கலாட்டா காதல்…!!!
பிறந்தநாள் விழா தானே, போனதும் பரிசை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு திரும்பிவிடலாம் என எண்ணியிருந்த தன்யாவின் நினைப்பில் மண் அள்ளி போடும்படி வந்து சேர்ந்தான் பிரகாஷ்!
தொழிலில் அவர்களின் சக போட்டியாளரான வைதீஸ்வரனின் ஒரே வாரிசு!
எதேச்சையாக வந்ததாக அவள் நினைக்க, ‘நான் உனக்காக தான் வந்தேன்’ என அவளுக்கு புரியவைக்கும்படி இருந்தது அவன் நடவடிக்கை!
சற்று நேரத்திற்கு பின்னே தான் விளங்கியது, தந்தை தன்னை வற்ப்புறுத்தி இங்கே அனுப்பி வைத்தது, வெறும் ப்ராஜெக்ட்க்காக மட்டுமல்ல, பிரகாஷ்காகவும் தான் என்பது…
புரிந்த மாத்திரத்தில் ஆத்திரம்!!! தான் இத்தனை சொல்லியும், தனக்கு மாப்பிள்ளை பார்ப்பதா என்ற அர்த்தமற்ற ஆவேசத்துடன் அங்கே யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள் தன்யா.
தங்கள் நிறுவனத்தின் பார்கிங்கில் காரை நிறுத்தியவள், குறையாத ஆவேசத்துடன் அதன் கதவை அறைந்து சாற்றிவிட்டு உள்ளே நுழைய, அவளை பார்த்த கணத்தில், அவள் வந்த வேகத்தில், தன்னியல்பாய் எழுந்து நின்று ‘காலை வணக்கம்’ வைத்தனர் ஆட்கள்.
எப்போதும் சிறு தலையசைப்புடன் அதை கடப்பவள், இன்று அதை மதிக்கக்கூட இல்லை!
நேரே ஐந்தாம் தளத்தை அடைந்து தன் போக்கில் நெடிய நடை போட்டாள் தன்யா. தூக்கி போட்டிருந்த குதிரைவால் முடி அவள் நடைக்கு ஏற்ப நர்த்தனமாட, அதிக வேலைப்பாடு இல்லாத குர்தியும், அதற்க்கு தோதான ஜீன்ஸும் அவள் நெடிய உருவத்திற்கு கம்பீரம் சேர்த்தன. கண்களில் இருந்த கூலர்ஸ் இப்போது நடு நெஞ்சில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தது.
ஆதியை விட்டுச்சென்று வெகு நேரம் ஆனதால், என்ன ஆனது என எட்டிப்பார்க்க வந்த கோகுல், ஆதி தன் செவிகளில் இயர்போனை மாட்டிக்கொண்டு இருகைகளிலும் போனை பற்றிக்கொண்டு, “பின்னாடி ஒருத்தன் வரான் பாரு, வுடாத வுடாத! போட்டுத்தள்ளு” என தீவிரமாய் போராடிக்கொண்டிருந்தான் பப்ஜி போர்க்களத்தில்.
அருகே அமர்ந்திருந்த மற்ற கேண்டிடேட் எல்லாம் இவனை சற்று எரிச்சலுடனே பார்த்ததை கண்ட கோகுல், ‘இவன் வெகுநேரமாய் இதைத்தான் செய்துக்கொண்டிருப்பான் போலும்’ என எண்ணியபடி, “டேய், டேய்…” என்றான் அவன் தோளை உலுக்கி.
ஒரு நொடி அவனை நிமிர்ந்து பார்த்த ஆதி, “என்னடா உங்க ‘கன்’ டைம் மேடம்ம இன்னும் காணோம்! எங்கயாது காணா போயிட்டாங்களா? எதுக்கும் ரேடியோ ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் குடுத்துடு” என்றான் வெகு நக்கலாய்.
“ரொம்ப தான்டா கொழுப்பு உனக்கு! ஏதாவது எமெர்ஜென்சியா இருக்கும், அதான் வரல போல” என்ற கோகுலுக்கும், உள்ளூர ஆச்சர்யமே! நண்பகலை கடந்தும் இன்னும் அவளை காணவில்லையே என்று!!!
வரவேற்ப்பறையில் சென்று விசாரிக்கலாம் என அவன் சென்ற நேரம் தான், புயலென லிப்ட் கதவுகளை திறந்துக்கொண்டு அத்தளத்தில் விஜயம் செய்தாள் தன்யா.
கோகுல் சிறிய தடுமாற்றத்துடன் ‘குட் மார்னிங் மேம்’ என சொல்ல, நடையை தளர்த்தாமலே ஒரு சீற்றப்பார்வையை அவனை நோக்கி செலுத்தியவள், “சே, குட் நூன்” என்றாள்.
“குட் நூன் மேம்” என அவன் சொன்னபோது அது காற்றுக்கு மட்டுமே சொந்தமானது.
வேக நடையுடன் தனது அறையை நோக்கி அவள் செல்ல, நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்கள் மரியாதை நிமித்தமாய் எழுந்து நிற்ப்பதைக் கண்டு, சிறு கையசைப்புடன் அவர்களை அமர சொல்லிக்கொண்டே அவள் செல்ல, “சுடுரா சுடுரா…! வந்ததே லேட்டு, இதுல நீ எல்லாம் சோல்ஜரு!” என்ற குரலில் சடன் ப்ரேக் போட்டு நின்றாள் தன்யா.
“எந்த ஊரு தம்பிடா நீ? இப்படி விரட்டி விரட்டி அடிக்குரியே!? ஐயோ புடிச்சுட்டானுங்கடா என்னை!! யாராது ரெஸ்க்யூ பண்ணுங்கடா!”
கத்திக்கொண்டிருந்தவனை அடையாளம் காண அவளுக்கு எந்தவித மெனக்கெடலும் தேவையிருக்கவில்லை. காலையில் பார்த்த அதே முகம்! தன்னை அலைக்கலைத்தவனை தன் இடத்திலேயே கண்டதும், அதிலும் அவன் செய்துக்கொண்டிருக்கும் வேலையில் இன்னமும் அவள் ரௌத்திரம் ஏற, அதை அடக்கியபடி கைக்கட்டி நின்றுவிட்டாள் அவன்முன்னே.
கோகுல் ஓடிவந்து, “ஆதி.. ஆதி!!” என பொறுமையாய் அழைத்ததெல்லாம் வீண்! தான் ‘ரிவைவ்’ ஆக வேண்டுமே என்ற கவலையில் மூழ்கியிருந்தான் ஆதி! அவன் தோளைப்பற்றி வேகமாய் உலுக்கி, காதிலிருந்த இயர்போனை பிடுங்கிவிட்டு, “மேடம்டா” என கோகுல் பல்லைக்கடித்தபோதே, தன் எதிரே நிற்கும் கிரேக்க சிலையை கண்ணெடுத்தான் ஆதி!
கண்ட மாத்திரத்தில் அவனையும் அறியாது, சிறு விசில் சத்தம் வாய்வழி வந்துவிட, அவளை மேலிருந்து கீழ் வரை ரசனையாய் பார்த்து, ‘நைஸ் பிகர்’ என சொல்லிக்கொண்டான், நல்லவேளையாக தனக்குள்ளே மட்டும்!
தன்யா, “இஸ் திஸ் தி வே யூ பீகேவ் இன் பப்ளிக் பிளேஸ்?” என கம்பீரமாய் அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லக்கூட தோன்றாமல், ஒப்பனையற்ற அவள் வதனத்தில் லயித்திருந்தவன், அப்போது தான் அவள் நெஞ்சில் இருந்த கூலர்சை கண்டான்.
ஒன்றும் ஒன்றும் ஒன்பது என கணக்கிட அவனுக்கு அதிக வினாடிகள் எடுக்கவில்லை.
அவன் பார்வை பதிந்திருந்த இடத்தை கண்டு கொதித்த தன்யா, அவன் முகத்தின் நேரே சொடுக்கிட்டு, “ஹலோ மிஸ்டர், இங்க எதுக்கு வந்துருக்கீங்க?” என்றாள் அதிகாரமாய்.
அவள் செய்கையில் தெளிந்தவன், வழக்கமான துடுக்குத்தனம் வெளிவர, “இங்க இருக்க டேபிள் சேர் எல்லாம் ரொம்ப காஸ்ட்லின்னு சொன்னாங்க, அதான் காவல் காத்திட்டு உட்காந்துருக்கேன்” என்றான் எள்ளலாய்.
கோகுலுக்கு ‘திக்’கென்றானது.
‘இவனுக்கு வேலைவாங்கித்தர வந்தா, இவன் நம்மளை வேற வேலை தேட விட்டுடுவான் போலயே’ என பீதியானவன், “டேய், இதான்டா நான் சொன்ன மேடம்!” என்றான் ஆதியிடம் முனுமுனுப்பாய்.
ஆதியோ, “ஹோ! இதான் உங்க ‘கன்’ டைம் மேடமா? பதினொரு மணி இன்டர்வியூக்கு ஒரு மணிக்கு வந்துருக்கும்போதே நான் நினைச்சேன்!” என்றான் அவளுக்கே கேட்கும்படி!!!
கோகுல் உள்ளுக்குள், ‘போச்சு! எனக்கில்ல, எனக்கில்ல!! இந்த வேலை இனி எனக்கில்ல’ என அடித்துக்கொண்டான்.
தன் மீதுள்ள தவறை ஒருவன் எடுத்து சொன்னபோது அதற்க்கு கோபப்பட்டு கத்தாமல், “சாரி கைஸ்! உங்களை வெயிட் பண்ண வச்சுட்டேன்! ஒரு எமெர்ஜென்சி வொர்க்!” என அங்கிருந்தவர்களிடம் பகிரங்கமாய் ‘மன்னிப்பு’ கேட்டாள் தன்யா.
இதை அவள் செய்திருக்க கூட தேவையில்லை. ‘என்னை கேள்வி கேட்க நீ யார்?’ என்று ஆதியை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவள் அப்படி செய்யாது, உடனே ‘மன்னிப்பு’ கேட்டது, ஆதியின் புருவ மேடுகளை உயர செய்தது விம்மிதத்தில்.
“லுக் மிஸ்டர்! நம்ம எல்லா விதத்துலையும் சரியா இருந்தா மட்டும் தான், அடுத்தவங்க செய்யுற தப்பை சுட்டிக்காட்டனும்! அப்படி இல்லன்னா நம்ம தவறுக்கு குறைந்த பட்சம் ‘மன்னிப்பு’ கேட்கவாது தயங்கக்கூடாது! கேன் யூ கெட் மை பாயின்ட்?” என தன்யா ஒரு புருவம் உயர்த்தி, கேட்டபோது, ஆதியின் கண்கள் மின்னின.
“முதல்ல ஒரு இண்டர்வியூக்கு வரப்போ எப்படி பீகேவ் பண்ணனும்ன்னு கத்துக்கோங்க! அதுக்கு பிறகு அங்க இருக்க அபீசியல்ஸ்ஸ குற்றம் சொல்லலாம்! ரைட்டா?” என்றவள், அதற்க்கு மேல் அங்கே நிற்காமல் அறைக்குள் சென்றுவிட, முதல் கேண்டிடேட் உள்ளே அனுப்பப்பட்டார்.
அவள் அறை கதவின் மேல் பொறிக்கப்பட்டிருந்த “மிஸ். தன்யா இராஜகோபால்” என பெயரை ரசனையாய் அளவெடுத்துக்கொண்டிருந்த அவன் கண்கள் முன் கொடூரமான முகத்துடன் வந்து நின்றான் கோகுல்.
“நல்லா இருப்பியாடா நீ? நல்லா இருப்பியா?”
கோகுல் கேட்க, “எனக்கென்னடா? நல்லா இருப்பேன்” என பதில் சொன்னான் ஆதி!
“நீ பார்த்த வேலைக்கு நீ நல்லா இருப்ப! கொஞ்ச நேரத்துல நாந்தான் என்ன ஆவேனோன்னு டென்ஷன் ஆகிட்டேன்! ஏதோ மேடம் நல்ல மூட்ல இருக்கனால பேசாம போய்ட்டாங்க! எதுக்கு டா உனக்கிந்த நக்கல், நய்யாண்டி எல்லாம்? அதுவும் வேலை கேட்டு வந்த இடத்துல?”
“ப்ச்! ஐ லைக் ஹர் மச்சி!!” என ஆதி சொல்ல, ‘ஆ’ என வாயை பிளந்தான் கோகுல்.
“தெய்வமே! இது நீ நினைக்குற மாறி பொண்ணு இல்லை! நீ சிரிச்சதும் உன்கிட்ட பச்சக்குன்னு வந்து ஒட்டிக்குற கேஸு இவங்க இல்லை!” என சொல்ல,
“அடச்சீ! என்னவோ என்னை பொம்பளை பொருக்கி ரேஞ்சுக்கு பேசுற?” என கடுப்படித்தான் ஆதி!
“அந்த அளவுக்கு இல்லன்னாலும், நீ கொஞ்சம் ப்ளேபாய் தானேடா?” என்றான் கோகுல்.
அவனை மோசமாய் முறைத்த ஆதி, “பொண்ணுங்கக்கிட்ட பேசுவேன், அவ்வளோதான்! அதைத்தாண்டி என் லிமிட் நான் குரோஸ் பண்ணதே இல்ல… அது உனக்கே தெரியும்” என்றான் சீரியசாய்.
“அது தெரியும்! ஆனா, மேடம்கிட்ட பேசுறது கூட வேண்டாம், வச்சுக்காதன்னு சொல்றேன்! எல்லாம் உன்னோட நல்லதுக்குனு நினைக்காத, என்னோட நல்லதுக்கு தான் சொல்றேன்! என்னால வேற வேலை எல்லாம் இதுக்கு மேல தேட முடியாது” என்றான் கோகுல்.
அவன் பேச்சை, “ப்ச்! போடா” என அசட்டை செய்தான் ஆதி!
அடுத்த சில நிமிடங்களில் அவன் பெயர் அழைக்கப்பட, உள்ளே நுழைந்தவனை ‘முதல் முறை’ பார்ப்பதை போல பாவனையில் ஏறிட்டவள், “கம் இன்” என்றாள்.
வந்தவன் அவளெதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்துக்கொள்ள, “நான் உங்களை உட்கார சொல்லவே இல்ல?” என்றாள் ‘இதென்ன நடத்தை?’ என்பதை போல.
“அப்போ எதுக்கு இந்த சேர் எல்லாம்?” என அவன் எதிர் கேள்வி கேட்டதில், “திஸ் ஸ் பேசிக் மேனர்ஸ்” என்றாள் பல்லைக்கடித்துக்கொண்டு.
“வந்தவனை ‘உட்கார’ சொல்றது கூடத்தான் பேசிக் மேனர்ஸ்ல வரும்” ஆதி சொல்ல, தன் பொறுமையை நீட்டிப்பிடித்து, அவன் முன் கை நீட்டினாள் பைலுக்காக.
அவனோ நீட்டிய அவள் கரத்தை பற்றி, “கிளாட் டு ஸீ யூ” என சிரிக்க, அவன் கரத்தை ஒருவித எரிச்சலுடன் தட்டிவிட்டவள், “கிவ் மீ யுவர் பைல் மேன்” என்றாள் கடுகடுவென!
“இல்ல, கை குலுக்குறது கூட பேசிக் மேனர்ஸ் தானே?” என கேட்டபடி பைலை நீட்டினான் ஆதித்யா.
மேலோட்டமாய் அதில் கண் பதித்தவள், அவனது தகுதியை பார்த்து நிச்சயமாய் ஈர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஏனெனில், அவள் முகம் சற்று மென்மைக்கு மாறியிருந்தது. முழுவதுமாய் அதை பார்த்து முடித்தவள், “சோ…!! வாட்ஸ் யுவர் நேம்?” என சம்பிரதாயமாக கேள்விகளை தொடங்கினாள்.
அவன் இதற்க்கெனவே காத்திருந்ததை போல,
“ஐ’யம் மிஸ்டர் தொத்தளவாயன், சன் ஆப் பித்தளைவாயன்” என சிரிக்காமல் சொல்ல, “வாட்ட்ட்????” என அதிர்ந்து போனாள் தன்யா.
அவள் முகம் போன போக்கில், எழுந்த சிரிப்பை வெகுவாய் அடக்கிக்கொண்டு, “பின்ன என்ன மேடம்? இவ்வளோ நேரம் நான் குடுத்த சர்டிபிகேட், ரெஸ்யூம் எல்லாம் பார்த்துட்டும் பேரு என்ன?ன்னு கேட்டா எப்டி?” என்றான்.
மேசை மீதிருந்த தண்ணீரை எடுத்து ஒரே மூச்சாக உள்ளே தள்ளினாள் தன்யா. அப்போது அவளுக்கு இது அதிகம் தேவைப்பட்டது.
தன்னை சமன்செய்தவள், “உங்க ரெகார்ட்ஸ் எல்லாம் நீட்டா இருக்கு! நல்ல எக்ஸ்பீரியன்ஸ் வச்சுருக்கீங்க! ஆனா, IBM மாதிரி பெரிய இன்ஸ்டிடியுஷன்ல படிச்சுட்டு இங்க எதுக்கு வேலைக்கு வரீங்க?” என்றாள்.
‘கேட்டிருக்க கூடாதோ?’ என நினைக்க வைத்தான் ஆதி, அவன் பதிலால்.
“அப்போ இது மொக்க கம்பெனியா? நாந்தான் தெரியாம வந்துட்டேனோ?” அவளிடமே அவன் கேட்க, அவள் தான் அடுத்த கேள்விக்கு போக வேண்டியதாய் போனது.
“இன்கேஸ், நான் உங்களை இந்த வேலைக்கு செலக்ட் பண்ணா, சேலரி எப்படி எதிர்பார்க்குறீங்க?” என கேட்க, “பேன்க்ல போட்டாலும் சரி, கைல குடுத்தாலும் சரி! உங்க சௌகரியம் மேடம்” என்ற அவன் பதிலை அவள் எள்ளளவும் எதிர்ப்பார்க்கவில்லை.
“ஓ காட்ட்ட்…” என சத்தமாய் சலித்தவள், “ஆர் யூ மேட்? இந்த வேலை என்ன ஜோக்கா உங்களுக்கு? ஓவர் குவாலிபிகேஷனா இருக்கனால ஆட்டிடியூட் காட்டுவீங்களா?” என சீறியவள்,
“முதல்ல கேரெக்டர், அப்புறம் தான் இந்த சர்டிபிகேட்ஸ் எல்லாம்!” என அவன் பைலை அவன் முன் தூக்கிப்போட, அசையாமல் அமர்ந்திருந்தான் ஆதி.
“என்ன பார்க்குறீங்க? யூ மே கோ நவ்!!” என சொன்னவளிடம், “ஐ லைக் யூ” என ஆதி சொல்ல,
“வாட்..?” என்றாள் கண்கள் சுருங்க!!!
அவனோ கோப்புகளை எடுத்துக்கொண்டு, அவளை பார்த்து வசீகரமாய் சிரித்தபடி, “ஐ… லை…க் …யூ” என நிதானமாய் சொல்லிவிட்டு சிரிப்புடன் சென்றான்.
அவளது “இடியட்” கேட்க யாருமின்றி காற்றில் கலந்தது!
-கலாட்டா தொடரும்…