வார்டன் அங்கிருந்து மறைந்ததும் அவசர அவசரமாக உணவைக் கொட்டி விட்டு அறைக்குச் சென்று விட்டாள். ஸ்டடி டைம் ஆரம்பித்த பிறகும் அவளால் சாதாரணமாக இருக்க முடியவில்லை. அவளால் சுத்தமாக படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போனது.
அது மட்டுமில்லாமல் அவளால் அன்று உறங்க கூட முடியாமல் போனது. அன்றைய இரவில் தூக்கத்தை தொலைத்தவள் அன்றே காச்சலில் விழுந்தாள்.
அடுத்த நாள் காலையில் மற்ற அனைவரும் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருக்க இவள் எழாமல் இருக்கவும் மற்ற பிள்ளைகள் அவளுடைய காச்சலை வார்டனுக்கு தெரியப் படுத்தினார்கள்.
பள்ளியில் இருக்கும் டாக்டர் வந்து அவளுக்கு ஊசி போட்டு விட்டுச் சென்றார். காலை உணவை அவளை உண்ணச் சொல்லி விட்டு மற்ற தோழிகள் அனைவரும் பள்ளிக்கு கிளம்பி விட்டார்கள். வார்டனும் அவளை சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டு ஓய்வெடு என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அன்று ராகவனைப் பற்றி ஸ்ருதிக்குச் சொல்ல வேண்டும் என்று ஆவலாக வந்தாள் தேன்மொழி. “என்னக்கா சந்தோஷமா வர? அண்ணனை நினைச்சா?”, என்று கேட்டான் அமர்.
“இல்ல டா ஸ்ருதியை நினைச்சு”
“என்ன சொல்ற நீ?”
“முன்னாடியே ஸ்ருதி அண்ணன் தான் அந்த பாட்டை எல்லாம் பாடினதுன்னு கண்டு பிடிச்சிட்டா டா”
“என்னக்கா சொல்ற? நமக்கே அது இப்ப தான் தெரியும்”
“அவ தான் அண்ணன் மேல பைத்தியமா இருக்காளே? அவன் குரலை வச்சு கண்டு பிடிச்சிட்டா போல? இப்ப ஹாஸ்டல்ல இருக்குறதுனால அவளுக்கு இது தெரியுமான்னு தெரியலை. நாம சொன்னா ரொம்ப சந்தோஷப் படுவா”
“ஆமா அக்கா”, என்று சொன்னான் அமர்.
தேன்மொழி ஸ்ருதிக்காக ஆவலாக காத்திருக்க மற்ற ஹாஸ்டல் பிள்ளைகள் வந்த பிறகும் ஸ்ருதி வரவில்லை. “பானு ஸ்ருதி எங்க? நீ அவ ரூம் தானே?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“அவ இன்னைக்கு வர மாட்டா தேனு”
“வர மாட்டாளா? ஏன்?”
“நேத்துல இருந்து அவ சரியே இல்லை. நைட் சாப்பிடவும் இல்லை. காலைல நல்ல காச்சல் வேற”
“காச்சலா?”, என்று அதிர்ந்து போனாள் தேன்மொழி.
“ஆமா தேனு, ஹாஸ்ட்டல்ல படுத்திருக்கா”
“நான் அவளை பாக்கணுமே? உள்ள விடுவாங்களா?”
“டேஸ் காலரை உள்ள விட மாட்டாங்க. ஆனா அவளோட அம்மா அப்பா ஊர்ல இருக்காங்க, ரெண்டு நிமிசத்துல பாத்துட்டு வறேன்னுன்னு வார்டன் கிட்ட சொல்லு, விடுவாங்க“, என்று சொன்னதும் மதிய இடைவேளைக்காக காத்திருந்தாள்.
மதிய இடைவேளை வந்ததும் அவசரமாக அங்கே சென்று ஸ்ருதியைப் பார்க்க வேண்டும் என்று வார்டனிடம் கேட்க வார்டன் என்ன நினைத்தாரோ?
“போய் பாரு மா. அவ காலைலயே சாப்பிடலை. இரு ஓர் தட்டுல சாப்பாடு வாங்கித் தரேன். அவளுக்கு கொடு. சாப்பிட்டா தானே தெம்பா இருக்கும். காச்சல் இன்னும் அவளுக்கு குறையலை. சரியா பேசக் கூட மாட்டிக்கா. தூங்கவும் மாட்டிக்கா”, என்று சொல்லி உணவு எடுத்து வந்து அவளிடம் கொடுத்தார்.
“இப்பவும் சாப்பிடலைன்னா அவங்க வீட்டுக்கு தான் இன்பார்ம் பண்ணனும் மா”, என்று சொன்ன வார்டன் சாப்பாடு அறைக்கு சென்று மற்ற பிள்ளைகளை கவனிக்க ஸ்ருதியை தேடிச் சென்றாள் தேன்மொழி.
தேன்மொழி அறைக்கு சென்ற போது கண்களை மூடி படுத்திருந்தாள் ஸ்ருதி. ஆனால் அவள் மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது,.
“ஸ்ருதி”, என்று தேன்மொழி அழைக்க கண் விழித்துப் பார்த்த ஸ்ருதி தேன்மொழியை அங்கு எதிர் பார்க்க வில்லை.
“தேனு”, என்று அழைத்த படி எழுந்து அமர்ந்தாள்.
“எல்லாம் அப்புறம் பேசலாம். முதல்ல நீ சாப்பிடு”, என்று சொன்ன தேன்மொழி சாப்பாடை பிசைய “எனக்கு வேண்டாம். பசிக்கலை”, என்றாள்.
“அது எப்படி பசிக்காம போகும்? ஒழுங்கா சாப்பிடு. இப்ப சாப்பிடலைன்னா உனக்கு பீவர்னு உங்க வீட்ல வார்டன் சொல்லிருவாங்களாம். உனக்கு காச்சல்னா உன்னை ஊருக்கு கூட்டிட்டு போயிருவாங்க. ஒழுங்கா சாப்பிடு”, என்று சொல்லி அவளுக்கு ஊட்ட தன்னுடைய காச்சல் விவரம் வீட்டுக்கு தெரியக் கூடாது என்று எண்ணி ஸ்ருதியும் உண்ண ஆரம்பித்தாள்.
உண்டு முடிக்கும் வரை இருவரும் பேசிக் கொள்ள வில்லை. எல்லாச் சாப்பாடையும் அவளுக்கு ஊட்டிய தேன்மொழி தட்டை எங்கே கழுவ என்று விழிக்க “அதை என் கிட்ட கொடு. நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு தட்டை கழுவிட்டு வரேன். நீ இதுல கையைக் கழுவு”, என்றாள்.
அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தேன்மொழி கையைக் கழுவ ஸ்ருதி அதை வாங்கிக் கொண்டு சென்றாள். அவள் சென்றதும் அந்த அறையை நோட்டம் விட்டாள் தேன்மொழி. அப்போது தான் ஸ்ருதி படுத்திருந்த படுக்கையைப் பார்த்தாள். அங்கே எல்லோ கலர் டீ ஷார்ட் இருந்தது.
அதைப் பார்த்ததும் தெரிந்து கொண்டாள் அது ராகவனுடையது என்று. ஏனென்றால் அதே போல தேன்மொழி மற்றும் அமரிடம் கூட உண்டு. தேன்மொழிக்கு ராகவன் மீதான ஸ்ருதியின் அன்பை எண்ணி வியப்பாக இருந்தது.
அந்த அறையை அவசரமாக பரிசோதித்துப் பார்த்தாள். அங்கே டீசர்ட் மட்டும் இல்லை, ராகவனுடைய கூலிங்க் கிளாஸ், அவனுடைய சயின்ஸ் நோட் புக், அவனுடைய புகைப்படம், அவனுடைய கர்சீப் ஒன்று என ஆங்காங்கே வைத்திருந்தாள்.
ஸ்ருதி வரும் அரவம் கேட்கவே எதுவும் தெரியாதது போல வந்து அமர்ந்து விட்டாள். ஸ்ருதி வந்து அமர்ந்ததும் “சரி இப்ப சொல்லு. எதனால திடீர்னு காச்சல்?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“தெரியலை”
“சரி நேத்து நீயுஸ் பாத்தியா?”
“ம்ம்”
“எப்படி டி முன்னாடியே கண்டு பிடிச்ச அண்ணா தான் அந்த பாட்டை பாடினதுன்னு”
“தோணுச்சு”, என்று விட்டேற்றியாக சொன்னாள்.
“ஏன் ஸ்ருதி என்னவோ போல இருக்க?”
“எனக்கு என்ன, நல்லா தான் இருக்கேன். நீங்க தான் பெரிய ஆளா ஆகிட்டீங்க? இனி எங்களை எல்லாம் கண்ணு தெரியுமோ என்னவோ?”, என்று கேட்க இந்த கேள்வியை ஸ்ருதிக்கு ராகவனிடம் கேட்க வேண்டும் போல் இருப்பது புரிந்தது.
“என்ன டி இப்படிச் சொல்ற? என் அண்ணா பெரிய ஆளா ஆனா உனக்கு சந்தோஷம் இல்லையா?”, என்று கேட்டு அவளை நோட்டம் விட்டாள்.
“சே சே அவங்க பெரிய ஆளா வரணும் டி”, என்று உண்மையான மனதுடன் சொல்ல “அப்புறம் ஏன் சோகமா இருக்க? என் அண்ணா பெருமைப் பட்டா நீ சந்தோஷம் தானே படணும்?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“கண்டிப்பா பெருமை தான் டி படுவேன். அவங்க இன்னும் பெரிய ஆளா வரணும்”, என்று உண்மையான அன்புடன் சொன்னாள்.
ஆனாலும் அவள் முகம் ஒரு மாதிரி இருக்கவும் “என்ன ஸ்ருதி?”, என்று கேட்டாள் தேன்மொழி.
“நீ கூட என் கிட்ட அங்க போறதைப் பத்தி சொல்லலைல்ல?”
“எங்களுக்கே தெரியாது டி. அம்மா அப்பா என் கிட்டயும் அமர் கிட்டயும் சொல்லவே இல்லை”
“ஏன் சொல்லலையாம்?”
“எல்லாம் என் அண்ணன் வேலையா இருக்கும்”
“ஏன்?”
“ஏனா? நீ பிளஸ்டூல நல்ல மார்க் எடுத்து சென்னையில் இருக்குற கவர்ன்மெண்ட் இன்ஜினியரிங் காலேஜ்ல சீட் வாங்கி அங்க எங்க அண்ணன் இருப்பான் அவன் கிட்டயே கேளு”, என்று தேன்மொழி விளையாட்டாக தன்னை மீறி அவன் படிக்கும் இடத்தைச் சொல்ல அந்த எண்ணம் ஸ்ருதியின் ஆழ் மனதில் விதைக்கப் பட்டது.
அதை அறியாத தேன்மொழி வேறு எதையோ பேச மீண்டும் மீண்டும் சென்னையில் நடந்த நிகழ்வுகளை பற்றி தான் கேட்டுக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.
“அங்க என்ன நடந்துச்சு? எல்லாரும் கை தட்டிருப்பாங்கல்ல? உங்க அண்ணா சிரிச்சிட்டே இருந்துருப்பாங்கல்ல? நியூஸ்ல கொஞ்சம் தான் போட்டாங்க”, என்று ஸ்ருதி சொல்ல தோழிக்கு பிடித்ததால் ராகவனைப் பற்றி பேசி அவளை சந்தோஷப் படுத்தி தோழியின் சந்தோஷத்தை ரசித்தாள் தேன்மொழி.
பின் நேரம் ஆனதால் “சரி டி கிளாஸ்க்கு நேரம் ஆச்சு. காச்சல் குணமானதும் கிளாஸ்க்கு வா. அடுத்த வாரம் லேப் மாடல் எக்ஸாம் இருக்கு. நல்லா சாப்பிடு”, என்று அறிவுறுத்தி விட்டே அங்கிருந்து சென்றாள்.
அதற்கு அடுத்து வந்த நாட்களில் ஸ்ருதி நன்கு படித்தாள். ஏற்கனவே நன்கு படித்தாலும் இப்போது அதிக நேரம் செலவழித்து படித்தாள். அவனது காலேஜில் சீட் வாங்க வேண்டும் என்ற வெறி என்று கூட சொல்லலாம்.
ஒரு வழியாக அவர்களுக்கு பரீட்சையும் முடிந்தது. தேன்மொழி மற்றும் ஸ்ருதி இருவரும் நன்றாக எழுதினார்கள். ஹாஸ்டலை காலி செய்து விட்டு ஸ்ருதியை தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் தேன்மொழி. அன்று இரவு தேவேந்திரன் அவளை அழைக்க வருவார் என்பதால் தான் இந்த ஏற்பாடு.
வீட்டுக்கு வந்ததும் அவர்களை சாப்பிட வைத்த ராஜி “ரெண்டு பேரும் இத்தனை நாள் படிச்சு களைச்சிருப்பீங்க. அதனால ஸ்ருதியோட அப்பா வர வரைக்கும் ரெஸ்ட் எடுங்க”, என்று சொல்லி விட்டு அவளுடைய அறைக்குச் சென்று விட்டாள்.
“வா டி கொஞ்ச நேரம் படுக்கலாம்”, என்று சொன்னாள் தேன்மொழி.