“என்ன பேச்சையே காணோம்?” என்று அவள் கேட்டாள்.
மாதவன் “நீதானே போன் பண்ணின, நீ தான் சொல்லணும்.” என்றான்.
“அப்போ நான் எதுவும் பேசலனா, நீங்க பேச மாட்டீங்க. அப்படித்தானே?” என்று கோபமாகவே கேட்டாள் அவள்.
மாதவனுக்கு சிரிப்பு வந்தது. தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு
“ அப்படியெல்லாம் இல்லை. எங்க கடையில கட்டிட வேலை நடந்துக்கிட்டு இருக்கு. அதனால பிசி.”. என்றான்
“சரி இருக்கட்டும். என்கிட்ட ரொம்ப நேரம் பேச வேண்டாம். கொஞ்ச நேரமாவது பேசலாம் இல்லையா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்
“பேசலாமே. நீ பேசு நான் கேட்கிறேன்.”. என்றான் அவன்
“அதையும் நான்தான் செய்யணுமா? சரி சரி நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். ஒரு தடவை நான் பிரெண்டு கல்யாணத்துக்காக தேனி…..” என்று ஆரம்பித்ததும் இவன் சுதாரித்தான்.
“என்னமா கூப்பட்றீங்களா? அம்மா என்னை கூப்பிடுறாங்க. நாம அப்புறம் பேசலாம்.” என்று பொய் கூறினான்.
“ஓ அத்தை கூப்பிடுறாங்களா? சரி நீங்க போய் பாருங்க.” என்றுவிட்டு தொடர்பை துண்டித்தாள் மதுமிதா.
அதற்குப் பிறகும் மதுமிதா இரண்டு, மூன்று முறை அவனது கைபேசிக்கு தொடர்பு கொண்டாள். ஆனால் அவன் கைப்பேசியை எடுத்து ஒரு சில வார்த்தைகள் பேசியதோடு வேலை இருக்கிறது என்று கூறி தொடர்பை துண்டித்தான்.
இதனால் மதுமிதா அவன் மீது கோபம் கொண்டாள்.
சிதம்பரம் குடும்பத்தினரும் அண்ணாமலை குடும்பத்தினரும் சொந்த பந்தங்களுக்கும் நண்பர்களுக்கும் அழைப்பிதழ் வைத்து அழைத்துக் கொண்டிருந்தனர்.
“என்ன சிதம்பரம் எல்லோருக்கும் பத்திரிக்கை வச்சாச்சா?” என்று கேட்டார் அண்ணாமலை.
“வச்சாச்சு. ஆனால்…..” என்று சொல்ல தயங்கினார் சிதம்பரம்.
“சிதம்பரம் என்ன விஷயம் சொல்லு.”
“என் அப்பா அம்மாவுக்கு அழைப்பிதழ் வைக்கணும்னு நினைக்கிறேன். ஆனால் வீட்டுக்கு போனா அப்பா கோபப்படுவார். அதனால யோசிக்கிறேன்.”
“சரி நீ என்கூட வா. நானும் அவருக்கு அழைப்பிதழ் வைக்கணும். நாம நாலு பேரும் சேர்ந்து போகலாம்.”
“இல்லை அண்ணாமலை. தேவையில்லாம பிரச்சனை எதுக்கு?” என்று மறுத்தார் சிதம்பரம்.
“இப்படியே நீ நெனைச்சுக்கிட்டு இருந்தா, எப்ப தான் நீங்க ஒன்னு சேர்கிறது?” என்று கேட்டார் அண்ணமலை.
“சரி இப்ப என்னதான் பண்றது? சொல்லு அண்ணாமலை.”
“நான் அழைப்பிதழ் வைக்க போகணும். நீயும் என் கூட வா. அவர் திட்டினாலும் பரவாயில்லை. அவர் வீடு தேடி அவர் பேத்தி கல்யாணத்துக்கு அழைப்பிதழ் வைக்க வந்திருக்கேன்னு அவருக்கு தெரிஞ்சா போதும்.” என்றார் அண்ணாமலை.
“நீ சொல்றதுலயும் விஷயம் இருக்கு. சரி அண்ணாமலை. நான் வரேன்.” என்ற சிதம்பரம் வள்ளியை அழைத்துக் கொண்டு தாய் தந்தையை பார்க்க சென்றார்.
காரிலிருந்து அண்ணாமலையும் பார்வதியும் முதலில் இறங்கினர். இவர்களைப் பார்த்த முருகையன் ஆர்வமாக
“வாங்க வாங்க. மாதவன் கல்யாணத்துக்கு அழைப்பிதழ் வைக்க வந்திருக்கீங்களா?” என்று வரவேற்றார்.
இவர்களுக்குப் பின் சிதம்பரமும் வள்ளியும் தயங்கி தயங்கி வருவதை பார்த்த முருகையன் முகம் மாறியது.
“ஈஸ்வரி” என்று வேகமாக கத்தினார்.
உள்ளேயிருந்த ஈஸ்வரி என்னமோ ஏதோ என்று பயந்து வெளியில் வந்து பார்த்தார்.
இந்த நால்வரையும் பார்த்த ஈஸ்வரி
“வாங்க வாங்க” என்று பொதுவாக அழைத்தார்.
“ஈஸ்வரி எதற்காக இவன் இப்போ இங்கே வந்திருக்கான்? என்னை மதிக்காமல் என் வீட்டை விட்டு போனவன் இப்போ எதற்காக இங்கே வந்து இருக்கான்?” என்று கோபமாக கேட்டார்.
ஈஸ்வரி என்ன பேசுவது என்று புரியாமல் திகைத்து கண்கலங்கி கொண்டிருந்தார்.
“இப்போ இவன் இங்கே இருந்து போகிறானா? இல்லை நான் அவனை……” என்று அவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே
சிதம்பரம் “நானே போயிடுறேன் அப்பா.” என்று விட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு காருக்குள் ஏறினார்.
அண்ணாமலை ஏதோ பேச வாய் எடுக்க சிதம்பரம்
“வேண்டாம் அண்ணாமலை. எனக்காக நீ எதுவும் பேச வேண்டாம். அப்புறம் அவர் உன்னையும் கோபித்துக் கொள்வார். நீங்க போய் அழைப்பிதழ் வைத்துவிட்டு வாங்க. நாங்க கார்ல வெயிட் பண்றோம்.” என்றுவிட்டு வள்ளியை அழைத்துக் கொண்டு சென்றார்.
அண்ணாமலை பார்வதியுடன் உள்ளே சென்று அழைப்பிதழ் வைத்து விட்டு வந்தார்.
ஈஸ்வரிக்கு தான் மிகவும் வருத்தமாக இருந்தது.
“என் புள்ள என் பேத்தி கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்திருக்கான். அவனை உள்ளே விட யாருக்கும் இங்க மனசு இல்லை.” என்று கண்ணீர் விட்டபடி புலம்பி விட்டு தன் வேலையை தொடர்ந்தார்.
அன்று கீதா மதுமிதாவின் வீட்டிற்கு வந்தாள்.
“என்னடி கல்யாண பொண்ணு எப்படி இருக்க? மாதவன் கிட்ட தினமும் பேசுறியா? ஒரே ரொமான்ஸ் தானா?” என்று விளையாட்டாக அவள் கன்னத்தை பிடித்து கிள்ளி கேட்டாள்.
“ஆமாம் அது ஒன்னு தான் ரொம்ப குறைச்சல். அவன் எப்ப பார்த்தாலும் பிஸியா தான் இருக்கான். அப்படி என்னதான் அங்க கட்டிட வேலை நடக்குதுன்னு தெரியல. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு.” என்று கோபமாக பேசினாள் மதுமிதா.
“என்னடி இன்னும் கல்யாணமே ஆகல. அதுக்குள்ள இவ்வளவு கோபமா சண்டை போடுற மாதிரி பேசுற.” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் கீதா.
“சண்டை போடற மாதிரி கிடையாது கீதா. எனக்கு இருக்குற கோபத்துக்கு ஒரு மூணு மாசமாவது அவனை காயப் போடணும். அப்பதான் நான் இங்க அவனை எவ்வளவு மிஸ் பண்ணினேன்னு தெரியும்.”. என்றாள் கோபமாக
“என்னடி சொல்ற? நிஜமா தான் சொல்றியா?”
“ஆமாண்டி நிஜமா தான் சொல்றேன். ரொம்ப ஈசியா ஒரு விஷயம் யாருக்காவது கிடைத்தால் அதோட வேல்யூ அவங்களுக்கு தெரியாமலே போய்விடும். அப்படித்தான் என்னோட வேல்யூ இவனுக்கு தெரியல போல இருக்கு. தெரிய வைக்கிறேன் பாரு.”. என்றால் மதுமிதா உறுதியாக.
“இதெல்லாம் கொஞ்சம் ஓவர் டி.” என்றால் கீதா.
“பின்ன நான் எத்தனை தடவை அவனுக்கு கால் பண்ணினேன் தெரியுமா? ஒரு தடவை கூட என்கிட்ட ஒழுங்கா பேசல. எப்பவுமே வேலை, வேலை தான். இவனை எல்லாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு எப்படி தான் குப்பை கொட்ட போறேன்னு தெரியல.” என்று சலித்துக்கொண்டாள் மதுமிதா.
“நீ பேசுவதைப் பார்த்தால் வேற வழி இல்லாம அவனை கல்யாணம் பண்ணிக்கிற மாதிரி தெரியுது. உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?”
“அப்படி இல்லை கீதா. எனக்கு மாதவனை பிடிக்கும். நான் அவனை லவ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். அவனைத் தவிர வேறு யாரையும் என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. அவனை மட்டும் இல்ல, அவனோட குடும்பம் மொத்தத்தையும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூரண சம்மதம். ஆனாலும் நாங்க ரெண்டு பேரும் நல்லா பேசி பழகினால் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் வீட்டுக்கு போகும்போது எனக்கு ஓரளவுக்கு வசதியா இருக்கும். நீ கேட்ட அந்த ரொமான்ஸ் கூட கேஷுவலா நடக்கும். இல்லனா யாரோ மாதிரி இருக்கும். மொத்தத்துல, அவன் எனக்கும் இம்பார்ட்டன்ஸ் கொடுக்கணும்னு நினைக்கிறேன். இது தப்பா?” என்று கேட்டாள்.
“தப்பே இல்லைடி. நீ சொன்னதை கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் எந்த தப்பும் பண்ணல.” என்று வாய் தவறி கூறினாள் கீதா.
“என்ன சொன்ன? என்ன தப்பு பண்ணின?” என்று கேட்டாள் மதுமிதா.
“அப்படியா சொன்னேன்? அப்படி சொல்லலையே.” என்று மறுத்தாள் கீதா.
“எனக்கு என்ன காது செவிடா? நீ சொன்னதை நான் தான் கேட்டேனே. சொல்லுடி. நீ என்ன தப்பு பண்ணின?” என்று புரியாமல் கேட்டாள் மதுமிதா.
“நான் ஒரு தப்பும் பண்ணல மதுமிதா. ஏதோ வாய் தவறி சொல்லிட்டேன்னு நினைக்கிறேன்.”
“எனக்கு ஒன்னும் புரியல.” என்றாள் மதுமிதா.
“சரி அதை விடு. பியூட்டி பார்லர் போனியா?” என்று பேச்சை மாற்றினாள் கீதா.