. ஏதாவது இன்ஸ்ட்ரூமென்ட் அரெஞ்ச் பண்ணுறதுனாலும் பண்ணுறேன்”
“அதெல்லாம் வேண்டாம் சார். ஆனா ஒரு ஹெல்ப் பண்ணனும்”
“உங்க ஹாஸ்டல்ல கண்டிப்பா முடியாது. பசங்களா அவனுங்க? சரி நீ தாராளமா லீவ் எடுத்துக்கோ. நான் உன் கிளாஸ் இன்சார்ஜ் கிட்ட, ஹெச்.ஓ.டி கிட்ட அப்புறம் ஹாஸ்டல் வார்டன் கிட்ட பேசிறேன்”
“தேங்க் யு சார்”, என்று எழுந்து கொண்டான். “அப்புறம் ராகவன் ஒரு நிமிஷம்”
“சார்”
“என்னோட ஃபிரண்ட், உசைன்னு பேர். அவன் இப்ப நிறைய படத்துக்கு மியூசிக் பண்ணுறான். அவன் கிட்ட உன்னை அறிமுகம் பண்ணவா? உனக்கு படத்துல பாட சான்ஸ் கிடைக்கும்? இப்பவே பேசட்டுமா?”
“வேண்டாம் சார்”
“ஏன் ராகவன்? படத்துல ஒரு பாட்டு பாடினா உன் பேர் ரொம்ப பாப்புலர் ஆகிரும் பா. நான் பேசுறேன்”
“அதெல்லாம் வேண்டாம் சார்”
“ஏன் பா, நல்ல சான்ஸை வேண்டாம்னு சொல்ற?”
“நான் ஏற்கனவே சினிமால பாட்டு பாடிட்டு தான் இருக்கேன் சார். இது வரை ஏழு பாட்டு பாடிருக்கேன். ரெண்டு சிறந்த பாடகருக்கான விருது வாங்கிருக்கேன்”
“வாட்? என்னப்பா சொல்ற?”
“உண்மையா தான் சொல்றேன்”, என்று சொன்னவன் தான் பாடிய பாடல்களைப் பற்றியும் தந்தை சொன்னதைப் பற்றியும் சொன்னான்.
“ஓ காட், இது எவ்வளவு பெரிய பெருமை தெரியுமா? நான் இப்பவே எல்லா ஸ்டுடண்ட் கிட்டயும் சொல்லப் போறேன்”, என்றார் சிதம்பரம் .
“வேண்டாம் சார். இந்த காம்பெடிசன்ல கலந்து வின் பண்ணின பிறகு எல்லாருக்கும் தெரிஞ்சா போதும். அது வரை உங்க மனசுல வச்சிக்கோங்க”
“நீ நல்லா வருவப்பா. ஆல் தீ பெஸ்ட். நீ இப்பவே ஊருக்கு கிளம்பு”, என்று சொன்னதும் அவரிடம் தலையாட்டி விட்டு வந்தான்.
அவனைப் பற்றி பெருமையாக அனைவருக்கும் சொல்ல இப்போதே ஆசை வந்தது சிதம்பரத்துக்கு. ஆனால் அவன் சொன்னதால் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டார்.
ராகவன் ஊருக்கு கிளம்பினான். தன்னுடைய வீட்டில்; தன்னுடைய அறையில் புது பாட்டுக்கான பாடல் வரிகளை யோசித்தான். பெண்ணைப் பற்றிய வரிகள் அவன் மனதில் தோன்ற அவன் மனக் கண்ணில் உலா வந்தாள் ஸ்ருதி. அவனைக் கண்டதும் அவள் முகம் மலர்வதையும், தனக்காக அவள் ஏங்கித் தவிப்பதையும் அப்படியே பாடலாக வர்ணித்தான். அதற்கு மெட்டு போட்டு டியூன் போட்டு பாடலாக தயார் செய்து விட்டான்.
ஒரு வழியாக அந்த போட்டி நடக்கும் நாளும் வந்தது. அவன் சார்பில் மதன் மட்டும் அவனுடன் வந்திருந்தார். சினிமா பாடல் பாடக் கூடாது என்பதால் குறைந்த பேர் தான் அதில் பங்கேற்றிருந்தார்கள். ராகவன் முறை வந்ததும் மேடையில் ஏறி பாடினான். அவன் கைகள் இன்ஸ்ட்ரூமென்ட் வாசிக்க அவன் உதடுகள் பாடின.
அனைவரும் அவனுடைய குரலிலும் அந்த மென்மையான இசையிலும் மயங்கிப் போனார்கள். அதை வீடியோ எடுத்துக் கொண்டிருந்த மதன் மகனின் திறமையைக் கண்டு வாயடைத்துப் போனார்.
ஆனால் அவனோ சுற்றி இருந்த யாரையுமே கவனிக்க வில்லை. அவன் கண்கள் மூடியிருக்க மனமோ கனவில் திளைத்தது. பாடல் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரைக்குமே அவன் மனதில் இருந்தது ஸ்ருதி தான்.
அவன் பாடி முடித்ததும் அரங்கமே கை தட்டியது. சிறு புன்னகையுடன் தந்தை அருகில் வந்து அமர்ந்தான். அவனைக் கண்டு சந்தோசத்தில் அவர் கண்கள் கலங்க அவர் கையை ஆதரவாக பற்றிக் கொண்டான் ராகவன்.
அவனுக்கு அடுத்து மற்ற ஆட்களும் பாட ஆரம்பித்தார்கள். அனைவரும் பாடியதும் வின்னர் பற்றிய அறிவிப்புகள் மற்றொரு நாள் அறிவிக்கப் படும் என்று சொல்ல ராகவன் தந்தையை ஊருக்கு போகச் சொல்லி விட்டு ஹாஸ்டலுக்கு சென்றான்.
மதனோ ஊருக்கு போகாமல் மியூசிக் டேரெக்டர் சேகரைத் தான் காணச் சென்றார். அவரை வரவேற்று அமர வைத்த சேகர் “என்ன மதன் திடீர்னு இங்க வந்துருக்கீங்க?”, என்று கேட்டார்.
“போன வாரம் பாடின பாட்டை ராகவன் நல்லா பாடினானா சார்?”
“சூப்பரா பாடிட்டான் மதன். படம் ரிலீஸ் ஆன அப்புறம் பாருங்க. அந்த பாட்டு மக்களிடையே பிச்சிக்கிட்டு போகும். நீங்க என்ன விசயமா வந்தீங்க?”, என்று சேகர் கேட்டதும் இன்று நடந்த இசைப் போட்டி பற்றிச் சொன்ன மதன் தான் எடுத்த வீடியோவை அவரிடம் காட்டினார்.
“வாவ், சூப்பரா இருக்கு. இது ராகவனே உருவாக்கின பாட்டா? என்னால நம்பவே முடியலை. அவன் குரல் வளம் எனக்கு தெரியும். ஆனா மியூசிக்கும் இவ்வளவு அழகா பண்ணுவான்னு தெரியாது. நான் முன்னமே சொல்லலை. இவன் பெரிய ஆளா வருவான்னு. புருவ் பண்ணிட்டான் மதன். கண்டிப்பா இவனுக்கு தான் இந்த அவார்ட் கிடைக்கும். அதுல எந்த சந்தேகமும் இல்லை”
“தெரியும் சார். அப்புறம் இனி படத்துல பாடல் பாடியவர் பேர் போட்டா ராகவன் பேரையே போட்டுருங்க”, என்று மதன் சொல்லி விட “மதன்?”, என்று ஆச்சர்யமாக அழைத்தார் சேகர்.
“ஆமா சார். அவன் தான் என்னோட ஆசையை நிறைவேத்துறான்ல? அப்ப அவனுக்கு கிடைக்கிற பெருமையை நான் தடுக்க கூடாது தானே?”
“நல்ல முடிவு. கண்டிப்பா ராகவன் டிகிரியை முடிப்பான். அதே நேரம் இந்த மாதிரி வர வாய்ப்பை அவன் தக்க வச்சிக்கணும் மதன். கண்டிப்பா அவன் பெரிய ஆளா வருவான். நாம அவனை முடக்கி போடக் கூடாது”
“எனக்கும் நம்பிக்கை இருக்கு சார். கண்டிப்பா அவன் பெரிய ஆளா வருவான்”
“அப்படின்னா அவனை எனக்கு வர அடுத்த படத்துக்கு மியூசிக் போடச் சொல்லவா?”, என்று சேகர் சிரிப்புடன் கேட்க “சார்”, என்று அதிர்ந்து போனார் மதன்.
“எனக்கு நிறைய படம் வரிசைல இருக்கு மதன். என்னால தனியா எதையும் செய்ய முடியலை. இந்த ரிசல்ட் வந்ததும் ராகவன் கண்டிப்பா பாப்புலர் ஆகிறுவான். எல்லாரும் அவனை பிடிக்கிறதுக்கு முன்னாடி நான் பிடிக்கணும்ல? என்ன என் வாய்ப்பை ஏத்துக்குவானா?”
“ரொம்ப சந்தோஷம் சார். அவன் புகழை இத்தனை நாள் தடுத்த மாதிரி இனி தடுக்க மாட்டேன். நீங்க தான் அவனை வளர வச்சீங்க. இனியும் நீங்களே அவனைப் பாத்துக்கோங்க. நான் கிளம்புறேன்”
“சரி மதன், நீங்க கிளம்புங்க. நான் நாளைக்கு ராகவனை காலேஜ்ல போய் பாத்து பேசிக்கிறேன்”, என்று சொல்ல சந்தோசமாக கிளம்பினார் மதன். மகனுக்கு நியாயம் செய்து விட்டோம் என்ற மனநிறைவு அவருக்கு வந்திருந்தது.
அடுத்த நாள் சொன்னது போலவே ராகவனைத் தேடிச் சென்றார் சேகர். அவனுக்கு பட வாய்ப்பு கொடுக்க பட அதுவும் மதனும் அனுமதி கொடுத்திருப்பது தெரிந்ததும் சந்தோசத்தில் திக்கு முக்காடிப் போனான்.
“சார் ஒரு படம் முழுக்க என்னோட இசையா? என்னால இது முடியுமா?”, என்று வியப்பாக கேட்டான்.
“உன்னால பாட மட்டும் தான் முடியும்னு நினைச்சேன் ராகவா. ஆனா நேத்து நீ போட்ட டியூனைக் கேட்டு உன்னால மியூசிக்கும் முடியும்னு புரிஞ்சது. இப்ப எடுக்குற படத்துக்கு உன்னைப் போட முடியாது. அடுத்த படத்துக்கு நீ தான் போடணும். அதுக்கு ட்ரைனிங் மாதிரி இந்த படம் பண்ணும் போதே நீ ஸ்டூடியோ வா. நிறைய கத்துப்பல்ல?”
“கண்டிப்பா சார். நீங்க ஒரு லெஜண்ட். உங்க கிட்ட கத்துக்க நிறைய விஷயம் இருக்கு”
“அப்படின்னா சண்டே நம்ம ஸ்டூடியோக்கு வந்துரு. உன் ஹாஸ்டல்ல பெர்மிசன் இல்லாம வெளிய விட மாட்டாங்கல்ல. வா நான் டீன் கிட்ட பேசுறேன்”, என்று சொல்லி அவனை அழைத்துச் சென்றார்.
மிகப் பெரிய மியூசிக் டேரெக்டர் ராகவனுடன் தன்னை தேடி வரவும் சந்தோஷப் பட்டார் சிதம்பரம்.