நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“இது எத்தனை சொல்லு.” என்று இரு விரல்களை காட்டி கேட்டான் ஆதித்யா.
“தெரியல டா” என்று பதில் கூறினான் பக்கத்து வீட்டு பையன் மகேஷ்.
“ஆதி நான் நல்லா தான் துணியை அவன் கண்ணில் கட்டி இருக்கேன். அவனுக்கு தெரியாதுடா” என்று கூறினாள் சுதாராணி.
“ஓகே அத்தை. நாம விளையாடலாம்.” என்று ஆதித்யா மகேஷ் சுதா ராணி மூவரும் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர்.
மகேஷ் கண்களில் துணி கட்டப்பட்டிருந்தது. மகேஷ் பக்கத்து வீட்டு 11 வயது பையன்.
சுதாராணி மகேஷ் முன், பின் கைக் தட்டி அவன் தோளை பின்புறமாக தட்டி விட்டு ஓடியபடி விளையாடிக்கொண்டிருந்தாள்.
கண்கள் கட்டியிருக்க மகேஷ் அந்த பக்கம் இந்த பக்கம் திரும்பி கைகளை நீட்டி மற்றவர்களை தொட முயற்சித்துக் தோற்றுக் கொண்டிருந்தான்.
அவனை பார்த்த ஆதித்யா கைதட்டி சிரித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தான்.
அதே நேரம் மாதவன் உள்ளே நுழைந்தான்.
மாதவனை பார்த்து ஆதித்யா அவனிடம் ஓடிவந்து
“சித்தப்பா நீங்களும் வாங்க விளையாடலாம்.” என்று கூப்பிட்டான்.
“சரி வாடா போலாம்.” என்று அவனும் விளையாட்டில் சேர்ந்து கொண்டான்.
இவர்களைப் பார்த்த பார்வதி
“டேய் மாதவா ஏழு கழுதை வயசு ஆகுது என்ன குழந்தைகள்கூட விளையாடிகிட்டு இருக்க?”என்று கேட்டார்
“இதே கேள்வியை உங்க பொண்ணு விளையாடும்போது கேட்டீங்களா?” என்று திரும்ப கேட்டான் அவன்.
“அவள் இந்த வீட்டு கடைக்குட்டி. அவளே சென்னையில் காலேஜில் தங்கி படிக்கிறாள். இப்படி லீவு கிடைக்கும் போதுதான் ஊருக்கு வர முடியும். அப்படி வர்ற பொண்ணு ஜாலியா இருக்கட்டும்னு விட்டுவிடுவேன். நீ அப்படியா கல்யாணம் பண்ண வேண்டிய வயசு ஆகுது. இங்கே வா. நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்று அழைத்தார்.
“இந்த வீட்ல நான் விளையாடினா யாருக்கும் பொறுக்காதே.” என்று சலித்த படி அவரிடம் வந்தான்.
“அப்புறம் ரூபா பொண்ணு விஷயம் என்ன ஆச்சு?” என்று அவர் கேட்க ஆரம்பித்ததும்
“எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.” என்று கூறி நழுவ முயற்சிதான்.
“ட்ரிங் ட்ரிங்” என்று வீட்டு தொலைபேசி ஒலித்தது. போங்க போய் போனை எடுங்க. “என்று மாதவன் அவரை திசை திருப்பினான்.
அவரும் சென்று தொலைபேசியை எடுத்து காதுக்குக் கொடுத்தார்.
அவர் வாயெல்லாம் பல்லாக பேசும்போதே அவர் ரூபா சம்மந்தப்பட்ட யாரிடமோ பேசுகிறார் என்று புரிந்துகொண்டான் மாதவன்.
எனவே “அம்மா நான் கடைக்கு கிளம்புறேன்.” என்று கூறியபடியே மிக வேகமாக வெளியே நடந்தான்.
ஆனால் அதற்குள் பார்வதி “டேய் மாதவா ரூபா அப்பாதான் பேசுகிறார். உன்கிட்ட ஏதோ முக்கியமான விஷயம் கேட்கணுமா. இங்க வா.” என்று அவனைத் தடுத்தார்.
மாதவனுக்கு ஏதோ பொறி தட்ட
“சரியம்மா” என்றபடி தொலைபேசியை வாங்கினான்.
“சொல்லுங்க” என்று கேட்டான்.
“தம்பி ரூபா ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி உங்களை பார்க்க வர்றதா எங்க கிட்ட சொல்லிட்டு கிளம்பி போனா. ஆனால் இன்னும் வீட்டுக்கு திரும்பல. நீங்க ரெண்டு பேரும் இன்னிக்கு மீட் பண்ணிங்களா?” என்று விசாரித்தார்.
மாதவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு
“ஆமாம். ரூபா என்னை பார்க்க வருவதா சொல்லி இருந்தா. ஆனால் ஏதோ பிரென்ட் வீட்டுக்கு போயிட்டு ஒரு மணி நேரம் கழித்து வருவதா சொன்னா. அதனாலதான் நான் கொஞ்சம் லேட்டா வீட்டில இருந்து கிளம்புறேன். இப்போ அவளை பார்க்க கோயிலுக்கு தான் கிளம்பிட்டு இருந்தேன்.” என்று கூறி சமாளித்தான்.
“ஓ அப்படியா தம்பி. நா என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.” என்று நிம்மதி பெருமூச்சு விட்டார்.
அவர் “சரி தம்பி அவளை பார்த்ததும் சீக்கிரம் வீட்டுக்கு வரச்சொல்லி சொல்லுங்க.” என்று விட்டு போனை வைத்தார்.
மாதவனுக்கு சிறிது குற்ற உணர்ச்சியாக இருந்தது. எனினும் ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைக்கப் போகிறோம் என்ற எண்ணம் அந்த குற்ற உணர்ச்சியை மறக்கடித்தது .
இனியும் வீட்டில் இருந்தால் யாராவது ஏதாவது கேள்வி கேட்பர் என்று முடிவுக்கு வந்தவன் வீட்டை விட்டு வெளியே வந்தான்.
அவனுடைய கைபேசி ஒலித்தது. எடுத்தான்.
“நான் ரூபா பேசுறேன் நான் வீட்ல இருந்து கிளம்பிட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் என் லவ்வர் வீட்டுக்கு போயிடுவேன். அதுக்கப்புறம் நான் எங்க அப்பாவுக்கு மெசேஜ் பண்றேன். அதுவரைக்கும் உங்களுக்கு போன் வந்தால் ப்ளீஸ் எடுக்காதீங்க. நானே உங்களுக்கு இந்த நம்பர்ல இருந்து போன் பண்றேன். என்னோட போனை ஆப் பண்ணி வச்சிருக்கேன். நீங்க பண்ற எல்லா உதவிக்கும் ரொம்ப தேங்க்ஸ்.” என்று கூறிவிட்டு தொலைபேசியை வைத்தாள்.
மாதவன் வெளியில் சிறிது நேரம் சுற்றினான். ஒரு மணி நேரம் கழித்து ரூபா அவனை கை பேசியில் அழைத்தாள்.
“நான் என் லவ்வர் வீட்டுக்கு வந்துட்டேன். இப்போ நீங்க எங்க அப்பாவுக்கு போன் பண்ணி நான் உங்களை பார்க்க வரவே இல்லைனு சொல்லிடுங்க. நான் எங்க அப்பாவுக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன். அதுக்கப்புறம் நடக்கிறதை பார்க்கலாம்.” என்று கூறவும் மாதவன் ரூபாவின் தந்தையை தொலைபேசியில் அழைத்து விவரத்தை கூறினான்.
இதனைக் கேட்ட அவர் அதிர்ச்சியானார்.
“என்ன தம்பி சொல்றீங்க? இவ்வளவு நேரமா அவள் உங்களை பார்க்க வரலையா?” என்று பதட்டத்துடனும் பயத்துடனும் கேட்டார்.
“ஆமாம் சார்.” என்று மாதவன் ஏதோ கூற ஆரம்பிக்கவும்
“சரி தம்பி எனக்கு ஏதோ அவ கிட்ட இருந்து மெசேஜ் வருது. நான் பாத்துட்டு தேவைப்பட்டா உங்களை கூப்பிடுகிறேன். “என்றுவிட்டு தொடர்பை துண்டித்தார் தணிகாசலம்.
அவரது கைபேசியில் வந்த குறுஞ்செய்தியை படித்தார். “அப்பா நானும் நம்ம தூரத்து சொந்தக்காரரான ரவிக்குமாரும் லவ் பண்ணிட்டு இருக்கோம். இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சா நீங்கள் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டீங்கன்னு நான் நினைச்சேன். அதனால உங்களுக்கு இந்த விஷயம் தெரிய வரதுக்கு முன்னாடியே நான் வீட்டை விட்டுஓடி வந்துட்டேன். ஒருவேளை உங்களுக்கு தெரியவந்தால் என்னை நீங்க வெளியே விட மாட்டீங்க. அதனாலதான் இங்கே வந்து விட்டு சொல்றேன். எனக்கு தெரியும் உங்களுக்கு அவனை பிடிக்காது. ஆனாலும் எனக்காக நீங்க அவனை ஏத்துக்கணும். ப்ளீஸ் அப்பா. அப்படி உங்களுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லைனா எங்களை அப்படியே விட்டு விடுங்கள். இல்லை உங்களுக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்னா நாளைக்கு இந்த வீட்டுக்கு வந்து நிச்சயம் பண்ணுங்க. இதில் இரண்டாவது முடிவை நீங்கள் எடுத்தால் நான் சந்தோஷப்படுவேன். ப்ளீஸ் அப்பா.” என்று முடித்திருந்தாள்.
இந்த குறுஞ்செய்தியை படித்த தணிகாசலம் முதலில் கோபம் கொண்டார். பிறகு மனைவியின் பேச்சில் இறங்கி அவர் மகள் சொன்னபடியே அந்த வீட்டிற்கு சென்று நிச்சயம் செய்துவிட்டு வந்தார்.
இந்த விஷயத்தை பார்வதியிடம் நேரடியாக சொல்ல தயங்கி பெரியவர் ஒருவர் மூலம் தெரியப்படுத்தினார்.
இதனைக் கேட்டு வீடு சோகமயமானது. மாதவன் வீட்டுக்குள் நுழைந்தான். வழக்கத்தைவிட வீடு அமைதியாகவும் வீட்டில் இருப்பவர் முகம் சோகமாகவும் இருப்பதை கண்டான்.
பார்வதி மற்றவர்களை பார்த்து
“நீங்க யாரும் எதுவும் சொல்ல வேண்டாம். நான் அவன்கிட்ட சொல்லிக்கிறேன்.” என்று மெல்லிய குரலில் கூறினார்.
“சரி பார்வதி. நீயே பார்த்து பக்குவமா சொல்லிடு.” என்று கூறிவிட்டு சென்றார் அண்ணாமலை.
“சரிங்க அத்தை. நான் ஆதித்யாவை கூட்டிட்டு போறேன். அவன் ஏதாவது உலர போகிறான்.” என்று அவனை கை பிடித்து அழைத்து சென்றாள் மலர்.
ஆறுமுகம் “சுதாராணி வா என்கூட.” என்று அவளையும் அங்கிருந்து அழைத்துச் சென்றான்.
மாதவனிடம் வந்தார் பார்வதி.
“ மாதவா என் கூட வா.” என்று அவனை அழைத்துக்கொண்டு தோட்டத்தில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலுக்கு சென்றார் பார்வதி.
அவர் அந்தக் கட்டிலில் அமர்ந்து மாதவனயும் அமர சொன்னார்.
“என்னமா வீட்டில எல்லாரோட முகமும் ரொம்ப சோகமா இருக்கு. என்ன விஷயம்?” என்று சிறு பதட்டத்துடன் கேட்டான் மாதவன்.
“அது அதுவந்து மாதவா, அந்த ரூபா பொண்ணு இருக்கு இல்ல” என்று தயங்கி தயங்கி ஆரம்பித்தவுடன் அவனுக்கு புரிந்து போயிற்று.
“ஓ இதுதான் விஷயம்.” என்று ஓரளவு நிம்மதி ஆனது மனது.
“நான் இப்போ நான் ஒரு விஷயத்தை சொல்ல போகிறேன். அதைக் கேட்டு நீ கவலைப்பட கூடாது.” என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“சொல்லுங்கம்மா நான் கவலைப்பட மாட்டேன். சொல்லுங்க” என்று அவருக்கு தைரியம் கூறினான் மாதவன்.
“அந்த ரூபா பொண்ணுக்கு நம்ம குடும்பத்துக்கு வர்ர கொடுப்பனை இல்லை. அவங்க அப்பா திடீர்னு வேற ஒரு சொந்தக்கார பையனுக்கு அந்த பொண்ணை நிச்சயம் பண்ணிட்டாராம். அந்த பொண்ணுக்கும் இந்த கல்யாணத்தில் இஷ்டமாம்.” என்று தயங்கி தயங்கி கூறி முடித்தார் பார்வதி.
மாதவனுக்கு ரூபா மூலம் இந்த விஷயம் ஏற்கனவே தெரியும். எனினும் அதனை அவன் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
“ஓ அப்படியா சொந்தக்கார பையனா? அவங்க அப்பாவுக்கு பிடிச்சுப் போச்சு, சரி அவர் பொண்ணு அவர் இஷ்டம். அந்த பொண்ணுக்கும் இதில் விருப்பம் தான்னு தெரியும் போது நாம ஒதுங்கி விடுவது தான் நல்லது. எனக்கு எந்த கவலையும் இல்லை அம்மா. என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க.” என்று பெருந்தன்மையாக கூறுவது போல பேசினான் மாதவன்.