சோபாவில் தேநீரை அருந்தியபடி உட்கார்ந்திருக்கான் மாதவன்.
எதிரில் சிதம்பரம், வள்ளி. மற்றும் மதுசுதன் அமர்ந்திருந்தனர்.
முதல்முறையாக வீட்டுக்குள் வந்திருந்தான் மாதவன்.
ஹாலில் பெரிய குடும்ப புகைப்படமும் அங்கங்கே மதுமிதா மதுசுதன் புகைப்படங்களும் இருந்தன. பார்ப்பதற்கு வீடு பளிச்சென்று இருந்தது.
“இவ்வளவு தூரம் எங்களுக்காக வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் தம்பி. உங்களுக்கு தான் சிரமமாக இருந்திருக்கும் சாரி” என்றார் சிதம்பரம்.
“எனக்கு இந்த பக்கம் ஒரு வேலை இருந்தது. அதான் அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்தேன். அதனால ஒன்னும் சிரமம் இல்லை.”. என்று சமாளித்தான்
“ஹாய் நான் மதுமிதாவின் அண்ணன் மதுசுதன்.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் மதுசுதன்.
அவனுக்கு ஏற்கனவே தெரியும் என்றாலும் அப்போதுதான் தெரிந்து கொண்டது போல
“ஓ அப்படியா?”. என்று கேட்டுக்கொண்டான்
இருவரும் அவரவர் வேலையை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.
வள்ளி மகளிடம் வந்தார். ஒரு பருத்தி புடவையில் லேசான ஒப்பனையுடன் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள் மதுமிதா.
“மது கீதாவை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கலாம் இல்லையா? அவள் இங்க அவரை பார்த்து திருவிழாவில் பார்த்தது இவர் இல்லைனு சொல்லி இருப்பாள்.”
“அம்மா அவளை இங்கே கூட்டிட்டு வந்தால், நீங்களும் இருக்கறதுனால தயங்கி மாற்றி சொல்ல வாய்ப்பு இருக்கு. அதனாலதான் இவரை நான் வெளிய கூட்டிட்டு போய் அங்க அவளை வரவழைத்து கேட்கப்போகிறேன். அப்போ அவள் தைரியமா உண்மையை சொல்லுவாள் இல்லையா?”
“நாங்க என்ன புலியா சிங்கமா? எங்களைப் பார்த்து அவள் பயப்பட.” என்று சிறிது கோபமாக கேட்டார் வள்ளி.
“பாத்தீங்களா பாத்தீங்களா என் கிட்டயே இப்படி கோபப்படுறீங்க. அவள் ஒருவேளை ரெண்டு பேரும் ஒன்னு தான்னு சொல்லி விட்டால் அவளை நீங்க சும்மா விடுவீர்களா? அதுக்காக தான் பொது இடத்துல பார்த்து சொல்லட்டும்னு இந்த ஐடியா பண்ணினேன்.” என்றாள் மகள்.
“நல்ல ஐடியா பண்ண போ. எனக்கு துளிகூட அவர் மேல சந்தேகம் இல்லை. நான் சொன்னா நீ கேட்கவா போகிறாய்? என்னமோ பண்ணு.
எல்லாம் உங்க அப்பா கொடுக்கிற செல்லம். சரி வா.” என்று அவளை அழைத்துக் கொண்டு அறையை விட்டு வெளியே ஹாலிற்கு வந்தார் வள்ளி.
அங்கு மாதவன் உட்கார்ந்திருந்தான்.
மதுமிதா அவனைப் பார்த்து “ஹாய்” என்றாள்.
அவனும் “ஹாய்” என்றான்.
“நாம ரெண்டு பேரும் இங்கேயே பேசுவதை விட பக்கத்துல இருக்குற ஒரு ஐஸ்கிரீம் ஷாப் போய் பேசலாம்னு நினைக்கிறேன் . உங்களுக்கு ஓகேவா?” என்று கேட்டாள் .
“போகலாமே.” என்று எழுந்தான்.
“சரி வாங்க.” என்று கூறியபடி இருவரும் தெருவில் இறங்கினர்.
“ஐஸ்கிரீம் ஷாப் பக்கத்துலதான் இருக்கு. அதனால நடந்து போயிடலாமா?” என்று கேட்டாள்.
“ஷு ர் போகலாமே. எனக்கும் காரில் இவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்ததற்கு நடந்து போகிறது நல்லாவே இருக்கும்.” என்றான் சாதாரணமாக மாதவன்.
“சாரி நான் உங்களை இவ்வளவு தூரம் வரவழைத்து கஷ்டப்படுத்திட்டேன் இல்லை?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் மதுமிதா.
“இல்லை இல்லை. நான் அப்படி நினைச்சு சொல்லல. எனக்கு இதுல எந்த கஷ்டமும் இல்ல. எனக்கு இந்த மாதிரி இங்கே வந்து பழக்கம்தான். அதுவுமில்லாம எனக்கு இங்கே ஒரு வேலை இருந்தது.” என்று பொய் சொன்னான் மாதவன்.
சாதாரணமாக அவன் முகத்தை பார்த்து பேச முடியாமல் தவித்தாள் மதுமிதா. ஏன் என்று அவளுக்கு புரியவில்லை. அந்த கடைக்குள் இருவரும் நுழைந்தனர்.
“உங்களுக்கு என்ன ஆடர் பண்ணட்டும்?” என்று கேட்டாள்.
“எனக்கு சாக்லேட் ப்ளேவர் பிடிக்கும். “
“ஓகே எனக்கு வெண்ணிலா ப்ளேவர் பிடிக்கும். சரி நான் ரெண்டு பேருக்கும் ஆர்டர் பண்ணுகிறேன்.” என்று விட்டு சொன்னதை செய்தாள்.
“ஒரு நிமிஷம் இருங்க. நான் வந்துடறேன்.” என்றுவிட்டு கைபேசியை எடுத்து கீதாவின் எண்ணிற்கு தொடர்பு கொண்டாள்.
“கீதா நான் மாதவனை கூட்டிக்கிட்டு ஐஸ்க்ரீம் பார்லர் வந்திருக்கேன். நீ சீக்கிரம் வா.” என்று அவசரபடுத்தினாள்.
“மது ஒரு போட்டோவை காமிச்சி என் கிட்ட கேட்டு இருக்கலாம் இல்லையா? இப்படியா நேர்ல வர சொல்லுவ?” என்று கேட்டாள் கீதா.
“இல்லை கீதா நீ அவனை நேரில் பார்த்து சொன்னால் தான் எனக்கு திருப்தியா இருக்கும். அதனால தான் வர சொல்லி இருக்கேன். அப்படியே ஒருவேளை இரண்டு பேரும் ஒரே ஆளாக இருந்தால் நாம அவனை ஈசியா பிடித்து விடலாம் இல்லையா? அதுக்குதான்.
இன்னொரு முக்கியமான விஷயம். அவனுக்கு முன்னாடி இதை சொல்லிடாத. நான் ஏதாவது அவனிடம் சொல்லி அவனை
முன்னாடி அனுப்பிட்டு உன்னை கேட்கிறேன். அப்போ சொல்லு போதும்.
அப்புறம் நான் உன்னை எதேச்சையா பார்ப்பது போல தான் பேசுவேன். நீயும் அதுக்கு ஏத்த மாதிரி பேசு.” என்றாள்.
“ சரி சரி இதெல்லாம் தேவையில்லாத வேலை சொன்னால் கேட்க மாட்டேங்கிற.” என்றாள் கீதா சலிப்புடன்.
“சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ணாம சீக்கிரம் வா.” என்று விட்டு தொடர்பை துண்டித்தாள்.
மதுமிதா மீண்டும் மாதவன் அமர்ந்திருக்கும் இடத்திற்கு வந்தாள்.
மேஜை மீது இரண்டு ஐஸ்கிரீம் இருப்பதை கண்டாள். மாதவனும் சாப்பிடாமல் அவளுக்காக காத்திருப்பது தெரிந்தது. எனவே அவளது நாற்காலியில் அமர்ந்துகொண்டு சாக்லேட் பிளேவர் ஐஸ் கிரீம் இருந்த கண்ணாடி கப்பைe அவனிடம் தள்ளினாள்.
“சாப்பிடுங்க மாதவன். உருகிட போகுது.” என்று சொன்னாள்.
அவன் அந்த ஐஸ் கிரீம் குவளையைe தன் பக்கம் இழுத்து அதிலிருந்து ஒரு கரண்டி ஐஸ்கிரீம் எடுத்து வாயில் வைத்தபடி அவளை கவனித்தான்.
அவள் பதட்டமாக இருப்பது தெரிந்தது. அவனுக்கும் அதே பதட்டம் இருந்தது.
இவனை சாப்பிட சொன்னாலே தவிர அவள் ஒரு வாய் கூட சாப்பிடவில்லை.
“நீங்களும் சாப்பிடுங்க மதுமிதா. உங்க ஐஸ்கிரீம் உருகுது பாருங்க.” என்றான்ஒழுகிக்கொண்டிருந்த ஐஸ்கிரீமை காட்டி.
“ஆம் எடுத்துக்கறேன்.” என்றபடி ஐஸ்கிரீம் எடுத்து இயந்திரத்தனமாக சாப்பிட்டாள் .
“நீங்க என்கிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்க.” என்று ஞாபகப்படுத்தினான் மாதவன்.
“ஆமாம் அது அது வந்து…” என்று என்ன பேசுவது என்று புரியாமல் தவித்தாள் மதுமிதா.
அவன் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். திருவிழாவில் நடந்ததை பற்றி மட்டும் கேட்கவே கூடாது என்று மனதில் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருந்தான் மாதவன்.
“அது… ஆ உங்களுக்கு பிடித்த கலர் என்ன?” என்று கேட்டாள்.
இதனைக்கேட்ட மாதவன் “என்ன? என்ன கேட்டீங்க?” என்று கேட்டான் வினோதமாக அவள் முகத்தை பார்த்து.
அவன் கேட்ட விதத்தில் “ஏதாவது மொக்கையா கேட்டு விட்டோமோ?” என்று அவளுக்கு தோன்றியது.
“அது…. அது வந்து…. உங்களைப் பற்றி எல்லாத்தையும் தெரிஞ்சுக்கலாம்னு தான் கேட்டேன்.” என்று சமாளித்தாள்.
“ஓ அப்படியா? எனக்கு டார்க் ப்ளூ பிடிக்கும்.”. என்றான்
அவள் “எனக்கு லைட் கிரீன் பிடிக்கும்.” என்றாள் அவன் கேட்காமலேயே.
“அப்புறம் உங்களுக்கு எந்த ஆக்டர், அட்ரஸ் பிடிக்கும்?”
“எனக்கு சூர்யா-ஜோதிகா பிடிக்கும்.”. என்றான் அவன்
“ஓ அப்படியா? எனக்கு அஜித்-ஷாலினி பிடிக்கும்.” என்றாள்.
இடையிடையே தன் கைபேசியை பார்த்துக்கொண்டாள்.
அவளுடன் அந்த இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருப்பது அவனுக்கு இனிமையாகவே இருந்தது. எனினும் எந்த நேரத்தில் அந்த கேள்வியை கேட்டு விடுவாளோ என்று பதட்டமாகவும் இருந்தது. எனவே அந்த நேரத்தை அவனால் ரசிக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அவளது கைபேசியில் குறுஞ்செய்தி ஒன்று வர அவசர அவசரமாக அதை திறந்து படித்தாள்.
கீதா தான் அந்த ஐஸ்கிரீம் கடைக்கு வந்துவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.
அதனை படித்த மதுமிதா அங்குமங்கும் கண்களை சுழலவிட்டு கீதாவை தேடினாள். ஒரு இடத்தில் கீதாவை கண்டதும் அவளிடம் “கிட்ட வா” என்றபடி சைகை காட்டினாள்.
அவள் ஓரளவு அருகில் வந்த பிறகு எழுந்து நின்று “ஹாய் கீதா என்ன இந்த பக்கம்?” என்று எதேச்சையாக அவளை பார்த்தது போல பேசினாள்.
மாதவன் கீதாவுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தான்.
‘யாரை பார்த்து இவள் கை அசைக்கிறாள்?” என்று திரும்பிப் பார்த்தான்.
அங்கு கீதா நின்று கொண்டிருந்தது அவனுக்கு தெரிந்தது.
‘ஓ இதுதான் விசயமா?’
என்று நினைத்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான் மாதவன்.
கீதா இவர்கள் அருகில் வந்ததும்
“இவள் என்னோட பிரண்டு கீதா.” என்று கீதாவை மாதவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் மதுமிதா.
“என்னடி கீதா இந்த பக்கம்?” என்று எதேச்சையாக அவளை பார்த்தது போல காட்டி கொண்டாள் மதுமிதா.
“நான் சும்மா இந்த பக்கம் வாக்கிங் வந்தேன்.” என்றாள் கீதா தட்டுத்தடுமாறி.
“என்ன கடைக்கு உள்ள வாக்கிங் வந்தீங்களா?” என்று உதட்டோரம் சிரிப்புடன் கேட்டான் மாதவன்.
“அது அது….. வந்து வெளியில வாக்கிங் வந்து இருப்பா. அப்படியே உள்ளே வந்து இருக்கா. அப்படித்தானே கீதா?” என்று சமாளித்தாள் மதுமிதா.
“சரி கீதா உட்காருங்க.” என்றான் மாதவன்.
அவளும் உட்கார்ந்தாள்.
மதுமிதா இருவரது முக மாறுதல்களை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள். ஆனால் மாதவன் வெகு சாதாரணமாக அமர்ந்திருந்தான். எந்த ஒரு பதட்டமும் அவனிடத்தில் இல்லை.
கீதாவும் மாதவனை முதன் முதலாக பார்ப்பது போலவே பார்த்து கொண்டிருந்தாள்.
மதுமிதாவுக்கு இருவரும் சாதாரணமாக நடந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது.
“மதுமிதா உங்களுக்கும் எனக்கும் ஐஸ்கிரீம் இங்கே இருக்கு. உங்க ஃபிரண்டுக்கு ஆர்டர் பண்ணலையா?” என்று சாதாரணமாக கேட்டான்.
“ஆமாம் ஆமாம் மறந்தே போயிட்டேன்.” என்றுவிட்டு அவளுக்கு ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் எடுத்து வர சொன்னாள்.
“அப்புறம் கீதா, நீங்க ரெண்டு பேரும் ஒரே ஸ்கூல்ல இல்ல காலேஜ்ல படிச்சீங்களா?” என்று சாவகாசமாக அவர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தான் மாதவன்.
“ஆமாம் நானும் அவளும் ஒரே காலேஜில் படித்தோம். அங்கதான் நாங்க ரெண்டு பேரும் பிரெண்டு ஆனோம்.” என்றாள் கீதா புன்னகையுடன்.
“சரி மதுமிதா. நீங்க வேற ஏதாவது என்னைப் பத்தி தெரிந்து கொள்ள வேண்டுமா?” என்று கேட்டான்.
அவள் எப்பொழுது இவன் இங்கிருந்து கிளம்புவான் இவள் கீதாவிடம் பேசலாம் என்று காத்துக் கொண்டிருந்தாள்.
“எனவே இல்லை இல்லை சும்மா உங்ககிட்ட பேசணும்னு தோணுச்சு. பேசிட்டேன். அவ்வளவுதான்.” என்று முடித்தாள்.
“அப்போ நீங்க எனக்கு பிடித்த கலர், எனக்கு பிடித்த ஆக்டர் ஆக்டிரஸ் இவர்களைப் பற்றி கேட்கவா கூப்பிட்டீங்க?” என்று சிறு முறுவலுடன் கிண்டலாக கேட்டான் மாதவன்.