“தேனு நான்”, என்று என்ன சொல்ல தெரியாமல் அவள் திணற “எனக்கு உன்னைத் தெரியும் டி. இப்ப இல்லை. முன்னாடியே உன் மனசுல என்ன இருக்குனு எனக்கு தெரியும்”, என்றாள் தேன்மொழி.
“தேனு”
“அவனை நீ விரும்புற தானே?”
“விரும்புறேன்னு சொல்றது எல்லாம் சாதாரண வார்த்தை டி. எனக்கு அவங்களை அவ்வளவு பிடிக்கும். அவங்க மேல மதிப்பு மரியாதை எல்லாமே நிறையவே இருக்கு. அதையும் விட பக்தி இருக்கு. சினிமா ஹீரோ மாதிரி ரசிச்சு பாத்ததும் அவரை தான். கடவுள் மாதிரி நினைச்சதும் அவரை தான். அவர் எனக்கு என்னை விட அவ்வளவு முக்கியம் டி. இதுக்கு பேர் காதல்னா ஆமா டி நான் அவரை காதலிக்கிறேன்”
“ஆனா அவன் உன்னை விரும்ப வேண்டாமா ஸ்ருதி?”
“தேனு”, என்று அதிர்வாக கேட்டாள்.
“அவன் ஒரு சிடுமூஞ்சி டி. அவனுக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காது. உன்னையும் அவனுக்கு பிடிக்காது”, என்று தோழியை தெளிய வைக்க முயன்றாள்.
ஆனால் அவன் மேல் பைத்தியமாக இருக்கும் ஸ்ருதியோ “அவங்களுக்கு என்னைப் பிடிக்காதுன்னு எனக்கும் தெரியும் தேனு. அதை நினைச்சு எனக்கு கஷ்டமா தான் இருக்கு. ஆனா பரவால்ல, அவங்களுக்கு என்னைப் பிடிக்கணும்னு அவசியம் இல்லை. எனக்கு அவங்களைப் பிடிச்சிருக்கே? அது போதும்”, என்றாள்.
“உன்னைத் திருத்த முடியாது. அவனுக்காக தானே என்னை விட்டு பிரிய முடியாம தவிக்கிறதும். இல்லை உன் மனசுல ஒரு ஓரத்துல நானும் இருக்கேனா?”
“அது உண்மை தான். அவங்களுக்காக தான் ஒரு நாளும் உன்னைப் பிரிய முடியாம தவிக்கிறேன். ஆனா நீயும் எனக்கு ரொம்ப முக்கியம் டி. என்னோட பெஸ்ட் ஃபிரண்ட் நீ தான். உனக்கு ஒண்ணுன்னா கூட என்னால தாங்க முடியாது. இந்த நிமிஷம் நீ சாகச் சொன்னாலும் நான் செய்வேன்”, என்று உண்மையைச் சொன்னாள்.
“போடி லூசு, எனக்காக நீ சாக நினைக்கும் போது நான் உன்னை வாழ வைக்க நினைக்க மாட்டேனா? சரி படிப்பை பத்தி பேசுவோம். ஸ்ருதி நாம மெடிக்கல் படிக்கலாம் டி. பெரிய டாக்டர் ஆகலாம். நிறைய பேர் உயிரைக் காப்பாத்தலாம். வொயிட் கலர் கோர்ட் போட்டு கழுத்துல ஸ்டேதஸ்கோப் மாட்டிக்கிட்டு வரும் போது செமையா இருக்கும் டி”, என்று கண்களில் கனவு மிதக்க தேன்மொழி சொல்ல அவள் மனதை ஸ்ருதி புரிந்து கொள்ள வில்லை.
“இல்லை எனக்கு அந்த பந்தா எல்லாம் வேண்டாம்”, பதில் சொன்னாள் ஸ்ருதி.
“ஏன் டி இப்படி பண்ணுற? அண்ணன் படிக்கிற காலேஜ்ல ஏன் படிக்கணும்னு நினைக்கிற? நீ அங்க சேந்தாலும் ஒரு வருஷம் தான் அவன் அங்க படிப்பான். அப்புறம் அவன் அங்க இருக்க மாட்டான் டி. அதுக்கப்புறம் நீ அந்த காலேஜ்ல தனியா தான் படிச்சாகனும். உனக்கு அது புரியலையா?”
“எனக்கு அந்த ஒரு வருஷம் அவங்களைப் பாக்க சான்ஸ் கிடைக்குமே? அதுவே போதும். அது மட்டுமில்லாம எனக்கு ஊசி மருந்துன்னா சும்மாவே பயம் டி. எனக்கு அதுல விருப்பம் இல்லை. நான் உன் அண்ணனை பாக்காம இருந்திருந்தா கூட கண்டிப்பா மெடிக்கல் லைன்ல போயிருக்க மாட்டேன். அப்புறம் நான் ஏன் தனியா படிக்க போறேனாம்? அதான் நீ இருக்கியே? நீயும் என் கூட தானே படிப்ப. அப்புறம் என்ன கவலை?”, என்று ஸ்ருதி உறுதியாக சொல்ல தேன்மொழியால் அவளுடைய கனவை ஸ்ருதியிடம் சொல்ல முடியவில்லை.
தேன்மொழி அமைதியாக இருக்கவும் “என்ன தேனு அமைதியாகிட்ட? நீயும் என் கூட படிப்ப தானே?”, என்று கேட்க “ம்ம்”, என்று சொன்னாள்.
டாக்டர் ஆக வேண்டிய கனவை தோழிக்காக புதைத்துக் கொள்ள தயாராக இருந்தாள் தேன்மொழி. ஆனால் அது புரியாத ஸ்ருதியோ “சூப்பர் டி. சரி நீயும் அப்ளை பண்ணு. நானும் பண்ணுறேன்”, என்று சொல்லி போனை வைத்தாள்.
தோழிக்காக என்றாலும் தன்னுடைய கனவை, லட்சியத்தை மாற்றப் போவதால் முகம் வாடிப் போய் இருந்தாள் தேன்மொழி.
அப்ளை பண்ணும் வாய்ப்பு வரும் போது இரண்டு வீட்டிலும் பிரச்சனை வெடித்தது. ஸ்ருதி வீட்டில் டாக்டருக்கு படிக்கச் சொல்ல அவள் இன்ஜினியரிங் தான் சேர்வேன் என்று பிடிவாதம் பிடித்தாள். வேணியிடம் வாங்கியும் கட்டிக் கொண்டாள்.
ஆனாலும் அவள் பிடிவாதமாக இருக்க நவீன் தான் அவளை அவள் இஷ்டப் படி படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் பேசினான். ஆனாலும் அவன் மனதுக்குள் தங்கையின் மேல் கோபம் இருக்க தான் செய்தது.
இங்கே தேன்மொழியின் நிலைமையோ அதற்கு மேல் இருந்தது,. அவளுடைய கனவை சிறு வயதில் இருந்து பார்த்தவர்கள் என்பதால் அவளை டாக்டருக்கு படிக்கச் சொல்ல அவளோ இன்ஜினியரிங் தான் படிப்பேன் என்று உறுதியாகச் சொன்னாள். யார் சொல்லியும் அவள் கேட்க வில்லை.
தேன்மொழி தனியே இருக்கும் போது “ஏன் கா இப்படி பண்ணுற? உனக்கு டாக்டர் ஆகுறது தானே எய்ம்?”, என்று கேட்டான் அமர்.
“ஆமா டா, ஆனா நான் ஸ்ருதி கூட படிக்க போகலைன்னா அவ பீல் பண்ணுவா டா”
“அவங்களுக்காக நீ உன் லட்சியத்தை இழப்பியா?”
“என் லட்சியத்தை விட எனக்கு ஸ்ருதி முக்கியம். அவ ரொம்ப நல்ல பொண்ணு டா. அவ கூட இருக்குறது எனக்கும் சந்தோஷம் தான்”
“உன் தலை உன்னோட கனவைச் சொன்னா ஸ்ருதி அக்காவே உன்னை டாக்டருக்கு தான் படிக்கச் சொல்லுவாங்க”
“அப்படிச் சொல்லுவா தான். ஆனா அவ உள்ளுக்குள்ள கஷ்டப் படுவா”
“இந்த அளவுக்கு அவங்களுக்காக பாக்குற? அப்படி உனக்காக அவங்க என்ன செஞ்சாங்க?”
“ஏதாவது செஞ்சு தான் நட்பை நிரூபிக்கணுமா டா அமர்? இதை இதோட விடு. யார் கிட்டயும் இதைப் பத்தி சொல்லாத. சொல்ல மாட்டேனு சத்தியம் பண்ணு. ஸ்ருதி பேர் எங்கயும் வெளிய வரக் கூடாது”, என்றாள்.
“உனக்கு பிரச்சனை வராத வரைக்கு இந்த சத்தியம் செல்லும். அப்புறம் செல்லாது”, என்று சொல்லியே சத்தியம் செய்தான் அமர்.
அதன் பிறகு வந்த நாட்களில் ஸ்ருதி சந்தோஷமாக இருந்தாள் என்றால் தேன்மொழியோ எதையோ இழந்தது போல தான் இருந்தாள். இன்ஜினியரிங் படிக்க அனுமதி கொடுத்த பிறகும் அவள் அப்படி சோகமாக இருப்பது வீட்டை அதிகம் பாதித்தது.
பெற்றோருக்கு என்ன சொல்ல என்று தெரிய வில்லை. அவர்களால் அவளிடம் கோபப் படத் தான் முடிந்தது. அவள் மனது புரிந்த அமர் யாருக்கும் தெரியாமல் ராகவனுக்கு அழைத்து விட்டான்.
“ஹலோ அமர் சொல்லு டா, எப்படி இருக்க? படிப்பு எல்லாம் எப்படி போகுது?”, என்று கேட்டான் ராகவன்.
“நல்லா போகுதுண்ணா?”
“ஏன் டா டல்லா பேசுற?”
“நம்ம தேனை நினைச்சு தான்”
“எனக்கே அவ மேல எரிச்சலா தான் வருது டா. அவ கிட்ட பேசினா திட்டிருவேன்னு தான் பேசாம இருக்கேன். இன்ஜினியரிங் சேரப் போறாளாமே? அம்மா சொல்றாங்க. அவளுக்கு டாக்டர் ஆகுறதுன்னா ரொம்ப பிடிக்குமே டா?”
“அக்காவுக்கு இப்பவும் இன்ஜினியரிங் போக விருப்பம் இல்லை தான். டாக்டர் ஆகணும்னு தான் ஆசை”
“என்ன அமர் சொல்ற? அப்புறம் ஏன் டா இப்படி பண்ணுறா?”
“ஸ்ருதி அக்காக்காக தான் அவ கனவை தூக்கி எரியுறா”
“என்ன டா சொல்ற?”
“ஆமா, நீ தேனு கிட்ட பேசுண்ணா. நான் சொன்னேன்னு சொல்லாத”
“சரி பேசுறேன்”, என்று சொன்னவன் உடனே ஊருக்கு கிளம்பி விட்டான்.
வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அவன் தேனைச் தேடிச் செல்ல மற்றவர்கள் அவரவர் வேலையைப் பார்த்தனர்.
“இந்தா இந்த ஃபார்ம்ல கையெழுத்தைப் போடு”, என்று நீட்டினான் ராகவன்.
என்னவென்று எடுத்துப் பார்த்த தேன்மொழியின் கண்கள் சந்தோசத்தில் ஒரு நொடி விரிந்தது. மெடிக்கல் காலேஜ்க்கான விண்ணப்ப படிவம் தான் அது. அதை ஒரு நொடி பார்த்து சந்தோஷப் பட்டவளின் முகம் மீண்டும் கூம்பிப் போனது. அதை பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.
“இதெல்லாம் வேண்டாம் அண்ணா. நான் இன்ஜினியரிங் தான் போகப் போறேன்”
“தேனு வேண்டாம். சொன்னா கேளு”
“முடியாது”
“ஏன் இப்படி பண்ணுற? எல்லாம் அந்த பொண்ணுக்காக தானே? அந்த அளவுக்கு பிரண்டா அவ? அவளுக்காக நீ இதையெல்லாமா விட்டுக் கொடுப்ப?”, என்று கேட்க அவள் அமைதியாக இருந்தாள். அமர் தான் ராகவனிடம் சொல்லி இருப்பான் என்று புரிந்து கொண்டாள்.
“இங்க பாரு தேனு, நீ டாக்டர்க்கு தான் படிக்கணும். அந்த பொண்ணு தனியா காலேஜ்ல போய்ச் சேர பயப்படுதுன்னா அவளை எப்படியாவது என் காலேஜை எடுக்க வை. என்னோட ஜூனியரா வந்தா நான் அவளைப் பாத்துக்குறேன். அவளைப் பத்தி கவலைப் படுறதை விட்டு நீ உன்னைப் பாரு”
“நீ அவளைப் பாத்துக்குறியாண்ணா?”, என்று கண்கள் மின்னக் கேட்டாள்.
“பாத்துக்குறேன். என் காலேஜ்ல சேரச் சொல்லு. ஆனா நான் சொன்னேன்னு சொல்ல வேண்டாம். இனி அவ என்னோட பொறுப்பு. நீ உன் மனசை மாத்திக்கோ”
“நீ அவளைப் பாத்துக்கிட்டா எனக்கு அது போதும்ணா”, என்று சொன்னவள் மனதுக்குள் “அவளுக்கு என்னை விட நீ தான் ரொம்ப முக்கியம் அண்ணா. நீ அவ கூட இருந்தாலே எனக்கு அது சந்தோஷம் தான்”, என்று எண்ணிக் கொண்டாள்.
“இவ ஏன் இப்படிச் சொல்றா? ஒரு வேளை ஸ்ருதி தேனு கிட்ட ஏதாவது சொல்லிருப்பாளா?”, என்று உள்ளுக்குள் எண்ணினான் ராகவன்.
“சரி இப்பவாது கையெழுத்து போடுறியா?”, என்று கேட்டதும் சந்தோஷமாக கையெழுத்தைப் போட்டாள். ஆனால் அதை தேன்மொழி ஸ்ருதியிடம் சொல்ல வில்லை.
நாட்கள் எப்போதும் போல கடக்க நினைத்த படியே ராகவன் படிக்கும் கல்லூரியில் அவன் எடுத்திருக்கும் பாடத்திலே ஸ்ருதிக்கும் சீட் கிடைத்தது.
சந்தோசமாக இருந்தாள் ஸ்ருதி. தேன்மொழிக்கு கவுன்சிலிங்க் வரும் நாள் ஆவலாக காத்திருந்தாள். ஆனால் அன்று மாலை ஸ்ருதியை அழைத்த தேன்மொழி தனக்கு அந்த காலேஜில் சீட் கிடைக்க வில்லை என்றும் தஞ்சாவூர் பக்கம் கிடைத்ததாகவும் அதனால் இஞ்சினியரிங்கே வேண்டாம் என்று முடிவு செய்ததையும் சொன்னாள்.
அவள் தன்னுடன் படிக்க வர மாட்டேன் என்று சொன்னதைக் கேட்டு ஸ்ருதி அழ ஆரம்பிக்க அவளை எப்படி சமாதானப் படுத்த என்று தேன்மொழிக்கு தெரிய வில்லை. கூடவே தோழியிடம் பொய் சொல்கிறோமே என்று பயமாகவும் இருந்தது.
அவளை சட்டென்று அடக்க ஒரு ஐடியா தோன்ற பளிச்சென்ற புன்னகையுடன் “அதான் காலேஜ்ல உன்னைப் பாத்துக்க எங்க அண்ணன் இருக்காரே அண்ணியாரே. அப்புறம் என்ன கவலை?”, என்று கேட்டாள்.
‘அண்ணி’ என்ற வார்த்தையைக் கேட்டு ஸ்ருதி முகம் பூவாக மலர்ந்தது. “சரி டி, நீ மெடிக்கல்கே அப்ளை பண்ணு. ஆனா எப்படியாவது சென்னைக்கு வந்துரு. இங்க இருந்தா அப்ப அப்ப பாத்துக்கலாம். நான் உன்னை பாக்க வரேன். தினமும் என் கிட்ட பேசணும்”, என்று சொல்ல சந்தோஷமாக “சரி டி”, என்று சொன்னாள் தேன்மொழி.
தன்னுடைய கனவு நிறைவேறப் போகும் சந்தோசத்தில் இருந்தாள் தேன்மொழி. அவளுக்கும் அவள் நினைத்தது போல சென்னையிலே மெடிக்கல் கிடைத்தது. ஆனால் விதி அவளை நவீன் படிக்கும் அதே கல்லூரிக்கு அழைத்துச் சென்றது. இப்போது நவீன் கடைசி வருட படிப்பை படித்துக் கொண்டிருந்தான்.
ஸ்ருதிக்கு காலேஜ் ஆரம்பிப்பதற்கு முன்னே தேன்மொழிக்கு காலேஜ் ஆரம்பித்தது. ஆவலும் கனவும் கொண்டு அந்த மெடிக்கல் காலேஜில் அடி எடுத்து வைத்தாள். அவள் முகம் புன்னகையால் மலர்ந்தே இருந்தது. ஆபீஸ் ரூம் தேடி சென்று கொண்டிருக்கும் போது தான் அவள் நவீனைப் பார்த்தாள்.
வெள்ளைக் கோர்ட்டைப் போட்டுக் கொண்டு கையில் ஸ்டெத்தஸ்கோப் வைத்து கொண்டிருந்தவன் மரத்தடியில் மற்ற நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தான்.
இவளைக் கண்டதும் அந்த கூட்டத்தில் இருந்த ராகுல் என்பவன் “ஏய் இங்க வா”, என்று அழைத்தான். நவீனும் அவளைத் திரும்பி பார்த்தான். “பர்ஸ்ட் இயர் போல?”, என்று எண்ணிக் கொண்டு “டேய் ராகுல் வேண்டாம், ஸ்டாப் யாரும் பாத்தா வீணா பிரச்சனை ஆகும்”, என்று எச்சரித்தான்.
மனதில் எழுந்த பயத்தை மறைத்துக் கொண்டு அவர்களை நெருங்கினாள் தேன்மொழி.
“சும்மா இரு மச்சான், நாமளும் கெத்தைக் காட்டனும்ல?”, என்று சொன்ன ராகுல் அவள் அருகே வந்ததும் “என்ன பர்ஸ்ட் இயரா?”, என்று கேட்டான்.
“ஆம்”, என்பதாக அவள் தலை அசைக்க “உன் பேர் என்ன?”, என்று கேட்டான்.
“தேன்மொழி”, என்று தயங்கிய படியே அவள் சொல்லும் போது “என்ன நடக்குது இங்க?”, என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க அனைவரும் திரும்பினார்கள். தேன்மொழியும் திரும்பிப் பார்த்தாள். அங்கே ஐம்பது வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி நின்றிருந்தார்.