“அவளுக்கு இந்த வேலையில் இஷ்டம் இல்லையாம். டெய்லரிங் வேலைதான் பிடிச்சு இருக்கா. அதனால அவ டெய்லரிங் கத்துக்கிட்டு டிசைனர் பிளவுஸ், சல்வார், அப்புறம் இன்னும் நிறைய தைத்து கொடுத்துட்டு இருக்கா.”
“என்னது பி பி ஏ படிச்சிட்டு இந்த வேலை பண்ணிட்டு இருக்காளா?”
“ஆமா இதே கேள்வியை நான் அவகிட்ட கேட்டபோது அவ என்ன சொன்னா தெரியுமா?”
“அப்பா எனக்கு இந்த வேலை பிடிச்சு இருக்கு. என்னை இதை செய்ய விடுங்க. நான் ஹேப்பியா செய்வேன்.”
“அப்புறம் எதுக்காக பி. பி. ஏ. படிச்ச மது?” என்று வள்ளி கேட்க
“பி. பி. ஏ. படிச்சு முடிச்ச அப்புறம் தானே எனக்கு டெய்லரிங் மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு தெரிய வந்துச்சு. எவ்வளவோ பேர் படிச்ச படிப்புக்கும் செய்யற வேலைக்கும் சம்பந்தமே இல்லாம வேலை செஞ்சுகிட்டு தானே இருக்காங்க. பி.இ. படிச்சுட்டு விவசாயம் பண்ற எவ்வளவு விவசாயிகள் இருக்காங்க. நாம எந்த வேலை செய்தாலும் அதை நாம சந்தோஷமா செய்யணும். அப்பதான் அந்த வேலையில் நமக்கு எந்த கஷ்டமும் தெரியாது. அதை விட்டுட்டு நமக்கு பிடிக்காத வேலையை செஞ்சா சின்ன வேலை கூட நமக்கு ரொம்ப கஷ்டமா தெரியும்.
அவங்க எல்லாம் எதுக்காக அந்த வேலையை செய்யறாங்க? அவங்களுக்கு அவங்க செய்யற வேலை ரொம்ப பிடித்து இருக்கு. அதனாலதான்.
அதே மாதிரி எனக்கு இந்த வேலை பிடித்து இருக்கு நான் இதை தான் செய்வேன். இதை செஞ்சாதான் நான் ஹாப்பியா செய்வேன் அப்படி செய்தால்தான் சக்ஸஸ்புல்லா வரமுடியும். அதனால என்னை இதை செய்ய விடுங்க.” என்றாள் மதுமிதா உறுதியாக.
குழந்தைகளை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தி பழக்கமில்லாத பெற்றவர்கள் இவர்கள் .எனவே மகளை மகள் விருப்பத்திற்கு விட்டனர்.
“இவ்ளோ தெளிவா பேசுற பெண்ணை நான் குழப்ப வேண்டுமா? நீங்களே சொல்லுங்க.” என்று அவரது நண்பரிடம் கேட்டார் சிதம்பரம்.
“ஆமாம்பா தெளிவான பொண்ணுதான் உன் பொண்ணு.” என்று அந்த நண்பரும் ஒத்துக்கொண்டார்.
“சரி வேலை செய்கிறது இருக்கட்டும். உன் பொண்ணுக்கு ஏதாவது வரன் பார்க்கிறாயா?”
“மது கொஞ்ச நாள் போகட்டும்னு தான் சொல்லி இருக்கா. ஆனாலும் நான் வரன் பார்க்க ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்ச நல்ல பையன் யாராவது இருந்தா சொல்லுங்க.” என்றார் சிதம்பரம்.
“ஏன் மது இப்போ கல்யாணம் வேண்டாம்னு சொல்றா?”
“அதுவா அவளுக்கு ஒரு பெரிய கடை வாடகைக்கு எடுத்து அந்த கடையில வேலைக்கு ஆட்கள் வைத்து டெய்லரிங் பண்ணனும்னு ஆசை. அண்ணாநகரில் ஒரு நல்ல கடை கூட கிடைச்சது. பக்கத்திலேயே நிறைய பெரிய துணி கடை கூட இருந்தது. என்ன பண்றது கைக்கு கிடைக்க வேண்டிய நேரத்துல கிடைக்காமல் போயிடுச்சு. ஏதோ கைக்கு எட்டினது வாய்க்கு எட்டலன்னு சொல்லுவாங்களே. அதுமாதிரி கிடைக்காமல் போயிடுச்சு. அதே மாதிரி ஒரு கடை தேடிக்கிட்டு இருக்கா. ஒரு வருஷம் ஆகுது. இன்னும் எங்களுக்கு அந்த மாதிரி ஒரு கடை கிடைக்கல. அதனால வீட்டிலேயே இருந்துகிட்டு எங்க ஏரியால இருக்கிற கஸ்டமர்க்கு தைத்து கொடுத்துட்டு இருக்கா.”
“ஓ அப்படியா?” என்று கேட்டுக் கொண்டார் நண்பர். “எல்லாத்துக்கும் காலம் நேரம் கூடி வரணும் இல்லையா சிதம்பரம்?”
“ஆமாம்பா நீ சொல்றதும் உண்மைதான். இன்னும் நேரம் வரலை போல இருக்கு.” என்றார் சிதம்பரம்.
“சரிப்பா நேரமாச்சு. நான் கிளம்புறேன்.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் நண்பர்.
அப்போது அங்கு வந்த மதுமிதா
“என்னப்பா ஏதோ நல்ல நேரம் வரணும்னு பேசிட்டு இருந்த மாதிரி காதுல விழுந்துச்சு. யாருக்கு நல்ல நேரம்? என்ன நல்ல நேரம்?” என்று கேட்டபடியே அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
“ உனக்கு தான் நல்லநேரம் வரணும்னு பேசிட்டு இருந்தேன் மா.”
“என்னப்பா திரும்பவும் மாப்பிள்ளை பார்க்க போறேன்னு ஆரம்பிச்சிட்டீங்களா? நான் தான் கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொன்னேன் இல்லையா?” என்று சிறிது கோபம் காட்டி கேட்டாள்.
“அதைப்பற்றி நான் பேசவே இல்ல மா.” என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றார் அவர்.
“அப்புறம் எதை பற்றி பேசினீங்க?” என்று தந்தையை ஊடுருவி பார்த்து கேட்டாள் மதுமிதா.
“அண்ணாநகரில் உனக்காக பார்த்து வச்ச கடை கிடைக்காமல் போயிடுச்சு இல்லையா? அதைத்தான் சொல்லிட்டு இருந்தேன். அதுக்கு என்னோட பிரண்டு எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணும்னு சொன்னாரு. அதுக்குதான் ஆமாம்னு சொல்லிட்டு இருந்தேன்.” என்று பாதி உண்மையை மறைத்து மீதி உண்மையை கூறினார்.
“அந்தக் கடை கிடைக்காமல் போனதற்கும் நேரத்துக்கும் என்னப்பா சம்பந்தம்? அதுக்கும் காரணம் அந்த பொறுக்கி பையன் தான். சொன்ன மாதிரி அன்னிக்கு நாம பணம் கொடுத்து சாவியை வாங்கி இருந்தால், இந்நேரம் நமக்கு அந்த கடை கிடைச்சிருக்கும்.” என்று வருத்தமாக கூறினாள் மதுமிதா.
“எனக்கு என்னமோ நீ தேவையில்லாம அவன் மேல கோபப்படுகிறாய்னு தோணுது.” என்று மகளின் முக மாற்றத்தை கவனித்த படி கூறினார்.
“அப்பா நீங்க அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாதீங்க. எனக்கு கெட்ட கோவம் வரும்.” என்றாள் ஒற்றை விரலை உயர்த்தி காட்டி கோபமாக.
“சரி விடுமா. முடிந்து போனதை நினைத்து என்ன ஆக போகுது?
அதை மறந்துட்டு வேற என்ன செய்யலாம்னு யோசிச்சு செய்யலாம்.” என்று மகளை திசை திருப்பினார் சிதம்பரம் .
அதேநேரம்
“என்ன அப்பாவுக்கும் பொண்ணுக்கும் ஏதோ வாக்குவாதம் நடக்கிற மாதிரி தெரியுது?” என்று கேட்டுக்கொண்டே அங்கு வந்தார் வள்ளி.
“வாக்குவாதம் எல்லாம் எனக்கும் அப்பாவுக்கும் வராது. உங்களுக்கும் உங்கள் பையனுக்கும் தான் வரும்.” என்று கூறியபடி தந்தையின் தோளை கட்டிக்கொண்டாள் மதுமிதா.
“சரி சரி நீங்க உங்க அப்பா பொண்ணு பாசப் படத்தை கொஞ்சம் நிறுத்துங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு. வீட்டுக்கு கிளம்பலாம். வாங்க.” என்று அழைத்தான் மதுசுதன்.
வீட்டின் முன்பு காரை நிறுத்திய மதுமிதா உள்ளே சென்று தன் புடவையை மாற்றிக்கொண்டு அவள் அணிந்திருந்த ஜிமிக்கி வளையலுக்கு ஏற்றவாறு ஒரு சல்வாரை எடுத்து அணிந்து ஹாலிற்கு வந்தாள்.
“எனக்கு டி நகரில் கொஞ்சம் வேலை இருக்கு. எம்ப்ராய்டரி நூல் தீர்ந்து போயிடுச்சு. அதை வாங்கிக்கிட்டு அப்படியே கொஞ்சம் லைனிங் கிளாத் வாங்க வேண்டி இருக்கு. அதையும் வாங்கிகிட்டு சாயந்தரம் வீட்டுக்கு வந்துடறேன்.” என்று தாயிடம் கூறினாள்.
“இப்பவே மணி 11ஆவது. மதியம் சாப்பிட்டுவிட்டு போகலாம் இல்லையா மது?” என்று கேட்டார் வள்ளி.
“இல்லை அம்மா கல்யாணத்தில் நிறைய சாப்பிட்டு விட்டேன். இப்போதைக்கு என்னால் சாப்பிடவே முடியாது. நல்லா அலைந்து திரிந்து வேலையை முடிச்சிட்டு வந்ததும் உன்னோட சிக்கன் பிரியாணியை நல்லா ஒரு கை பிடிக்கிறேன்.” என்று கூறிவிட்டு கார் சாவியை எடுத்துக்கொண்டு சென்றாள் மதுமிதா.
டி நகரில் அமைந்திருந்த அந்த பெரிய துணிக்கடையில் நுழைந்தாள். அது ஒரு மொத்த வியாபார கடை. அவள் பொதுவாக அவளது தையல் வேலைக்கு தேவையான துணிகளை அங்கே தான் வாங்குவாள்.
“வாங்க மதுமிதா. வாங்க.” என்று அங்கு வேலை செய்யும் பெண் அவளை வரவேற்றாள்.
“ஹாய் ஷீலா” என்று இவளும் அந்த பெண்ணை பார்த்து கையை அசைத்தபடி அவளிடம் சென்றாள்.
“சொல்லுங்க என்ன வேணும்?” என்றாள் அந்த சீலா.
“எனக்கு 10 கலர்ல லைனிங் கிளாத் வேண்டும்.”
“அப்படியா பிளவுஸ் துணியில் இருந்து கட் பண்ண பீஸ் எடுத்துட்டு வந்து இருக்கீங்களா?”
“எடுத்துட்டு வந்திருக்கேன்.” என்று கூறி தன் கைப்பையில் ஒரு அறையில் இருந்த அந்த துண்டு துணிகளை எடுத்து அவளிடம் கொடுத்தாள் மதுமிதா.
“ஓகே மது. நான் இதையெல்லாம் எடுத்து வைக்கிறேன். அதுக்குள்ள நீங்க வேற ஏதாவது வாங்கணும்னா வாங்கிட்டு வாங்க.”
“தேங்க்ஸ் சீலா.” என்று கூறியபடி அவள் அடுத்த தளத்திற்கு சென்றாள்.
அப்போது ஷீலாவுடன் வேலை செய்து கொண்டிருந்த இன்னொரு பெண் அவளிடம் வந்தாள்
“என்னடி கஸ்டமரை பேர் சொல்லி கூப்பிடுற. அவங்க உனக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லிட்டு போறாங்க.”
“அவங்க நம்ம ரெகுலர் கஸ்டமர். அவங்க அப்படித்தான் எல்லாருக்கும் தேங்க்ஸ் சொல்லுவாங்க. அவங்கதான் என்னை பெயர் சொல்லி கூப்பிட சொன்னாங்க. அதுவுமில்லாம என்னைவிட சின்ன பொண்ணுதான்.” என்று மலர்ந்த முகத்துடன் கூறினாள் அந்த ஷீலா.
“ஓ அப்படியா?” என்று புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த அந்த பெண் ஷீலாவிடம் விபரம் கேட்டு தெரிந்து கொண்டாள்.
அடுத்த தளத்திற்கு சென்றவள் தனக்கு தேவையான நூல் மற்றும் புடவைகளில் வைத்து தைப்பதற்கு தேவையான பல வண்ண கற்கள் எல்லாவற்றையும் தன் கைப்பையில் வைத்திருந்த பட்டியலை பார்த்து பொறுமையாக தேர்வு செய்து எல்லாவற்றிக்கும் பில் போடும் படி கூறிவிட்டு கீழே இறங்கி வந்தாள்.
மதுமிதாவை பார்த்த ஷீலா
“இதோ நீங்க கேட்ட லைனிங் கிளாத் எல்லாமே இதுல இருக்கு.” என்று கூறி அடிக்கி வைத்திருந்த துணிகளை காட்டினாள்.
மதுமிதா அவற்றை ஒருமுறை சரிபார்த்துவிட்டு பில் போடுவதற்கு அனுப்பினாள்.
“ஓகே ஷீலா. நாம அப்புறம் பார்க்கலாம்.” என்று அவளிடம் விடைபெற்றுக் கொண்டு பணத்தை கட்டி எல்லாவற்றையும் தன் இரண்டு கைகள் நிறைய வாங்கிக்கொண்டு தன் கையிலிருந்த ரிமோட் கார் சாவியை வைத்து கார் டிக்கியை திறந்தவள் எல்லாவற்றையும் வைத்தாள்.
அப்போது யாரோ அவளை நோட்டம் விடுவது போல அவளுக்கு தோன்றியது. அவள் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள். அந்த திங்கட்கிழமை மத்தியான நேரத்தில் டிநகரில் வழக்கத்தை விட கூட்டம் கம்மியாக தான் இருந்தது. எனினும் அங்கு யாரும் அவளை கவனிக்காதது போல தோன்ற திரும்பி நடந்து கார் ஓட்டுனர் இருக்கையில் வந்து அமர்ந்து காரை ஓட்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
“சிக்கன் பிரியாணி எப்பவும் போல செமையா இருக்கு.” என்று தாயை புகழ்ந்து விட்டு சாப்பிட்டு முடித்தாள். தன் அறைக்கு சென்று ஜிமிக்கி மற்றும் வளையலை கழட்டி அதன் பெட்டியில் வைத்தாள். அப்போது அதே பெட்டியில் அட்டிகைக்கான இடம் காலியாக இருப்பதை பார்த்த அவளுக்கு அந்த திருடனின் ஞாபகம் வந்தது.
‘இருக்கட்டும் என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பா நான் உன்னை தேடி கண்டுபிடிப்பேன். அப்ப இருக்கு உனக்கு.’ என்று கருவி கொண்டவள் எழுந்து முகத்தில் போட்டிருந்த பவுண்டேஷன் க்ரீம், கண் மை எல்லாவற்றையும் டிஷ்யூ பேப்பரை பாதாம் எண்ணெய் கொண்டு துடைத்துவிட்டு முகத்தை கழுவிக்கொண்டு வந்து கண்ணாடியை பார்த்தாள்.
முகத்தில் போட்டிருந்த மேக்கப்பை சரியாக துடைத்து இருக்கிறோமா என்று சரிபார்ப்பதற்காக கண்ணாடியை பார்த்த மதுமிதாவுக்கு அவள் நெற்றியில் இருந்த தழும்பு பளிச்சென்று தெரிந்தது.