“அது அது வந்து…. ஆமாம். இல்லை .”என்று இருபக்கமும் தலையாட்டினாள் மதுமிதா.
அவள் தலையை ஆட்டிய விதத்தில் அவனுக்கு சிரிப்பு வந்தது. லேசாக சிரித்துவிட்டு
“சரி நான் இப்ப கிளம்பலாமா?” என்று கேட்டான்.
அவள் “சரி நீங்க போய்க்கிட்டே இருங்க. நான்
அண்ணனுக்கு ஐஸ்க்ரீம் வாங்கிட்டு வந்துடுறேன்.” என்று அவனை அனுப்பினாள்.
அவன் கடையை விட்டு வெளியே செல்லும் வரை பொறுமையை இழுத்து பிடித்து காத்துக் கொண்டிருந்தாள்.
அவன் சென்றதும் கீதாவிடம் திரும்பினாள்.
“என்னடி கீதா? இவன் தானே அன்னைக்கு நீ திருவிழாவில் பார்த்தது?” என்று ஆர்வமுடன் கேட்டாள் மதுமிதா.
“அது வந்து அவன் கூட இதே உயரம் தான். இதே ஹேர் ஸ்டைல் தான் வச்சிருந்தான். இதே மாதிரி தான் கிட்டத்தட்ட இருந்தான்…..” என்று இழுத்தாள் கீதா.
“அதுதான் எனக்கே தெரியுமே. இவன் அவனா இல்லையா? அதை மட்டும் சொல்லு. “.
என்று பரபரத்தாள் மதுமிதா
“இல்லைடி.” என்றாள் கீதா முடிவாக.
“என்னடி சொல்ற? நல்லா யோசிச்சு சொல்லு. என்னோட உள் உணர்வு இவன் தான்னு சொல்லுது. ஆனால் நீ இப்படி சொல்ற.” என்று நம்ப முடியாமல் கேட்டாள் மதுமிதா.
“இல்லைடி இவன் அந்த பொறுக்கி கிடையாது. அந்த திருடனும் இவன் கிடையாது.” என்றாள் கீதா உறுதியாக.
“அப்படியா?”
“ஆமாம். நான் சொல்றது உண்மைதான். மாதவன் ரொம்ப நல்லவன். நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா உன் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கும். எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்றாள் கீதா உறுதியாக.
கீதா சொன்னதை கேட்ட மதுமிதாவுக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் மனதில் ஒரு நிம்மதி பரவுவதை உணர்ந்தாள் .
அதுவரை மதுமிதா இதயத்திற்கு போட்டிருந்த பூட்டை மாதவன் சுக்குநூறாக உடைத்து உள்ளே நுழைந்தான்.
கீதாவின் கைபேசி சிணுங்கியது. எடுத்து பேசியவள்
“சுரேஷ் எனக்காக வெளிய வெயிட் பண்ணிட்டு இருக்கான். நான் போகணும். அப்புறம் பார்க்கலாம்.” என்றாள் கீதா.
“சரிடி பார்க்கலாம்.” என்று விட்டு ஐஸ்க்ரீம் வாங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியில் வந்தாள் மதுமிதா.
மாதவன் கடைக்கு வெளியே அவளுக்காக கைகளை மார்புக்கு குறுக்கே கட்டியபடி காத்துக் கொண்டு நின்று கொண்டிருப்பது தெரிந்தது.
.
அப்போதுதான் முதன்முறையாக மதுமிதா அவனை தெளிவான மனதுடன் பார்த்தாள்
‘பார்க்க நல்லா இருக்கிறான். என் வீட்டில் இருக்கிற எல்லார்கிட்டயும் நல்ல பேர் வாங்கி இருக்கான். உண்மையாவே இவன் நல்லவன் தான் . நாம கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வேண்டியது தான்.” என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
இருவரும் ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.
வெளி வாசலில் நின்றுகொண்டு இவர்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்த வள்ளி, இருவரும் ஒன்றாக நடந்து வருவதை பார்த்து ‘நல்ல ஜோடி பொருத்தம்’ என்று நினைத்துக்கொண்டார்.
இருவரும் வீட்டுக்குள் நுழைந்ததும்
“வாங்க தம்பி. உட்காருங்க.” என்று சோபாவை காட்டிவிட்டு மதுமிதாவை அழைத்துக்கொண்டு அவர் அறைக்குச் சென்றார்.
“என்னாச்சு மது? நான் சொன்னது சரியா போச்சா?” என்று கேட்டார்.
“ஆமாம் அம்மா நீங்க சொன்னது சரிதான். இவன் அவன் இல்லை.” என்று சுருக்கமாக சொன்னாள்.
“இப்பயாவது உனக்கு இது புரிஞ்சுதே ரொம்ப நிம்மதி.” என்றார் வள்ளி ஒரு பெருமூச்சுடன்.
“ அப்போ இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம் அப்படித்தானே?” என்று கேட்டார் வள்ளி.
“ஆமாம் அம்மா. எனக்கு இந்த கல்யாணத்தில் சம்மதம்.” என்று அறிவித்தாள் மகள்.
வள்ளியின் முகம் மலர்ந்தது. சிதம்பரம் மற்றும் மதுசுதன் இருவரிடமும் இந்த விவரத்தை கூறினார் வள்ளி.
அவர்களுக்கும் மகிழ்ச்சியே. குடும்பமே மலர்ந்த முகத்துடன் மாதவனிடம் வந்தது.
சிதம்பரம் மாதவனிடம்
“ரெண்டு பேரும் மனம் விட்டு பேசினீர்களா?” என்று கேட்டார்.
அவள் இவனிடம் கேட்டது இரண்டு கேள்விதான். அந்த கேள்வியை நினைத்த மாதவனுக்கு சிரிப்பு வந்தது. எனினும் “பேசினோம்” என்று கூறினான்.
“சரிங்க தம்பி. வாங்க சாப்பிடலாம்.” என்று அழைத்தார் வள்ளி.
“இல்லைங்க. எனக்கு ஒரு பிரண்டை பார்க்க வேண்டிய வேலை இருக்கு. நான் உடனே கிளம்பனும்.” என்றான்.
“சீக்கிரம் சாப்பிட்டு விட்டு போகலாமே.” என்றார் வள்ளி.
அப்போதும் “இல்லை கொஞ்சம் அவசரமா போகணும். ஏற்கனவே லேட்டாயிடுச்சு.” என்றான் மாதவன்.
“சரிங்க தம்பி. நான் உங்க அப்பாவுக்கு போன் பண்ணி சம்மதத்தை சொல்கிறோம்.”. என்று இவனிடமும் சம்மதம் சொன்னார் அவர்.
இதனை ஓரளவு அவர்கள் முக மலர்ச்சியை பார்த்து கண்டுபிடித்து இருந்தாலும் அவர்கள் வாயாலேயே கேட்டது அவனுக்கு நிம்மதியை தந்தது.
அப்போது அவனுடைய கைபேசி சினுங்கியது. எடுத்து பேசியவன்
“என்னோட பிரண்டு தான் கால் பண்றான். நான் கிளம்புகிறேன்.” என்று எழுந்து நின்றான்.
“சரிங்க மாப்பிள்ளை.” என்றார் சிதம்பரம்.
அவரது அந்த வார்த்தை அவன் காதில் தேனாய் பாய்ந்தது. வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி கிளம்பினான் மாதவன்.
சிதம்பரம் அண்ணாமலை எண்ணிற்கு தொடர்பு கொண்டு திருமணத்திற்கு சம்மதம் கூறினார் .
இதனைக்கேட்ட அண்ணாமலை வீட்டில் உள்ள அனைவரையும் ஹாலிற்கு அழைத்தார்.
அனைவரும் ஆர்வமாக வந்து அமர்ந்தனர்.
“சிதம்பரம் வீட்ல இருக்கிற எல்லோருக்கும் இந்த கல்யாணத்தில் சம்மதம்.”என்று குடும்பத்தினருக்கு அறிவித்தார்.
எல்லோருக்கும் ஆனந்தம். பார்வதி
“முருகா உனக்கு கோடான கோடி நன்றி. என் பிள்ளைக்கு நல்ல வழி காட்டிட்ட. “ என்று வாய்விட்டு நன்றி கூறினார்.
ஆறுமுகம் “நம்ம மாதவனை எந்த பொண்ணுக்கு பிடிக்காமல் போகும்?” என்றான்.
“அப்போ கூடிய சீக்கிரம் நம்ம வீட்டுக்கு மதுமிதா, மாதவனுக்கு மனைவியா, எனக்கு தங்கையா, இந்த வீட்டுக்கு இரண்டாவது மருமகளா ஆதிக்கு செல்ல சித்தியா, வரப் போகிறாள்.” என்று மகிழ்ந்தாள் மலர்.
“ஆமாம் எனக்கு இன்னொரு அண்ணி கிடைக்கப் போகிறார்கள்.” என்று குதூகலமாக கத்தினாள் சுதா ராணி.
“ஆமாம். ஏன் இன்னும் மாதவன் நமக்கு கால் பண்ணி இந்த விஷயத்தை சொல்லவே இல்ல? அவனுக்கும் தெரிஞ்சிருக்கும் இல்ல?” என்று கேட்டார் பார்வதி.
“தெரிஞ்சிருக்கும். ஆனால் அவன் ஒரு வேளை ரூபாவை இன்னும் மனசில் நெனச்சுக்கிட்டு இருக்கானா?” என்று கேட்டார் அண்ணாமலை.
“அப்படி நினைத்துக் கொண்டு இருந்தா, நாம சொன்ன உடனே மதுமிதாவை பார்க்க போய் இருப்பானா?” என்று கேட்டான் ஆறுமுகம்.
“ஒருவேளை நான் சொன்னதால பார்க்க போய் இருப்பானோ?” என்றார் பார்வதி.
“ஆமாம். எனக்கு என்னமோ அண்ணனுக்கு இந்த கல்யாணத்தில் பரிபூரண சம்மதம் இல்லைனு தான் தோணுது.”. என்றால் சுதாராணி
“சரி எது எப்படி இருந்தாலும் பரவாயில்லை. கல்யாணத்துக்கு அவன் சம்மதம் சொல்லிட்டான். மதுமிதா மாதிரி ஒரு நல்ல பொண்ணு அவனுக்கு மனைவியாக வரப் போகிறாள். அவளோட நல்ல குணத்தை பார்த்து அவன் அவளை மனதார ஏற்றுக் கொள்வான். அதனால இனிமே யாரும் ரூபாவை பத்தி பேசாதீங்க. அவன் மெல்ல மெல்ல ரூபாவை மறந்து மதுமிதாவை ஏற்றுக் கொள்ளட்டும்.” என்று முடித்தார் அண்ணாமலை.
அதற்கு மற்றவர்களும் ஆமோதித்தனர் .
“சூப்பர் நம்ம வீட்ல இன்னொரு விசேஷம் நடக்கப்போகுது.” என்று மகிழ்ந்தாள் சுதாராணி .
“உனக்கு ரூட் கிளியர் ஆகப்போகுது.” என்றான் ஆறுமுகம்.
“என்னது எனக்கு ரூட் கிளியர் ஆக போகுதா ?”
“ஆமாம். மாதவனுக்கு கல்யாணம் முடிஞ்சா அடுத்தது உனக்கு தானே சுதா? அதைத் தானே உங்க அண்ணன் சொல்றாரு” என்றாள் மலர் கண்களை சிமிட்டி.
“சரி சரி ரூட் கிளியரா ஆனாலும் இன்னும் நான் என்னோட இன்ஜினை ஸ்டார்ட் பண்ணல.” என்றாள் சுதாராணி.
“என்னடி சொல்ற?” என்று கேட்டார் பார்வதி.
“நான் கல்யாணத்துக்கு தயாரா இல்லைன்னு சொல்றேன். ஏன்னா இன்னும் நான் டிகிரி முடிக்கல.” என்றாள் சுதாராணி.
“சரி சரி. டிகிரியை முடி. அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசுவோம்.” என்றார் பார்வதி.
“வந்துட்டீங்களா? எனக்காக தான் வெயிட் பண்றீங்களா? இதோ 2 மினிட்ஸ்ல வந்துவிடுகிறேன்.” என்று விட்டு காரினை நிறுத்திவிட்டு அந்த நட்சத்திர ஹோட்டல் காவலாளியிடம் கார் சாவியை கொடுத்து விட்டு ஹோட்டலுக்குள் நுழைந்தான்.
அந்த ஹோட்டலில் கீதா மற்றும் சுரேஷ் அமர்ந்து இருந்தனர்.
வேகமாக உள்ளே நுழைந்த மாதவனை பார்த்ததும் சுரேஷ் “ஹாய்” என்றான்.
இவனும் கையை தூக்கி அசைத்து “ஹாய் சுரேஷ்!” என்றபடி அவர்கள் அமர்ந்திருந்த மேஜைக்கு சென்றான்.