“என்னடா இப்படி பேசுற? அவனவன் கல்யாணம் ஆனால் குட்டி போட்ட பூனை மாதிரி பொண்டாட்டியை சுத்திட்டு இருப்பான். நீ என்னடானா இப்படி பண்ற.” என்று சலித்துக்கொண்டார் அண்ணாமலை.
“சரிடா இன்னும் அரை மணி நேரம் உனக்கு டைம் தரேன். அதுக்குள்ள என்ன சொல்லணுமோ சொல்லிடு. அதுக்கு அப்புறம் ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது. அவ்வளவுதான்.” என்று சென்று நாற்காலியில் அமர்ந்தார் அண்ணாமலை.
மாதவன் மேஸ்திரியை அழைத்து அவன் சொல்ல வேண்டிய வேலைகளை சொன்னான்.
சொல்லி முடிப்பதற்கும் அரை மணி நேரம் முடியவும் சரியாக இருந்தது. எனவே அண்ணாமலை அவனிடம் சென்றார்.
“டைமாச்சு கிளம்பு. இதுக்கு மேல என்னோட பொறுமையை சோதிக்காதே. அப்புறம் உங்க அம்மா…” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பார்வதி அண்ணாமலையின் கைபேசியில் அழைத்தார்.
“உங்க அம்மாவுக்கு 100 ஆயுசு. இப்பதான் சொல்லிட்டு இருந்தேன். கால் பண்ணிட்டா. கிளம்புடா.” என்று கழுத்தை பிடித்து தள்ளாத குறையாக தள்ளினார் அண்ணாமலை.
மாதவன் மனம் இல்லாமலேயே அந்த இடத்தை விட்டு கிளம்பி வீட்டிற்கு வந்தான்.
வீட்டில் நான்கு பெண்மணிகள் இருந்தனர்.
“என்னப்பா மாதவா புது பொண்டாட்டி வீட்டில் இருக்கும்போது காலங்காத்தால வேலைக்கு கிளம்பிட்டியா? என்னடா நடக்குது இங்க?” என்று ஆச்சரியமாக கேட்டார்.
“ஆடு, மாடு, கோழி எல்லாம் நடக்குது. சும்மா இருங்க அத்தை. ஒரு முக்கியமான வேலை இருந்தது. அதனால தான் போனேன்.” என்றான் மாதவன் சாதாரணமாக.
“சரி வந்து இவள் பக்கத்துல உட்காரு. கல்யாணத்துக்கு வர முடியல. ஜோடிப்பொருத்தம் எப்படி இருக்குனு பார்க்கலாம்.” என்று அவனை அழைத்து மதுமிதா பக்கத்தில் உட்கார வைத்தார் அந்தப் பெண்மணி.
உட்கார்ந்த பிறகு இருவரையும் பார்த்த பெண்மணிகள் “ஜோடிப்பொருத்தம் நல்லாதான் இருக்கு. ஆனால் நீ புடவை கட்டி இருக்கலாம்.” என்று மதுமிதாவை பார்த்து கூறினர்.
மதுமிதா எதுவும் சொல்லாமல் புன்னகைத்தாள்.
சிறிது நேரம் பேசிவிட்டு உணவை முடித்த பிறகு அவர்கள் சென்றனர்.
“மாதவா இன்னிக்கு நைட் நீங்க ரெண்டு பேரும் சென்னைக்கு கிளம்புறீங்க.” என்றார் பார்வதி .
“என்னமா என்ன சொல்றீங்க? எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று பழைய பல்லவியை பாடினான் மாதவன்.
“டேய் நீ மறு வீட்டுக்கு போகணும் டா. துணியை எடுத்து வச்சுக்கிட்டு கிளம்பு.”
“கண்டிப்பா போகணுமா?” என்று கேட்டான்.
“ஆமாண்டா போய் அங்கு ஒரு வாரம் இருக்கணும்.” என்றார் பார்வதி.
இதனைக்கேட்ட அவன் “என்ன ஒரு வாரமா?” என்று அதிர்ச்சியாக கேட்டான்.
அவனை முறைத்தாள் மதுமிதா .
‘நான் மொத்தமா இங்கயே வந்துட்டேன். ஒருவாரம் என்கூட அங்க வந்து இருக்க அவ்ளோ கஷ்டமா இருக்கா? இருக்கட்டும். இருக்கட்டும். பார்த்துக்கிறேன்.’ என்று நினைத்துக்கொண்டாள் மதுமிதா.
அவளை மாதவன் கவனிக்கவில்லை என்றாலும் பார்வதி கவனித்து விட்டார்.
‘இந்த பொண்ணு கோபமா இவனை பார்த்து முறைத்துக் கொண்டு இருக்கு. இவனுக்கு இருக்கு இன்னிக்கு.’ என்று நினைத்து மகனுக்காக சிறிது வருத்தப்பட்டார்.
“ ஆமாண்டா ஒரு வாரம் தான். இருந்துட்டு வா.”என்றார்.
“என்னமோ பள்ளிக்கூடத்துக்கு போகனுமான்னு கேட்கிற பள்ளிக்கூட பையன் மாதிரியே பேசறான்.” என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டார் பார்வதி.
“வாங்க மாப்பிள்ளை.” என்று வாய் நிறைய வரவேற்றார் வள்ளி.
மதுமிதா தாயைப் பார்த்ததும் ஓடிச்சென்று கட்டிப்பிடித்துக்கொண்டாள்.
தொடர்ந்து வந்து சிதம்பரம் மற்றும் மதுசுதன் மாதவனை வரவேற்றனர்.
“வள்ளி பிள்ளைகள் பசியில இருப்பாங்க. சாப்பிட கொடு.” என்றார் சிதம்பரம் .
“ஆமாம் அம்மா. இவர் கூட வழியில் ஹோட்டலில் சாப்பிடலாம்னு சொன்னார். நான் தான் எங்க அம்மா கையால தான் சாப்பிடுவேன்u இவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்.”
“எனக்கு தெரியும் உன்னை பத்தி. அதனாலதான் நான் உனக்கு பிடித்த பன்னீர் குருமா செய்து வைத்திருக்கிறேன். ஒரு நிமிஷம் உக்காருங்க. சப்பாத்தி போட்டு எடுத்துட்டு வர்றேன்.” என்று விட்டு பரபரப்பாக சமையலறைக்குள் நுழைந்தார் வள்ளி.
“நீங்க ரெண்டு பேரும் ரூமுக்கு போயி டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க.” என்றார் சிதம்பரம்.
மாதவன் முதலில் சட்டையை மாற்றி டி ஷர்ட் அணிந்து கொண்டு வெளியில் வந்தான்.
பிறகு மதுமிதா பஜாமா அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.
சூடாக சப்பாத்தி எடுத்துவந்து இருவருக்கும் டைனிங் டேபிளில் பரிமாறினார் வள்ளி.
மதுமிதா ரசித்து சாப்பிட்டாள்.
மாதவனும் சாப்பிட்டுவிட்டு “ரொம்ப நல்லா இருக்கு அத்தை.” என்றான்.
“நாளைக்கு உங்களுக்கு காலையில என்ன வேணும் சொல்லுங்க மாப்பிள்ளை.” என்று கேட்டார் வள்ளி
“எனக்கு எல்லாமே பிடிக்கும். நீங்க எது வேணாலும் பண்ணுங்க.” என்றான் பொதுவாக.
“அவரை விடுங்க. எனக்கு நாளைக்கு இடியாப்பம் குருமா பண்ணுங்க.” என்றாள் மதுமிதா.
“சரி மது. அதையே செய்கிறேன்.”. என்றார் வள்ளி
வரும்பொழுது காரில் தூங்கியதால் தூக்கம் வரவில்லை மதுமிதாவுக்கு. தன் அறையில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு ஹெட்போன் போட்டுக்கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்தாள்.
“மது” என்று மாதவன் கூப்பிட்டான். அவள் காதில் விழவே இல்லை. எனவே அவள் தோளை தட்டி “மது” என்றான்.
அவள் ஹெட்போனை காதிலிருந்து கழட்டி விட்டு “என்ன?” என்றாள். “என்ன பாட்டு கேக்குற?” என்று பேச்சு கொடுத்தான்.
“சொல்ல முடியாது.” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் மதுமிதா.
“ஏன் என்னாச்சு?” என்று புரியாமல் கேட்டான் மாதவன்.
“நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு உங்க வீட்டுக்.கே வந்துட்டேன். ஆனால் நீங்க என் கூட இங்கே ஒரு வாரம் தங்க அப்படி யோசிக்கிறீங்க.” என்று மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“ ஓ இதுதான் காரணமா? நம்ம கடையில் ….” என்று அவன் ஆரம்பித்ததும் எரிச்சலுடன் இடைமறித்தாள் மதுமிதா.
“எப்ப பார்த்தாலும் வேலை தானா ? உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன பாடு பட போகிறேனோ தெரியல.” என்றாள் கோபமாக.
“மது நாம ரெண்டு பேரும் இங்க சண்டை போடவா வந்தோம்?” என்று கேட்டான்.
“நானா உங்ககிட்ட வேணும்னே சண்டை போடறேன்? நீங்கதான் என்னை சண்டை போட வைக்கிறீங்க.”” என்று எரிச்சல் பட்டாள்.
“சரி. நான் அப்படி பேசினது தப்புதான். சாரி.” என்றான் மாதவன் இறங்கிய குரலில்.
“சரி சரி. நானும் உங்களை மன்னிச்சிட்டேன்.” என்றாள் மதுமிதா புன்னகையுடன்.
“சரி அதை விடு. இந்த ஒரு வாரம் நான் உன்கூட தான் இருக்க போகிறேன் . நாளையிலிருந்து நாம ரெண்டு பேரும் இந்த சென்னையை சுத்த போகிறோம். நீ போதும் போதும்னு சொல்லுற வரைக்கும் நாம ரெண்டு பேரும் சுத்துவோம். எங்க எங்க போகலாம்னு சொல்லு.” என்று கேட்டான்.
மதுமிதா ஆர்வமாக எங்கு எங்கு போகவேண்டும் என்று ஒரு பெரிய பட்டியல் இட்டாள்.
அவனும் சலிக்காமல் “சரி போகலாம்” என்றான்.