நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
காலை வெயில் முகத்தில் பட எழுந்தாள் மதுமிதா.
“அம்மா” என்றபடி கண்களை திறந்தாள்.
திறந்ததும் தான் தெரிந்தது தான் தாய் வீட்டில் இல்லை என்பது.
சிதம்பரம் மனைவி மகனுடன் முன்தினம் இரவே சென்னைக்கு திரும்பி இருந்தார். மதுமிதாவை அண்ணாமலை வீட்டில் விட்டுவிட்டு செல்லும்பொழுது சிதம்பரம் மற்றும் வள்ளி அண்ணாமலை மற்றும் பார்வதியை பார்த்த பேசினார்கள்.
“அண்ணாமலை, மதுமிதாவை நாங்க கொஞ்சம் செல்லமா வளர்த்து விட்டோம். அதனால அவ ஏதாவது தப்பு பண்ணினாலும் நீங்க….” என்று முடிக்காமல் தயங்கினார் சிதம்பரம்.
“சிதம்பரம் நீ ஒன்னும் கவலைப்படாதே. அவளும் எனக்கு பொண்ணு மாதிரிதான்.” என்றார் அண்ணாமலை.
“எங்க வீட்டில அவள் சந்தோஷமா இருப்பா.” என்றார் பார்வதி.
“அது போதும் எனக்கு.” என்றார் வள்ளி.
மதுசூதனனால் கண்ணீரை அடக்க முடியவில்லை. குனிந்தபடியே தனியாக ஒரு இடத்திற்கு சென்று அழுது கொண்டிருந்தான்.
மதுமிதா அவளிடம் வந்தாள்.
“என்ன அண்ணா, இனி உன் கூட தினமும் சண்டை போட நான் அங்க இருக்க மாட்டேன். நீ காரை எடுத்துக்கிட்டு ஜாலியா பிரெண்ட்ஸ் கூட சுத்தலாம்.” என்று மதுமிதா தன் பிரிவு துயரை மறைத்துக்கொண்டு சொல்லவும் மதுசூதன் வெளிப்படையாகவே அழத் தொடங்கிவிட்டான்.
அவனைப்பார்த்து வள்ளியும் அழ மதுமிதாவும் அழ ஆரம்பித்து விட்டாள்.
சிதம்பரம் “என்ன இப்படி அழுதுகிட்டு இருக்கீங்க? மதுமிதா இங்கேதான் இருக்கப் போகிறா. இன்னும் கொஞ்ச நாளில் நாம இந்த பக்கம் வந்து செட்டில் ஆயிடுவோம். அழாதீங்க.” என்று தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு மனைவி மகனை சமாதானப்படுத்தினார்.
வள்ளி பார்வதி இடம்” சம்மந்தி மதுமிதா, மாப்பிள்ளை ரெண்டு பேரையும் மறு வீட்டுக்கு அனுப்பி வைங்க. ஒரு வாரம் எங்க கூட இருந்துட்டு வரட்டும்.” என்றார் கண்களை துடைத்தபடி.
“அதுக்கு என்ன சம்மந்தி அனுப்பி வைக்கிறோம்.” என்றார் பார்வதி.
செல்வதற்கு முன் பார்வதி மதுமிதாவை தனியாக அழைத்து
“பாத்து நடந்துக்கோ. தினமும் கால் பண்ணு.” என்று ஆரம்பித்து சில அறிவுரைகள் கூறிய பிறகு கண்ணீருடன் விடை பெற்று சென்றார்
அனைத்தும் காலையில் எழுந்ததும் ஞாபகம் வர கண்களில் கண்ணீர் முட்டியது. கண்ணீரை துடைத்துக்கொண்டு மணியை பார்த்தாள்.
மணி ஏழரை ஆகியிருந்தது.
அவசர அவசரமாக குளித்துவிட்டு ஒரு கரும் பச்சை நிற சல்வார் அணிந்து கொண்டு கீழே வந்தாள் .
‘யார் என்ன சொல்வார்களோ?’ என்று நினைத்தபடி பொறுமையாக படிகளில் இறங்கி வந்தாள் மதுமிதா.
“வந்துட்டியா மா, காபி சாப்பிடுறியா இல்லை டிபன் சாப்பிடறியா?” என்று கேட்டார் பார்வதி.
‘அப்பாடி, நாம லேட்டா எழுந்ததை பற்றி எதுவும் கேட்கல.’ என்று ஆறுதல் அடைந்தாள்.
“காபி” என்றாள் மெல்லிய குரலில்.
பார்வதி காபி எடுத்து வந்து கொடுத்தார்.
காபி சூடாக தொண்டையில் இறங்கியது இதமாக இருந்தது.
“ஏன்மா புது பொண்ணு, புடவை கட்டக் கூடாதா?” என்று பாட்டி கேட்டார்.
“அது அது வந்து புடவை கட்ட எனக்கு ரொம்ப டைம் ஆகும். அதனால்தான் சல்வார் போட்டுட்டு வந்துட்டேன்.” என்றாள்.
“புடவை கட்ட டைம் ஆகுமா? புடவை கட்டி உனக்கு பழக்கம் இல்லையா? மலரை பாரு எப்படி அழகா புடவை கட்டிட்டு இருக்கா. கத்துக்கோ அவளைப் பார்த்து.” என்றார்.
“சரிங்க பாட்டி. ஃப்ரீயா இருக்கும்போது அக்கா கிட்ட கேட்டு கற்றுக். கொள்கிறேன்” என்றாள் மதுமிதா சாதாரணமாக
ஆனால் மலர் “அவங்களுக்கு எது வசதியா இருக்குமோ அதை போட்டுக்கட்டும். சும்மா இருங்க பாட்டி. ஏதாவது பேசிக்கிட்டே இருப்பீங்க.” என்று மதுமிதாவுக்கு பரிந்து பேசினாள் மலர்.
பார்வதி ‘இரு மருமகள்களும் இப்படியே எப்பவும் ஒத்துமையா இருக்கணும்.’ என்று நினைத்துக் கொண்டார்.
மதுமிதா மலரிடம் வந்து
“அக்கா நான் ஏதாவது உங்களுக்கு ஹெல்ப் பண்ணட்டுமா?”. என்று கேட்டாள்
“சமையல் வேலை முக்கால்வாசி முடிஞ்சிருச்சு மதுமிதா. ஒன்னும் பெருசா வேலை இல்லை மதுமிதா. நான் பாத்துக்குறேன்.” என்றாள். மலர்.
“சரிங்க அக்கா. ஏதாவது செய்யணும்னா கூப்பிடுங்க. ” என்ற படி பார்வையால் அந்த வீட்டில் மாதவனை தேடினாள் மதுமிதா.
அவளது பார்வையை கவனித்த பார்வதி புரிந்துகொண்டார்.
கணவனை பார்த்து ‘மதுமிதாவை பாருங்க.’ என்று கண்களால் ஜாடை பேசினார்.
அவரும் மதுமிதா யாரையோ பார்வையால் தேடிக் கொண்டிருப்பதை புரிந்துகொண்டார்.
“யாரை?” என்பது போல மனைவியை பார்த்தார்.
பார்வதி லேசாக தலையில் அடித்துக் கொண்டு
“அப்பா புள்ள ரெண்டு பேருமே மக்கு தான் . அவள் மாதவனை தேடிட்டு இருக்காள்.” என்று கணவனுக்கு மட்டும் கேட்கும்படி மெல்லிய குரலில் கூறினார் பார்வதி.
“ஆமாம்.” என்றபடி எழுந்தார் அண்ணாமலை.
“பார்வதி நான் கடைக்கு போயிட்டு மாதவனை வீட்டுக்கு அனுப்புறேன்.” என்று மதுமிதாவுக்கும் கேட்கும்படி சொல்லிவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு வெளியில் சென்றார்.
பார்வதி “மலர் இங்க வா.” என்றார் .
மலர் “என்னங்க அத்தை?”. என்றாள்
“மதுமிதாவுக்கு நீ தோட்டத்தை சுத்தி காட்டு. மீதி இருக்கிற சமையல் வேலையை நான் பார்த்துக்கிறேன்.” என்றார். பார்வதி.
“சரிங்க அத்தை.” என்றபடி மதுமிதாவை அழைத்துக்கொண்டு தோட்டத்துக்கு சென்றாள் மலர்.
தோட்டம் பெரிதாகவும் பச்சை பசேலென்றும் இருந்தது. ஒருபக்கம் கொய்யா, நெல்லி, கருவேப்பிலை, எலுமிச்சை, மாதுளம் போன்ற மரங்களும் ஒருபக்கம் மாமரம், வேப்பமரம், புளியமரம் எலந்த பழ மரமும் இருந்தன.
வெள்ளை, மஞ்சள், சிகப்பு ரோஜா பூக்களும் செம்பருத்தி, குண்டுமல்லி, அந்திமந்தாரை என்று பலவித பூச்செடிகளும் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன.
ஓரிடத்தில் பாத்தி கட்டி தக்காளி, பச்சை மிளகாய், கத்தரி, வெண்டை போன்ற காய்கறி செடிகள் காய்களுடன் பார்க்க பல வண்ணங்களில் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
மதுமிதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மலரை பார்த்து “தோட்டம் ரொம்ப அழகா இருக்கு. பூ, பழம், காய் எல்லாம் கொத்துக்கொத்தாய் இருக்கு. பார்க்கவே கலர்ஃபுல்லா இருக்கு.” என்று பாராட்டினாள்.
“ஆமாம் நம்ம தோட்டக்காரன் நல்லா பார்த்துக்கொள்வான். மாதவனும் நானும் நேரம் கிடைக்கும்போது இங்க பூச்செடிகள் வைப்போம். அப்படி வச்சதுதான் இந்த பூச்செடிகள் எல்லாம்.” என்றாள் மலர்.
“ ரொம்ப ரசனையோட அழகா பண்ணி இருக்கீங்க.” என்றாள் மதுமிதா.
“உங்க வீட்ல கூட நிறைய செடி இருந்தது. நான் பார்த்தேன்.”
“ஆமாம். ஆனால் காய்கறி செடி நாங்க ட்ரை பண்ணினது கிடையாது. இவ்வளவு பழமரங்கள் வைக்க அங்க இடம் கிடையாது.
இனிமேல் நான் இந்த தோட்டத்தில் தான் வாக்கிங் போக போகிறேன். இதையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டே வாக்கிங் போனா கண்ணுக்கும் நல்லது. உடம்புக்கும் நல்லது. நீங்களும் என் கூட வாங்க” என்றாள் மதுமிதா.
“கண்டிப்பா. சாயந்திர நேரம் நான் இந்த தோட்டத்துல ஒரு மணிநேரம் இருப்பேன். நீயும் என்கூட இனிமேல் வா.” என்றாள் மலர்.
“ஓகே” என்றாள் உற்சாகமாக மதுமிதா.
“இந்த இடத்துல ஒரு கண்ணாடி கதவு வரணும். இங்க செல்ப், ஒரு அழகான டோர் வரணும். தரையில ஒயிட் டைல்ஸ், ஒரு பெரிய பூ வரணும்.” என்று செய்ய வேண்டிய வேலைகளை பற்றி வேலையாட்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தான் மாதவன்.
“மாதவா இன்னிக்கி உன்னையும் மதுவையும் பார்க்க கல்யாணத்துக்கு வர முடியாதவாங்க வருவாங்க. அம்மா சொன்னாங்க இல்லையா? இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டுக்கொண்டே அவனிடம் வந்தார் அண்ணாமலை.
அவன் சொன்ன வேலையை கேட்ட அவர்
“என்ன மாதவா கீழே இருக்கிற மூன்று மாடியிலும் ஸ்டோர் ரூம் சின்னதா இருக்குnu இங்க ஒரு பெரிய ஸ்டோர் ரூம் கட்டலாம்னு தானே நாம் ப்ளான் பண்ணிக்கிட்டு இருந்தோம். இப்போ என்ன அழகான டோர் போடணும்னு சொல்ற? பிளானை மாத்திட்டியா?” என்று கேட்டார் புரியாமல் அண்ணாமலை.
“அப்பா நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் வாங்க.” என்று அவரை தனியாக அழைத்து சென்றான்.
“ அப்பா நான் சொன்ன ஸ்டோர் ரூம் வேலையை அவங்க முடிக்க போறாங்க. ஆனால் மீதி இருக்கிற இந்த இடத்தில ஒரு கடை கட்டலாம்u நினைக்கிறேன்.”
“என்னப்பா சொல்ற? அந்த கடை எதுக்கு?”
“அதை நான் அப்புறம் சொல்றேன். இந்த இடம் சும்மா தான் இருக்கு. அதனால ஸ்டோர் ரூம் வேலையோட சேர்த்து இதையும் பண்ணிடலாம்u நினைத்தேன். அதை தான் சொல்லிட்டு இருந்தேன்.”
“சரி மாதவா நீ எது செய்தாலும் கரெக்டா தான் செய்வ. உன் இஷ்டப்படி செய் . வேலை முடிஞ்சிடுச்சு இல்ல? வீட்டுக்கு கிளம்பு. இதுக்கு மேல நீ இங்க இருந்தா உன் அம்மா என்னை தான் திட்டுவா. அதனால முதல்ல நீ கிளம்பு.” என்றார்.
“இல்லப்பா. எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு.” என்று மறுத்தான் மாதவன்.
“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். நீ மொதல்ல கெளம்பு. மதுமிதா கிட்ட கொஞ்ச நேரம் பேசுடா.. அந்த பொண்ணு தப்பா நினைக்க போது” என்றார்.
“சும்மா பேசிக்கிட்டு இருக்க எனக்கு இப்போ நேரம் இல்லை.”