“வாங்க வாங்க உக்காருங்க. உக்காருப்பா ராகவா. நானே உன்னை கூப்பிடணும்னு நினைச்சேன். நீயே வந்துட்ட. அதுக்கு முன்னாடி சார் எல்லாம் வந்துருக்காங்க. சார் நீங்க இங்க வருவீங்கன்னு நினைச்சே பாக்கலை”
“எங்க திறமையையும் ரசிக்கிற மக்கள் இருக்குறதுனால தான் நாங்க புகழோட இருக்கோம் சார். வேற பெருசா நாங்க ஒண்ணும் சாதிக்கலை. சரி அதை விடுங்க. இப்ப நான் ஒரு முக்கியமான விஷயம் பேச தான் வந்தேன்”, என்று ஆரம்பித்தார் சேகர்.
“சொல்லுங்க சார்”
“ராகவன் சண்டே சண்டே என்னோட ஸ்டூடியோக்கு வர நீங்க அனுமதி கொடுக்கணும். கண்டிப்பா இதுனால அவன் படிப்பு பாதிக்க படாதுன்னு நான் உறுதி கொடுக்குறேன்”
“கண்டிப்பா வரட்டும் சார். உங்களை மாதிரி இசைத் துறைல அவன் பெரிய ஆளா வரணும்னு எனக்கும் ஆசை தான் சார். ராகவா நீ சண்டே சண்டே போயிட்டு வா”, என்று சிதம்பரம் சொன்னதும் “ரொம்ப நன்றி சார்”, என்றான் ராகவன்.
“எங்களுக்கு எல்லாம் பெருமை தேடி தந்த உனக்கு தான் பா நான் நன்றி சொல்லணும். நம்ம சேகர் சார் முன்னாடியே அந்த நியூஸ் சொல்றேன். அன்னைக்கு நடந்த போட்டில உனக்கு தான் பா முதல் பரிசு கிடைச்சிருக்கு. அடுத்த மாசம் ஒரு பெரிய விழா வச்சு அதுல உனக்கு பரிசு கொடுக்க போறாங்களாம். இப்ப தான் தகவல் வந்துச்சு”, என்று சிதம்பரம் சொல்ல அவன் முகம் மலர்ந்தது.
“வாழ்த்துக்கள் ராகவா”, என்றார் சேகர்.
“நன்றி சார்”
“சேகர் சார், ராகவன் தான் உங்க படத்துல வர பாடல்களை எல்லாம் பாடினான்னு அன்னைக்கு தான் சொன்னான். ஆனா யார் கிட்டயும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டான். நீங்க அவனுக்கு சொல்லக் கூடாதா? இது வெளிய தெரிஞ்சா தானே அவனுக்கு பெருமை? பாராட்ட பாடாத எதுவுமே முழுமை அடையாது சார்”, என்றார் சிதம்பரம்.
“எனக்கு மட்டும் ஆசை இல்லையா என்ன? எல்லா பாட்டையும் பாடினது இவன் தான்னு சொல்ல ஆசையா தான் இருக்கு. ஆனா இவன் விடலை. ஆனா இப்ப இவன் அப்பா அனுமதி கொடுத்துட்டார். இனி வெளிய சொல்லிறலாம். இனி ராகவன் ராகவன்னு தான் எல்லாரும் கத்துவாங்க”
“சும்மா இருங்க சார், கிண்டல் பண்ணாதீங்க”, என்று வெட்கத்துடன் சிரித்தான் ராகவன்.
“சேகர் சார் அப்படின்னா நான் இதை காலேஜ் முழுக்க சொல்லிறவா?”
“தாராளமா சொல்லுங்க”
“அப்படின்னா எனக்கு நீங்க ஒரு உதவி பண்ணனும். நீங்க எப்ப பிரியா இருபீங்கன்னு சொல்லுங்க. அன்னைக்கே ராகவன் தான் அந்த பாடல்களை எல்லாம் பாடினான்னும், இப்ப முதல் பிரைஸ் வாங்கிருக்குறதையும் காலேஜ்ல அனோன்ஸ் பண்ணிறேன். அதுக்கு நீங்க தான் சீஃப் கெஸ்டா வரணும்”, என்று அவர் சொல்ல இருவரும் திகைத்து போனார்கள்.
“இது நல்ல விஷயம் சார். கண்டிப்பா நான் வரேன். ராகவன் தான் எல்லாம் பாடினான்னு அறிவிக்க எனக்கும் ஆசையா இருக்கு. இப்போதைக்கு எல்லாருக்கும் ராகவன் இந்த போட்டில முதல் பரிசு வாங்கிருக்குறதுனால பாராட்டு விழான்னு சொல்லிக்கலாம். ஸ்டேஜ்ல வச்சு இவன் சிறந்த பின்னணி பாடகர்னு சொல்லிக்கலாம்”
“சார் இதெல்லாம் இப்ப தேவையா?”, என்று சங்கடமாக கேட்டான் ராகவன்.
“இத்தனை நாள் நீ சொன்னதை எல்லாம் கேட்டேன் தானே? இனிமே நாங்க சொல்றதை தான் கேக்கணும். சார் நாளான்னைக்கு விழா வச்சிக்கோங்க. ராகவா உன் வீட்லயும் தகவல் சொல்லிரு. சரி நான் கிளம்புறேன். மத்த விவரம் எல்லாம் நான் சிதம்பர்ம் கிட்ட போன்ல கேட்டுக்குறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அவரை வழி அனுப்பி வைத்து விட்டு அவன் கிளாசுக்கு செல்ல டீன் விழா ஏற்பாடுகளை செய்ய ஸ்டாப் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.
கிளாசுக்குள் அவன் எப்போதும் போல செல்ல அனைவரும் சாதாரணமாக இருந்தார்கள். விஷ்ணு தான் போட்டி எப்படி போச்சு என்று கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால் தான் முதல் பரிசு வாங்கியதைப் பற்றி ராகவன் சொல்ல வில்லை. ஆனால் சிறிது நேரத்தில் வந்த ஹெச்.ஓ.டி அதை அறிவித்து அவனை வாழ்த்த கிளாசில் இருந்த அனைவருமே அவனை வியப்பாக பார்த்தார்கள்.
“ஓகே ஸ்டுடண்ட்ஸ் நாளான்னைக்கு ஒரு பாராட்டு விழா இருக்கு. எல்லாரும் கலந்துக்கணும். உங்கள்ள ஒருத்தன் அவார்ட் வாங்கிருக்குறது உங்களுக்கு சந்தோஷமா இருக்கும்னு நம்புறேன். அப்புறம் ராகவன் போட்டில பாடின பாட்டை நீ இங்கயும் பாட வேண்டியது இருக்கும் பா. அதுக்கு பிரிப்பேரா வா”, என்று சொல்லி விட்டு ஹெச்.ஓ.டி செல்ல அடுத்த நொடி கிளாசில் இருந்த அனைவருமே அவனை தனித் தனியே வாழ்த்தினார்கள்.
அனைவரின் வாழ்த்தையும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டவனுக்கு ஸ்ருதி நினைவு வந்தது. அவளைப் பற்றிய நினைவு வந்ததும் அவன் முகம் மலர்ந்தே இருந்தது.
“இன்னும் ரெண்டு நாள் கழிச்சு தான் நான் தான் அந்த பாட்டை எல்லாம் பாடினேன்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி தெரியும் போது அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா? அவ எப்படி முன்னாடியே கண்டு பிடிச்சா? இப்ப தெரிஞ்சதும் சந்தோஷப் படுவாளா? இல்லை கோபப் படுவாளா? முதல்ல அவளுக்கு கோபம் வருமா? என் மேல அவளுக்கு எங்க கோபம் வரப் போகுது? அவளுக்கு என்னைக் கண்டா சைட் அடிக்கவே நேரம் பத்தாது”, என்று எண்ணி சிரித்துக் கொண்டான். ஆனால் அவனுடைய மனதில் அவள் மேல் எழுந்துள்ள காதலை அவன் இப்போதும் உணரவே இல்லை.
அதை உணர்ந்தாலும் அவன் அவளிடம் வெளிபடுத்தி இருக்க மாட்டான். ஒரு நாளும் காதல் என்ற வார்த்தை அவன் வாயில் இருந்து வரவே வராது.
பாராட்டு விழாவும் வந்தது. ராகவனின் மொத்த குடும்பமும் சென்னைக்கு வந்தது. ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கி இருந்தார்கள். தேன்மொழி மற்றும் அமருக்கு விஷயம் தெரிவிக்கப் படாததால் அது ஸ்ருதிக்கும் தெரிய வில்லை. ஆனால் தேன்மொழி பள்ளிக்கு வர மாட்டாள் என்றும் சென்னை செல்கிறாள் என்பது மட்டும் தெரியும்.
“அம்மா இப்ப எதுக்கு அண்ணனைப் பாக்க போறோம்?”, என்று தேன்மொழியும் அமரும் கேட்டு ராஜியை ஒரு வழி ஆக்கி இருந்தார்கள்.
“அங்க வந்து தெரிஞ்சிக்கோங்க”, என்று சொல்லி சமாளித்தனர் மதனும் ராஜியும். குளித்து கிளம்பி அவர்கள் கல்லூரிக்கு வர அங்கே விழா ஏற்பாடுகள் தடா புடாலாக போய்க் கொண்டிருந்தது.
காலேஜ் வாசலிலே சர்வதேச அளவில் நடைபெற்ற இசைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற ராகவனுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது என்று போட்டிருக்க அப்போது தான் தேன்மொழி மற்றும் அமருக்கு விஷயம் தெரிந்தது.
தன்னுடைய குடும்பம் வந்ததும் விழாவின் நாயகவே அவர்களைத் தேடி வந்தான். “ராகவா”, என்று மதன் நெகிழ்ந்து போய் அழைக்கக் “அப்பா”, என்ற படி அவரை அணைத்துக் கொண்டான்.
ராஜியின் கைகள் மகனின் தலையை வருடி விட்டது. “டேய் அமரு, இவன் வீட்ல தான் பாட்டு பாடுறேன்னு டார்ச்சல் பண்ணி நம்மளை சாகடிச்சான்னு பாத்தா இங்க காலேஜ் முழுக்க எல்லாரையும் கொன்னுருப்பான் போலயே?”, என்று தேன்மொழி அண்ணனை சீண்ட “அதானே? இவன் கழுதை மாதிரி கத்துறதுக்கு அவார்ட் வேற கொடுக்குறாணுங்க? நானும் கத்தினா அவார்ட் கொடுப்பாங்களா அக்கா?”, என்று கேட்டான் அமர்.
“என்னையே கிண்டல் பண்ணுறீங்களா?”, என்று கேட்ட ராகவன் அவர்களை அடிக்க போக அவர்கள் அம்மா அப்பாவை சுற்றி ஓடினர். பிள்ளைகளின் விளையாட்டில் பெற்றவர்களுக்கு சந்தோசத்தில் ஆனந்த கண்ணீரே வந்து விட்டது.
அதற்கு பின்னர் அவர்களை அழைத்துக் கொண்டு ஆடிட்டோரியத்தில் முதல் வரிசையில் அமர வைத்தான். தனக்கு தெரிந்த ஆசிரியர்களிடம் தன்னுடைய குடும்பத்தை அறிமுகப் படுத்தி வைத்தான்.
கல்லூரி மாணவ மாணவிகள் அனைவரும் அங்கே குழுமி இருக்க அனைவரின் கண்களும் ராகவன் மேல் தான் இருந்தது. அதிக சந்தோசத்தில் இருந்த ராகவன் இன்று இன்னும் அழகாக இருப்பது போல இருந்தது.
அதற்கு பின்னர் மியூசிக் டேரெக்டர் அங்கு சிறப்பு விருந்தினராக வர அவரைத் தொடர்ந்து பிரஸ்ஸும் வந்தது. மேடையில் ராகவன், சேகர், சிதம்பரம் மற்றும் பலர் அமர்ந்திருந்தார்கள். அனைவரும் அவனையே பார்ப்பது போல இருக்க ராகவனுக்கு சிறிது வெட்கமாக கூட இருந்தது. கூடவே அந்த கூட்டத்தில் ஸ்ருதி இருந்தால் எப்படி இருக்கும் என்றும் தன்னைக் கண்டு அவள் முகத்தில் வந்து போகும் வர்ணஜாலங்களையும் எண்ணிப் பார்த்தவனின் கற்பனையும் கடல் போல விரிந்தது.