நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“நான் உன்கிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் சொல்லனும்னு நினைச்சுட்டு இருக்கேன். அதை சொல்லட்டுமா?
“ஆனால் நீ இதை கேட்டு கோபப்படக்கூடாது. பொறுமையா கேட்கணும். சரியா?” என்று பீடிகை போட்டாள் கீதா.
“சரி” என்றாள் மதுமிதா.
“காபி ஆரி போச்சு. நான் போய் வேற காப்பி போட்டு எடுத்துட்டு வரட்டுமா?” என்று அந்த காபியை பார்த்து கேட்டாள் கீதா.
“இல்லை பரவாயில்லை.” என்றவள் அதனை அப்படியே குடித்து விட்டு
“நாம பார்க்க போய் பேசலாம்.” என்று மதுமிதா கீதாவை அழைத்துக்கொண்டு பூங்காவிற்கு வந்தாள்.
இருவரும் ஒரு இடத்தில் உட்கார்ந்தனர்.
“இப்ப சொல்லு.” என்று கேட்டாள் மதுமிதா.
“அன்னிக்கு நடந்தது எதுவும் உனக்கு முழுசா தெரியாது. . அதை சொல்லனும்னு நான் ரொம்ப நாளா ட்ரை பண்ணினேன். ஆனால் நீ என்னை சொல்ல விடல. அந்த நர்ஸ் சொன்னதை கேட்டுட்டு நீயே ஒரு முடிவுக்கு வந்துட்ட. அதுக்கப்புறம் நான் சொல்ல வருவதை நீ சொல்ல விட்டது கிடையாது . அட்லீஸ்ட் இப்பயாவது நான் சொல்ல வருவதை கேட்க ரெடியா இருக்கியே ரொம்ப சந்தோஷம் .
அன்னிக்கு கத்தியையும் ரத்தத்தையும் பார்த்த அதிர்ச்சியில் நீ மயங்கி போய் விழுந்துட்ட. அதுக்கப்புறம் என்ன நடந்தது தெரியுமா?” என்று அன்று நடந்ததை கூற ஆரம்பித்தாள் கீதா.
மதுமிதா மயங்கி விழுந்ததைக் கண்ட கீதா அவள் அருகில் சென்று அவளை
“மது மது” என்று அழைத்து எழுப்ப முயன்றாள். மதுமிதாவின் நெற்றியில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் கீதா.
அப்போது சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்த ஆண்கள் கூட்டத்தில் இருந்து ப்ளூ ஷர்ட் அணிந்திருந்த அவன் இவர்களை நோக்கி ஓடி வந்தான்.
கீழே கிடந்த மதுமிதாவை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டான்.
“யாராவது ஒரு துணி கொடுங்க” என்று அந்தக் கூட்டத்தில் துணியை வாங்கி அவள் நெற்றியில் கட்டினான்.
பிறகு அவளை தூக்கி கொண்டு அந்த திருவிழா நடந்து கொண்டிருந்த தெருவில்
“யாராவது ஆட்டோ பிடிங்க.” என்று கத்திக் கொண்டே ஓடினான்.
அந்த தெருவில் ஒரு ஆட்டோ கூட அப்பொழுது இல்லை. அந்த நீண்ட தெருவினை அவன் நீண்ட கால்களால் வேகமாக ஓடியபடியே கடந்தான்.
கீதாவால் அவன் அளவிற்கு ஓட முடியவில்லை.
பிறகு அந்த தெரு முனையில் இருந்த ஆட்டோ ஒன்றில் மதுமிதாவை உட்கார வைத்துவிட்டு அவனும் அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
பிறகு அதே ஆட்டோவில், ஓடி வந்து கொண்டிருந்த கீதாவிடம் சென்று அவளையும் ஏற்றிக்கொண்டான்.
“அண்ணா இங்கே ஹாஸ்பிடல் எங்க இருக்கு?” என்று பதட்டத்துடன் கேட்டான்.
“பக்கத்துல ஒரு ஹாஸ்பிடல் இருக்கு.” என்றான் அந்த ஆட்டோகாரன் .
“அண்ணா அங்க சீக்கிரமா போங்க.” என்று அவனை அவசரப்படுத்த ஆட்டோகாரன் விரைவாக அந்த மருத்துவமனைக்கு சென்றான்.
மருத்துவமனையில் இறங்கிய ப்ளூ ஷர்ட் நெடியவன் மதுமிதாவை மீண்டும் தூக்கிக்கொண்டு அந்த மருத்துவமனைக்குள் ஓடினான்.
“டாக்டர் இந்த பொண்ணுக்கு நெற்றியில் வெட்டு பட்டு இருக்கு. சீக்கிரம் ட்ரீட்மெண்ட் கொடுங்க.”என்று அவசரப்படுத்தினான்.
“வெட்டுப்பட்டு இருக்குன்னு சொல்றீங்க. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து இருக்கீங்களா?” என்று கேட்டார் அந்த மருத்துவர்.
“போலீஸ் கேஸ் கொடுக்க இப்போ எங்களுக்கு டைம் இல்ல. ப்ளீஸ். ட்ரீட்மென்ட் கொடுங்க. நாங்கள் கண்டிப்பா கொடுத்து விடுவோம். ப்ளீஸ் டாக்டர். இங்க பாருங்க எப்படி ரத்தம் போயிட்டு இருக்கு?” என்று காட்டினான்.
அதில் மனம் இரங்கிய அந்த மருத்துவர்
“சரி வாங்க” என்று ஒரு அறையை காட்டினார்.
அவன் அவளை அந்த அறையில் படுக்க வைத்தான்.
“நர்ஸ்” என்று மருத்துவர் அழைக்க ஒரு நர்ஸ் அங்கு சென்றார்
மருத்துவர் “நீங்க ரெண்டு பேரும் வெளியே போங்க. நாங்க பாத்துக்குறோம்.” என்று கீதாவையும் அவனையும் வெளியே அனுப்பினார்.
சிறிது நேரம் கழித்து மருத்துவர் வெளியில் வந்தார்.
“அவங்களுக்கு ஸ்டிட்செஸ் போட்டு கட்டுப் போட்டு இருக்கிறோம். அதிர்ச்சியில் மயங்கி இருக்காங்க. மற்றபடி ஒரு பிரச்சனையும் இல்லை. இப்போ நர்ஸ் வந்து அவங்க கழுத்தில் வழிந்து கரையாக இருக்கும் ரத்தத்தை சுத்தம் பண்ணிட்டு போவாங்க. யாராவது ஒருத்தங்க இங்கே இருங்க . இன்னொருவர் இந்த மருந்தை வாங்கிட்டு வாங்க .”
என்று ஒரு சீட்டை கொடுத்தார் மருத்துவர்.
அவன் தன் சட்டை மற்றும் பேன்ட் பைகளை தொட்டு பார்த்தான். அதில் ஒன்றும் இல்லை.
அவனிடம் பணம் இல்லை என்பதை புரிந்து கொண்டாள் கீதா.
தனியாக மதுமிதாவை முன்பின் தெரியாத இவனிடம் விட்டு செல்ல மனமில்லாமல் தயங்கினாள்.
அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவன் கண்ணில் வலி தெரிந்ததே தவிர கள்ளத்தனம் தெரியவில்லை.
அப்பொழுது நர்ஸ் உள்ளே வந்தார்.
அவரிடம் சென்று
“நான் வரும் வரை நீங்க இங்கேயே இருங்க.” என்று கூறிவிட்டு சென்றாள் கீதா.
மருந்தை வாங்கிகொண்டு அவள் அங்கு வந்த பொழுது அந்த அறையில் மதுமிதா மட்டுமே இருந்தாள்.
பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு சென்ற பிறகும் அங்கு இல்லாத நர்ஸ் மீது கோபம் வந்தது.
ஆனால் அந்த நர்ஸ்
“சாரிமா ஒரு எமர்ஜென்சி. அதனாலதான் போக வேண்டியதா போச்சு. இங்க இருந்த அந்தப் பையன் கிட்ட சொல்லிட்டு தானே போனேன். அந்த பையன் எங்கே போனான்?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.
அப்போதுதான் மதுமிதாவின் பெற்றோர்கள் அறைக்குள் நுழைந்தனர்.
என்று நடந்ததை சொல்லி முடித்தாள் கீதா.
“கீதா நீதான் ப்ளூ ஷர்ட் போட்டி இருந்தவன் கத்தியை யாருக்கும் தெரியாமல் எடுத்தான்னு சொன்ன. அப்புறம் அதே ப்ளூ ஷர்ட் போட்டு இருந்தவன் என்னை தூக்கிட்டு இங்க வந்து அட்மிட் பண்ணினானு சொன்ன. அப்போ ரெண்டு பேரும் ஒரே ஆளா தானே இருக்கணும்?
மத்தவங்க எல்லாரும் வெறும் கையால சண்டை போட்டுக்கிட்டு இருக்கும்போது இவன் மட்டும் யாருக்கும் தெரியாமல் ஒரு கத்தியை எடுத்து இன்னொருத்தனை குத்த நினைக்கிறான்னா அவன் கெட்டவனாக தானே இருக்கணும். “
“ ஆனால் நீ ஒன்னு மறந்துட்ட . அங்க இரண்டு பேர் ஒரே மாதிரி ப்ளூ ஷர்ட் போட்டு இருந்தாங்க. கத்தியை திருட்டுத்தனமா எடுத்தவன் வேற ஒருத்தனா இருக்கலாம் இல்லையா மது?”
“அது சரி நீ சொல்றது சரினு வெச்சுகிட்டாலும் என்னோட நகை கானா போனது ஹாஸ்பிட்டலில் தான். அங்க அவன் மட்டும்தான் இருந்தான். அதுவும் திடீர்னு யார்கிட்டயும் சொல்லாம அவன் ஓடிப்போக என்ன ரீசன் இருக்க முடியும்? சொல்லு கீதா.”
“அது அது அவனுக்கு வேற வேலை ஏதாவது வந்திருக்கலாம். இல்லை ஏதாவது எமர்ஜன்ஸி….” என்று முடிக்க முடியாமல் தடுமாறினாள் கீதா.
“பாத்தியா கீதா. நீயே தடுமாறற.”
“சரி மது. அங்க நடந்ததை வச்சு பார்த்தா, அவன் மேல தப்பு இருக்கிற மாதிரி தெரியுது. ஒருவேளை அவன் தப்பு பண்ணலைன்னு உனக்கு தெரியவந்தா அதுக்கப்புறமும் நீ அவனை வெறுப்பாயா.”
“தப்பு அவன் மேல இல்லைன்னு தெரிஞ்சா நான் ஏன் அவனை வெறுக்க போறேன்?” என்று மதுமிதா கூறவும் கீதா அவளை உற்று பார்த்தாள்.
“என்ன அப்படி பாக்குற கீதா ?ஆனால் தப்பு அவன் மேல இல்லைன்னு நீ இல்ல வேற யாராவது ஏன் அவனே வந்து சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்.” என்றாள் உறுதியாக.
“என்னடி சொல்ற?” என்று புரியாமல் கேட்டாள் கீதா.
“ எனக்கு ப்ரூவ் பண்ணனும். அவன் மேல தப்பு இல்லைன்னு ப்ரூவ் பண்ணினால்தான் நான் நம்புவேன். சும்மா வாயால சொன்னால் நான் அதை நம்ப மாட்டேன்” என்றாள் மதுமிதா திட்டவட்டமாக.
“ இவனே கூட அந்தக் கடைக்காரமா சொன்ன மாதிரி ஒரு பொண்ணு கிட்ட வம்பு பண்ணி இருப்பான். யார் கண்டது?” என்று போகிற போக்கில் அந்த பழியையும் அவன் மேலே போட்டாள் மதுமிதா.
“மது கண்டிப்பா அவன் அப்படி பண்ணி இருக்க முடியாது. என்னால இதை கன்ஃபார்மா சொல்ல முடியும்.”
“எப்படி சொல்ற?” என்று தோழியை கூர்ந்து பார்த்து கேட்டாள் மதுமிதா.
“நீ அடிபட்டு கீழே விழுந்து கிடந்த போது அவன் ஓடிவந்து உன்னை தூக்கி அவன் மடியில் போட்டு உன் தலையில் கட்டு போட்டான். அப்போ அவன் கண்ணில் ஒரு வலி தெரிஞ்சுது. அது எப்படி இருந்துச்சுன்னா ஏதோ அவனுக்கே அடிபட்ட மாதிரி துடித்தான் . அவன் கண்ணுல நான் கள்ளத்தனம் பார்த்ததே கிடையாது.
அவன் உன்னை பார்த்த விதம், தொட்டு தூக்கிய விதம் எல்லாத்திலேயும் ஒரு கண்ணியம் இருந்தது . அவன் அந்த பொண்ணு கிட்ட பிரச்சனை பண்ணி இருக்க மாட்டான்.”
“அப்புறம் நான் இன்னொரு விஷயம் கூட சொல்லுவேன். ஆனால் அதை கேட்டுட்டு நீ என்ன அடிக்க கூடாது.” என்று தயங்கியபடி கேட்டாள் கீதா.
“அப்ப அடிக்கிற மாதிரி ஏதோ நீ சொல்ல போற.” என்று அவளை பார்த்து முறைத்தாள் மதுமிதா.
“பாத்தியா பாத்தியா அதுக்குள்ள என் மேல கோபப்படுற . சரி வேண்டாம் விடு மது.”
“அதான் தொண்டைவரைக்கும் வந்துடுச்சே சொல்லிடு.”
“அது அது வந்து….” என்று உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்த கீதா அவளின் கைக்கு எட்டாத தூரம் நகர்ந்து நின்று
“அவன் உன்னைப் பார்த்த பார்வை சுரேஷ் என்னை பார்க்கும் பார்வை போல இருந்துச்சு.”
“ இப்போ எதுக்காக எழுந்து ஓடுற? சுரேஷ் உன்னைப்பார்த்த பார்வையா? ஒன்னும் புரியலையே.” என்று கீதாவை பார்த்தாள்.
“நல்லா யோசி புரியும்.” என்று அங்கேயே நின்றாள் கீதா.
சிறுது நேரம் வானத்தைப் பார்த்து யோசித்த மதுமிதாவுக்கு மெல்ல அவள் கூறியது புரிந்தது.