“ஹிம் அந்த ரூம்ல படுக்கலாமா?”, என்று தயக்கத்துடன் கேட்டாள் ஸ்ருதி.
தோழியின் மனது புரிந்தாலும் புரியாதது போல காட்டிக் கொண்டு “எந்த ரூமா இருந்தா என்ன? தூக்கம் தான் முக்கியம் வா”, என்று சொல்லி ராகவனின் ரூமுக்கு அழைத்துச் சென்றாள் தேன்மொழி.
சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருக்க ஸ்ருதி முகம் ஒரு மாதிரியாவே தான் இருந்தது. “எக்ஸாம்ஸ் தான் முடிஞ்சிருச்சே. அப்புறமும் ஏன் டி இப்படி இருக்க?”, என்று கேட்டாள் தேன்மொழி.
அவள் கேள்வியா? இல்லை அந்த அறை தன்னுடைய மனதுக்குள் எழுப்பிய ராகவனின் நினைவா? அவன் தனக்கு கிடைப்பானா என்ற ஏக்கமா? அவனை இனி எப்போது காண முடியும் என்ற தவிப்பா? இனி இந்த வீட்டுக்கு தன்னால் வர முடியுமா என்ற ஆசையா? ஏதோ ஒன்று அவளது கண்ணீரை பெருக வைத்தது.
அவள் ஏங்கி ஏங்கி அழ தேன்மொழி தான் தவித்துப் போனாள். “ஏய் என்ன ஆச்சு டி?”
“எனக்கு இங்க இருந்து போகவே பிடிக்கலை தேனு”
“ஏன் டி?”
“எனக்கு உன்னை விட்டு எப்படி இருக்கன்னு கஷ்டமா இருக்கு? உன் கிட்ட பேசாம நான் எப்படி இருப்பேன்?”
“ஏய் லூசு, இந்த லீவ் மட்டும் தானே? அப்புறம் நானும் சென்னைக்கு தான் படிக்க வருவேன். ரெண்டு பேரும் ஒரே காலேஜ்ல படிக்க கூட வாய்ப்பிருக்கு”
“இல்லை, நான் என் வீட்டுக்கு போயிட்டா நீ என் கிட்ட பேச மாட்ட. நமக்குள்ள டச் விட்டுப் போயிரும்”
“டச் விட்டுப் போக நாம என்ன ஆதி காலத்துலயா இருக்கோம்? தினமும் சரியா நைட் ஏழு மணிக்கு உனக்கு கால் பண்ணுவேன் டி”
“பொய்”
“சத்தியமா பண்ணுறேன் போதுமா? இப்போதைக்கு சந்தோஷமா போய்ட்டு வா”, என்று சொல்ல அரை மனதாக தலை ஆட்டினாள்.
இரவு அழைக்க வந்த தேவேந்திரன் ராஜி மற்றும் மதனுக்கு நன்றி சொல்லி விட்டு மகளை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
அடுத்த நாள் சரியாக ஏழு மணிக்கு சரியாக ஸ்ருதியை அழைத்தாள் தேன்மொழி. அவள் அழைப்புக்காக தான் காத்திருந்தாள் ஸ்ருதி.
“சரியா கால்; பண்ணிட்டேன் பாத்தியா?”
“டெய்லி பண்ணுவியா தேனு?”
“டெய்லி பண்ணுறேன் டி. இங்க என்ன என்ன நடக்குதுன்னு எல்லாம் சொல்றேன் சரியா?”
“இன்னைக்கு என்ன நடந்துச்சு?”
“என்ன நடக்கும்? பகல் முழுக்க டிவி தான். அப்புறம் அமர் ஸ்கூல்ல இருந்து வந்ததும் படிச்சோம். அவன் எழுதிட்டு இருக்கான். நான் உனக்கு கால் பண்ண வந்தேன். அப்புறம் அண்ணன் பேசினான். ஐயா இப்ப ரொம்ப பிஸி ஆகிட்டார். எக்ஸாம்ஸ் வேற, படத்துல மியூசிக் வேற. கொஞ்சம் கஸ்டமா இருக்கும் போல?”, என்று அவளாகவே ராகவனைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டாள்.
ராகவனைப் பற்றி பேசியதும் ஸ்ருதியின் முகம் மலர்ந்தது. அவனைப் பற்றிய தகவல்களை கேட்பதற்கு தானே ஸ்ருதி தேன்மொழியை பிரிய முடியாமல் தவித்தது.
சிறிது நேரம் பேசி விட்டு போனை வைத்தார்கள். அடுத்து வந்த நாட்களும் இப்படியே நகர்ந்தது. ஒரு நாள் தேன்மொழி ஸ்ருதியை அழைக்க எடுத்தது நவீன் தான்.
“ஹலோ யாருங்க?”, என்று கேட்டான் நவீன்.
திடீரென்று ஒரு ஆண் குரல் கேட்கவும் அது தேவேந்திரனா நவீணா என்று தெரியாமல் “நீங்க யாரு?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“ஹலோ கால் பண்ணினது நீங்க. நீங்க தான் யாருன்னு சொல்லணும்”
“ஸ்ருதி இல்லையா?”
“உனக்கு போன் பேசத் தெரியுமா தெரியாதா? நீ யாருன்னு கேட்டா ஸ்ருதியை கேக்குற?”, என்று ஒருமையில் பேசினான் நவீன்.
“நான் ஸ்ருதி பிரண்டு”
“அப்படிச் சொல்ல வேண்டியது தானே? இவளுக்குன்னு எதுக்கு இப்படி கூமுட்டை பிரண்டா அமையுறாங்களோ தெரியலை. ஸ்ருதி போன் இங்க வா”, என்று அவன் பேச கொதித்து போனாள் தேன்மொழி.
“என்னையா டா திட்டுற? உனக்கு ஒரு நாள் இருக்கு”, என்று கருவிக் கொண்டாள் தேன்மொழி. அடுத்து ஸ்ருதி பேச “நாளைக்கு ரிசல்ட் வரப் போகுது டி”, என்று ஆரம்பித்து அவர்கள் பேச்சு தொடர்ந்தது. ஸ்ருதி பேசி முடித்ததும் “யாரு மா போன்ல?’, என்று கேட்டான் நவீன்.
“என் ஃபிரண்ட் தேனு அண்ணா. நாளைக்கு ரிசல்ட் பத்தி பேசினா”
“நானே கேக்கணும்னு நினைச்சேன். அடுத்து என்ன படிக்க போற?”
“இது என்ன டா கேள்வி? அவளும் உன்னை மாதிரி டாக்டர் தான்”, என்றாள் வேணி.
“முதல்ல ரிசல்ட் வரட்டும். அப்புறம் முடிவு பண்ணுவோம். நாம சொன்னா ஸ்ருதி எதுனாலும் கேப்பா”, என்று தேவேந்திரன் சொல்ல “முடியாது, நான் இஞ்சினீயரிங்க் தான் படிக்க போறேன். அதுவும் இங்க இருக்குற கவர்ன்மெண்ட் காலேஜ்ல தான் படிப்பேன்”, என்று அவன் நெஞ்சம் அரை கூவல் விட்டது. ஆனால் வெளியே அமைதியாக இருந்தாள்.
அடுத்த நாள் அனைவருமே ரிசல்ட்க்காக காத்திருந்தார்கள். ஸ்ருதி தேன்மொழி இருவருமே நல்ல மதிப்பெண் தான் வாங்கி இருந்தார்கள்.
மதிப்பெண்ணைப் பார்த்து தேன்மொழி சந்தோஷமாக இருக்க ஸ்ருதியோ “ராகவன் படிக்கிற காலேஜ்ல சீட் கிடைக்கணும்னா எத்தனை மார்க் வாங்கணும்?”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
“நல்ல மார்க் வாங்கிருக்க பாப்பா. என்னை மாதிரி மெடிக்கல்க்கு படி. நான் அப்ளை பன்றேன். சாயங்காலம் வரும் போது ஸ்வீட் வாங்கிட்டு வரேன்’, என்று சொல்லி விட்டுச் சென்றான் நவீன்.
“இவன் என்ன இப்படிச் சொல்றான்? கடவுளே அம்மா அப்பாவும் இவன் சொல்றதை தானே கேப்பாங்க. இப்ப என்ன பண்ணுறது?”, என்று எண்ணி தவித்தாள்.
அதே நேரம் தேன்மொழிக்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தான் ராகவன். அதிக மார்க் வாங்கி இருப்பதால் “சூப்பர் தேனு. நல்ல மார்க் வாங்கிருக்க. கண்டிப்பா உன்னோட மெடிக்கல் கனவு நிறைவேறும். கவர்ன்மெண்ட் காலேஜ்லே சீட் கிடைக்கும்”, என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் அமைதியாகி விட்டாள். அவள் அமைதியைக் கவனிக்காத ராகவன் “உன் பிரண்ட்ஸ் எல்லாம் எவ்வளவு மார்க் வாங்கி இருக்காங்க?”, என்று கேட்டான்.
அவன் அப்படிக் கேட்டதும் வாடிய அவள் முகம் மலர்ந்தது. “ஒரு வேளை இவன் ஸ்ருதியைப் பத்திக் கேக்க தான் இப்படி சுத்தி வலைக்கிறானோ?”, என்று எண்ணியவள் “சுதா தொள்ளாயிரம், வேணி தொள்ளாயிரத்து என்பது, காயு ஆயிரத்து முப்பது”, என்று ஆரம்பித்து கிளாசில் இருந்த மற்றவர்களின் மதிப்பெண்களை சொல்லி அவனை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தாள்.
ஸ்ருதியின் பெயர் எப்போது அவள் வாயில் இருந்து வரும் என்று ஆவலாக பார்த்திருந்த ராகவன் கடைசி வரை தங்கை அவள் பெயரைச் சொல்லாமல் இருக்கவும் “உன் கிளாஸ் பிள்ளைங்க பெயரையா கேட்டேன்? உன் கூடவே ஒரு பொண்ணு இருப்பாளே? அவ மார்க் கேட்டேன்”, என்றான்.
“அப்படி வா வழிக்கு”, என்று எண்ணிக் கொண்டு “ஓ ஸ்ருதியைச் சொல்றியா?”, என்று கேட்டாள்.
“ம்ம்”
“அன்னைக்கு ஸ்ருதின்னா யாருன்னு கேட்ட?”
“இப்ப என்ன பழி வாங்குறியா? சொல்லனும்னா சொல்லு, இல்லைன்னா விடு”, என்று அவன் சலித்துக் கொள்ள “அவ பெயில் ஆகிட்டா அண்ணா”, என்றாள் தேன்மொழி.
“என்னது? பெயிலா?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான் ராகவன்.
“ஆமா”
“என்ன தேனு இப்படிச் சொல்ற?”
“தெரியலை, கடைசி நேரத்துல அவ ஒழுங்கா படிக்கலையோ என்னவோ?”
“என்ன இப்படி சாதாரணமா சொல்ற?”, என்று கேட்டவனின் பிபி எகிறியது.
அதை உணர்ந்த தேன்மொழி அதற்கு மேல் அவனை கடுப்பேத்த விருப்பம் இல்லாமல் “சும்மா சொன்னேன் அண்ணா. அவளும் கிட்டதட்ட உன் மார்க் தான்”, என்றாள்.
“என்ன தேனு குழப்புற?”
“அவ ஆயிரத்தி நூத்தி ஆறு மார்க். நீ ஆயிரத்தி நூத்தி நாலு தானே? உன்னோட ரெண்டு மார்க் கூட. என்னோட அஞ்சு மார்க் கூட”, என்று சொன்னதும் தான் அவன் மனதில் நிம்மதி அலையெனப் பரவியது.
“சரி சரி, எனக்கு வேலை இருக்கு வைக்கிறேன்”, என்று சொல்லி வைத்து விட்டான். சிறு சிரிப்புடன் ஸ்ருதியை அழைத்தாள். இருவரும் மற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள். பின் ராகவன் அவளுடைய மார்க் கேட்டதையும் அவன் பதறியதையும் சொன்னாள் தேன்மொழி. அதைக் கேட்டு சந்தோஷப் பட்டாள் ஸ்ருதி.
“அப்புறம் டி”, என்று தேன்மொழி இழுக்க “இங்க இன்னொரு பிரச்சனை ஆரம்பிக்க போகுது டி”, என்றாள் ஸ்ருதி.
“என்ன சொல்ற நீ?”
“எங்க வீட்ல மெடிக்கலுக்கு போகச் சொல்றாங்க?”
“நல்ல விஷயம் தானே? எங்க வீட்லயும் அதை தான் சொல்றாங்க? நானும் அப்லை பண்ணுறேன். நாம ரெண்டு பேரும் மெடிக்கல் படிப்போம். கண்டிப்பா ஒரே காலேஜ்ல கிடைக்கும் டி”
“வேண்டாம் தேனு”
“ஏன் டி?”
“எனக்கு இன்ஜினியர் தான் படிக்கணும்”
“ஸ்ருதி”
“ஆமா அதுவும் இங்க இருக்குற கவர்ன்மெண்ட் காலேஜ்ல தான் படிக்கணும். ஆனா வீட்ல வேற சொல்றாங்க. நான் இப்ப போராடனும்”
அவள் மனது புரிந்தாலும் அவளது தீவிரம் திகைப்பைத் தர “இப்ப எதுக்கு ஸ்ருதி பிடிவாதம் பிடிக்கிற? டாக்டருக்கு படிக்கிறது தான் நல்லது”, என்று சொன்னாள்.
“இது பிடிவாதம் இல்லை டி. என்னோட கனவு”
“டாக்டர் ஆகுறதும் நல்ல வேலை தான் டி”
“எனக்கு அது வேண்டாம்”
“அதான் ஏன்?”
“சொல்லத் தெரியலை”
“எனக்கு காரணம் தெரியணும் ஸ்ருதி”
“ஒண்ணும் இல்லை டி”
“என்னை உண்மையான பிரண்டா நினைச்சா உண்மையைச் சொல்லு. உண்மையைச் சொல்லு ஸ்ருதி”
“அது வந்து…”, என்று அவள் தயங்க “அவன் மேல உனக்கு என்ன டி அவ்வளவு பாசம்? என் அண்ணனுக்குக்காக தானே நீ அந்த காலேஜ்க்கு போகணும்னு துடிக்கிற?”, என்று நேரடியாகவே கேட்டு விட்டாள்