“நாங்க பீடி கம்பெனில இருந்து பேசுறோங்க. சரோஜா மா உங்க அம்மாவா?”
“ஆமா. அம்மாக்கு என்ன ஆச்சு?”, என்று உண்மையிலே பதட்டத்தில் தான் கேட்டான்.
“திடீர்னு மயங்கி கீழே விழுந்துட்டாங்க. ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கோம். நீங்க வறீங்களா?”
“நான் இப்ப வேலைல இருக்கேன். எங்க மாமாவை அனுப்பி வைக்கிறேன். அவர் வர வரைக்கும் கொஞ்சம் அவங்களைப் பாத்துக்கோங்க”, என்றவன் எந்த ஹாஸ்பிட்டல் என்று விவரம் போனை வைத்தவன் உடனே சிதம்பரத்தை அழைத்தான்.
“சொல்லு தமிழு”
“வேலைக்கு போன இடத்துல அம்மா மயங்கிருச்சாம் மாமா. ஆஸ்ப்பத்திரிக்கு கூட்டிட்டு போறாங்களாம். நீ என்னன்னு போய்ப் பாக்குறியா? என்ன விவரம்னு அம்மா நம்பருக்கு கால் பண்ணிக் கேட்டுக்கோ. இங்க முக்கியமான வேலைல சிக்கிட்டேன். கொஞ்சம் பாத்துக்கோ மாமா”
“சரியா. நான் அத்தையைக் கூட்டிட்டு போறேன். நீ கவனமா வேலையைப் பாரு. கரண்ட் வேற. கவனம் டா”, என்று சொல்லி போனை வைத்தவர் உடனே மீனாட்சியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார். என்ன தான் கோபதாபங்கள் இருந்தாலும் சொந்தம் விட்டுப் போகாதே.
மாமா வைத்ததும் கயலுக்கு அழைத்த தமிழ் விஷயத்தைச் சொல்லி “நீயும் வேலை முடிஞ்சு ஆஸ்பத்திரிக்கு போ கயல். நான் இங்க பிரச்சனையை சரி பண்ணிட்டு வந்துறேன்”, என்றான்.
“சரிங்க”, என்று சொன்னவள் மாலை வரை காத்திருக்க மனது கேட்காமல் உடனே சேகரிடம் சொல்லி அனுமதி வாங்கி விட்டு கிளம்பி விட்டாள்.
இவள் போன போது சிதம்பரம் மற்றும் மீனாட்சி இருவரும் மருத்துவமனையில் இருந்தார்கள். “அத்தைக்கு என்ன ஆச்சு பா?”, என்று கேட்டாள்.
“மயங்கி விழுந்துட்டாளாம் மா. அவ கூட வேலை பாக்குறவங்க அட்மிட் பண்ணிட்டு இப்ப தான் போனாங்க. டாக்டர் பாத்துட்டு இருக்காங்க”, என்றார்.
டாக்டர் வந்து என்னவாயிற்று என்று சொல்வதற்காக காத்திருந்தார்கள். வெளியே வந்த மருத்துவர் “பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. கொஞ்ச நாளா சரியா சாப்பிடாம இருந்துருக்காங்க. குளுக்கோஸ் ஏறிட்டு இருக்கு. இன்னைக்கு மட்டும் அப்சர்வேசன்ல இருக்கட்டும். நீங்க போய் பாருங்க”, என்று சொல்லிச் சென்றார்.
மூவரும் போய் பார்த்தார்கள். சரோஜாவோ தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் கண் விழித்த பிறகு மருத்துவர் அவளை பரிசோதிக்க சரோஜா அதிகம் பேசவே இல்லை.
தமிழும் அப்போது வேலை முடிந்து வர உடனே தாயைக் காணச் சென்றான். அன்னையின் அருகில் சென்று அவள் கரம் பற்றி அமர்ந்தவன் “என்ன மா செய்யுது? இப்ப பரவால்லயா?”, என்று கேட்டான்.
அவனையே இமைக்காமல் பார்த்த சரோஜா வேறு எதுவுமே பேச வில்லை.
தமிழை தனியே அழைத்து “உங்க அம்மா குணம் எப்படி?”, என்று கேட்டார் மருத்துவர்.
“எப்படின்னா? என்ன டாக்டர் கேக்குறீங்க? எனக்கு புரியலை”
“இல்லை கலகலன்னு பேசுவாங்களா? இல்லை அமைதியா இருப்பாங்களா?”
“கொஞ்சம் அமைதி தான் டாக்டர்”
“அவங்க கிட்ட கொஞ்ச நேரம் பேசினதிலே அவங்க கிட்ட ஏதோ சரியில்லைன்னு தெரிஞ்சது. அதிக அளவுல மன அழுத்தத்துல இருக்குற மாதிரி தெரியுது. வீட்ல ஏதாவது பிரச்சனையா?”
“ஆமா டாக்டர். என் கல்யாணம் அவங்க எதிர்ப்புக்கு மீறி நடந்துருச்சு. என்னையும் என் மனைவியையும் வீட்டுக்குள்ள சேக்கலை”
“ஓ, அவங்க நடவடிக்கைல ஏதாவது மாற்றம் தெரிஞ்சதா?”
“அம்மா நடவடிக்கைல நிறைய தடவை மாற்றம் தெரிஞ்சிருக்கு டாக்டர். அப்பா இறந்தப்பவே அவங்க அழவே இல்லை. இறுகி போய் தான் இருந்தாங்க. அப்புறம் தங்கச்சிங்க கல்யாணத்துக்கு என்னை ரொம்பவே கடன் வாங்க வச்சாங்க. அதுக்கப்புறம் எனக்கு பணக்கார இடத்துல குழந்தையே பிறக்காதுன்னு தெரிஞ்சும் அந்த பொண்ணைப் பாத்து கட்டணும்னு சொன்னாங்க. நான் பாரின் போயிட்டேன். அதுக்கப்புறம் அவங்க கிட்ட பேசுறதே இல்லை. அப்புறம் திரும்பி வந்து கல்யாணம் பண்ணப் போறேன்னு பொண்ணு பாத்தேன். அவங்களுக்கு பிடிக்கலை. என் கல்யாணப் பத்திரிக்கையை எல்லாம் கிழிச்சு என்னென்னவோ பண்ணினாங்க”
“நீங்க சொல்றதுல இருந்தே தெரியலையா அவங்க மனநிலை சரி இல்லைன்னு”
“டாக்டர்”
“ஆமா மிஸ்டர் தமிழ். அவங்க ஆழ் மனசுல பணம் பணம்னு ஊறிருக்கலாம். ஆனா அவங்க ஆடம்பரமா செலவு செஞ்சிருக்க மாட்டாங்க”
“ஆமா டாக்டர், அவங்களுக்குன்னு எதுவும் வாங்கிக்கிட்டது இல்லை”
“இதுவும் ஒரு மன வியாதி தான் தமிழ். நம்ம கிட்ட பணம் இல்லைன்னு அவங்க மூளைல பதிஞ்சிருக்கு. அந்த ஏக்கம் வெறியா மாதிரி உங்க வாழ்க்கையை பந்தாடப் பாத்திருக்கு. நீங்க அதுல இருந்து வெளிய வந்ததை அவங்களால தாங்க முடியலை. அந்த தோல்வி, கிடைச்ச தனிமை அவங்களை சரியா சாப்பிட விடலை. சரியா சாப்பிடாதது அவங்க குளுக்கோஸ் லெவலைக் குறைச்சு மயக்கம் போட வச்சிருக்கு. அது மட்டும் இல்லாம அவங்க எப்ப தூங்கினாங்கன்னு கூட தெரியலை. நிறைய யோசிக்கிறாங்க. எப்படி பணம் சம்பாதிக்கிறதுன்னு யோசிக்கிறாங்களா, இல்லை உங்க வாழ்க்கையை எப்படிக் கெடுக்கன்னு யோசிக்காங்களா, இல்லை அவங்க செஞ்சது தப்பா சரியான்னு யோசிக்கிறாங்களான்னு தெரியலை. நாங்க பேசினதுக்கும் சரியா பதில் சொல்லலை. இப்படி இருக்குறவங்களுக்கு நல்ல சாப்பாடும் ஓய்வும் தான் தேவை. நான் மெடிசன்ஸ் தரேன். காலைல டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்”, என்றார்.
“வேற எதுவும் பிரச்சனை இல்லை தானே?”
“அப்படி எல்லாம் இல்லை. சில பேர் கோபத்துல வெளிய கத்திருவாங்க. கத்திட்டா அவங்க மனசுல எதுவுமே இருக்காது. ஆனா இவங்க உள்ளுக்குள்ள வச்சி அழுத்துறாங்க”
“முன்னாடி எதுக்கு எடுத்தாலும் சண்டை போட்டவங்க தான் டாக்டர்”
“அந்த சண்டையை யாரும் பெருசா எடுத்துக்காததுனால அவங்க பேசுறதையே குறைச்சிட்டாங்க. பார் எக்ஸாம்பிள் அவங்க உங்களை வீட்டுக்குள்ள வரக் கூடாதுன்னு சொன்னப்ப நீங்க எதுத்து சண்டை போட்டிருந்தா அவங்க ரியாக்ஷன் வேற மாதிரி இருந்துருக்கலாம். ஆனா நீங்க ஒதுங்கிப் போனதுனால அவங்க அமைதியாகிட்டாங்க. முதல்ல அவங்களை பேச வைக்கணும். அட்லீஸ்ட் அவங்க கோபமாவது படணும்”, என்று அவர் சொல்ல தமிழுக்கு உண்மையிலே அன்னையை நினைத்து கஷ்டமாக தான் இருந்தது.
அவர் கொடுத்த மருந்து சீட்டை வாங்கிக் கொண்டு வெளியே வந்தான். மற்றவர்கள் விசாரிக்க பிரச்சனையை லேசாக சொன்னான்.
அனைவரும் சரோஜாவை அறைக்குள் சென்று பார்க்க அவளோ யாரையும் பார்க்காமல் முகம் திருப்பிக் கொண்டாள். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவள் பதில் அளிக்கவில்லை. தமிழ் இரவு உணவு வாங்கி வர அதை சாப்பிடவே இல்லை. அனைவருக்கும் எரிச்சலாக தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய என்று தெரிய வில்லை. டாக்டர் வந்து சொன்ன பிறகு இரண்டு இட்லியை ஏனோ தானோவென்று விழுங்கினாள்.
“அப்படி என்ன பிடிவாதம் மதினி உனக்கு? எங்க மேல கோபம் சரி. உன் மகன் கிட்டயாவது பேசலாம்ல? முன்னாடி எல்லாம் பேசி பேசியே எல்லாரையும் சாகடிக்கிறேன்னு பேசினோம். இப்ப பேசாம இருந்து சாகடிக்கிற? ஆக மொத்ததுல உன்னால மத்தவங்க சந்தோசமாவே இருக்க கூடாது. அப்படித் தானே?”, என்று மீனாட்சி கேட்க அதற்கும் அவள் பதில் சொல்ல வில்லை.
மூன்று மகள்களும் குழந்தைகள் மற்றும் கணவனுடன் வந்து தாயைப் பார்க்க வந்தார்கள். அவர்களிடமும் சரோஜா பேசவே இல்லை. அவர்களுக்கும் டாக்டர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி தான்.
அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்து ஊருக்கு அழைத்து வந்தார்கள். வீட்டுக்குள் சென்று படுத்தவள் தான். தமிழும் கயலும் வந்து பார்த்த போது நல்ல உறக்கத்தில் இருந்தாள். தேவி அன்னைக்கு துணையாக இருந்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள்.
மதியம் தேவிக்கும் சரோஜாவுக்கும் கயல் உணவு கொண்டு வர சரோஜா அதையும் தொட்டுப் பார்க்கவே இல்லை. தேவி எவ்வளவோ சொல்லி விட்டாள். அந்த அளவுக்கு வீம்பு பிடித்தாள் சரோஜா.
தமிழும் வந்து பேசிப் பார்த்தான். அசையவே இல்லை. கண்களை இறுக மூடிக் கொண்டாள். சரி தூங்கவாது செய்யட்டும் என்று எண்ணி மற்றவர்கள் வெளியே வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒரு மணி நேரம் கழித்து “அத்தை முழிச்சிட்டாங்களான்னு பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி உள்ளே சென்றாள் கயல். ஆனால் அங்கே வாயில் நுரை தள்ள மயங்கிக் கிடந்தாள் சரோஜா.
“ஐயோ, இங்க வாங்களேன்”, என்று அலறிய கயல் சரோஜாவின் தலையை தூக்கி மடியில் வைத்தாள். தமிழும் தேவியும் உள்ளே ஓடி வந்தார்கள்.
“அம்மா”, என்று இருவரும் அவளை உலுக்க லேசாக கண் திறந்து பார்த்தாள். மெதுவாக அவள் கை உயர்ந்து தமிழின் கன்னத்தை வருடியது. அடுத்த நொடி அவள் கண்கள் மூடிக் கொண்டது. அவள் பார்வையில் இருந்த உணர்வு என்ன என்று அவனால் புரிந்து கொள்ள முடிய வில்லை. ஆனால் அவன் கன்னத்தில் உணர்ந்த அன்னையின் அந்த தொடுகை அவன் மனதிலே நிலை கொண்டு விட்டது. அந்த பார்வையையும் அந்த தொடுகையையும் அவனால் மறக்க முடியுமா என்ன?
நிலைமையின் தீவிரம் புரிந்து உடனடியாக சரோஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கே தீவிர சிகிச்சை நடந்தது. ஆனால் சரோஜா அருந்திய விஷம் ரத்தத்தில் கலந்து விட்டதால் அவளை காப்பாற்ற முடிய வில்லை.
தமிழ் கதறி ஆழ வில்லை என்றாலும் கலங்கிப் போய் அமர்ந்து விட்டான். என்ன ஏது என்று எதுவுமே தெரிய வில்லை. எதனால் சரோஜா இப்படி ஒரு முடிவு எடுத்தாள் என்று யாருக்குமே தெரிய வில்லை. எப்போது விஷத்தை வாங்கினாள் என்று கூட யாருக்கும் தெரிய வில்லை.
போலீசும் டாக்டரும் வீட்டு ஆட்களிடம் சரோஜாவைப் பற்றி விசாரிக்க அனைத்தையும் சொன்னார்கள். அதிக மன உளைச்சலில் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்று சொல்லி கேசை முடித்து உடலை ஒப்படைத்தார்கள். உடலை உப்படைக்க அடுத்த நாள் காலை ஆகி விட்டது. பின் ஊருக்கு கொண்டு சென்றார்கள்.
உயிரற்ற உடலாக நடு வீட்டில் படுத்திருந்தாள் சரோஜா. என்ன தான் அவள் வெறுப்பைக் காட்டி இருந்தாலும் பெற்ற தாயல்லவா? சரோஜாவின் பெண்கள் மூவரும் கதறி அழுது கொண்டிருக்க தமிழ் இறுகிப் போய் அமர்ந்திருந்தான்.
“இதுக்கு தான் இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுனியா?”, என்று கதறி அழுதாள் மீனாட்சி. சிதம்பரத்துக்கும் அவளைப் பிடிக்காது தான். ஆனால் அவளின் சாவு அவரையுமே உலுக்கியது. சிதம்பரத்தை விட சரோஜா வயதில் சிறியவள் தான். பேரன் பேத்தி எடுத்து விட்டாலும் சாக கூடிய வயதில்லையே. இயற்கையான மரணம் வந்திருந்தால் அது யாருக்கும் இவ்வளவு வலியைக் கொடுத்திருக்காது. இப்போது கஷ்டமாக இருந்தது.
வெளி ஆட்களுக்குச் சொல்வது, மாலைக்குச் சொல்வது என மற்ற வேலைகளை வீட்டின் மாப்பிள்ளைகளும் சேகரும் பார்த்துக் கொண்டார்கள்.
கயலோ அந்த வீட்டின் மருமகளாக வருபவர்களுக்கு கூல்ட்ரிங்க்ஸ், காபி கொடுப்பது என மற்ற அனைத்தையும் கவனித்து கொண்டாள். அவளுக்கும் கஷ்டமாக தான் இருந்தது. கூடவே தான் திருமணம் செய்து வந்ததால் தான் மாமியார் இறந்து விட்டாள் என்று யாராவது சொல்லி விடுவார்களோ என்று பயமாகவும் இருந்தது. கயலின் பிறந்த வீட்டில் இருந்து சமுத்திரமும் வேணியும் வந்திருந்தார்கள்.
அப்போதும் காபி எடுக்கும் சாக்கில் உள்ளே வந்த வேணி “இந்த அம்மா உன்னை வாழ விடாதுன்னு சொல்லுச்சு. ஆனா நீ அதை வழி அனுப்பிட்ட போல?”, என்று குத்திக் காட்டி பேசி விட்டு தான் சென்றாள். கயல் கண்கள் கலங்கியது. ஆனால் யாருக்கும் தெரியாமல் மறைத்துக் கொண்டாள்.
சரோஜாவின் இறுதிக் காரியங்கள் நடைபெற ஆரம்பித்தது. சரோஜாவின் உடலை இடுகாட்டுக்கு தூக்கிச் சென்றார்கள். தமிழுக்கு மொட்டை போட்டார்கள். தாய்க்கான இறுதிக் காரியங்களை எல்லாம் சரியாக செய்து முடித்தான்.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. அனைவரும் அவரவர் வாழ்க்கையை பார்க்க ஆரம்பித்தாலும் சரோஜாவின் இழப்பு அனைவருக்கும் ஒரு மாதிரியான வலியைக் கொடுத்துக் கொண்டே தான் இருந்தது. சில நேரம் சிதம்பரத்துக்கு தான் தோன்றும். இப்படி அனைவருக்கும் வலியைக் கொடுக்க வேண்டும் என்று தான் சரோஜா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பாளோ என்று. ஆனால் அதை மனதுக்குள்ளே வைத்துக் கொள்வார்.
கயல் தமிழ் வாழ்க்கை நல்ல படியாக சென்று கொண்டிருந்தது. சமுத்திரம் சித்ராவுக்கு நல்ல மாப்பிள்ளையாக பார்த்தார். சித்ராவின் திருமணத்துக்கு ஏதோ தூரத்து உறவினர் வீட்டு விஷேசத்துக்கு செல்வது போல தான் தமிழும் கயலும் சென்று வந்தார்கள். அவர்களை வேணி வாங்க என்று கூட அழைக்க வில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் இல்லாமல் சித்ராவின் புகுந்த வீட்டினர் முன் கயல் மட்டும் தமிழை இளக்காரமாக பேசி சமுத்திரத்திடம் முதல் முறையாக ஒரு அடியும் வாங்கிக் கொண்டாள். சில பேரை என்ன முயன்றும் திருத்தவே முடியாது. அப்படிப் பட்டவள் தான் வேணி.
சரியாக ஆறு மாதங்களுக்கு பிறகு கயல் தாய்மை அடைந்தாள். அவளை கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டான் தமிழ். வார வாரம் சமுத்திரம் மகளைக் காண வந்து விடுவார். அவளுக்கு சத்தான உணவு கொடுத்து பார்த்துக் கொண்டது மீனாட்சி தான். மீனாட்சி அவளுக்கு அன்னையாக தான் இருந்தாள்.
இப்போதும் அவர்கள் ஏற்கனவே இருந்த வீட்டில் தான் இருந்தார்கள். சரோஜா இருந்த வீடு பூட்டியே கிடந்தது. ஏனோ அந்த வீட்டைக் கண்டாலே சரோஜாவின் நினைவு வருவதால் தமிழ் அங்கே செல்ல பிரியப் படவில்லை.
பத்து மாதங்களுக்கு பிறகு கயலுக்கு மகன் பிறந்தான். மூன்று அத்தைகளும் மருமகனைக் காண வந்தார்கள். மகனுக்கு இளஞ்செழியன் என்று பெயர் வைத்தான் தமிழ். இப்போது கயலுக்கு ஆபீஸ் போஸ்டிங் கிடைத்திருந்தது. டிப்பார்ட்மெண்ட் எக்ஸாம் எழுதி அந்த பதவியை அடைந்திருந்தாள். அதற்கு உதவி செய்தது சேகர் தான். தமிழுக்கும் சம்பளம் கூடி இருந்தது. பெற்றவர்கள் வேலைக்குச் செல்ல இளஞ்செழியனை சிதம்பரமும் மீனாட்சியும் தான் கவனித்துக் கொண்டார்கள். அவனுடைய அப்பனையே கவனித்துக் கொண்டவர்கள் ஆயிற்றே.
அந்த ஞாயிற்று கிழமை பேரனை காண வந்திருந்தார் சமுத்திரம். அவர் கையில் அவனுக்கு என விளையாட்டுப் பொருள்கள், அவனுக்கு பிடித்த இனிப்புகள், அவனுக்கு என நான்கு உடைகள் எல்லாம் இருந்தது.
“வாங்க பா”, என்று வரவேற்ற கயல் குழந்தையை அவர் கையில் கொடுத்து விட்டு அவர் வாங்கி வந்த பொருள்களை உள்ளே எடுத்துச் சென்றாள். அவளது அப்பா என்ற அழைப்பு அவரை நெகிழ்த்த அவளுக்கு கொடுக்க முடியாத முத்தத்தை பேரனுக்கு கொடுத்து அந்த ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் சமுத்திரம்.
அவர் கலங்கி இருப்பதைக் கண்ட தமிழ் “என்ன மாமா சின்ன பிள்ளை மாதிரி”, என்று கடிந்து கொண்டான்.
“இது ஆனந்த கண்ணீர் மாப்ள. இது எல்லாம் உங்களால தான். உங்களால மட்டும் தான் கயலை நல்ல பாத்துக்க முடியும்னு நீங்க சொன்னது உண்மைன்னு இப்ப புரியுது. வேற யார் கூட இருந்தாலும் கயல் இவ்வளவு சந்தோசமா இருந்திருக்க மாட்டா. எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு”, என்று நெகிழ்ந்து உரைக்க அவர் கையை ஆதரவாக பற்றிக் கொண்டான்.
சமையல் அறையில் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த கயலின் கண்களில் கண்ணீரும் உதடுகளில் புன்னகையும் ஒருங்கே உதயமானது.
மகனுக்கு ஒரு வயது முடிந்ததும் குல தெய்வம் கோவிலில் மொட்டை போடும் விழா நடந்தது. மூன்று அத்தைகளும் சீருடன் வந்திருந்தார்கள். கயலின் பிறந்த வீட்டில் இருந்து சமுத்திரம் பேரனுக்காக செயின், மோதிரம், கொலுசு, காப்பு என வாங்கி வந்திருந்தார்.
வைஷ்ணவி இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். “ஏய் அங்க போய் உக்காரு. இங்க வேலை செய்ய ஆளா இல்லை?”, என்று அரட்டு போட்டான் தமிழ்.
“அப்படிச் சொல்லு தமிழ். சொன்ன பேச்சு கேக்குறதே இல்லை”, என்று சொன்ன சேகர் மனைவியை முறைத்தான். அவர்களை பார்த்து நிறைவாக சிரித்தாள் கயல்.
அன்று இரவு மகனை தொட்டிலில் போட்டு விட்டு கட்டிலுக்கு வர அவளை சிரிப்புடன் ஏறிட்டவன் இழுத்து அணைத்துக் கொள்ள சந்தோஷமாக அவன் மார்பில் தஞ்சமானாள். கயல் மற்றும் தமிழின் வாழ்க்கை தெளிந்த நீரோடையாக சென்றது. எப்போதும் இப்படியே செல்லும் என்று நம்புவோமாக…
…..முற்றும்…..