கலாட்டா காதல்!!!
அன்று காலை எழுந்தது முதல் பரபரப்பாய் இருந்தான் கோகுல். என்னவோ அவனுக்கே அன்று நேர்முகத்தேர்வு இருப்பதை போல, படபடப்புடன் அவன் சுற்றிக்கொண்டிருக்க, உண்மையில் இன்டர்வியூ போக வேண்டியவனோ ஒன்பது மணி வரையிலும் அடிக்க அடிக்க அசையாது உறங்கிக்கொண்டிருந்தான்.
ஆதியை எழுப்பி, குளிப்பாட்டி, ஆபீஸுக்கு கிளப்பி ஒருவழியாய் வெளியே வந்து கதவை பூட்டி, நான்கு மாடிகளை கடந்து இறங்கி, அப்பார்ட்மென்ட் பார்க்கிங்கில் இருந்த தன் பைக்கை கோகுல் கிளப்பியபோது, பின்னே ஏறி அமர்ந்த ஆதி கேட்டானே ஒரு கேள்வி!!!
‘இன்டர்வியூக்கு சர்டிபிகேட் எல்லாம் கொண்டு போகணும் தானேடா?’
வெறும்கையை இடுப்பில் வைத்துக்கொண்டு அப்பாவியாய் அவன் கேட்ட தினுசில் தன் தலையிலேயே ஓங்கி அடித்துக்கொண்ட கோகுல், மீண்டும் படையெடுத்தான் வீட்டை நோக்கி!!!
அதிலேயே நேரம் ஓடிட, மீண்டும் வந்து பைக்கை கிளப்பிக்கொண்டு ஆதியையும் ஏற்றிக்கொண்டு சென்னை ட்ராபிக்கில் கோகுல் தவழ்ந்துக்கொண்டிருந்த நேரம் சிக்னலில் சிவப்பு விழுந்து, அவர்களை நிறுத்தியது.
“மச்சி! இண்டர்வியூக்கு இன்னும் எவ்வளோ நேரம் இருக்கு?” என கோகுலின் தோளை சுரண்டினான் ஆதித்யா.
“ஒரு மணி நேரம் இருக்கு”
ஆதி, “வாவ்… ஒருமணி நேரம் இருக்கா?” என வாயை பிளந்தான்.
காலை வெயிலும், வாகன நெரிசலும் ஏற்கனவே கோகுலை பாடாய்ப்படுத்திக்கொண்டிருக்க, அதில் ஆதியின் கேள்வியில், “ஒரு மணி நேரம் தான் இருக்கு” என பல்லைக்கடித்தான் கோகுல்.
அவன் எரிச்சலை பொருட்படுத்தாத ஆதி, “எனக்கு காரப்பணியாரம் சாப்பிடனும் போல இருக்கு” என ரோட்டோரத்தில் இருந்த ஒரு சந்துக்கடையை காட்டி கேட்க, ஒட்டுமொத்த எரிச்சலையும் முகத்தில் தேக்கி, “ஆமா, நான் விஜய், இவரு திரிஸா… ப்ளைட்டுக்கு எவ்வளோ நேரம் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டு காரப்பொறி வேணும்ன்னு கேட்குறாரு…” என எரிந்து விழ,
“காரப்பொறி இல்லடா, காரப்பணியாரம்!” என ஆதி திருத்தியதில் கோகுலின் பிபி தான் சர்ரென ஏறியது.
“டேய் டேய்!!! ஓங்கி செவுல்லயே ரெண்டு விட்டேன்னா தெரியுமா? அங்க இண்டெர்வியூக்கு நேரம் ஆகுது! ஐஞ்சு நிமிஷம் லேட்டா போனாக்கூட அந்த ராட்சஸி கடிச்சே கொதறிடுவா! நானே அவக்கிட்ட சிக்கிடக்கூடாதுன்னு பயத்துல இருக்கேன்! நீ அசால்ட்டா பணியாரம் வேணும்ன்னு கேட்குற!”
“அப்போ எனக்கு பசிக்கும்ல!!! இன்னும் நான் சாப்பிடவே இல்ல!!” சிறுபிள்ளையென ஆதி முகம் தூக்க, “நானும் தாண்டா சாப்பிடல! அங்க கான்டீன்ல போய் உனக்கு வாங்கி தரேன்” என கோகுல் செய்த சமாதானம் எதுவும் ஆதியை வழிக்கு கொண்டு வரவில்லை.
“அதெல்லாம் முடியாது, காரப்பணியாரம் வாங்கிக்குடுத்தா தான் நான் வருவேன்” என பைக்கை விட்டே இறங்கிவிட்டான்.
“அடேய், ரெஃப்பரென்ஸ்ல என் பேரை குடுத்துருக்கேன்டா, நீ வரலன்னா என்னைத்தான் கேள்வி கேட்பானுங்க”
“அப்போ பணியாரம் வாங்கிக்குடுத்து கூட்டிட்டு போ!!” நடுரோட்டில் ஆதி பேரம் பேச, சிக்னலும் பச்சைக்கு தாவ ஆயத்தமாகவே, “ஏறித்தொல! வாங்கித்தந்து தொலைக்குறேன்” என கடுப்புடன் இறங்கிவந்தான் கோகுல்.
‘ஈஈஈ’ என்ற புன்னகையோடு வண்டியில் ஏறிக்கொண்டவனை கண்டு, ‘எனக்குன்னு வந்து சேருறானுங்க பாரு’ என திட்டிக்கொண்டே, அவன் காட்டிய பாட்டிக்கடை வாசலில் வண்டியை நிறுத்தி இறங்கினான் கோகுல்.
சிறிதுமின்றி பெரிதுமின்றி இருந்த அந்த சந்தின் தொடக்கத்தில் ஓரமாய் ஒரு கல்லின் மீது அமர்ந்து பணியாரம் சுட்டு விற்றுக்கொண்டிருந்தார் பாட்டி. சூடான பணியாரத்தை கோகுல் அவசரகதியில் உள்ளே தள்ளிக்கொண்டிருக்க, ஆதி அதற்கு நேர்மாறாய் ரசித்து ருசித்து மென்றுக்கொண்டிருந்தான்.
உண்டு முடித்ததும், நூறு ரூபாய் தாளை எடுத்து அந்த பாட்டியிடம் நீட்டினான் கோகுல்.
“காலைலேயே நூறு ரூவா குடுத்தா சில்லறைக்கு நான் எங்கப்பா போவேன்?” அவன் நீட்டிய நோட்டை வாங்காமலே, பாட்டி சொல்ல, “என்கிட்ட சேஞ் இல்லையே!” என்றவன், “டேய், உன்கிட்ட இருக்காடா?” என்றான் ஆதியை நோக்கி.
“இன்டர்வியூக்கு பர்ஸ் எடுத்துட்டு வரணும்ன்னு நீ சொல்லவே இல்லையே” என்றவனை முறைக்க கூட இயலாது, பாட்டியிடம், “உங்ககிட்ட பே-டியம் இருக்கா?” என்றான் கோகுல்.
“போட்டி(குடல்) எல்லாம் போடுறது இல்லப்பு! பணியாரம் ஒண்டிதான்” என்றார் அவர் வெள்ளந்தியாய்.
“இந்த கூகுல்பே, போன்பே அந்தமாறி ஏதாவது?” என கோகுல் மீண்டும் கேட்க, “இருவது ரூவா இருந்தா குடுத்துட்டு கிளம்பு தம்பி, காலை நேர வியாபாரத்துல வந்து ‘இல்ல இல்ல’ன்னு சொல்ல வைக்குற?” என்ற பாட்டிக்கு கோவம் துளிர் விட்டது போலும்.
ஆதியை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு, “நான் போய் சில்லறை வாங்கிட்டு வரேன்” என நகர்ந்தான் கோகுல்.
‘காலைலேயே ஒருத்தனை கடுப்பேத்துறதும் ஜாலியா, நல்லா தான் இருக்குல்ல!!’ என சிரித்துக்கொண்டே அவன் வரும்வரை ஏன் சும்மா நிற்க வேண்டும் என இன்னொரு தட்டு பணியாரத்தை வாங்கிக்கொண்டான் ஆதித்யா.
அடுத்த நிமிடத்துக்கெல்லாம் அவன் பின்னே ஒரு காரின் பலத்த ஹாரன் ஒலி காதை அடைக்க, திரும்பிப்பார்த்தவன் கண்களில் விழுந்தது அந்த பி.எம்.டபுள்யூ.
அந்த நெருக்கடியான சந்திற்குள் வெகு சிரமத்துடன் அது முன்னேறிக்கொண்டிருக்க, சந்தின் இரு மருகிலும் இருந்த வாகனங்கள் நகர்ந்து வழி விடவே, கொஞ்ச கொஞ்சமாய் அது இவனை நோக்கி வந்துக்கொண்டிருந்தது.
‘இவனுங்களுக்கெல்லாம் இதே பொழப்பா போச்சு! காசை குடுத்து காரை வாங்கிட வேண்டியது! சிக்னல்ல நிக்காம தப்பிக்க இப்படி சந்து பொந்துல பூந்து நம்ம உசுரை வாங்க வேண்டியது’ என ஆதியின் அருகே நின்ற ஒருவர் சத்தமாய் புலம்பிக்கொண்டு தன் டிவிஎஸ்-யை நகர்த்தினார்.
பாட்டியோ தன் பங்குக்கு, ‘வரவன் போறவனுக்கெல்லாம் வழி விட்டுட்டே உட்காந்துருந்தா, வியாபாரம் எங்க நடக்கும்? ஹம்… நம்ம கேட்டா ஏறி மிதிச்சுட்டு போய்டுவாங்க’ என புலம்பிக்கொண்டே அடுப்பை நகர்த்தி வழி கொடுக்க, பார்த்துக்கொண்டே நின்ற ஆதி, தாங்கள் வந்த பைக்கை நகர்த்தவில்லை.
அந்த பைக்கை நகர்த்தினால் மட்டுமே கார் சந்தினை கடந்து சாலைக்குள் திரும்ப முடியும் என்ற நிலையில் அவன் அப்படியே நிற்க, அவனை நெருங்கிய காரின் ஹாரன் பலமாய் ஒலித்தது.
அவன் திரும்பியும் பார்க்கவில்லை! மீண்டும் ஹாரன் சத்தம் கேட்க, அருகே இருந்தவர்கள், “தம்பி வண்டியை நகர்த்துப்பா!” என்றனர்.
“இது கார் போற பாதை இல்ல தானேண்ணே? அப்புறம் எதுக்கு நம்ம வழி விடனும்?” என ஆதி கேட்க, காருக்குள் இருந்து மௌனப்படம் பார்த்துக்கொண்டிருந்த தன்யாவிற்கு நேரம் கடந்துக்கொண்டிருப்பதில் பொறுமை பறந்தது.
ஏற்கனவே இரண்டு சிக்னலில் நின்று கூட்டதில் உருண்டு அவள் வந்திருக்க, மூன்றாவதாய் ஒரு சிக்னலை கண்டதும், ‘இதிலும் நின்றுவிட்டால், பார்ட்டிக்கு நேரத்தோடு செல்ல முடியாது! அதோடு திரும்ப ஆபிஸ் செல்வதற்கும் நேரமாகிவிடுமே’ என்று என்றும் இல்லாது அன்று தான் அந்த குறுக்கு சந்தின் வழியே காரை செலுத்தியிருந்தாள். இவ்வழி சென்றால் ஒரு பத்து நிமிடத்தை சேமிக்கலாமே! என்ற எண்ணம்!
அந்த நிமிடங்களையும் வீணடிக்கும்படி ஒருவன் வண்டியை நகர்த்தாது ஏதோ பேசிக்கொண்டிருக்க, கார் கண்ணாடியை வேகமாய் இறக்கி எட்டிப்பார்த்தாள் தன்யா.
எவனோ ஒரு தொப்பை வைத்த சொட்டைத்தலையன் பணம் இருக்கும் மிதப்பில் காரில் அமர்ந்து ஊர்வலம் வருகிறான் என்று நினைத்து அசால்ட்டாய் நின்றிருந்த ஆதி, காரில் இருந்து எட்டிப்பார்த்த தன்யாவை கிஞ்சித்தும் எதிர்ப்பார்க்கவில்லை.
‘பொ…ண்…ணுடா!!’ அவனே சொல்லிக்கொண்டான்.
இறங்கிய கண்ணாடி வழியே அவனை எட்டிப்பார்த்த தன்யா, கண்களில் இருந்த கூலர்சை அகற்றாது, சில நொடிகள் அவனையே வெறித்தாள்.
ஆதியும் அவளை ஸ்கேன் செய்பவன் போல கையிலேந்திய பணியாரத்துடன் பார்த்துக்கொண்டிருக்க, முதலில் தன்யாவே, “கேன் யூ ப்ளீஸ் அட்ஜஸ்ட் யுவர் வெஹிகிள்?” என்றிருந்தாள்.
‘மூஞ்சில பாதியை கண்ணாடி வச்சு மறைச்சுக்கிட்டா பிகர் வொர்த்தா இல்லையான்னு எப்டி தெரியும்!?’ என முகம் சுணங்கிய ஆதி, சற்று சத்தமாக “இந்த சந்துல ஆட்டோவே ஆடி ஆடி தான் போகும், இதுல பி.எம்.டபில்யூ காரை எடுத்துட்டு வந்தா எப்டி மேடம்?” என்றான்.
‘அதானே, மூணு பைக்கு சேர்ந்தாப்புல வந்தாலே இந்த ரோடு அடைஞ்சுக்கும், இதுல இத்தாம்பெரிய கார் எப்புடிம்மா போகும்?’ தன் கடைக்கு அலைகலைப்பு ஆவதில் துவண்டிருந்த பாட்டி ஆதி கேள்வி கேட்டதும், சப்போர்ட்டுக்கு வந்தார்.
தன்யாவுக்கு எரிச்சலாக வந்தது. பத்து நிமிடத்தை சேமிக்கலாம் என அவள் இந்த வழியை தேர்ந்தெடுக்க, இவர்கள் வழிவிடாது நின்றதிலேயே ஐந்து நிமிடங்கள் கடந்துவிட்டது.
“கொஞ்சம் எமர்ஜென்சி! இன்னைக்கு மட்டும் வழி விடுங்க!!” தணிவாகவே கேட்டாள் தன்யா.
“வரவங்க எல்லாருக்குமே இப்படி ஒரு காரணம் இருக்கு மேடம்! எல்லாரையும் இப்படியே விட்டுட்டு இருந்தா, யாருதான் ரூல்ஸ மதிக்கிறது?” என ஆதி கேட்க, அவனோடு சேர்ந்து அந்த காருக்காக வழிவிட்ட சிலரும் குரல் எழுப்ப, தன்யாவிற்கு ‘ஐயோ’ என்றானது.
நேரம் கிடைத்தால் காலந்தவறாமை, விதிகளை மீறாமை என பலருக்கு இவளே பாடம் எடுப்பாள்! இன்று அவசரத்திற்கு இவ்வழியை வேறு வழியின்றி அவள் எடுக்க, ஆதிக்கு இன்றா பொறுப்புணர்வு பொங்கிக்கொண்டு வர வேண்டும்?!
“அவசரமா போகணும் சார்! இன்னைக்கு ஒரு நாள் மட்டும் அல்லோவ் பண்ணுங்க ப்ளீஸ்” தன் மேல் தவறு என்பதால் அந்நேரத்திலும் அவள் குரல் உயர்த்தவில்லை.
‘பேசிக்கிட்டே இருக்காளே ஒழிய, எழுந்து வெளில வர மாட்டேங்குறாளே!’ என்ற ஆதிக்கு அவளை முழு உருவாய் பார்க்க வேண்டுமே என்ற ஆவல்.
எந்தவொரு போராட்டமும் ஆரம்பிக்க தான் ஆளின்றி இருக்குமே தவிர, அதை ஊதி பெரிதாக்க, நம்மூரில் போராளிகள் நிறையவே உள்ளதால், ஆதி விளையாட்டாய் ஆரம்பித்தது, அவர் பேச, இவர் பேச என பெரிதாகி, இறுதியில் காரை அவள் ரிவர்ஸ் எடுத்து வந்த வழியே போக வைக்கும்படி செய்தது.
ஆதி ஒருவன் அமைதியாய் இருந்திருந்தால், அந்த திருப்பத்தை அவள் இருபது நிமிடங்களுக்கு முன்னரே கடந்து இந்நேரம் பார்ட்டி ஹாலுக்கே கூட சென்றிருப்பாள். ஆனால், ஆதியின் உபயத்தில் அவள் சேமிக்க நினைத்த பத்து நிமிடத்தை விட இரு மடங்காய் விரயம் செய்து, கடினப்பட்டு ரிவர்ஸ் எடுத்து வேறு போக, அவனை தலை முதல் கால் வரை தன் கத்திரி வெயில் பார்வையில் பொசுக்கிவிட்டே சென்றாள்.
அவள் போன வழியையே பார்த்துக்கொண்டு நின்ற ஆதியின் தோளை தட்டிய கோகுல், “சீக்கிரம் ஏறு, ஆல்ரெடி லேட்டு!” என கத்தினான் பைக்கை எடுத்தபடி!
ஆதி, “ஜஸ்ட் இருவது ரூபா கலெக்ட் பண்ணிட்டு வரதுக்கு உனக்கு இவ்வளோ நேரமாடா?”
“என்னவோ நான் பிச்சை எடுக்க போன மாறி பேசுற? காலங்காத்தால கடை கடையா ஏறி சில்லரை இருக்கான்னு கேட்டுப்பாரு! அப்போத்தெரியும் ஏன் லேட்டுன்னு! இதுக்கு நடுல ரெண்டு போன் கால் வேற!” என சலித்துக்கொண்டே வண்டியை ஆபீசை நோக்கி செலுத்தினான் கோகுல்.
அந்த பன்மாடிக்கட்டிடத்தின் பார்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு லிப்டை நோக்கி ஆதியை அழைத்து சென்றான் கோகுல்.
“தன்யா பில்டர்ஸ்” என்ற பெயரை அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவனுடன் நடந்துகொண்டிருந்தான் ஆதி! அவர்களின் ‘தேவா செராமிக்ஸ்’ கம்பெனி ஆபீசை விட சிறிதுமில்லை, பெரிதுமில்லை எனும்படி இருந்தது அந்த பில்டிங்!
கோகுல், “இதான்டா எங்க ஆபிஸ்! மோஸ்ட்லி ‘பீல்ட் வொர்க்’ தான் இருக்கும்! நான் ‘ப்ரோமோஷன்’ டிபார்ட்மென்ட்ல இருக்கேன்! கட்டி முடிச்ச பில்டிங்கை விதவிதமா போட்டோ, வீடியோ எடுத்து, அதை விளம்பரப்படுத்துற வேலை! எனக்கு கீழ ஆறு பேருக்கிட்ட வேலைக்கு இருக்காங்க” என்றான் சற்றே பெருமையாய்.
பின்னே, “இப்போ நீ வந்துருக்க CRM (CUSTOMER RELATIONSHIP MANAGER) போஸ்டுக்கு, எனக்கு தெரிஞ்சு காம்பெட்டீஷன் கம்மிதான்! வந்திருக்க எல்லாரை விடவும், உன் குவாலிபிகேஷன் அதிகம்! அதுலயும் IBM ஸ்டுடென்ட்ன்னா கேட்கவே வேண்டாம்!!” என்றான் கோகுல்.
இந்தியாவில் IITக்கு அடுத்தபடியாக, அதிக மதிப்புடன் மதிக்கப்படும் IBM பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்புடன், எம்.பி.ஏ முடித்து பல வருட வேலை அனுபவத்துடன் இருக்கும் தன் நண்பனுக்கு எப்படியும் இந்த வேலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை கோகுலுக்கு இருந்தது.
“வேலை கிட்டத்தட்ட கன்பார்ம் தான்டா! உன் வாயை மட்டும் கொஞ்ச நேரத்துக்கு உன் கட்டுப்பாட்டுல வச்சுருந்தன்னா எந்த பிரச்சனையும் இல்லாம வேலை கிடைச்சுடும்!” என கோகுல் சொல்ல, “ஏய்….” என முறைத்தான் ஆதித்யா.
“என்ன ஏய், ஓய்? உண்மையை தானே சொல்றேன்? கொஞ்ச நேரம் பொறுப்பா நடந்துக்கோ!!! என்னால இண்டர்வியூ முடியுற வரை உன்கூடவே இருக்க முடியாது… வேலை கிடைச்சதும் கால் பண்ணு” என்றான் கோகுல்.
இருவரும் ஐந்தாம் தளம் வந்திருக்க, அதன் முகப்பில் இருந்த வரவேற்ப்பரையில் இருந்த பெண்ணிடம், “மேடம் வந்தாச்சா?” என்றான் கோகுல்.
“நோ சார்!!”
“தேன்க் காட்” என வாய்விட்டே சொன்ன கோகுல், “நீ இங்க உட்காரு! நான் ரெக்ரூட்மென்ட் ஆபீசரை பார்த்து சொல்லிட்டு வரேன்” என்று நகர்ந்தான்.
அவன் காட்டிவிட்டு சென்ற நாற்காலியில் சென்று அமர்ந்தான் ஆதித்யதேவ். அடுத்து பதினைந்து நிமிடங்களில் கோகுல் திரும்ப வந்தபோது, ஆதி இருக்கையில் இருந்திருக்கவில்லை.
‘எங்க போனான்?’ என அவன் கண்களால் அலச, விவரம் கேட்போம் என பார்த்தால், வரவேற்ப்பரையில் இருந்த பெண்ணையும் காணவில்லை.
அலைபேசியை எடுத்து ஆதியின் எண்ணுக்கு அழைக்க, சத்தம் சற்று அருகிலேயே கேட்டது. அழைப்பு உடனே எடுக்கப்பட, “எங்கடா இருக்க?” என அடிக்குரலில் கத்தினான் கோகுல்.
“இங்கதாண்டா… ரிசெப்ஷன்ல”
“நான் இங்கதானே இருக்கேன்! உன்னை காணோம்?”
“மேல பாக்காத! கிட்ட வந்து கீழ பாரு” என ஆதி சொல்ல, அருகே சென்று எட்டிப்பார்த்த கோகுல் திகைத்தான்.
“என்னடா பண்ணிட்டு இருக்க?”
“நம்ம ஷீலா கொண்டு வந்த நெய் தோசை செம்ம வாசனைடா! அதான் கொஞ்சம் ஷேரிங் வாங்கி சாப்பிடலாம்ன்னு வந்தேன்!!” என்றான் தோசையை வாயில் வைத்தபடி.
அலுவலகத்திற்கு வந்ததே சிறிது தாமதம் என்பதால் ரெஸ்டிங் ஏரியா சென்று உணவருந்தக்கூட நேரமில்லாமல் அங்கேயே கீழே குனிந்து டிபன் பாக்சை வரவேற்ப்பில் இருந்த பெண், திறந்திருக்க, அந்த வாசனையில் ஈர்க்கப்பட்டு வந்து ஒட்டிக்கொண்டான் ஆதி.
கோகுல், “எது? நம்ம ஷீலாவா?” என திகைக்க,
“ஆமான்டா, ரெண்டு வருஷமா வேலைக்கு இருக்காங்களாமே?” அவன் ஆபிஸ் ஆட்களை அவனுக்கே அறிமுகப்படுத்திய ஆதி, “கொஞ்சம் சட்னி குடுங்க ஷீலா” என கேட்டு வாங்க, அவளும் தாராளமாய் அள்ளி வைத்தாள்.
இதையெல்லாம் பார்த்த கோகுல், “உன்னை இங்க உட்காருன்னு சொல்லிட்டு போய் ஒரு பத்து நிமிஷம் இருக்குமா? அதுக்குள்ளயாடா?” என வெளிப்படையாய் கேட்க, ‘ஹீ ஹீ’ என்றான் அவன்.
“வொர்க் டைம்ல உங்க ப்ரேக்பாஸ்ட் எல்லாம் ஆபிஸ்ல வச்சுக்க கூடாது மேடம்! இதுவே கடைசியா இருக்கட்டும்” என அந்த ஷீலாவிடம் சொல்லிவிட்டு ஆதியை அழைத்துக்கொண்டு இன்டர்வியூ ஹாலுக்கு சென்றான்.
போகும் வழியில், “இப்படி நீ உர்ருன்னு பேசுனா எப்படிடா பொண்ணு மடங்கும்?” ஆதி கவலைப்போல் சொல்ல,
“உன்னோட திருவிளையாடல் எல்லாம் இங்க வச்சுக்காதடா! நீ எது செஞ்சாலும் உன்னை ரெபர் பண்னேங்குற முறையில என்னைத்தான் புடிப்பானுங்க” என்ற கோகுல்,
“பொண்ணுங்கக்கிட்ட எல்லாம் கொஞ்சம் தள்ளியே இரு, மெயின்னா நம்ம மேடம்கிட்ட! ஏற்கனவே அது கொஞ்சம் உராங்கொட்டான் வகையறா” என்றான் தன்யாவை பற்றி பெருமையாய்.
“பதினொரு மணிக்கு இன்டர்வியூ! இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கு… மேடம் ‘கன்’ டைம்க்கு இங்கே வந்துடுவாங்க! நான் என் கேபினுக்கு போறேன்! கொஞ்சம் வாயடக்கத்தோட நல்ல விதமா பேசு!” என இன்னும் பல அறிவுரைகளை அள்ளி தெளித்து விட்டு நகர்ந்தான் கோகுல்.
அவன் சொல்லிவிட்டு சென்ற பத்து நிமிடம் பல பத்து நிமிடங்களாய் கடந்தும் தன்யா வந்திருக்கவில்லை. ஆதியோடு நேர்க்காணலுக்கு வந்திருந்த மற்ற ஐவருமே ஆண்களானதால் அந்த கண்ணாடி தடுப்பினுள் அவனுக்கு சைட் அடிக்க கூட வழின்றி போக, இறுதியாய் ‘பப்ஜி ஆண்டவரை’ சரணடைந்தான் ஆதித்யதேவ்.