அவனும் உடை மாற்றியதும் சிதம்பரம் வீட்டுக்கு செல்ல அங்கே அனைவரும் அவர்களை ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்கள். “என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க? கொஞ்ச நேரம் தூங்கிருக்கலாமே?”, என்று கேட்டான் சேகர்.
“மச்சான் நேத்து நைட் தூங்கிருப்பாரா என்ன?”, என்று தேவியின் கணவன் கேட்க “முத ராத்திரி அன்னைக்கு யாராவது தூங்குவாங்களா?”, என்று கேட்டான் ஜெயாவின் கணவன்.
“போங்க மாப்ள”, என்று தமிழ் அழகாக வெட்கப் பட அவனை அப்படிப் பார்க்க அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அனைவரும் அவர்களை கிண்டல் அடிக்க காலைப் பொழுது அங்கே அருமையாக நகர்ந்தது.
காலை உணவை அங்கேயே முடித்து விட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். சிதம்பரத்தை தவிர மற்ற அனைவரையும் குல தெய்வம் கோவிலுக்கு போகச் சொன்னாள் மீனாட்சி. அனைவரும் சந்தோஷமாக கிளம்பினார்கள். சிதம்பரம் ஆட்டுக்கறி, கோழிக்கறி என்று வாங்கி வர மீனாட்சியும் தேவகியும் சேர்ந்து சமையல் செய்தார்கள்.
பிள்ளைகள் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு வரும் போது இங்கே விருந்து தயாராக இருந்தது. ஆண்கள் அனைவரும் ஒவ்வொருவராக சாப்பிட அமர்ந்தார்கள். சின்ன பிள்ளைகளும் அமர்ந்தார்கள். பெண்கள் அனைவரும் பரிமாறுவதற்காக நின்றார்கள். கயலும் ஜெயாவின் அருகில் நின்றாள்.
“அண்ணி விருந்தே உங்களுக்கும் அண்ணனுக்கும் தான். அண்ணன் பக்கத்துல உக்காருங்க”, என்றாள் தேவி.
“இல்லை, நான் உங்க கூட உக்காந்து சாப்பிடுறேன். முதல்ல அவங்க சாப்பிடட்டும்”, என்று கயல் சொல்ல “தமிழ் பக்கத்துல உக்காரு டா”, என்றாள் மீனாட்சி.
“ஆமா வா மா, உக்காரு”, என்று சிதம்பரமும் அழைத்தார்.
அதற்கு மேல் மறுக்க முடியாமல் அவன் அருகே சென்று அமரப் போக அப்போது “அண்ணி வேணும்னா டிரஸ் மாத்திக்கிறீங்களா? சேலையோட இருக்குறது உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”, என்று கேட்டாள் தேவி.
“பரவால்ல அண்ணி, சாப்பிட்டு மாத்திக்கிறேன்”, என்று அவளிடம் பேசிக் கொண்டே அமர தவறுதலாக தமிழின் மடியில் அமர்ந்து விதிர்த்து போய் எழுந்து நின்று விட்டாள்.
அனைவரும் சிரிக்க கயலுக்கு வெக்கமாக போனது. “என்ன கயல் உனக்கு உன் புருஷன் மடில உக்காந்து சாப்பிட்டா தான் பிடிக்குமா? வேணும்னா அவன் மடிலே உக்காந்துக்கோ. நாங்க ஒண்ணும் சொல்லலை. அவனுக்கும் சந்தோஷமா தான் இருக்கும்”, என்று வைஷ்ணவி சொல்ல அவள் முகம் சிவந்தது.
தமிழோ சிறு சிரிப்புடன் அமர்ந்திருந்தான். “நான் அப்புறம் சாப்பிடுறேன்”, என்று கயல் சொல்ல அவள் கரம் பற்றி இழுத்து தன்னருகே அமர வைத்தான் தமிழ். அதற்கும் சிரிப்பு சத்தம் தொடர்ந்தது.
சாப்பாட்டு வேளை கலகலப்பாக நகர்ந்தது. அதற்கு பின் சீட்டு விளையாட்டில் நேரம் கழிய மாலை டீ டிபனுடன் தமிழின் மூன்று தங்கைகளின் குடும்பமும் கிளம்பியது. வைஷ்ணவியும் தன்னுடைய குடும்பத்துடன் அவளது வீட்டுக்கு சென்று விட்டாள். சிதம்பரம், மீனாட்சி, கயல், தமிழ் நால்வரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அன்று முழுவதுமே சரோஜா வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. யாருடைய கண்ணிலும் படவே இல்லை.
இரவு உணவை முடித்து விட்டு தமிழும் கயலும் தங்களின் கூட்டுக்குச் செல்ல அங்கே காதலும் சந்தோஷமும் மட்டுமே நிறைந்து இருந்தது. அவளை இழுத்து மடியில் அமர வைத்தான்.
“ஐயோ என்ன பண்ணுறீங்க? விடுங்க”, என்று சிணுங்க “என்ன டி, எல்லாருக்கும் இருக்கும் போது தான் என் மடில உக்காருவியா? இப்ப தனியா இருக்கும் போது உக்காந்தா தான் என்னவாம்?”, என்று சிரிப்புடன் கேட்டான்.
“ஐயோ அதை ஏன் ஞாபகப் படுத்துறீங்க? எனக்கு வெக்கமா போச்சு தெரியுமா? வைஷு அக்கா என்னை கிண்டல் செஞ்சே ஒரு வழி ஆக்கிட்டாங்க”
“விடு டி, இதெல்லாம் பெரிய விஷயமா?”, என்று கேட்டவன் பேசிய படியே அவளை மடியில் அமர வைத்திருந்தான்.
அதை உணராமல் பேசிக் கொண்டிருந்தவள் அவனது இதழ்கள் அவள் முதுகில் ஊர்வலம் போகவும் தான் நடப்புக்கு வந்தாள்.
“இது தான் நீங்க பேசுற லட்சணமா?”, என்று அவள் குரல் கிசுகிசுப்பாக வெளியே வர “புதுசா கல்யாணம் ஆனவன் வேற எப்படி பேசுவானாம்?”, என்று கேட்டவனின் இதழ்கள் அவள் காதில் பதிந்தது. அங்கே புதிய தேடல் ஆரம்பிக்க அவன் கரங்களுக்குள் நெகிழ்ந்தாள் கயல்.
அடுத்த நாள் சேகரின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றார்கள். ஊரே அவர்களை சந்தோஷமாக வேடிக்கை பார்த்தது. சேகரின் வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்த இருவரும் இறங்கினார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் “தமிழு உன் பொண்டாட்டி அழகா இருக்கா. நீ கொடுத்து வச்சவன் தான்”, என்று சொல்ல கயலுக்கு வெட்கமாக இருந்தது. அவள் வெட்கத்தை நடு ரோட்டில் வைத்தே ரசித்துப் பார்த்தான் அவன்.
இன்னொரு ஆளும் அப்படியே சொல்ல “ஏன் எல்லாரும் இப்படியே சொல்றாங்க? நீங்களும் தானே அழகா இருக்கீங்க? என்னமோ நான் மட்டும் அழகா இருக்குற மாதிரி அவங்க பேசுறது எனக்கு பிடிக்கலை”, என்றாள் கயல்.
“அடியே பொண்டாட்டி. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்லுவாங்க. அதனால உன் புருஷன் உனக்கு அழகா தெரியுவான். அப்புறம் இன்னொரு விஷயம் இது என்னோட ஊர். நீ இங்க புதுசா வந்துருக்க. என் ஊர்க்காரங்க என்னையே எப்படி அழகா இருக்கேன்னு சொல்லுவாங்க? அதான் உன்னைச் சொல்றாங்க”, என்று சொல்ல அப்படியா என்று கேட்டுக் கொண்டவள் “இருந்தாலும் நீங்க அழகு தான்”, என்று பட்டென்று சொன்னாள்.
அவன் அவளையே குறுகுறுப்பாக பார்க்க “ரோட்ல வச்சு எதுக்கு இப்படி ஒரு பார்வை பாக்குறீங்க?”, என்று மையலுடன் கேட்டாள்.
“இப்படி என்னை ரசிச்சிட்டு இருந்தேனு வை சேகர் அண்ணா வீட்டுக்குள்ள போக மாட்டோம். நேரா நம்ம வீட்டுக்கு போய்ருவேன்”
“எதுக்காம்?”
“ரசிக்க தான். நம்ம வீட்டுக்கு போய் நீயும் என்னை ரசிப்பியாம். நானும் உன்னை ரசிப்பேனாம்? என்ன போவாமா? அண்ணன் கிட்ட விருந்துக்கு இன்னொரு நாள் வரோம்னு சொல்லிக்கலாம்”
“ஐயோ பேசமா இருங்க. வாங்க உள்ள போகலாம்”, என்று அவன் கை பற்றி இழுத்துச் சென்றாள்.
அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் இயல்பாக கடந்தது. ஆனால் சரோஜா யாரிடமும் எதுவும் பேச வில்லை. தமிழும் கயலும் எதிரே வந்தால் கூட முகம் திருப்பிச் சென்றாள்.
கயலும் தமிழும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். தமிழுக்கு நைட் ஷிப்ட் வரும் போது மட்டும் மீனாட்சியுடன் சென்று படுத்துக் கொள்வாள். ஞாயிறு அன்று இருவருக்கும் விடுமுறை என்பதால் அன்றைய நாள் முழுக்க சிதம்பரம் வீட்டில் தான் இருப்பார்கள்.
அன்று ஞாயிறு என்பதால் சமுத்திரமும் மகளைப் பார்க்க வந்திருந்தார். கை நிறைய பழம், இனிப்பு, ஆட்டுக்கறி என்று வாங்கி வந்தவரை தமிழ் சந்தோஷமாக வரவேற்று பேசிக் கொண்டிருந்தான். கயல் அவரை ‘வாங்க’ என்று சொன்னதோடு சரி வேறு ஒன்றும் பேசி விட வில்லை. இத்தனை வருடம் இருவரும் தந்தை மகள் போல உரையாடியதில்லையே? இவ்வளவு வருஷம் இருந்த விலகலை உடனே ஒட்டி விட முடியாதே. அதனால் அவள் பேசாததை எல்லாம் அவர் பெரியதாக எடுக்க வில்லை. ஆனால் தமிழிடம் மிக உரிமையாக பேசினார். கயல் சமைத்துக் கொடுக்க சந்தோஷமாக தமிழுடன் அமர்ந்து உண்டார். சிதம்பரம் மற்றும் மீனாட்சியிடமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டே விடை பெற்றார். மகள் முகத்தில் இருந்த பூரிப்பு அவருக்கு நிறைவையே கொடுத்தது. நல்ல இடத்தில் மகள் இருக்கிறாள் என்று அவ்வளவு சந்தோஷப் பட்டார்.
அடுத்த நான்கு நாட்கள் கழித்து சித்ராவும் வேணியும் ஷாப்பிங் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எப்போதுமே சமுத்திரம் அவர்கள் கையில் பணம் தர மாட்டார். தேவையானதை வாங்கி மட்டும் தான் கொடுப்பார். கயலின் சம்பளப் பணத்தை தான் இருவரும் சுதந்திரமாக செலவு செய்து கொண்டிருந்தனர். சமுத்திரத்துக்கு அது தெரிந்தாலும் இது வரை அதை கண்டு கொண்டதில்லை. இப்போது அதுவும் கிடைக்காததால் “என்னங்க சித்ராவுக்கு ஒரு சேலை எடுக்கணும். பணம் தாங்க”, என்று கேட்டாள் வேணி.
“இப்ப கையிலே பணம் இல்லை. உன் அக்கவுண்டுக்கு அனுப்பி வைக்கிறேன். பேங்க்ல போய் எடுத்துக்கோ”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
“எவ்வளவு அனுப்புறாரோ தெரியலை. பேசாம அவர் ஏ.டி.எம் கார்டைத் தரலாம்ல? சரி சித்து கிளம்பு போயிட்டு வந்துறலாம்”, என்று சொல்லி விட்டு கிளம்பச் சென்றாள்.
பதினொரு மணிக்கு இருவரும் பேங்கில் இருந்தார்கள். சமுத்திரம் அவளது அக்கவுண்டுக்கு ஐந்தாயிரம் அனுப்பி இருந்தார். ஐந்தாயிரம் எப்படிப் பத்தும் என்று எரிச்சலுடன் எண்ணிக் கொண்டு அதை எடுத்தார்கள். அவள் கையில் பணம் கொடுத்த கேசியர் “என்ன மா பொண்ணு கல்யாணம் எல்லாம் நல்ல படியா முடிஞ்சதா?”, என்று கேட்டார்.
“ஆமாங்க, உங்களுக்கு எப்படி தெரியும்?”
“உங்க வீட்டுக்காரர் அஞ்சு லட்சம் பணம் எடுத்தார். நான் எதுக்கு இவ்வளவுன்னு கேட்டேன். அப்ப தான் பொண்ணுக்கு கல்யாணம்னு சொன்னார்”
“ஓ, சரிங்க நாங்க வரோம்”, என்று சொல்லி விட்டுக் கிளம்பிய வேணி “ஏன் சித்து அந்த அஞ்சு லட்சமும் கல்யாணத்துக்கு செலவழிஞ்சிருக்குமா?”, என்று கேட்டாள்.
“தெரியல மா, அப்பா கிட்ட தான் கேக்கணும். எனக்கு என்னமோ அப்படி தான் தோணுது. நகை எடுத்துருக்கார், வீட்ல சாப்பாட்டு செலவு, சீர் வரிசை எல்லாம் சேந்து ஆகிருக்கும். இவ்வளவு நாள் அப்பா அவ கூட பேசினதே இல்லை. அதனால அவளுக்கு எதுவும் செய்ய மாட்டார்ன்னு நினைச்சேன். ஆனா அள்ளி அள்ளிக் கொடுத்துட்டார். நீ கேக்கலாம்ல?”
“எங்க டி? இப்ப எல்லாம் அந்த மனுஷன் பேச்சே சரி கிடையாது. இவ்வளவு நாள் வாயை மூடிட்டு இருந்தார். நானும் நம்ம பேச்சைத் தான் கேப்பார்ன்னு அவர் கிட்ட வரவு செலவு கேக்கவே இல்லை. ஆனா இப்ப கேட்டா ஏன் கேக்குறேன்னு கேக்குறார்”, என்று எரிச்சலுடன் சொன்னாள்.
“நீ ஏன் மா இப்படி பண்ணின? எல்லாம் உன் தப்பு தான்”
“என்ன டி சொல்ற? நான் என்ன பண்னினேன் சித்து?”
“நீ ஏன் மா ஏற்கனவே கல்யாணம் முடிஞ்ச அப்பா மேல ஆசைப் பட்ட? உன்னால இன்னொருத்தங்க புருஷனை எடுத்துக்க முடிஞ்சது. ஆனா எனக்கு அப்பாவை அவ கூட பங்கு போடுற ஒவ்வொரு நிமிசமும் எவ்வளவு வேதனை தெரியுமா? இவ்வளவு வருஷம் உன் கிட்ட சொல்லலை. ஆனா நிறைய நாள் அழுதுருக்கேன்”, என்று சித்ரா சொல்ல முதல் முறையாக தவறு செய்த உறுத்தல் வேணிக்கு வந்தது. ஆனால் இப்போது உறுத்தல் வந்து என்ன பயன் கிடைக்க போகிறது?
கயல் தமிழ் வாழ்க்கையில் எல்லாம் நல்ல படியாக சென்றாலும் சரோஜா என்ன நினைக்கிறாள், என்ன செய்கிறாள் என்று மட்டும் யாருக்குமே தெரியாமல் இருந்தது. தினமும் பீடி சுற்றும் வேலைக்கு அவள் செல்வது மட்டும் தெரியும். பொறுத்து பொறுத்து பார்த்த தமிழுக்கு கஷ்டமாக இருந்தது. என்ன இருந்தாலும் பெற்ற தாயல்லவா?
“அம்மா இப்படி இருக்குறது கஷ்டமா இருக்கு கயல்”
“எனக்கு புரியுதுங்க. அவங்களைப் பாத்து சிரிச்சா கூட சிரிக்க மாட்டிக்காங்க. கோபத்தை காட்டவாது அவங்க பேசினா பரவால்ல. பேசாம நேர்ல போய் பேசிருவோமா?”
“ஏதாவது சண்டையாகிட்டா என்ன பண்ணுறது? கல்யாணத்தன்னைக்கே வீட்டுக்குள்ள விடலை. இன்னொரு வீடு இருந்ததுனால சரியாப் போச்சு. இல்லைன்னா என்ன ஆகிருக்கும்? மாமா வீட்ல தான் இருந்துருக்கணும். அது எப்படி மரியாதையா இருந்துருக்கும்?”
“அதையே ஏன் பிடிச்சிட்டு இருக்கீங்க? நமக்கு வீடு இருக்கு தானே? இப்ப அத்தையை எப்படி சமாதானப் படுத்தன்னு யோசிங்க. எனக்கு நான் வந்த அப்புறம் தான் நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்களோன்னு குற்ற உணர்வா இருக்கு”
“அப்படி யோசிக்காத டி. நான் சின்ன வயசுல இருந்து அவங்க கிட்ட ஒட்டி உறவாடுனது இல்லை”
“ஆனாலும் ஒண்ணா தானே இருந்தீங்க? சரி விடுங்க. வாங்க நாம போய் பேசுவோம்”
“திட்டினா என்ன பண்ண?”
“வாங்கிக்க வேண்டியது தான். ஒரு வேளை நாம அவங்களை ஒதுக்கிட்டோம்னு அவங்க நினைச்சா இப்ப பேசி சரி பண்ணிறலாம்ல? போய்ப் பேசிப் பாப்போம். நம்மளை ஏத்துக்கலைன்னா திருப்பி வந்துறலாம். அப்புறம் நம்ம குழந்தையை தூக்கிட்டுப் போய் சமாதானப் படுத்தலாம்”, என்று சொல்ல சிரித்தவன் “வா பேசலாம்”, என்று சொல்லி அவளை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றான். வெளிக்கதவு திறந்து தான் இருந்தது.
அதனால் தைரியமாக உள்ளே சென்றார்கள். வீட்டின் பின் பக்கம் இருந்த சுவரில் சாய்ந்து எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் சரோஜா. ஏனோ அவளின் அந்த தோற்றம் மனதை கசக்கிப் பிழிவதைப் போலவே இருந்தது இருவருக்கும்.
அவள் அருகே சென்று அவர்கள் நின்ற பின்னும் சரோஜா அவர்களை கவனிக்கவே இல்லை. “எப்படி இருக்க மா?”, என்று கேட்டான் தமிழ். அப்போது தான் அவர்களைத் திரும்பி பார்த்தாள். ஆனால் உடனே வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அவன் கேட்டதற்கு சரோஜா பதிலே சொல்ல வில்லை. அதே நேரம் அவர்களை வெளியே விரட்டவும் இல்லை.
அவள் அமைதியாக இருக்க “நாங்க இங்கயே வந்துறட்டுமா மா? இல்லை நீ அங்க வாயேன். பழசை எல்லாம் மறந்துறலாம். நாம ஒண்ணா இருக்கலாம் மா”, என்று தமிழ் சொல்ல எதுவும் பேச வில்லை என்றாலும் மறுப்பாக தலையசைத்தாள் சரோஜா.
“ஆமா அத்தை, அந்த வீட்டுக்கு வாங்க அத்தை. என் மேல தானே உங்களுக்கு கோபம்? என்னை அடிக்க கூட செய்ங்க. ஆனா எங்களை ஒதுக்கி வைக்காதீங்க. சின்ன வயசுல இருந்து எனக்கு அம்மா இல்லை. உங்களை என் அம்மாவா தான் பாக்குறேன். உங்களை நான் நல்லா பாத்துக்குவேன். எங்க கூட வாங்க. இல்லைன்னா நாங்க இங்க வரோம்”, என்று கயல் சொல்ல அவளை நிமிர்ந்து கூர்மையாக பார்த்தாள் சரோஜா. அவளிடமும் எதுவும் பேச வில்லை.
“இனி நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் மா. வீட்லயே இரு. உன் செலவுக்கு நான் பணம் தரேன். நீ என்னோட அம்மா மா. ஆனா நாம வேற யாரோ மாதிரி இருக்குறது எனக்கு பிடிக்கலை. உன் கோபத்தையாவது காட்டேன். அந்த வீட்டுக்காவது வந்து போய் இரு மா”, என்று தமிழ் சொன்னாலும் சரோஜா எதுவும் சொல்ல வில்லை. வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தாள். ஏதோ ஊமை பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பது போல தோன்ற சிறிது நேரத்திலே திரும்பி விட்டார்கள். சரோஜா கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள். எதற்காக அழுகிறோம் என்று அவளுக்கே புரியாத ஒரு நிலை.
அடுத்து நாட்கள் எப்போதும் போல நகர அன்று தமிழ் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தான். ரஸ்க் தயாரிக்கும் மிசினுக்கு பவர் சப்ளை வராமல் போக அதை அவன் சரி செய்தால் தான் அன்றைய வேலையே நடக்கும் என்ற நிலை.
அப்போது அவனுக்கு ஒரு அழைப்பு வர அதை எடுத்து “ஹலோ யாருங்க?”, என்று கேட்டான்.