“உன்னோட மனசு யாருக்கு வரும் டா? எனக்கு தெரியும் உனக்கு அந்த பெண்ணை ரொம்ப பிடிச்சு போச்சு. இருந்தாலும் நீ இந்த விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கிட்ட. உன்னோட மனசுக்கு உனக்கு இதைவிட நல்ல பொண்ணு கிடைக்கும்.” என்று அவனுக்கு ஆறுதல் கூறி தேற்றுவது போல பேசினார் பார்வதி.
உண்மையில் மாதவனுக்கு சிரிப்பு வந்தது.
‘நாம கஷ்டப்பட்டு இந்த கல்யாணத்தை எப்படி நிறுத்துவதுனு யோசிச்சுக்கிட்டு இருக்கும்போது அவளேஅந்த வேலையை செஞ்சிட்டா. அதுக்கு நான் தான் அவளுக்கு தேங்க்ஸ் சொல்லணும். இது புரியாமல் என் மேலேயே எல்லோரும் சிம்பதி காட்றாங்க. ஒரே காமெடி தான் போ.’ என்று நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.
‘சரி ஒரு வழியா இந்த ரூபா விஷயம் ஒரு முடிவுக்கு வந்துடுச்சு. இனிமேலாவது நாம நிம்மதியா மதுமிதாவை எப்படி கல்யாணம் பண்றதுன்னு யோசிக்கலாம் என்று நினைத்தவனுக்கு இன்னும் பத்திரிக்கை அனுப்பவில்லை என்பது ஞாபகம் வந்தது. சரி அண்ணன் கிட்ட வாங்கி இன்னைக்கு அனுப்பி விடலாம்’ என்று நினைத்தான்.
மாதவன் எதுவும் பேசாமல் ஏதோ யோசித்துக் கொண்டிருப்பதை கவனித்த பார்வதி அவன் ரூபாவை நினைத்து கவலைப்படுகிறான் என்று தவறாக புரிந்து கொண்டார்.
“சரி மாதவா. நீ எதையும் யோசித்து உன்னை நீ வருத்திக் கொள்ளாதே. நம்ம வீட்ல விசேஷம் நடக்கப்போகுது. அதனால நாம எல்லோரும் சந்தோஷமா இருக்க வேண்டிய நேரமிது” என்று மகனை தேற்றினார்.
“ஆமாம்மா எனக்குக்கூட பத்திரிக்கை அனுப்ப வேண்டிய வேலை இருக்கு. நான் போய் அந்த வேலையை பார்க்கிறேன்.” என்று எழுந்தான்.
“சரிடா. நீ அந்த வேலையை பாரு.” என்று அவனை திசை திருப்ப முயன்றார் பார்வதி.
‘அப்பாடி விட்டால் போதும்’ என்று மனதில் நினைத்துக் கொண்டு தந்தையிடம் வந்தான் மாதவன்.
“அப்பா எனக்கு பத்திரிக்கை வேணும். என்னோட பிரண்டுக்கு அனுப்பனும்.” என்று கேட்டான்.
இதனைக்கேட்ட அண்ணாமலை மற்றும் ஆறுமுகம்
“என்னடா இப்ப வந்து பத்திரிக்கை கேட்கிற. எல்லா பத்திரிக்கையும் தீந்து போச்சு. ஒரு பத்து பத்திரிக்கை தனியா எடுத்து வைத்திருந்தேன். அதையும் கடைப் பையன் அவன் பைனு நினைச்சு எடுத்துட்டு ஊருக்கு போய்ட்டான். அவன் வந்தா தான் பத்திரிக்கை. ஆனால் அவன் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் தான் வருவான். இப்ப என்னடா பண்றது? ரொம்ப முக்கியமான ஆளுக்கு பத்திரிக்கை வைக்கணுமா?” என்று கேட்டான் ஆறுமுகம்.
“இல்லை இல்லை பரவாயில்லை விடு அண்ணா.”
“யாருக்கு பத்திரிக்கை?” என்று கேட்டார் அண்ணாமலை.
“அது என்னோட பிரண்டு ஒருத்தனுக்கு வைக்க மறந்துட்டேன். அதுக்கு தான் கேட்டேன்.” என்று சமாளித்தான்.
“உன் பிரண்டு தானே. சும்மா வாயால கூப்பிடு. வருவாங்க.” என்று சாதாரணமாக கூறிவிட்டு சென்றான் ஆறுமுகம்.
மாதவன் சோபாவில் பொத்தென்று உட்கார்ந்தான்.
‘சுத்தம். நேர்ல போன போது பத்திரிக்கை வைக்கல இனிமேலும் பத்திரிக்கை அனுப்ப முடியாது. அப்படியே அனுப்பி இருந்தாலும் வருவாளா என்பது சந்தேகம்தான் இருந்தாலும் கொஞ்சமாவது சான்ஸ் இருந்திருக்கும். இப்போ அதுவும் கிடையாது.’ என்று மீண்டும் உச்சி கொட்டினான்.
முகம் தன்னிச்சையாக சோகமாக மாறியது. வீட்டில் இருந்தவர் அனைவரும் மாதவன் ரூபாவை நினைத்து சோகமாக இருக்கிறான் என்று முடிவு கட்டிவிட்டனர்.
கல்யாண வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தான் மாதவன்.
காலையில் காரை எடுத்துக் கொண்டு வெளியில் செல்பவன் இரவு 10 மணி தாண்டி தான் வீட்டுக்கு வந்தான். இதையே வழக்கமாக கொண்டிருந்தான் மாதவன். யாரிடமும் பேச கூட அவனுக்கு நேரம் இல்லை. மதுமிதா இந்த விசேஷத்துக்கு வர முடியாமல் போய்விட்டதே என்று நினைத்து அவ்வபோது வருந்தினான்.
அன்று இரவு 9 மணிக்கு ஆறுமுகம், அண்ணாமலை, மலர் மற்றும் பார்வதி இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
“மாதவன் இன்னும் வீட்டுக்கு வரல?” என்று விசாரித்தார் பார்வதி.
“ஆமாமா. அவனுக்கு வேலை இருக்கு. அதனால பத்து மணிக்கு மேல தான் வீட்டுக்கு வருவான்.”
“ஏன்பா அவன் இவ்வளவு வேலை செய்துகிட்டு இருக்கான்?”
“நான் வேணான்னு சொன்னாலும் அவன் கேட்கவே மாட்டேங்குறான். என்னை என்னம்மா பண்ணச் சொல்றீங்க?” என்றான் ஆறுமுகம்.
“சரி விடுப்பா. அவனுக்கு ரூபாவை கல்யாணம் பண்ணிக்க முடியலைனு வருத்தம் இருக்கும். அதனால தான் அவனை அவனே பிஸியா வைத்திருக்கிறான் போல இருக்கு. கொஞ்ச நாளில் எல்லாமே சரியா போயிடும். அவன் இஷ்டத்துக்கு விடுங்க.” என்றார் அண்ணாமலை.
“நீங்க சொல்றதும் சரிதான் அப்பா.” என்றான் ஆறுமுகம்.
“கூடிய சீக்கிரம் நாம மாதவனுக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும். இந்த தடவை நாம எந்த தப்பும் நடக்காமல் எச்சரிக்கையா பெண் பார்க்கணும்.” என்றாள் பார்வதி.
“சும்மாயிருந்த பையனுக்கு ஒரு அழகான பெண்ணை காட்டி இப்போ அந்த பொண்ணு இல்லைன்னு சொன்னா கஷ்டமா தானே இருக்கும்.” என்று மகனுக்காக வருந்தினார் பார்வதி.
“ஆமாம் பார்வதி. முருகன் இனிமேலாவது அவனை சோதிக்காமல் நல்லது செய்யணும்.” என்று வேண்டிக்கொண்டார் அண்ணாமலை.
“ஆமாங்க சீக்கிரமா நல்ல பொண்ணு பாருங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மாதவனுக்கு கல்யாணம் பண்ணிடனும்.” என்றார் பார்வதி.
வேலையை முடித்து விட்டு உள்ளே நுழைந்து கொண்டிருந்த மாதவனின் காதில் அந்த கடைசி வாக்கியம் மட்டும் விழுந்தது. எனினும் விழாத மாதிரி அங்கு வந்தான்.
“என்னமா நீங்க எல்லாரும் எங்க இருக்கீங்க . ஆதி, குழந்தை தூங்கி இருப்பான். சுதாராணி எங்கே?” என்று விசாரித்தான்.
“அவள் சாப்பிட்டுவிட்டு ஆதித்யாவை கூட்டிக்கிட்டு போய் அவ ரூம்ல தூங்கிட்டு இருக்கா.” என்றாள் மலர்.
“ஓ அப்படியா? இந்த விஷயம் எனக்கு தெரியாதே!” என்று மெல்லிய குரலில் மனைவியிடம் கிசுகிசுத்தான் ஆறுமுகம்.
மலரின் முகம் சிவந்ததை அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்டும் காணாதது போல இருந்தனர்.
“சரிடா. நீ சாப்பிடு.” என்று மாதவனை உட்காரவைத்து சாப்பாடு போட்டார் பார்வதி.
அறையில் கணவனின் அணைப்பில் இருந்தாள் மலர். ஆறுமுகம்
“தணிகாசலம் ஏன் திடீர்னு வேற மாப்பிள்ளை பார்த்தார்னு தெரியல. இல்லைனா நம்ம வீட்ல கூடிய சீக்கிரம் இன்னொரு விசேஷம் வந்திருக்கும். நம்ம வீட்டுக்கு இன்னொரு மருமகள் வந்திருப்பாள் இல்லை மலர்?” என்று சிறு வருத்தத்துடன் கேட்டான்.
“ஆமாங்க. ஆனால் நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி மாதவன் இதை நினைச்சு கவலை படுற மாதிரி எனக்கு தெரியல. முதல் முதலில் ரூபாவை பத்தி பேசும்போது அவன் ரூபா மேல ஆர்வம் இல்லாத மாதிரி பேசினான். அப்போ அவனுக்கு வேற ஒரு பொண்ணு மேல ஆர்வம் இருந்த மாதிரி தோணுச்சு.”
“என்ன சொல்ற மலர்?” என்று கேட்டான் ஆறுமுகம்.
“ஆமாங்க எனக்கு அப்படித்தான் தோணுச்சு. ஆனால் அவன் அப்புறம் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு சந்தோஷமா தான் இருந்தான். அப்புறம் இப்படி ஆயிடுச்சு.” என்றாள் மலர் வருத்தமாக.
“சரி விடு மலர். எல்லாம் நல்லதுக்கே .
சுதா ராணிக்கு லீவு விட்டதும் “ என்று கூறியபடி மனைவியின் முகம் நோக்கி குனிந்தான் ஆறுமுகம்.
“ஆமாம் உனக்கு எத்தனை நாள் லீவு ?” என்று சுதாராணியை பார்த்து கேட்டான் மாதவன்.
“அது ஹாஸ்டல் பிரச்சனை தீருவதை பொருத்து தான் முடிவு பண்ணுவாங்க. இப்போதைக்கு நாலு நாள் லீவு விட்டுருக்காங்க. இன்னும் நாலு நாள் எக்ஸ்டெண்ட் பண்றதா பேசிட்டு இருக்காங்க. “
“ரொம்ப நல்லதா போச்சு. நீ இங்கேயே இருந்து கல்யாணத்தை முடிச்சிட்டு பொறுமையா போகலாம். “
“ஆமாம் அண்ணா. ஆனா என்ன வெளியிலே சுத்த முடியல. நீங்க எல்லாரும் ரொம்ப பிசியா இருக்கீங்க.
பிரியா ஆனதுக்கு அப்புறம் நாம் எல்லோரும் சேர்ந்து பிக்னிக் போகலாம் சரியா?” என்றாள்.
“சரி சரி நேரம் கிடைக்கட்டும் செய்யலாம்.” என்றான் மாதவன்.
வீட்டிற்கு முன் பந்தலிட்டு கொண்டிருந்தனர்.
“பெரிய பந்தல் போடுங்க. வீட்டுக்கு முன்னாடி நாற்காலிகள் போட்டு கொஞ்சம் பேரு உட்கார்ர மாதிரி ஏற்பாடு பண்ணுங்க.” என்று பந்தல் போட்டுக் கொண்டிருந்தவரை வேலை வாங்கிக் கொண்டிருந்தான் மாதவன்.
“சரி தம்பி சொன்னபடியே செய்துவிடலாம்.” என்றபடி வேலை செய்து கொண்டிருந்தார் அவர்.
“தம்பி காய்கறி எல்லாம் வந்துடுச்சு. எங்க எடுத்து வைக்கிறது?” என்று காய்கறி கூடையுடன் வந்து கொண்டிருந்த மூன்று பேர் கேட்டனர்.
“தோட்டத்தில் கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள்.” என்று அவர்களுக்கு இடம் சொல்லிக்கொண்டிருந்தான் ஆறுமுகம்.
வீட்டு வாசலில் மேடை போடப்பட்டு அதற்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். சுற்றிலும் எல்லோரும் உட்காருவதற்கு தரையில் கம்பளம் விரித்து ஏற்பாடு செய்திருந்தனர்.
கூடை கூடையாக பூ வந்து இறங்கிக் கொண்டிருந்தது.
வீடு முழுக்க சொந்தக்காரர்கள் நிரம்பி இருந்தனர்.
வீட்டு தூண்களில் சாமந்தி பூக்கள் மாலையாக கோர்த்து சுத்தி அலங்கரிக்கப்பட்டிருந்தன.
உறவினர்கள் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தனர்.
“சுதா ஆதித்யாவை தூங்க வைத்து விட்டாயா?” என்று கேட்டாள் மலர்.
“தூங்க வச்சிட்டேன். நானும் சாப்பிட்டு தூங்க போறேன்.” என்றாள் சுதாராணி.
“சரி வா சாப்பிடலாம்.”. என்று அழைத்தாள் மலர்
வீட்டு பெண்கள் மூவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது அண்ணாமலையின் கைபேசி ஒலித்தது. அவர் எடுத்து பேசினார்.
“அப்படியா இன்னும் 15 நிமிஷத்துல ஊருக்கு வந்து விடுவீர்களா? சரி சரி நான் என்னோட காரை அனுப்புறேன். கரு நீல கலர் பியட் கார் வரும்.” என்று கூறிவிட்டு டிரைவரை தேடினார் அண்ணாமலை.
“யாரை அப்பா தேடுகிறீர்கள்?” என்று கேட்டான் ஆறுமுகம்.
“கார் இங்கே இருக்கு. டிரைவரை காணோம். அவனை தான் தேடிக்கிட்டு இருக்கிறேன். எங்க போனான்?” என்று அவனிடம் கேட்டார் அண்ணாமலை.
“அவன் கடை கடைக்கு போய் இருக்கான். வர்றதுக்கு ஒரு மணி நேரம் ஆகும்.” என்றான் ஆறுமுகம்.
\
“அப்படியா என்னோட பிரண்டு வந்துருக்கான். அவனுக்கு நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு வழி தெரியாது. நான் வேற கார் அனுப்புறேன்னு சொல்லிட்டேன். இப்ப என்ன பண்றது?” என்று சத்தமாக யோசித்தார் அண்ணாமலை.
“அதுக்கு என்னப்? நான் போய் கூட்டிட்டு வரேன்.” என்று ஆறுமுகம் கூறும் பொழுதே
“காய்கறி கூடை ஒன்னு மிஸ் ஆகுதுன்னு சமையல்காரர் கேட்கிறார்.” என்று கூறிக்கொண்டே அங்கு வந்தான் மாதவன்.