“வெளியூர் போயிருந்தேன்மா. தண்ணித் தாகமாயிருந்துச்சி. வீடு போக நேரமாகுமே. அதான் பாப்பாகிட்ட தண்ணி வாங்கிக் குடிச்சேன். நல்ல சமத்துப் பொண்ணுமா. நான் வர்றேன்ங்கம்மா” எங்கே நின்றால் குழந்தை எதுவும் சொல்லிவிடுவாளோ என பயந்து வேகமாக நடந்தான்.
“இரு மயில்சாமி. கருப்பட்டிக் காப்பி போட்டுத் தர்றேன். குடிச்சிட்டுப் போ.”
“கடையில டீ குடிச்சிட்டுதான் வர்றேன். வீட்ல காத்திருப்பாங்க. நான் வர்றேன” என நிற்காது சென்றான்.
“மதியம் ரெண்டு பேரும் சாப்பிட்டீங்களா சூர்யாமா?”
“நானும் தம்பியும் சாப்பிட்டோம். நான் தம்பிக்கு ஊட்டிவிட்டேன்” என்றாள்.
“நீ என் சமத்துக் குட்டிடா. ஆமா தம்பி எங்க?”
“தூங்கிட்டதால பாய்ல படுக்க வச்சிட்டேன்மா.”
“சரி வா அம்மா உனக்குக் காப்பி போட்டுத் தர்றேன். பக்கத்துக் கடையில, நூறு பொறிகடலை வாங்கிட்டு வா. காப்பிக்குள்ள போட்டு சாப்பிடுவீங்க.”
“ஐ தாங்க தாங்க. நானே வாங்கிட்டு வர்றேன்.”
சூர்யா சென்றதும் சிறு ஏக்கப் பெருமூச்சு பூவரசியினுள். “நல்ல சாப்பாடு, நல்ல துணிமணின்னு கொடுக்கக்கூட முடியாத பாவியா நிற்கிறேனே. மாரித்தாயே! எங்களை நல்லபடியா வாழ வை” என்று கடவுளிடம் தன் பாரத்தைப் போட்டு, அடுப்பைப் பற்றவைத்து அலுமினியச் சட்டியில் தண்ணீர் ஊற்றி, கருப்பட்டியை உடைத்துப் போட்டுக் கரைந்ததும், இஞ்சி தட்டி அம்பிகா காப்பித்தூள் போட்டு கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி, பெரிய டம்ளரில் மகள் வாங்கி வந்தக் கடலையைப் போட்டுக் கொடுத்து மீதத்தைப் பையன்களுக்கு வைத்தாள்.
“அம்மா எப்ப என்னை பள்ளிக்கூடத்துல சேர்ப்பீங்க?”
“ஆறு வயசு இன்னும் முடியலையேமா. முடிஞ்சதும் சேர்த்து விடுறேன். சரியா?”
“சரிம்மா” என்று புன்னகைத்து, சிந்தாமல் சிதறாமல் காப்பியைக் குடித்து முடித்து, முன்னே தள்ளி நின்ற வயிறைத் தொட்டுப்பார்த்துத் திருப்தியாகி விளையாடச் சென்றாள்.
சற்று நேரம் கழித்து, “சூர்யாமா தாத்தா கடைக்குப் போயி இந்தக் காசைக் குடுத்துட்டு, நேத்து வாங்கின சோப்புக்கு சரியா போச்சிதுன்னு சொல்லிட்டு சீக்கிரம் வா” என… எதிர்த்துப் பேசாது சரியென்று செல்லும் தன் மகளை நினைத்துப் பெருமைப்பட்டாலும், காக்கா தலையில் பனங்காயை வைக்கும் வேதனையும் வரத்தான் செய்தது.
“ஹ்ம்… புள்ளையை நல்லபடியா வளர்த்து, நல்லவனா பார்த்துக் கொடுக்கணும்” எனும்போது ஏனோ நாலாவது பெண் நாய் படாதபாடு என்று மனதில் தோன்ற தலையை உதறி, “சே என்ன நினைப்பு எனக்கு. என்னோட எதிர்மறை எண்ணம் என் பொண்ணு வாழ்க்கையைப் பாழடிச்சிராதா? கஷ்டத்துலயே ஊறி ஊறி நினைப்புகள் கூடத் தவறாகவே வருது. தாய் கண்படுறது நல்லதுக்கில்லை. மாரித்தாயே! என் பிள்ளைங்களை நல்லபடியா வாழ வை” என்ற பூவரசி, “டேய் ராமு. இந்தப்பய பள்ளிக்கூடம் போயிட்டு வந்து எங்க போனான்?” லட்சுமணனையும் காணலையே என புலம்பினாலும் தேடத் தோன்றாது சமையலை ஆரம்பித்தாள்.
பெரியவனும் சின்னவனும் வீட்டிற்கு வந்து வாசலில் பம்பரம் விளையாடிக் கொண்டிருக்க, காசு கொடுக்கச் சென்ற குழந்தை வரவில்லை. ராமனுக்கு தந்தையின் தாயிடம் அதிகம் வளர்ந்ததால் தங்கைமேல் பாசமிருந்தாலும் பொறுப்பற்றுத்தான் போனானோ! அவனைத் தொடர்ந்து சின்னவனும். வீட்டில் ஒரு சிறு பெண் இருப்பதையே மறந்திருந்தார்கள்.
“தாத்தா அம்மா சோப்பு வாங்கினதுக்குக் காசு குடுத்துட்ட வரச்சொன்னாங்க” என்று நீட்ட…
“உள்ள வீட்ல வந்து உட்காரு. சாக்லேட் தர்றேன்” என்று ஆசை காட்டினான் தாத்தா முறை வரும் அந்த நாற்பத்தைந்து வயது ஆசாமி.
[the_ad id=”6605″]
“சாக்லேட்டுக்கு அம்மா காசு தரலை தாத்தா. நீங்க இதை வாங்கிக்கோங்க. நான் வீட்டுக்குப் போகணும்” என்றாள்.
“சாக்லேட்கு காசெல்லாம் வேண்டாம். நீ உள்ள வா.”
“அம்மா திட்டுவாங்க.”
“நீ வா நான் அம்மாகிட்டப் பேசிக்கிறேன்” என்றதும் கடை வழியே பின்னேயிருந்த வீட்டிற்குள் வந்தவள், “பாட்டி இல்லையா? எனக்குப் பயமாயிருக்கு. வீட்டுக்குப் போறேன்” என்றவளைத் தூக்கி சுற்றிலும் ஆட்கள் இல்லையென்பதை உறுதி செய்து உள்ளே சென்று, அவளே அறியாது கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என்று ஆடைக்கு மேல் குழந்தையின் அங்கங்களைத் தவறான எண்ணத்தில் தொட்டுப் பார்க்க…
“மீசை குத்துது தாத்தா முத்தம் குடுக்காதீங்க” என்று தள்ளிவிட… அதற்குள் கடைக்கு ஆள் வந்த சத்தம் கேட்டதும் கையிலிருந்த சாக்லேட்டைக் கொடுத்து வீட்டின் வழியே அனுப்பிவிட்டான்.
“ஏய் சூர்யா இங்கயா இருக்க? வா அம்மா கூப்பிடுறாங்க. ஏன் ஒரு மாதிரியா நிற்கிற? என்றான் லட்சுமணன்.
“அது அந்தத் தாத்தா…” என்றவள் பயத்தில் அண்ணனின் கைபிடிக்க, இன்னொரு கையில் சாக்லேட். சாக்லேட் கொடுக்கும் பொழுது, ‘இது நான் தந்தேன்னு யார்கிட்டயும் சொல்லக்கூடாது. அப்படிச் சொன்னா அம்மா உன்னைத்தான் அடிப்பாங்க.’ ஏனென கேட்க வாய் திறந்து கேட்காது சரியென்பதாய் தலையாட்டி விட்டாள். சாக்லேட் எப்படி தெரியாமல் சாப்பிடுவது என்ற மண்டைக் குடைச்சலும் வர, சிறு ஏக்கத்தில் அதை அப்படியே கீழே தூக்கிப்போட்டாள்.
இரவு வந்தாலே பயம் பூவரசிக்கு. அடுத்தடுத்து குழந்தைகளாக சம்பாத்தியமும் இல்லாமல் பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது? எப்படியும் அரசு ஆஸ்பத்திரியில் குடும்பக்கட்டுப்பாடு அபரேஷன் பண்ணிடனும் என்ற எண்ணம் அவளுள். இரவு தண்ணியடித்ததே வெளியே தெரியாமல் வந்த கணவனின் அதட்டலுக்குப் பயந்து உணவைக் கொடுத்து பிள்ளைகளுடன் படுக்கச் செல்ல, முதுகில் பட்ட சுரீர் வலியுடன் கண்ணீர் கட்ட அவனைக் காண…
“கட்டின புருஷனைக் கவனிக்காம எங்க அங்க போற? “என்றான் கோபத்தில்.
“எனக்கு விறகு வெட்டப்போனது உடம்பெல்லாம் வலிக்குதுங்க. முள்ளெல்லாம் கீறி, அருவாள் வேற கால்ல பட்டுருச்சி” என்று மறுக்க…
“என்ன நீலிக்கண்ணீர் வடிக்கிற? புருஷன் கூப்பிட்டா எதிர்த்துப் பேசாம வரணும்.”
“இல்ல என்னால முடியாது” என்றாள் மறுப்பாக.
“நீ மாட்டேன்னா உன்னைக் கெஞ்சுவேன்னு நினைச்சியா? திரும்பத் திரும்ப தலையாட்டுற. வா” என்று முடியைப் பிடித்து இழுத்துச் செல்ல… அவிழ்க்கப்பட்ட ஆடைகள், வெளியில் கிடக்கும் விறகுக்கும் தனக்கும் யாதொரு வித்தியாசமும் கிடையாது என்பதாய் படுத்துக்கொள்ள… தன் தேவை மட்டுமே குறியானவனுக்கு அவளின் எதிர்ப்பு எங்கே தெரியப்போகிறது.
‘தன் வாழ்க்கை இப்படியே போகுமா? அடித்து உதைத்துப் பெண்ணிடம் என்ன இன்பம் கிடைக்கப் போகிறது? ஆண்டவா என் பெண்ணிற்கு இவனைப்போல் ஒருவனை மாப்பிள்ளையாக்கிவிடாதே.’ அந்நேரத்திலும் மகளுக்கான வேண்டதலே.
அடுத்த ஆறு மாதத்தில் சூர்யாவைப் பள்ளியில் சேர்க்கப் போகையில், தர்மராஜன் தன் மகளுக்கு மனைவி வைத்த பெயரைக் கொடுக்க மனமில்லாது, தன் தாயின் பெயர் மாரீஸ்வரி என கொடுத்தான்.
“அப்பா என் பெயர் தப்பா சொல்றீங்க? டீச்சர் என் பெயர் சூர்யோதயா. அப்பா, பெரியப்பா, சித்தப்பா, அத்தை தவிர எல்லாரும் அப்படித்தான் கூப்பிடுவாங்க” என்றாள்.
“என்ன சொல்றா உங்க பொண்ணு?” என்றார் அந்த ஆசிரியை.
“பாப்பா பேர் சூர்யோதயாதான் டீச்சர்” என்று அங்கு வந்து நின்றான் ராமன். அதே பள்ளியில் ஆறாவது படித்துக் கொண்டிருக்கிறான்.
“இப்ப நான் எந்தப் பெயர் எழுதட்டும்?” என்றார் இருவரையும் பார்த்தபடி.
“இத்தனை வருஷமா பாப்பா பெயர் இதுதான் டீச்சர்” என்று சொல்ல… தர்மராஜனின் முகம் கோபத்தில் சிவந்தாலும், “அவன் சொன்னதையேப் போடுங்க டீச்சர்” என்றான்.
தர்மராஜனின் தன்னிடமுள்ள ஆளுமையை தானே அறியாது முதன் முதலாகத் தகர்த்தெறிந்தாள் சூர்யோதயா.
“ஏய் என்ன பெயர் வச்சிருக்க? அம்மா பெயர் வச்சா நீ வேற எதுவோ வைக்கிற? அதுவே இருக்கட்டும்” என்று மனைவியிடம் தாயின் பெயரை வைக்க முயற்சிக்க…
“பாப்பாவுக்குப் பெயர் வச்சி ஜாதகமே எழுதியாச்சி” என்று அமைதியாகச் சொன்னாள் பூவரசி.
“நான் எங்கம்மா பெயரை வைத்துத்தான் கூப்பிடுவேன்” எனத் திமிராகச் சொன்னான்.
“நீங்க வேணும்னா உங்களுக்குப் பிடிச்சதைக் கூப்பிடுங்க. நான் எதுவும் சொல்லமாட்டேன்.”
“வர வர ரொம்பப் பேசுற நீ. எனக்கும் சந்தர்ப்பம் வராமலா போகும். அப்பப் பார்த்துக்கறேன்” என்று அன்று விட்ட சவாலை நிறைவேற்றக் கிடைத்த இந்த சந்தர்ப்பம் மகன் மூலமாகப் பறிபோனதை கோபமுடன் பார்த்தான். மகனை எதிர்க்கலாம் என்றால் இப்பொழுதெல்லாம் மனைவியைத் திட்டுகையில், அடிக்கையில் அவனின் முறைப்பு அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
[the_ad id=”6605″]
பெண்ணிடம் வீரம் காட்டும் ஆண்களின் பலம் என்பது, தன்னை ஒருவர் எதிர்த்துத் தைரியமாக நிற்கும் வரை மட்டுமே. அது மனைவியாகவோ! மகனாகவோ! இல்லை மகளாகவோ கூட இருக்கலாம்.
அடுத்த சில ஆண்டுகளில் அதுதான் நடந்தது. தாயை அடிக்கையில் கையைப் பிடித்துத் தடுத்து, “இன்னொரு முறை அம்மாவை அடிச்சா சரியிருக்காது. என்ன நினைச்சிட்டிருக்கீங்க? அம்மா களையெடுக்க விறகு வெட்டன்னு வேலைக்குப் போயி கஷ்டப்பட்டுட்டு வர்றாங்க. நீங்க சும்மா சாப்பிட்டு ஊரைச் சுத்திட்டு வந்து அடிச்சிட்டிருக்கீங்க? இனிமேல் அடிச்சீங்க தெரிஞ்சது… அவ்வளவுதான்” என்று எச்சரித்தான் அந்தப் பனிரெண்டு வயதுச் சிறுவன்.
“பையனை ஏவிவிட்டு என்னை எதிர்த்துப் பேச வச்சி எனக்கெதிரா தூண்டி விடுறியா? உன்னை…” பூவரசியை அடிக்கக் கையை ஓங்கிக்கொண்டு வர…
“இப்பதான சொல்லிட்டிருக்கேன். போயி பொழைப்பைப் பாருங்க. ஆ ஊன்னா கையை ஓங்கிக்கிட்டு. என் நண்பனுங்கல்லாம் கேட்கிற அளவுக்கு இருக்கு அம்மா நிலைமை. இதான் கட்டக்கடைசி. இனிமேல் சொல்லிட்டிருக்க மாட்டேன். எங்களுக்கும் கை இருக்குன்றதை மறந்திராதீங்க” என்றான் அழுத்தமாக.
“என்னடா செய்வ?”
“என்னால முடியலன்னாலும் அம்மாவை திருப்பி அடிக்கச் சொல்லிச் சொல்வேன். அந்த அசிங்கம் உங்களுக்குத் தேவையா?”
“முளைச்சி மூணு இலை விடல அதுக்குள்ள அடிக்க வருவியா? என்னைக்காவது என்கிட்ட சிக்குவடா. அப்பப் பார்த்துக்கறேன்.” அடித்தால் திரும்ப விழுமோ என்ற மன பயத்தை மறைத்து அவ்விடம் விட்டு நகர்ந்தான்.
செல்லும் அவரை முறைத்து, “இவ்வளவுதான்மா. இதுக்கு இத்தனை வருஷம் காத்திருக்கணுமா? துரத்துற நாயை நின்னு திருப்பி முறைச்சா பயந்து ஓடிப்போயிரும். அப்படித்தான் இவரும். இனிமேலாவது கொஞ்சம் எதிர்த்துப் பேசுங்க” என்று தாய்க்குப் பாடம் எடுத்தான்.
மகனை அணைத்துப் பிடித்து, “நீ வந்துதான் இவரை மாத்தணும்னு இருக்கு” என்ற தாயிடமிருந்து விலகி, “தொடாம பேசுங்க” என்றான்.
“ராமு நான் உன் அம்மா.”
“யாராயிருந்தாலும் விலகி நின்னுதான் பேசணும்” என்று முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டு நகர… திகைப்பாய் பார்த்திருந்த தாயிடம் வந்த லட்சுமணன், “அவன் கிடக்கிறான் விடுங்கம்மா. நீங்க என்னைப் பிடிச்சிக்கோங்க.” தாயை அமரவைத்து மடியில் தலைவைத்துக் கொண்டானவன்.
[the_ad id=”6605″]
பள்ளிப்படிப்புகள் தன்போக்கில் சென்று கொண்டிருக்க, ஏழாவது படிக்கையிலேயே தகப்பனின் அராஜகம் தாளாது, பிரிண்டிங் பிரஸைத் தானே பார்த்துக் கொள்வதாகச் சொல்லி படிப்பை நிறுத்திவிட்டான் ராமன். தர்மராஜன் தரமுடியாது என்று உறுதியாக நிற்க… அவனின் நண்பர்களை வைத்து தனவசமாக்கிக் கொண்டானவன்.
வகுப்பில் முதலாவதாக வரும் மாணவன் பள்ளிக்கு வராததால், ஆசிரியரே பூவரசியைத் தேடி வந்து கேள்வியெழுப்ப… “நான் போகதான் சார் சொல்றேன். இவன் பிரஸைப் பார்த்துக்கிறேன்னு அடம் பிடிக்கிறான.” பையனின் படிப்பு கெடுகிறதே என்ற வருத்தத்தில் ஆசிரியரிடம் சொல்ல…
“நான் என் தம்பிகள், தங்கையைப் படிக்க வைக்கிறேன் சார். இப்ப நான் வந்தா, என் அப்பா இந்த அச்சாபீஸையும் குடும்பத்தையும் ஒண்ணுமில்லாமல் செய்திருவார்.”
“படிப்பு முக்கியம் ராம்.”
“படிச்சது வரை நல்லாவே படிச்சிட்டேன் சார். என் கூடப்பிறந்தவங்களைப் படிக்க வச்சி என் ஆசையைத் தணிச்சிக்கிறேன். நீங்க கிளம்புங்க சார்” என்றான்.
“நீ நல்லாயிருப்ப ராம்” என்று அவர் செல்ல… அடுத்த சில நாட்களில் லட்சுமணனும் படிப்பை நிறுத்தி அண்ணனுக்குத் துணையாக இருப்பதாகச் சொல்ல… வீட்டினர் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை.
லட்சுமணனுக்கு அவன் அண்ணன்போல் படிப்பு மண்டையில் ஏறாது. படிப்பதைத் தவிர்க்க அண்ணனைக் காரணம் காண்பித்து, மீறி அனுப்பினால் வேறு எங்காவது ஓடிவிடுவேன் என்று மிரட்ட, வேறு வழியில்லாமல் ராமனுக்குத் துணைக்கு லட்சுமணனை விட்டார்கள்.
‘மாரீஸ்வரி’ என்ற பெயரில் நடந்து வந்த பிரஸ், ‘அரசி’ என்ற பெயரில் மாற்றப்பட்டு அந்த சுற்று ஏரியாவில் மெல்ல மெல்ல பெயரெடுக்க ஆரம்பித்தது.