இதனை பார்த்து விட்ட மாதவன் தான் இருந்த இடத்தை விட்டு சிறிது நகர்ந்து கத்தி அவன் மீது படாமல் தன்னை காப்பாற்றிக் கொண்டான்.
அந்த கத்தி தான் மதுமிதாவின் நெற்றியில் பட்டு காயமானது. மதுமிதா நெற்றியில் வெட்டு பட்டதும் கத்தி மற்றும் ரத்தத்தை பார்த்து அதிர்ச்சியாகி “ ஆ” என்று கத்தியபடி மயங்கி விழுந்தாள்.
சிறிது நகர்ந்து தன்னை காப்பாற்றிக் கொண்ட மாதவன் கத்தி சென்ற திசையில் “ஆ” என்ற பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதும் அந்த பக்கம் திரும்பினான்.
அங்கு ஒரு பெண் நெற்றியில் கத்தி பட்டு மயங்கி கீழே விழுந்து கிடப்பதை பார்த்தான் மாதவன்.
பார்த்தவன் தன் முன்னாடி நின்று கொண்டு தன்னை தாக்கி கொண்டு இருந்தவனை வேகமாக ஒரு தள்ளு தள்ளிவிட்டு அவளை நோக்கி ஓடினான்.
அந்த பெண்ணின் அருகில் சென்று அவளை பார்த்தான். அவள் முகத்தை பார்த்த போதுதான் அவனுக்கு அன்று அவளை மாந்தோப்பில் பார்த்தது ஞாபகம் வந்தது.
எனவே “இவளா?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அவளுக்கு முதலுதவி செய்தான்.
பிறகு அவளை தூக்கி கொண்டு அந்த நீண்ட திருவிழா சாலையை ஓடியே கடந்து பிறகு ஆட்டோவை பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.
மருத்துவர் அவனிடம் மருந்து வாங்கி வருமாறு சொன்னபொழுது தான் ஞாபகம் வந்தது அவனிடம் பணம் இல்லை என்பது.
சாப்பிட்டுக்கொண்டு இருந்த மாதவன் அவசர அவசரமாக நண்பர்களுடன் கிளம்பி பொறுக்கி பசங்களை தேடுவதற்காக திருவிழாவுக்கு வந்ததனால் பணம் எடுத்து வரவில்லை.
அவன் நிலையை புரிந்துகொண்ட கீதா மருந்து வாங்குவதற்காக வெளியில் சென்றாள்.
அவன் அந்த அறையில் காத்துக் கொண்டிருந்தான்.
பார்த்த முதல் நாளே தன் மனதை கவர்ந்தவள் தன் கண் முன்னே வெட்டுப்பட்டு மயக்கத்தில் இருப்பதை பார்த்து வருந்திக் கொண்டிருந்தான் மாதவன்.
‘உன் மேல வெட்டு படும்னு தெரிஞ்சிருந்தா அந்த வெட்டுக் காயத்தை நானே வாங்கியிருப்பேன். சாரி.’ என்று அவளிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான் மாதவன்.
அவள் மேல் பட்ட வெட்டு காயம் அவன் மேல் பட்டது போல அவனுக்கு வலித்தது. அந்த வலி அவன் கண்களில் தெரிந்தது.
அப்போது நர்ஸ்
“ தம்பி இவங்க முதுகில் ரத்தக் கரை இருக்கு. நான் சுத்தம் பண்ணனும். கொஞ்சம் இவங்க தோளை தூக்கி பிடிங்க.” என்று சொன்னார்.
மாதவன் படுக்கைக்கு அருகில் சென்று அமர்ந்து
மயக்கத்தில் இருந்த அவளின் தோலை மென்மையாக தூக்கிப் அவனது மார்பில் லேசாக சாய்த்து பிடித்தான்.
நர்ஸ் அவளது புடவை மற்றும் ரவிக்கையை சற்று விலக்கி அவள் முதுகில் படிந்திருந்த ரத்தக்கறையை துடைத்தார்.
நர்ஸ் அவளது புடவையை விலக்க முயற்சித்துக் கொண்டிருந்ததை பார்த்த மாதவன் நாசுக்காக அவனது பார்வையை வேறு பக்கம் திருப்பினான்.
அவர் அவளது முதுகை முழுதும் துடைத்துவிட்டு மீண்டும் அவளது ஆடையை சரிசெய்த பிறகு அவனது பார்வை அவள் பக்கம் திரும்பியது.
துடைத்து முடித்ததும் நர்ஸ்
“சுத்தம் பண்ணிவிட்டேன் தம்பி. அவங்களை படுக்க வைத்துவிடுங்கள்.” என்று கூறினார்.
மாதவன் தன் கைகளில் தாங்கி இருந்த அவளை மனமில்லாமல் மென்மையாக படுக்கையில் கிடத்தினான்.
நர்ஸ் “என்ன தம்பி இவ்வளவு சோகமா இருக்கீங்க? அவங்களுக்கு ஒன்னும் இல்லை. தையல் போட்டாச்சு. இனி எந்த பயமும் இல்லை. நீங்க தைரியமா இருங்க. முகம் எப்படி வாடிப் போய் இருக்கு பாருங்க. உங்க சட்டையில் வேற ரத்தக்கறை படிந்து இருக்கு. கழுவிட்டு வாங்க.” என்றார்.
“இல்லை பரவாயில்லை. நான் வீட்ல போய் வாஷ் பண்ணிக்கிறேன்.” என்று கூறி விட்டு அங்கேயே அவளை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
ஒரு வார்டு பாய் அந்த அறைக்குள் நுழைந்தான்.
“சிஸ்டர் உங்களை டாக்டர் கூப்பிடுகிறார். ஏதோ எமர்ஜென்சி போல இருக்கு. சீக்கிரம் போங்க.” என்று அவசர படுத்தினான்.
“இந்த பெண்ணோட பிரெண்டு என்னை பார்த்துக்க சொல்லிட்டு போயிருக்கு.” என்றார் நர்ஸ்.
“அதான் இங்கே ஒருத்தர் உக்காந்துட்டு இருக்காரே. அவர் பார்த்துக் கொள்வார். நீங்க போங்க.” என்றான் வார்டு பாய்.
“அந்தப் பையன் இந்த பொண்ணை லவ் பண்றான் போல இருக்கு. அவன் அந்த பொண்ணு மேல காட்டுற அக்கறையை பார்த்தால் அப்படி தான் தோணுது. சரி அவகிட்ட சொல்லிட்டு போகலாம்.” என்றுவிட்டு மாதவனிடம் வந்தார் நர்ஸ்
“தம்பி ஏதோ எமர்ஜென்சி. அதனால டாக்டர் கூப்பிடறாங்க. நான் போயிட்டு பத்து நிமிஷத்துல வந்துடறேன். அவங்க மயக்கத்துல இருக்காங்க. மயக்கம் தெளிய இன்னும் கொஞ்ச நேரம் ஆகும். இந்த பொண்ணோட பிரெண்டுe வந்தா சொல்லிடுங்க.” என்று விட்டு சென்றார்.
மாதவன் மயக்கத்தில் இருந்த அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் குழந்தையைப் போல் தோன்றினாள் அவள்.
‘உன் பேர் கூட எனக்கு தெரியல. ஆனால் உன்னை தொட்டு தூக்கிய இந்த கையால எந்த ஒரு பொண்ணையும் என் மனசால கூட தொட மாட்டேன்.” என்று உறுதி கொண்டான்.
அதேநேரம் அந்த அறைக்குள் 4 காவலாளிகள் நுழைந்து
“இந்த ஊர் பெரிய மனிதனின் பையன் மேலேயே கை வச்சிருக்க. உனக்கு எவ்வளவு தைரியம்?” என்றபடி மாதவனின் சட்டையை பிடித்து இழுத்தனர்.
“சார் நான் எந்த தப்பும் பண்ணல. அவன்தான் என் பிரெண்டோட தங்கை கிட்ட தப்பா நடந்துகிட்டா.” என்று மாதவன் கூறுவதை பொருட்படுத்தாமல் அவனை இழுத்துக்கொண்டு சென்றனர்.
மாதவன் மற்றும் அவனது நண்பர்களை காவல் நிலையத்தில் உட்கார வைத்திருந்தனர். இந்த விபரத்தை கேள்விப்பட்ட துரையின் தந்தை காவல் நிலையத்திற்கு விரைந்தார்.
பிறகு அவருக்கு தெரிந்த கட்சிக்காரரை வைத்து அந்த பொறுக்கிகளின் தந்தையிடம் பஞ்சாயத்து பேசி துரை, மாதவன் மற்றும் நண்பர்களை விடுவித்தார்.
இது சம்பந்தமாக யாராவது வழக்கு கொடுத்தாலும் அதனை பெரிது படுத்த வேண்டாம் என்று காவலர்களிடம் சொல்லிவிட்டு சென்றார். எனவேதான் மதுமிதா கொடுத்த வழக்கிற்கும் எந்த பலனும் இல்லாமல் போயிற்று.
வீடு திரும்பிய மாதவனுக்கு அவளது நினைவாகவே இருந்தது. அவளை தேடி கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சிகள் எடுத்தான். துரைக்கு அவ்வப்பொழுது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசுவான். நேரம் கிடைக்கும்போது தேனிக்கு சென்று அவளை தேடினான். ஆனால் பலன் இல்லை.
பிறகு ஒரு நாள் துரை மாதவனுக்கு கைபேசி மூலம் தொடர்பு கொண்டான்.
“ஹலோ மாதவா, அந்த பொண்ணை பத்தி சில விஷயம் தெரிய வந்திருக்கு.” என்றான்.
“என்ன விஷயம் துரை? அந்தப் பொண்ணு எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா?”
“அந்த ரெண்டு பொண்ணுங்க அவங்க பிரெண்டு கல்யாணத்துக்கு இங்க வந்து இருக்காங்க. அவங்க சென்னையை சேர்ந்த பொண்ணுங்க. அவங்க படிச்ச காலேஜ் பேரு தெரிஞ்சு போச்சு மாதவா.”
“அந்த பொண்ணு பேரு என்னன்னு தெரிஞ்சுதா?”
“இல்லைடா. அந்த பொண்ணு பேரு என்னால கண்டுபிடிக்க முடியல.”
“இதை கண்டுபிடிக்கவே எனக்கு ஒரு வருஷம் ஆயிடுச்சு டா. அந்த இரண்டு பொண்ணுங்களோட பிரெண்டு கல்யாணமாகி வேற ஒரு ஊருக்கு போயிட்டதால கண்டுபிடிக்க லேட்டாயிடுச்சு”
“சரிடா. இந்த இன்பர்மேஷன் எனக்கு போதும். நான் அவளை கண்டு பிடித்து விடுவேன்.” என்று உற்சாகமாக கூறினான் மாதவன்.
அந்த வாரக் கடைசியில் அந்த கல்லூரிக்கு விசாரிப்பதற்காக சென்றான்.
அப்போது மதுமிதா மற்றும் கீதா அந்த கல்லூரியில் இருந்து வெளியில் வருவதை பார்த்தான்.
அவளைப் பின்தொடர்ந்து அவள் வீட்டை கண்டு பிடித்தான். பிறகும் அவளை பின் தொடர்ந்து அன்று டிநகரில் துணிக்கடை ஒன்றில் நுழைந்தான்.
அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண்கள் அவளைப் பெயர் சொல்லி அழைக்கும் போது தான் முதல் முறையாக அவள் பெயரை அவன் தெரிந்து கொண்டான். இப்படி நடந்த எல்லாவற்றையும் கீதாவிடம் சொன்னான் அவன்.
இதனை ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்த கீதா மலைத்துப் போனாள்.
“நான் மதுமிதாவை உயிருக்கு உயிரா லவ் பண்றேன். ஆனா அவளை ஃபாலோ பண்ணின இந்த கொஞ்ச நாளில் அவள் என்னை வெறுக்கிறா
ன்னு தெரிஞ்சுகிட்டேன். இப்படி முழு மனதுடன் என்னை வெறுக்கிற ஒரு பெண்ணை, உண்மையை மறைத்து கல்யாணம் பண்ணிக்க எனக்கு தயக்கமா இருக்கு.” என்றான் மாதவன்.
“அவள் உங்களை தப்பா புரிஞ்சுகிட்தால தான் வெறுக்கிறாள்.” என்றாள் கீதா.
“அது எனக்கும் புரியுது. இருந்தாலும் நீங்க எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.”
“என்ன பண்ணனும்?”
“ எனக்காக நீங்க அவள் கிட்ட பேசணும். பேசி எனக்கு ஒரு விஷயம் கேட்டு சொல்லணும். என் மேல தப்பு இல்லைன்னு நான் நிரூபித்தால் அவளுக்கு என் மேல இருக்கிற வெறுப்பு மறையுமான்னு கேட்டு சொல்லணும்.
உண்மை தெரிந்ததுக்கு அப்புறம் அவள் என்னை வெறுக்க மாட்டான்னு தெரியவந்தால் தான் நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிற வேலையில் இறங்குவேன். அவளோட சந்தோஷம் எனக்கு ரொம்ப முக்கியம். என்னோட சந்தோஷத்துக்காக அவளிடம் உண்மையை மறைத்து கல்யாணம் பண்ணிக்கிட்டு அதுக்கப்புறம் அவளுக்கு இந்த விஷயம் தெரியவந்து அவள் கஷ்டப்படுவதில் எனக்கு இஷ்டம் கிடையாது. அதனால் தான் நான் உங்ககிட்ட ஹெல்ப் கேட்கிறேன்.” என்றான் மாதவன்.
இவனது சந்தோஷத்தை மட்டும் பெரிதாக நினைக்காமல் மதுமிதாவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் அவனது நல்ல மனதையும் உண்மையான காதலையும் புரிந்து கொண்டாள் கீதா.
“நான் கண்டிப்பா உங்களுக்கு இந்த ஹெல்ப் பண்றேன். நாளைக்கு அவளை அண்ணா டவர் பார்க் கூட்டிட்டு வந்து இதை பத்தி பேசறேன். நீங்களும் வாங்க. அவ சொல்ற பதிலை நீங்களே கேளுங்க.” என்றாள் கீதா.
“அப்புறம் இன்னொரு விஷயம். திருவிழாவில் பார்த்தது நானானு அவள் கேட்டால் நீங்க…….” என்று முடிக்காமல் தயங்கினான்.
“கேட்டால், நான் நீங்க அவன் இல்லைன்னு சொல்லிடறேன். ஓகேவா?” இதை நான் உங்களுக்காக செய்யல. மதுமிதாவுக்கு ஒரு நல்ல ஹஸ்பண்ட் கிடைக்கனும்னு செய்கிறேன்.” என்றாள் கீதா.