“அப்படி எல்லாம் இருக்காது. நாம வேணா மேடைப் பக்கம் போகாம இப்படி உட்கார்ந்துகிட்டு இருக்கலாம்.” என்றார் வள்ளி.
“சரி வள்ளி.” என்று அவரையும் அழைத்துக்கொண்டு சிதம்பரம் அந்தப் பெரிய வீட்டின் ஓரத்தில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்.
பெற்றோர்களை தேடி கொண்டிருந்த மதுமிதா அவர்கள் ஓரமாக உட்கார்ந்து இருப்பதை பார்த்து அவரிடம் வந்தாள்.
“என்ன அம்மா? இங்க வந்து தனியா உட்கார்ந்து கிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“அது ஒன்னும் இல்லைம்மா. உன்னோட தாத்தா பாட்டி கல்யாணத்துக்கு வந்து இருக்காங்க. அவங்க என்னை பார்த்தால் அவங்களுக்கு தர்ம சங்கடமா இருக்கும். அதனாலதான் நாங்க இங்க வந்து உட்கார்ந்து இருக்கிறோம்.” என்றார்.
“என் தாத்தா பாட்டியா? எங்க?” என்று கேட்டாள் ஆர்வமாக மதுமிதா.
“அதோ” என்று பட்டு வேஷ்டி சட்டையில் தலைமுடி முழுவதும் நரைத்துப் போய் இருந்த ஒரு பெரியவரை காண்பித்தார். அவர் பக்கத்தில் ஒரு பாட்டியும் இருந்தார் .
“ஓ இவங்கதானா? நான் போய் பேசிட்டு வரேன்.” என்று சொன்னவள்
“மது மது” என்று தந்தை கூப்பிடுவதை பொருட்படுத்தாமல் அவர்களிடம் வந்தாள்.
“ஹாய் பாட்டி.” என்றாள் அந்த பாட்டியைப் பார்த்து.
அவர் மதுமிதாவை பார்த்து
“யாரு மா நீ? என்ன வேணும்?” என்று ஆச்சரியமாக கேட்டார்.
“எனக்கு நீங்க தான் வேணும். என் பெயர் மதுமிதா. என் அப்பா பேரு சிதம்பரம். அம்மா பேரு வள்ளி. அண்ணன் பேரு மதுசுதன்.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
அவருக்கு புரிந்து போயிற்று என்பதை அவரது முகமலர்ச்சி காட்டியது.
“என் பேத்தி மதுமிதாவா நீ?” என்றபடி அவரிடம் நெருங்கிய அவரை “ஈஸ்வரி” என்ற அவரின் கணவரின் குரல் தடுத்தது.
“இல்லைங்க. இவ நம்ம பேத்தி.” என்றார் ஈஸ்வரி கண்கள் கலங்கி.
“இருக்கட்டும். என்னை மதிக்காமல் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கொண்டவனோட பொண்ணு கிட்ட என்ன பேச்சு உனக்கு?” என்று மனைவியை அதட்டினார்.
அவரது கோபத்தை கண்ட மதுமிதா
“ஆமாம் நீங்க சொன்னது உண்மைதான். ஆனால் அப்பா எதற்காக அப்படி பண்ணாங்க? நீங்க காதல் கல்யாணத்துக்கு ஒத்துக்கல. அதனால தானே?” என்றாள் அவரைப்பார்த்து.
அவர் மதுமிதாவை பார்த்து முறைத்தார். ஆனால் பேசவில்லை.
ஈஸ்வரி அவளைப்பார்த்து “உஷ் உஷ்” இன்று வாய் மீது விரல் வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார்.
“என்ன பாட்டி? நான் எதுக்கு அமைதியா இருக்கணும்? எனக்கு தப்புன்னு பட்டா நான் கேட்பேன்.” என்றாள் தைரியமாக.
“ எப்படி பேசுறா பாரு .”என்று கண்களாலேயே மனைவி ஈஸ்வரியை பார்த்து கேட்டார் முருகையன்.
“சின்ன பொண்ணு தானே.” என்று மெல்லிய குரலில் அவருக்கு பதில் கொடுத்தார் ஈஸ்வரி.
“இப்போ இவள் இந்த இடத்தை விட்டு போகிறாளா, இல்லை நான் இந்த இடத்தை விட்டு போகட்டுமா? கேட்டு சொல்லு ஈஸ்வரி.” என்றார் மனைவியை பார்த்து முறைத்து.
“மது கண்ணு. நீ இப்போ போ. அப்புறம் பார்க்கலாம்.” என்றார் ரகசியமாக அவளிடம்.
“நீங்க சொல்றதனால போறேன். திரும்ப கண்டிப்பா வந்து பேசுவேன்.” என்று சொல்லிவிட்டு சென்றாள் மதுமிதா.
“ பேத்தி எவ்வளவு அழகா வளர்ந்து இருக்கா பாருங்க. சிதம்பரம் எங்கே?” என்று பார்வையாலேயே அந்த வீட்டில் மகனை தேடினார்.
அங்கு ஒரு இடத்தில் தனியாக சிதம்பரம் வள்ளியுடன் உட்கார்ந்திருப்பதை பார்த்து கண்ணீர் வடித்தார்.
“என் பையன் என் கண்ணெதிரே இருக்கிறான். ஆனால் என்னால பேச முடியல.” என்று புலம்பினார்.
“இவன் இங்கே வருவான்னு தெரிந்திருந்தால் நான் இந்த கல்யாணத்துக்கு வந்து இருக்கமாட்டேன். சீக்கிரம் வா. இவங்களை வாழ்த்திவிட்டு நாம கிளம்பலாம்” என்றார் முருகையன் கோபமாக.
இங்கு நடந்ததை கவனித்துக் கொண்டிருந்தான் மாதவன். மதுமிதாவின் தைரியத்தை கண்டு ரசித்தான். முருகையன் சொன்னபடியே அவர்களை வாழ்த்தி விட்டு வீட்டு வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
மாதவன் அவரிடம் ஓடி வந்து
“தாத்தா நீங்க சாப்பிடவே இல்லையே. வாங்க சாப்பிடலாம்.” என்று கூப்பிட்டான்”.
“இல்லைப்பா. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.” என்று அவர் நழுவ முயற்சித்தார்.
“அதெல்லாம் எந்த காரணமும் சொல்லக்கூடாது. கல்யாண வீட்டுக்கு வந்துட்டு இப்படி சாப்பிடாமல் போவாங்களா? அப்பாவுக்கு தெரிஞ்சா என்னை தான் திட்டுவாரு.” என்று அவரை கையோடு அழைத்துக்கொண்டு சாப்பிடும் இடத்திற்கு சென்றான் மாதவன்.
இருவரையும் பார்த்து பார்த்து உபசரித்தான். சாப்பிட்டு முடித்த பிறகு கை கழுவிக் கொண்டிருந்தார் ஈஸ்வரி.
“ஹாய் பாட்டி” என்று மீண்டும் அவரிடம் வந்தாள் மதுமிதா.
அவளைப் பார்த்ததும் கணவனை தேடினார் ஈஸ்வரி. அவர் பக்கத்தில் இல்லை என்றதும் பேத்தியிடம் திரும்பினார்.
“ஆமாம் உன் அண்ணன் எங்கே?” என்று கேட்டார் ஆர்வமாக.
“அவன் இன்னிக்கு பங்ஷனுக்கு வரல.”
“உன்னை பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். எவ்வளவு அழகா வளர்ந்திருக்க. உன் அண்ணன் கூட உன்னை மாதிரி வளர்ந்து இருப்பான் இல்லை?” என்று கேட்டார்.
“அவனை பார்க்கணும்னு உங்களுக்கு ஆசையா இருக்கா?” என்று அவர் கண்களில் தெரிந்த ஆர்வத்தை பார்த்து கேட்டாள் மதுமிதா.
“ஆமாம். ஆனால் அவன்தான் வரலையே.”
“அவன் வரலைன்னா என்ன? இதோ என்கிட்ட அவன் போட்டோ இருக்கு.” என்று அவள் தன் கைபேசியில் இருந்த மதுசுதன் படத்தினை காண்பித்தாள்.
“ரொம்ப நல்லா இருக்கான் என் பேரன். அப்படியே வள்ளி மாதிரியே இருக்கான். நீ அப்பா மாதிரி இருக்க. அப்பா மாதிரி பொண்ணும் அம்மா மாதிரி பையனும் பொறந்தா அதிர்ஷ்டம்னு சொல்வாங்க. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா நல்லபடியா இருக்கணும்.” என்று வாழ்த்தினார். கண்களில் நீர் வழிந்தது.
“என்ன பாட்டி போட்டோவுல பார்த்ததுக்கே இப்படி பீல் பண்றீங்க. ஒருநாள் நாங்க உங்க வீட்டுக்கு வருகிறோம். அப்போ நேரிலேயே பார்த்து பேசலாம்.” என்றாள் மதுமிதா.
“ஐயோ வேற வினையே வேணாம். உங்க தாத்தா உங்க ரெண்டு பேரையும் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவார்.”
“அப்படியா? நான் கண்டிப்பா ஒரு நாள் உங்க வீட்டுக்கு வருவேன். அப்போ தாத்தா என் கழுத்தை பிடித்து தள்ளுகிறாரானு பார்க்கலாம்.” என்றாள் மதுமிதா உறுதியாக.
“நீ செய்தாலும் செய்வ. சரி உங்க தாத்தா வர்ற மாதிரி தெரியுது. நான் இங்க இருந்து கிளம்பறேன்.” என்று அவளிடம் இருந்து சென்றார்.
சிறிது சிறிதாக கூட்டம் குறைந்து கொண்டிருந்தது. மதிய உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட்ட பிறகு இரவு உணவின்போது ஒரு சில உறவினர்கள் மற்றும் வீட்டு மனிதர்கள் மட்டுமே மிச்சம் இருந்தனர்.
மற்ற உறவினர்கள் சாப்பிட்டு முடித்து உறங்க சென்றிருந்தனர்.
மலர் “இன்னிக்கு எல்லோருக்கும் நைட்டு இட்லியும் மதியானம் செய்த சாம்பாரும், வடை பாயாசமும் இருக்கு. சாப்பிடலாம் வாங்க.” என்று கூப்பிட்டாள்.
ஆறுமுகம், மலர், பார்வதி, அண்ணாமலை, சுதாராணி ,மாதவன் சிதம்பரம், வள்ளி, மதுமிதா இவர்கள் மட்டும் அந்த பெரிய சமையல் அறையில் கூடியிருந்தனர்.
“டேபிள் சேர் எல்லாம் எங்க போச்சுன்னு தெரியல. அதனால மூணு டேபிள் சேர் மட்டும் எடுத்துட்டு வா மாதவா. இவங்களுக்கு டேபிள் சேர் போட்டுட்டு நாம தரையில் உட்கார்ந்துக்கலாம்.” என்றாள் மலர்.
“எங்களுக்கு டேபிள் சேர் எதுவும் வேண்டாம். நாங்களும் தரையிலேயே உட்கார்ந்து சாப்பிடுவோம்.” என்று கூறியவர் தரையில் உட்கார்ந்தார் சிதம்பரம்.
அவரை பார்த்து வள்ளியும் மதுமிதாவும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்தனர்.
அனைவரும் உட்கார்ந்து விட மதுமிதா பக்கத்தில் ஒரு இடம் காலியாக இருந்தது. மாதவன் மட்டும் உட்காரவில்லை. அவனுக்கு அவள் பக்கத்தில் உட்கார்ந்தால் திரும்பவும் திருவிழா பற்றி கேட்டு விடுவாளோ?” என்று பயந்தான்.
“என்ன தம்பி நீங்க மட்டும் நிக்கறீங்க? உங்களுக்கு இடம் இல்லையா? பரவாயில்லை மதுமிதா பக்கத்துல உட்காருங்க.” என்றார் சிதம்பரம்.
ஆறுமுகம் மலர், பார்வதி அண்ணாமலை, சிதம்பரம் வள்ளி என்று ஜோடி ஜோடியாக உட்கார்ந்து இருக்க மாதவன் மதுமிதா பக்கத்தில் உட்கார்ந்து ஜோடி சேர்ந்தான்.
இருவரையும் பக்கத்து பக்கத்தில் பார்த்த பார்வதி அண்ணாமலை இடம்
“இந்த பொண்ணு மாதவனுக்கு நல்ல பொருத்தமா இருக்கும் போல இருக்கே.” என்று மெல்லிய குரலில் கூறினார்.
“ஆமாம் பார்வதி. நானும் அதை தான் பார்த்துகிட்டு இருக்கேன். ஜோடி பொருத்தம் அருமை.” என்றார் சிதம்பரம்.
வள்ளிக்கும் அதே நினைப்புதான். இதனை பெரியவர்கள் முகத்தை பார்த்து ஓரளவு கணித்து இருந்தான் மாதவன்.
ஆனால் மதுமிதா, இவை எதையும் அறியாமல் ஆதித்யா உடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.
ஒரு பெண்மணி பரிமாறி அனைவரும் சாப்பிட்டனர்.