வீட்டில் இருந்த பெரியவர்களின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியில் கொஞ்சம் குழம்பித்தான் போனான் விஜய். கனகவேலின் வருகை அப்படி ஒரு அதிர்வை அந்த வீட்டில் உருவாக்கியிருந்தது. ரத்னவேல் தாத்தாவின் முகத்தில் ஈயாடவில்லை. சுந்தர சேகருக்கு வீட்டில் இருந்த நிலைமை எல்லாம் தலை கீழாக மாறப் போகிறது போன்ற எண்ணம்.
கனகவேலிற்கு இந்த தயக்கம் இருந்ததா, இல்லையா என்று தெரியவில்லை. நடை கொஞ்சம் தயங்கினார் போன்று இருந்ததோ தெரியவில்லை. உடன் அழைத்து வந்த உதவியாளரை வெளியே விட்டு விட்டு அவர் மட்டும் உள்ளே வந்தார்.
முன்னால் எப்படியோ, ஆனால் இப்போது தொழிற்துறை அமைச்சர். அவரின் கட்சி வேட்டியும், சட்டையும் அவரை மிடுக்காய் காட்ட, செய்த பிழைகள் யாவும் அவரின் முகத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டது.
“அம்மா யாரு இவரு..? தெலுங்கு பட வில்லன் மாதிரி இருக்காரு..?” என்று பவித்ரா கேட்டு வைக்க, அவளை முறைத்த நீலாவதி,
“நீ உள்ள போ பவி..!” என்றார்.
“இருங்கம்மா..! வந்தவர்கிட்ட ரெண்டு வார்த்தை பேசிட்டு போகட்டும். இல்லைன்னா கேள்வி கேட்டே கொன்னுடுவா…!” என்று அருண் சொல்ல, அவனையும் முறைத்தார் நீலாவதி.
“அங்கயே நில்லு…! யார் வீட்டுக்குள்ள யாரு வரது..?” என்றார் ரத்னவேல் கர்ஜனையான குரலில். ஆனால் அவரின் பேச்சு எல்லாம் கனகவேலிடம் எடுபடவில்லை.
அமைதியாக வந்தவர், யாரும் சொல்லாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தார். சுற்றி அனைவரையும் பார்த்தவரின் கண்கள், விஜய்யிடம் வந்து நிலைபெற்றது.
“மரியாதையா வெளிய போடா..!” என்றார் ரத்னவேல் மீண்டும்.
“நீங்க மினிஸ்டர் கனகவேல் தானே..?” என்றான் விஜய். அவனின் உறுதியான குரலைக் கண்டு ஒரு நிமிடம் புருவம் சுருக்கினார் கனகவேல்.
“ஆமா தம்பி..!” என்றவர், ரத்னவேலிடம் திரும்பி…
“தம்பிக்குத் தெரிஞ்சிருக்கு..! உங்களுக்குத் தெரியலையே…?” என்றார் கொஞ்சம் நக்கலான குரலில்.
“என்ன..? நான் உங்க வீட்டுக்கு வந்து பேசிட்டு வந்தேன்னு..இப்போ எங்க வீட்டுக்கு வந்திருக்கிங்களா..?” என்றான் பிரவீன் கோபமாக.
“கொஞ்சம் நிதானமா பேசு தம்பி..! நீ என் வீட்டுக்கு வந்தப்ப, நான் நல்லாத்தான பேசுனேன்..!” என்றார் கனகவேல்.
பிரவீன் பல்லைக் கடித்தபடி முறைக்க,
“பிரவீண், நீ எப்போ அவன் வீட்டுக்கு போன..?” என்றார் ரத்னவேல் கோபமாக.
“இவரு வீட்டுக்கு நான் ஒன்னும் விருந்து சாப்பிட போகலை தாத்தா. நம்ம விஜய்யோட பிஸ்னஸ்ல இவரோட குறுக்கீடு இருக்குற மாதிரி தெரிஞ்சது. அதான் கொஞ்சம் சொல்லி வைக்கலாம்ன்னு போனேன்..!” என்றான் பிரவீண்.
இவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருப்பது தெரியாமல், பவித்ரா ஒரு செம்பில் தண்ணீரைக் கொண்டு வந்து கனகவேலிடம் நீட்ட, சிரிப்புடன் அதை வாங்கிக் கொண்டார்.
“இப்ப உன்னை யாரு இதை கொண்டு வர சொன்னா..?” என்ற பிரவீண், பவியை முறைக்க,
“வீட்டுக்கு வந்தவங்களை எப்படி உபசரிக்கனும்ன்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கு. இவ்வளவு வளர்ந்தும் தம்பி உங்களுக்குத் தெரியலையே…?” என்றார் கனகவேல்.
“யாரை எங்க வைக்கணும்ன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். நீங்க கிளாஸ் எடுக்கத் தேவையில்லை. இப்ப நீங்களா எந்திருச்சு வெளிய போறிங்களா இல்லையா..?” என்று பிரவீன் கத்த,
“பிரவீண்..!” என்றான் விஜய். அவனுடைய அழைப்பில் திரும்பி பிரவீண் விஜய்யைப் பார்க்க, அவன் கண்கள் சொன்ன பாஷையில் அமைதியானான். விஜய்யின் பார்வை வீட்டில் இருந்த அனைவரையும் எடை போட்டது. அவன் கணிப்பு சரியாக இருந்தால், இதற்கு முன் தனக்கும் அவரைத் தெரிந்திருக்க வேண்டும் என்றே எண்ணினான்.
“நீங்க உட்காருங்க தாத்தா..!” என்றவன், அவர் அமர்ந்தவுடன், அருகில் இருந்த சோபாவில் தானும் அமர்ந்தான். அவனின் பார்வையையும், நடத்தையையும் கனகவேலின் கண்கள் குறித்துக் கொண்டது.
“இவன் ஏன் இப்படி நடந்துக்குறான்..? திவ்யா பண்ணி வச்ச வேலை தெரிஞ்சிடுச்சா ?” என்று எண்ணியவர்,
“நடந்த எதுலயும் நாம நேரடியா சம்பந்தப்படலை. அதானால என்னைப் பத்தி சந்தேகம் வரலைப் போல..?” என்று எண்ணியவர்,
“நான் இங்க, உங்க கூட பிரச்சனை பண்ண வரலை..! ஒரு நல்ல விஷயம் பேசிட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்..!” என்றார் கனகவேல்.
“விஷயம் என்னன்னு தெரிஞ்சா தான், அது நல்ல விஷயமா இல்லை நல்ல ‘விஷமான்னு ‘ தெரியும்..!” என்றார் ரத்னவேல் தாத்தா.
அவரின் பேச்சில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பதைப் போல இருந்தது விஷ்வ துளசிக்கு.
“போனதை எல்லாம் மறந்துடுவோம்..! சந்திர சேகர் இல்லையா..?” என்றார் கனகவேல்.
“அப்பாக்கு உடம்பு சரியில்லை. தாத்தாகிட்டையே பேசலாம் தப்பில்லை..!” என்றான் விஜய்.
“இந்த ஆள்கிட்ட பேசுறது தான வில்லங்கமே..” என்று மனதில் நினைத்த கனகவேல்,
“என் பொண்ணு திவ்யாவுக்கு உங்க பேரன் விஜய்யை கேட்டு வந்திருக்கேன்..!” என்றார் கனகவேல். அதைக் கேட்டு ஒரு நிமிடம் புரியாமல் முழித்த அனைவருக்கும் அவர் மீண்டும் சொல்ல,
“யாருக்கு யாருடா மாப்பிள்ளை. உனக்கு எவ்வளவு தெனாவெட்டு இருந்தா, என் வீட்டுப் படியேறி இதைப் பேச வந்திருப்ப..?” என்றார் ரத்னவேல்.
“இதைப் பேச வீட்டுப் படியேறித் தான ஆகணும்..!” என்றார் கனகவேல்.
“கனவுல கூட நடக்காது. நீ கிளம்பலாம்..!” என்றார் சுந்தர சேகர்.
“நான் உன் பையனை கேட்கலை சுந்தரு. உங்க அண்ணன் பையனைத் தான் கேட்குறேன்..!” என்றார் நக்கலாக.
“ரெண்டு பேருமே எனக்குப் பையன் தான்..! என் முடிவு தான் இங்க இருக்குற எல்லாரோட முடிவும். நீ கிளம்பலாம்..!” என்றார் மீண்டும்.
“ஒரு பார்ட்டில திவ்யா விஜய்யைப் பார்த்திருக்கா. பார்த்த உடனே பிடிச்சிடுச்சு. நேரா என்கிட்டே வந்து சொன்னா. நானும் முதல்ல இதெல்லாம் தேவையான்னு யோசிச்சு அவளை சத்தம் போட்டேன். ஆனா, அவ பிடிவாதமா இவன் தான் வேணும்ன்னு சொல்லும் போது, என்னால வேற ஒன்னும் பண்ண முடியலை..” என்றார்.
“ஒன்னும் செய்ய முடியாதுன்னா, நாலு அறை விடு. இங்க மாப்பிள்ளை விற்பனை செய்யப்படும் அப்படின்னு போர்டா எழுதியிருக்கு..!” என்றான் பிரவீண்.
“நடந்தது பெரிய தப்புத்தான். அதுக்காக நான் மன்னிப்பு வேணும்ன்னா கேட்டுக்குறேன். அந்த தப்புக்கு பிராயசித்தமா இந்த கல்யாணத்தைப் பண்ணிட்டா எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துடும்..!” என்று ரத்னவேல் பேச,
“என்ன தப்பு..?” என்றான் விஜய் கூர்மையாக,
அவன் அவ்வாறு கேட்கவும், குழம்பித்தான் போனார் கனகவேல். அவரின் குழம்பிய பார்வையைப் பார்த்த பிரவீண்,
“உன்னோட நல்ல நேரம். இதோட கிளம்பிடு..!” என்றான்.
“இரு பிரவீண்..! சொல்லுங்க சார்.. என்ன தப்பு..? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்…?” என்றான் விஜய்.
“என்னதான் கோபமா இருந்தாலும், இப்படி பேசாத விஜய் தம்பி. நான் ஒன்னும் இவங்க பையனை கேட்டு வரலை. என்னோட மாப்பிள்ளையைத் தான் கேட்டு வந்திருக்கேன்..!” என்றார்.
“புரியலை..!” என்றான்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை விஜய்..! நீங்க கிளம்ப போறிங்களா இல்லையா..?” என்றான் பிரவீண்.
துளசிக்கு அங்கு நடப்பதைப் பார்த்து குழப்பமாக இருந்தது. யார் பேசுவதும் புரியவில்லை. அதிலும் விஜய்யின் முகத்தைப் பார்த்து மேலும் குழம்பிப் போனாள்.
“கடைசியா கேட்குறேன் தம்பி..! என் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க சம்மதமா உங்களுக்கு..?” என்றார்.
“அடி செருப்பால..!” என்ற வித்யாவின் ஆங்காரமான குரல்கேட்டு அனைவரும் திரும்ப, அங்கே பத்ரகாளியாய் நின்றிருந்தார் வித்யா. கோவிலுக்கு போய் விட்டு வந்தவரிடம் இப்படி ஒரு ஆங்காரத்தை சிலர் எதிர்பார்த்தனர். சிலர் எதிர்பார்க்கவில்லை.
வித்யாவைக் கண்ட, கனகவேல் ஆச்சர்யத்தில் எழுந்து நின்றே விட்டார்.எத்தனை வருடம் கழித்துப் பார்க்கிறார் வித்யாவை.
அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, உள்ளே வந்த சுரேஷ், அங்கு கனகவேலைப் பார்த்து,
“நீங்க மினிஸ்டர் கனகவேல் தானே..! உங்களை இங்க எதிர்பார்க்கலை. ஏன் நிக்குறிங்க. உட்காருங்க..! வித்யா டீ எடுத்துட்டு வாம்மா..!” என்றார் சுரேஷ்.
“ஏங்க..!” என்று அவர் ஏதோ சொல்ல போக,
“வித்யா..!!!” என்ற சுரேஷின் குரலில் இருந்த அழுத்தம், அவரை மேற்கொண்டு பேசவிடவில்லை. அதற்காக டீ போடவும் போகவில்லை.
“உனக்கெல்லாம் டீ ஒரு கேடா..?” என்பதைப் போல இருந்தது வித்யாவின் செய்கை.
“சொல்லுங்க சார்..! லாஸ்ட் வீக் ஒரு பிஸ்னஸ் பார்ட்டில கூட உங்க டாட்டர் மிஸ் திவ்யாவைப் பார்த்தேன். ஹவ் இஸ் ஷி..!” என்றார் சுரேஷ்.
அவரிடம் என்ன பேசுவதென்று கூட கனகவேலிற்கு தெரியவில்லை.இப்படி சகஜமாக பேசுவார் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. கனகவேலின் பார்வை வித்யாவிடம் செல்ல,
“இங்க பாருங்க சார்..! அவங்க என் மனைவி வித்யா..!” என்று அந்த ‘என் மனைவி’ என்ற வார்த்தையை அழுத்தி சொன்னார் சுரேஷ்.
“என்ன விஷயமா வந்திருக்கிங்க..?” என்றார் சுரேஷ் பொறுமையாக.
“என் பொண்ணு திவ்யாவுக்கு,விஜய்யைக் கேட்டு வந்திருக்கேன்..!” என்றார்.
“நீ என்ன சொல்ற விஜய்..?” என்றார் சுரேஷ்.
விஜய் எதுவும் பேசவில்லை. ஆனால் முகத்தில் அழுத்தம் மட்டும் கூடிக் கொண்டே போனது. அதைக் கண்ட பிரவீணுக்கு கொஞ்சம் பயமாகக் கூட இருந்தது.
“அம்மா..! இவரு யாரு..? இவருக்கும் நம்ம வீட்டுக்கும் என்ன சம்பந்தம்…? வந்ததுல இருந்து இவரை வெளிய அனுப்புறதிலேயே குறியா இருக்காங்க..?” என்றாள் துளசி வாயைத் திறந்து.
“நீ வாயை மூடு துளசி..!” என்றார் வள்ளியம்மை.
“யாரு பொண்ணுக்கு யாரை மாப்பிள்ளை கேட்குறது. என் அண்ணன் பையன் விஜய்க்கும் என் பொண்ணு துளசிக்கும் நாங்க ஏற்கனவே பேசி முடுச்சுட்டோம். அடுத்த மாசம் கல்யாணம். வந்து விருந்து சாப்பிட்டு போ..!” என்றார் வித்யா பட்டென்று.
“அம்மா..!” என்று துளசி அதிர்ந்து அழைக்க,
“நீ பேசாம இரு துளசி..!” என்றார் வித்யா.
“கேட்டிங்கல்ல..! இப்போ நீங்க கிளம்பலாம். விஜய்க்கு எங்க வீட்ல ஏற்கனவே பொண்ணு இருக்கா. நாங்க வெளிய பொண்ணு பார்க்கலை..!” என்றார் சுரேஷ்.
தன் அப்பா அப்படிப் பேசியதும் திகைத்துப் போனாள் துளசி. நேற்று வரை வேறு மாதிரி பேசிய அப்பா, இன்று இப்படிப் பேச காரணம் என்ன..? என்று குழம்பிப் போனாள்.
“வித்யா நீ பழசை மனசுல வச்சுகிட்டு இப்ப இப்படிப் பேசுற..? விஜய் இல்லைன்னா என் பொண்ணு செத்துடுவா..?” என்றார் கனகவேல்.
“சபாஷ்..! நீ செஞ்ச பாவத்துக்கெல்லாம் பழி தீர்க்கணும்ல்ல. அதான் கடவுள் அவரோட ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டார் போல..!” என்றார் வித்யா வெடுக்கென்று.
“வித்யா..!” என்று கனகவேல் அதிர,
“மிஸ்ஸஸ் சுரேஷ் குமார்..!” என்றார் வித்யா தோரணையாக. அவரிடம் இருந்து இப்படி ஒரு பதிலை துளசியே எதிர்பார்க்கவில்லை.
“நான் இன்னும் அதே பழைய கனக வேல் தான். நினைச்சதை சாதிக்க எந்த எல்லைக்கும் போவேன்..!” என்றார் கனகவேல்.
“என்ன மிரட்டலா..?” என்ற விஜய்யின் குரல் மிரட்டலாய் வெளியே வர,
“எப்படி வேணுமின்னாலும் எடுத்துக்கலாம்..!” என்றார் கனகவேல்.
“பார்க்கலாம்..!” என்றான் விஜய்.
“பார்க்கத் தான போற..?” என்றார் கனகவேல்.
‘திரும்பியும் வருவேன்..!” என்று பிரவீணை ஒரு முறை ஆழ்ந்து பார்த்தவர் கோபத்துடன் கிளம்பிப் போனார்.
மழை பேய்ந்து ஒய்ந்த மாதிரி இருந்தது. வித்யா பட்டென்று அமர்ந்து விட்டார். அவரின் கண்கள் கலங்கிப் போயிருக்க,
“வித்யா..! என் பொண்டாட்டி நான் செத்தாதான் அழுகனும்..!” என்றார் கோபமாய்.
“ஏங்க..!” என்று வித்யாவும், “அப்பா..!!!” என்று துளசியும் அதிர்ந்து விழித்தனர்.
“பிரவீண் ஒரு நிமிஷம் என் கூட ரூமுக்கு வா..!” என்றான் விஜய் கோபமாக.
அனைவரும் பயப் பார்வை பார்க்க,
“இல்ல விஜய்..! ஆபீஸ்க்கு டைம் ஆச்சு..!” என்றான் பிரவீண் மென்று விழுங்கிக் கொண்டு.
“ஒரு நாள் ஆபீஸ் போகலைன்னா இங்க குடி முழுகிப் போய்டாது..!” என்றான் விஜய்.
சொல்லிவிட்டு அவன் முன்னே செல்ல,
“எதை பேசுறதா இருந்தாலும் பார்த்துப் பேசு பிரவீண்..!” என்று ரத்னவேல் தாத்தா சொல்லித்தான் அனுப்பினார்.
“எதுக்கு அந்த ஆளைப் பார்த்து அம்மா டென்ஷன் ஆனாங்க…? தாத்தா ஏன் அவர்கிட்ட கோபமா பேசுனார். யாருக்குமே அவரைப் படிக்கலை. அவரும், பழசு அது இதுன்னு ஏதோ சொல்றார்..? என்னவா இருக்கும். இத்தனை வருஷமும் பகையோட இருக்க என்ன காரணமா இருக்கும்..?” என்று துளசி மண்டைக்குள் ஆராய்ச்சி வேலையைத் துவக்கி இருந்தாள்.
ரத்னவேலிற்கும், வள்ளியம்மைக்கும் மனசு அடித்துக் கொண்டது. வித்யாவிற்கோ காலையில் நினைத்தது சரி என்பதைப் போல் தோன்றியது.
அங்கே அறையில் பிரவீணையே முறைத்துக் கொண்டிருந்தான் விஜய். அவன் என்ன கேட்கப் போகிறான் என்பதை ஊகித்திருந்த பிரவீணுக்கு , அவனின் இந்த அமைதி தான் கொஞ்சம் பயத்தைக் கொடுத்தது.
“ஏதாவது பேசு விஜய்..?” என்றான் பிரவீண்.
அவனையே ஆழ்ந்து பார்த்த விஜய்..”என்ன நடந்தது..?” என்றான் மொட்டையாக.
“நீ எதைப் பத்திக் கேட்குற..?” என்றான் பிரவீண்.
“நான் எதைப் பத்திக் கேட்குறேன்னு உனக்கு நல்லாவே தெரியும்..!” என்றான் விஜய் கொஞ்சம் கடினமேறிய குரலில்.
“நிஜமா தெரியலை விஜய்..!” என்றான்.
“நான் மினிஸ்டர் கனகவேல் பத்தி தெரியுமான்னு கேட்டேன். நீ தெரியாதுன்னு சொன்ன..? ஆனா அன்னைக்கே அவர் வீடு போய் பேசுற அளவுக்கு என்ன பிரச்சனை..?” என்றான் விஜய்.
“பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை விஜய். நம்ம பிஸ்னஸ்ல அரசியல் தலையீடு இருக்கத்தான செய்யும். அந்த வகையில் இந்த ஆள் கொஞ்சம் பிராப்ளம்..! அவ்வளவு தான்..!” என்றான்.
“பிரச்சனை அதோட நின்ன மாதிரி தெரியலையே. பிஸ்னஸ் எதிரின்னா, வீட்ல இருக்க லேடிஸ் ஏன் இவ்வளவு கோபத்தைக் காட்டனும்..? தாத்தா ஏன் இவ்வளவு டென்சன் ஆகணும்…! சொல்லு பிரவீண்..!” என்றான் விஜய்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை விஜய்..!” என்றான்.
“அந்த ஆக்சிடென்ட்க்கு முன்னாடி என்ன நடந்தது..? நான் மறந்த விஷயங்கள்ல இதுவும் ஒண்ணா..? இன்னும் எத்தனை பிரச்னையை இப்படி என்கிட்டே இருந்து மறைக்கிறிங்க.? இல்ல எனக்கு நியாபகமே வராதுன்னு நீங்களே முடிவு பண்ணிட்டிங்களா..?” என்றான் கோபமாக.
“விஜய்..!” என்று அதிர்ந்தான் பிரவீண்.
“விஜய் தான்..! அதே விஜய் தான்.இன்னும் என்னென்ன இருக்கு. எனக்கு இன்னைக்கு மொத்தமா தெரிஞ்சாகனும்..! சொல்லப் போறிங்களா இல்லையா..?” என்று கத்தியவன், அங்கிருந்த பொருட்களை எல்லாம் தூக்கி எறிய, மேலே அறையில் கேட்ட சத்தத்தில் கீழே இருந்த அனைவரும் திகைத்தனர். துளசிக்கு ஒன்றும் புரியவில்லை.
“இப்ப எதுக்கு தேவையில்லாம கத்துறான். பிரவீண் அண்ணா என்ன அவனுக்கு வேலைக்காரனா..?” என்று துளசி பொரிய,
“துளசி பிளீஸ்..! தயவு செஞ்சு அமைதியா இரு.சேகர் அப்பாவுக்காக பாரு. அவர் என்ன நிலைமையில் இருக்காருன்னு தெரியும்ல..!” என்று அருண் நொந்து போன குரலில் கேட்க, கொஞ்சம் அமைதியானாள் துளசி.
“ஆத்தா மகமாயி..! எப்படி இருந்த வீடு..! இன்னைக்கு சண்டையும் சச்சரவுமா இருக்கே..! இதுக்கு ஒரு முடிவே இல்லையா..?” என்று வள்ளியம்மை வாய் விட்டு புலம்பி, கண்ணீர் விடத் தொடங்கினார். அருணுக்கும் பிரச்சனை பெரிசு என்ற மட்டில் மட்டுமே தெரிந்திருந்தது.ஆனால் என்னவென்று தெரியவில்லை. அனைத்தையும் அறிந்தவன் பிரவீண் மட்டுமே.
“ஏங்க போய் என்னன்னு பாருங்க..!” என்றார் வித்யா தவிப்பாக.
“பிரவீண் பார்த்துப்பான்..!” என்றார் சுரேஷ்.
“சொல்லு பிரவீண்..?” என்று, மீண்டும் மீண்டும் அங்கே பொருட்களை உடைத்துக் கொண்டிருந்தான் விஜய். பாவம் வாழ்வின் இடைப்பட்ட காலங்களை மறந்து போன வேதனை அவனுக்கு. அது வெளியே தெரியாமல் இருந்தாக வேண்டிய கட்டாயம். நல்லவேளை ஒரேயடியாக எல்லாத்தையும் மறந்து விடவில்லை. அந்த மட்டில் அவனுக்கு கொஞ்சம் நிம்மதி.
“நானும் கேட்டுப் பார்த்துட்டேன். இத்தனை நாள்ல ஒரு நாள் கூட நீ வாயைத் திறக்கலை. அப்போ அந்த அளவுக்கு ஒரு பெரிய பிரச்சனை நடந்திருக்கு. அது என்னன்னு எனக்குத் தெரிஞ்சாகனும். இல்லை நான் மனுஷனா இருக்க மாட்டேன்..!” என்றான் விஜய்.
“விஷயம் தெரிஞ்சாலும் நீ மனுஷனா இருக்க மாட்ட விஜய்..” என்று மனதிற்குள் நினைத்த பிரவீண், என்ன செய்வது என்ற யோசனையுடன் அமைதியாக நின்றான். அவனின் அமைதி விஜய்க்கு மேலும் வெறியைத் தான் ஏற்றிக் கொண்டது.
“ஸ்டாப் இட் விஜய்..! உனக்கு என்ன பிரச்சனை..? எதுக்கு எல்லாத்தையும் போட்டு இப்படி உடைக்கிற..? நிறுத்தப் போறியா இல்லையா..?” என்று துளசி வந்து கத்த,
சிவப்பேறிய கண்களுடன் அவளையேப் பார்த்தான் விஜய். ஆனால் பொருளை உடைப்பதை நிறுத்தியிருந்தான்.
“எதுக்கு இப்படி அராஜகம் பண்ற..? இந்த வீட்ல நாங்க எது செஞ்சாலும் குத்தம் சொல்ல வர தாத்தா பாட்டி கூட, உன்னை ஒன்னும் சொல்லாம நிக்குறாங்க..? என்ன தான் நடக்குது இங்க…?” என்றான் துளசி.
“அதைத் தாண்டி நானும் கேட்கிறேன்…! என்ன தான் நடக்குது இங்க…? என் கூட நல்லா பேசிட்டு இருந்த நீ… இப்போ என்னை பொறுக்கின்னு சொல்ற..? எவனோ என்னை வந்து மாப்பிள்ளை கேட்குறான்..? பிஸ்னஸ்ல கண்ணுக் தெரியாம நிறைய பிரச்சனை..? என்ன நடக்கு இங்க..?” என்றான் அவனும் திருப்பி.
இப்போது முழிப்பது துளசியின் முறையாகிப் போனது.
‘செய்றதை எல்லாம் செஞ்சுட்டு கேள்வியைப் பாரு..! பொறுக்கி..!’ என்று மனதில் எண்ணியவள்,
“அண்ணா..! நல்லா வாய்ல வந்துடும் எனக்கு. இங்க மத்தவங்க எல்லாம் இருக்குறதா வேண்டாமா..? நீ முதல்ல கீழ போ..!” என்று பிரவீணை விரட்டினாள்.
“உனக்கும் தான் விஜய்..! இன்னொரு பொருள் உடைஞ்சது நான் என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது..!” என்று கத்தி விட்டு சென்றாள் துளசி.
பட்டென்று கட்டிலில் அமர்ந்த விஜய்..இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கிக் கொண்டான். அவனும் எத்தனை நாள் தான் பொறுமையாக இருப்பான். இந்த அழுத்தமே அவனுக்கு பல பெரிய பிரச்சனைக் கொண்டு வரப் போவதைப் பற்றித் தெரியாமல் தலையின் கணத்தை கைகளால் தாங்கிக் கொண்டு இருந்தான். இனி வரும் கணத்தை எப்படி அறிவான் அந்த ஆண் மகன்.
மீண்டும் அவன் என்ன செய்கிறான் என்று எட்டிப் பார்த்த துளசிக்கு அவன் இருந்த நிலை கண்டு, ஒரு கணம்..ஒரே ஒரு கணம்…பழைய துளசி எட்டிப் பார்த்தாள். அவனை அப்படிப் பார்க்கப் பிடிக்கவில்லை துளசிக்கு.
“என்ன ஆச்சு இவனுக்கு..? எப்படி இருந்தான் ஒரு காலத்துல..? இப்ப ஏன் இப்படி இருக்கான்..?” என்று குழம்பித்தான் போனாள். அவளுக்கும் சில விஷயங்கள் தெரியாதே.
அவள் அங்கு தான் இருக்கிறாள் என்று உள் மனம் சொல்லியதோ என்னவோ…நிமிர்ந்து பார்த்தான்.
அவன் முகத்தைப் பார்த்தத் துளசிக்குத்தான் பக்கென்று இருந்தது. எந்த வித பாவமும் இல்லாத வெறுமையான முகம். வாழ்க்கையில் இனி எனக்கு என்ன இருக்கிறது என்பதைப் போன்ற பாவனை. உயிர்ப்பில்லா கண்கள். உணர்வைத் தொலைத்த முகம். அவளையும் மீறி அவளுக்குக் கண் கலங்க, அதை அவனிடம் இருந்து மறைக்கும் பொருட்டு, திரும்பி சென்றாள்.
அவளின் பாதங்கள் கண்களில் இருந்து மறையும் வரை…பார்த்துக் கொண்டே இருந்தான் விஜய்.