நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“இதுவரைக்கும் நண்பர்களா இருந்த நாம ரெண்டு பேரும் சம்மந்தி ஆகப் போகிறோம். அதை நினைச்சா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு சிதம்பரம்.” என்று பூரித்துப் போனார் அண்ணாமலை.
“எனக்கும் மதுமிதா எங்க வீட்டுக்கு இரண்டாவது மருமகளா வருவதை நினைச்சா சந்தோஷமா இருக்கு.” என்றார் பார்வதி. “உங்க எல்லோரையும் விட நான் தான் ஹேப்பி. இனிமேல் இந்த அக்கா நம்ம வீட்டிலேயே தான் இருக்க போறாங்க. ஜாலி.” என்று கூறியபடி குதித்துக் கொண்டிருந்தான் ஆதித்யா.
“இனிமேல் அக்கான்னு சொல்லக்கூடாது ஆதி. சித்தின்னு சொல்லணும்.” என்று அவனை திருத்தினாள் மலர்.
“அப்படியா ஓகே. சித்தி உங்களுக்கு நிறைய கேம்ஸ் தெரியுமா?” என்று கேட்டான் ஆதித்யா.
பட்டுப் புடவையும் நகையும் ஆக இருந்த மதுமிதா
“எனக்கு நிறைய கேம்ஸ் தெரியும் ஆதி. டைம் கிடைக்கும் போது நான் உனக்கு கண்டிப்பா சொல்லித் தருகிறேன்.” என்றாள் புன்னகையுடன்.
“ஐயா ஜாலி!” என்று விட்டு சோபாவில் ஏறி குதித்தான் ஆதித்யா.
“டேய் சோபாவில் ஏறி குதிக்காதே. கீழ. இறங்கு” என்று அதட்டினான் ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஆறுமுகம்.
“பரவாயில்லை சின்ன குழந்தை தானே. விளையாடட்டும் விடுங்க.” என்றார் வள்ளி.
“என் கிட்ட வாடா.” என்று ஆதித்யாவை அழைத்து தன் மடியில் வைத்துக்கொண்டான் மதுசுதன்.
“சுதா ராணியை கூட்டிட்டு வரலையா?”. என்று கேட்டார் வள்ளி
“அவளுக்கு இவ்வளவு நாள் லீவு விட்டதற்கும் சேர்த்து லீவு நாள்ல கூட ஸ்பெஷல் கிளாஸ் வச்சு கிளாஸ் எடுக்குறாங்க. அவள் படிப்பில் பிஸியா இருக்கா. அதனாலதான் இங்க வரல.” என்றார் பார்வதி.
“சரி சரி. எப்படியும் கல்யாணத்துக்கு லீவு எடுக்கணும். இப்பவே படிச்சி வச்சிக்கிறது நல்லதுதான்.” என்றார் வள்ளி.
அனைவரும் சிதம்பரத்தின் வீட்டில் கூடி கை தாம்பூலம் மாற்றி இருந்தனர்.
எல்லோரது முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஆனால் மதுமிதாவின் முகத்தில் மட்டும் ஏமாற்றம் தெரிந்தது. அவளை கவனித்த வள்ளி அவரிடம் வந்து
“என்னடி முகம் டல்லா இருக்கு? என்ன விஷயம்?” என்று கேட்டார்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா. நான் நார்மலா தான் இருக்கிறேன்.” என்று சமாளிக்க முயன்றாள்.
“எனக்கு தெரியாதா உன்னை பத்தி? மாதவன் வரலன்னு தானே முகம் வாடி இருக்கு.” என்று அவள் மனதை படித்தவர் போல கேட்டார்.
“அம்மா!” என்று திகைத்து தாயைப் பார்த்தாள் மகள் .
“அவர் இப்பதானே வந்துட்டு போனாரு. அவருக்கும் வேலை இருக்கும் இல்லையா? அதனால்தான் வரல போல இருக்கு. இரு. எதுக்கும் நான் மலரை கேட்டுப் பார்க்கிறேன்.” என்று கூறிவிட்டு மலரிடம் வந்தார் வள்ளி.
“என்ன மலர் மாப்பிள்ளை ரொம்ப பிசியா?” என்று பொறுமையாக கேட்டார்.
“அண்ணாமலை ஸ்டோரில் கட்டிட வேலை நடக்குது. அதை பாத்துக்க யாராவது ஒருத்தர் அங்கே இருக்கணும். அதனாலதான் மாதவன் வரல. அதுவுமில்லாம மாதவன் இப்பதானே இங்க வந்து பார்த்துட்டு போனான்.”
“ஆமாம் ஆமாம். அவரும் எத்தனை தடவைதான் சென்னைக்கும் திருச்சிக்கும் அலைய முடியும்?” என்று ஒத்துக் கொண்டார் வள்ளி.
மகளிடம் வந்து விபரத்தை கூறினார்.
“பாருடி மாப்பிள்ளை எவ்வளவு பொறுப்பா இருக்காரு.” என்று தன் மாப்பிள்ளையை பற்றி பெருமைப்பட்டுக் கொண்டார் வள்ளி.
எனினும் மதுமிதாவை மனம் சமாதானம் அடைய மறுத்தது.
சாப்பிட்டு முடித்து விட்டு அனைவரும் காரில் ஏறினர். அந்தத் தெரு முனையை தாண்டிய பிறகு மலர் பார்வதியிடம் .வள்ளி மாதவனை பற்றி கேட்டதை சொன்னாள்
“எனக்கு அப்பவே தெரியும். நான் அதுக்காக தான் இவன் கிட்ட நீயும் வாடான்னு சொன்னேன். அவன் எங்கு இருக்கிறான்?” என்று நொந்து கொண்டார் பார்வதி.
“அவன் சொல்றதும் கரெக்ட் தானே அம்மா. நம்ம கடையில இப்போ கட்டிட வேலை நடந்துக்கிட்டு தான் இருக்கு.” என்று தம்பிக்கு பரிந்து பேசினான் அண்ணன் ஆறுமுகம்.
“அந்த கட்டிட வேலையை நீ ஒரு நாள் பாத்துக்கலாம் இல்லடா?”
“நான் சொன்னேன் அம்மா. ஆனால் அவன்தான் கேட்கவே இல்லை. என்னை என்ன பண்ண சொல்றீங்க?” என்று பதில் கேள்வி கேட்டான்.
“இவன் ஏன்தான் இப்படி பண்றான்னு தெரியல. நானும் எவ்வளவோ அவனை கூப்பிட்டு பார்த்தேன். பிரயோஜனம் இல்லை.” என்று சலித்துக் கொண்டார் அண்ணாமலை.
“சரி விடுங்க. விட்டு பிடிப்போம்.” என்றார் பார்வதி
“அதான் கல்யாணத்தை சீக்கிரமாவே வைத்திருக்கிறோம் இல்லையா? எல்லாம் சரி ஆகிவிடும்.” என்றான் ஆறுமுகம்.
வீட்டுக்குள் நுழைந்ததும் ஆதித்யா மலரின் கைப்பேசியை வாங்கி அதில் இருந்த புகைப்படத்தை மாதவனிடம் காண்பித்தான்.
அதில் மதுமிதா இருந்த புகைப்படத்தை தன்னுடைய கைபேசிக்கு அனுப்பினான் மாதவன்.
இரவு படுக்கையில் படுத்திருந்த மாதவன் அவனுடைய கை கைபேசியை எடுத்து அதில் இருந்த மதுமிதா புகைப்படத்தை வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
‘போட்டோவிலேயே இவ்வளவு அழகா இருக்கிற. நேரில் எவ்வளவு அழகா இருந்திருப்ப? என்னால தான் உன்னை நேர்ல பார்க்க வர முடியல. எனக்கும் வரணும்னு தான் ஆசை. ஆனால் நீ நேரடியா என்கிட்ட அந்த கேள்வியை கேட்டு விடுவாயோனு ஒரு சின்ன பயம் இருக்கு. அப்படி நீ நேர்ல கேட்டுட்டா என்னால உன் முகத்தை பார்த்து பொய் சொல்ல முடியாது. அதனாலதான் நான் உன்கிட்ட இருந்து கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறேன்.
இது உனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும்னு எனக்கு தெரியும். இருந்தாலும் இதுதான் நம்ம ரெண்டு பேருக்கும் நல்லது. அதனால என்ன மன்னிச்சிடு.” என்று புகைப்படத்தில் தோன்றிய மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டான்.
அதேசமயம் மாதவனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு மதுமிதா அவனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“ ஏன் இன்னிக்கு வரல? நான் நீ வருவாய்னு தான் நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு உன்னை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தேன். ஏன் என்னை ஏமாற்றின? நான் உன் மேல கோபமா இருக்கேன். நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். திருவிழாவில் நடந்ததை உன்கிட்ட ஷேர் பண்ணனும். என்னோட பரம எதிரியை பற்றி உன் கிட்ட பேசணும். நீயாவது எனக்கு அவனை கண்டுபிடித்து கொடுக்கணும். அந்த நகை எனக்கு திரும்ப கிடைக்கணும். இப்படி என் மனசுல இருக்கிற விஷயத்தை எல்லாத்தையும் உன்கிட்ட ஷேர் பண்ணனும். எப்ப பண்ண முடியும்னு தான் தெரியல.” என்று பேசியபடியே அவனது புகைப்படத்தை அவளது மார்பில் வைத்துக்கொண்டு அப்படியே உறங்கினாள் மதுமிதா.
முகூர்த்த நாள் குறித்து திருமண வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருந்தது.
மதுமிதாவுக்கு பட்டுப்புடவை வாங்க மலர், பார்வதி அண்ணாமலை, ஆதித்யா வந்திருந்தனர்.
அப்போதும் மாதவன் வரவில்லை. மதுமிதாவுக்கு ஏமாற்றமாக இருந்தது.
புடவை நகை என்று எல்லாவற்றையும் வாங்கி முடித்த பிறகு அண்ணாமலை குடும்பத்தினர் திருச்சிக்கு கிளம்ப, சிதம்பரம் குடும்பத்தினர் வீட்டுக்கு திரும்பினார்.
மகளின் ஏமாற்றத்தை முகம் காண்பிக்க வள்ளி மகளின் அறைக்கு சென்று அவரிடம் பேசினார்.
“மது மாப்பிள்ளை இன்னிக்கும் வரலன்னு உனக்கு கவலையா இருக்கா? அதான் வேலை இருக்குன்னு சொல்றாங்க இல்ல? இதையெல்லாம் நினைத்து கவலை படாதே.” என்றார் மதுமிதா.
“சரிமா” என்று சொன்ன படி லேசாக தலையாட்டினாள் அவள்.
இன்னும் சோகமாகவே இருப்பதை உணர்ந்த வள்ளி
“மது நேர்ல தான் அவரால வர முடியாது. நீ வேணா அவருக்கு போன் பண்ணி பேசி பாரேன்.” என்று யோசனை கூறினார்.
“எனக்கும் அந்த ஐடியா தோனுச்சு. ஆனா அவர் எனக்கு முதல் தடவை கால் பண்ணனும்னு நினைக்கிறேன்.” என்றாள் மெல்லிய குரலில்.
மகளின் மனம் தாய்க்கு புரிந்தது. எனினும்
“இப்படியெல்லாம் யோசிச்சா அப்புறம் எப்படி பேச முடியும்? ஒன்னு நீயே அவருக்கு போன் பண்ணி பேசு. அப்படியில்லை அவர்தான் முதலில் பேசணும்னு நீ நினைச்சா அவரா போன் பண்ற வரைக்கும் பொறுமையா வெயிட் பண்ணு. இப்படி கல்யாண பொண்ணு முகத்தை சோகமா வச்சுக்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கும்?” என்று மகளின் கண்ணம் தொட்டு தன் பக்கம் திருப்பி கேட்டார் வள்ளி.
“சரி மா. நான் அவருக்கு போன் பண்ணி பேசுகிறேன்.” என்றாள் மதுமிதா.
“சரி மது. வா முதல்ல சாப்பிடலாம். சாப்பிட்டு முடிச்சிட்டு போன் பண்ணி பேசு.’ என்று மகளை அழைத்துச் சென்று சாப்பிட வைத்தார்.
இரவு 10 மணிக்கு மாதவனின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டாள் மதுமிதா.
மதுமிதாவின் எண்ணை பார்த்த மாதவன் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தான்.
‘வேண்டாம் மாதவா’ என்று ஒரு மனம் எச்சரிக்க
இன்னொரு மனம் ‘எடுத்து பேசி தான் பாரேன் டா.’ என்றது. எனவே கைபேசியை எடுத்து “ஹலோ” என்றான்.
“நான் மதுமிதா பேசுறேன்.” என்றாள் அவள்.
“எனக்கு தெரியும்.”. என்றான் அவன்
“ஓ! அப்ப என்னோட நம்பரை வச்சுக்கிட்டு தான் இவ்வளவு நாள் என்கிட்ட பேசாம இருக்கீங்களா?” என்று சிறிது கோபமாக ஆரம்பித்தாள் அவள்.
ஆனாலும் மாதவனுக்கு அந்த கோபம் ஆனந்தத்தையே கொடுத்தது. அவன் அவளிடம் பேச வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பதை அவன் உணர்ந்து மகிழ்ந்தான் . அவள் கோபத்தை ரசித்தான். எனினும் எதுவும் பேசவில்லை.