மதுமிதா “இந்த லிப்ஸ்டிக் எனக்கு நல்லா இருக்கா?” என்று அவளது ரோஜா இதழ்களை மாதவனிடம் காண்பித்து கேட்டாள்.
அவளது இதழை அவ்வளவு அருகில் பார்த்த மாதவனுக்கு அங்கு ஒரு முத்தம் கொடுக்கத் தோன்றியது. எனினும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு
“ரொம்ப அழகா இருக்கு.” என்றான்.
“சரி. அப்போ இதையே கொடுத்துடுங்க.”” என்று அந்த பணிப்பெண்ணிடம் சொல்லி வாங்கிக்கொண்டு வந்தனர்.
“மது முதல் தடவையா என்கூட வெளியே வர்ற. உனக்கு என்ன வேணும் சொல்லு.” என்று கேட்டான்.
“எனக்கு எனக்கு ……”என்று யோசித்தாள் மதுமிதா.
“நான் உனக்கு ஒரு புடவை வாங்கி தரட்டுமா?” என்று கேட்டான் மாதவன்.
“என்னை கேட்டீங்க. அப்புறம் நீங்களே சொல்றீங்க?” என்றாள் மதுமிதா.
“சரி உன்னோட ஆசைக்கு ஒன்னு. என்னோட ஆசைக்கு ஒன்னு.” என்று அவளை அழைத்து கொண்டு பட்டுப் புடவை கடைக்கு சென்றான்.
அங்கு பல வண்ண பட்டு புடவைகள் இருந்தன அதில் “இந்த கலர் உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கருநீல நிற புடவை ஒன்றை காட்டி கேட்டான்.
“ரொம்ப அழகா இருக்கு.”. என்று அவள் சொல்லவும் அதை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தனர்
பிறகு நகை கடைக்கு அழைத்துச் சென்றான்.
“இங்கே உன்னோட சாய்ஸ்க்கு ஒன்னு வாங்கலாம்.” என்றான்.
சில நகைகளை பார்த்த மதுமிதா ஒரு ரூபி செட் நகையை பார்த்து “எத்தனை பவுன்?” என்று கேட்டாள்.
“இதுல கம்மல், பிரேஸ்லெட், செயின், மோதிரம் எல்லாமே சேர்த்து அஞ்சு பவுன் ஆகுது.” என்றார் அவர்.
“அஞ்சு பவுனா? விலை அதிகமா இருக்குமே.”
“கல்லுக்கு தனி விலை. பவுனுக்கு தனி விலை. அதனால உங்களுக்கு நஷ்டம் இல்லை. லாபம் தான்.” என்று வியாபாரத்துக்கு வழிவகுத்தான் அந்த கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒருவன்.
மதுமிதா “வேண்டாம்” என்று சொன்னாள்.
இதனை கவனித்த மாதவன்
“மது உனக்கு பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.
“பிடிச்சிருக்கு. ஆனா விலை …..”என்று இழுத்தாள் மதுமிதா .
“உனக்கு பிடிச்சிருக்கு இல்லையா? நான் வாங்குகிறேன்.” என்றவன் பணத்தை கொடுத்து அதை வாங்கினான்.
சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு முடித்த மதுமிதா தான் வாங்கி வந்ததை தாயிடம் காண்பித்தாள். வள்ளிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
சாயந்திரம் வீடு திரும்பிய தந்தை மற்றும் அண்ணனிடம் காண்பித்தாள்.
“மாதவன் இந்த மாதிரி வாங்கி கொடுத்து பழகாதீர்கள். அப்புறம் அடிக்கடி இந்த மாதிரி கேட்க போகிறாள்.” என்று மாதவனை எச்சரிக்கை செய்தான் மதுசுதன்.
“அதுக்கு என்ன? என்னால் முடிஞ்சா செய்வேன்.” என்றான் மாதவன்.
“டேய் அண்ணா எதுக்குடா உனக்கு இந்த வேலை? நான் ஒன்னும் அப்படி எல்லாம் கேட்கிற பொண்ணு கிடையாது. இந்த நகையை கூட நான் வேணாம்னு தான் சொன்னேன். இவர்தான் வாங்கினார்.” என்றாள் மதுமிதா கோபமாக.
“மது. அவன் சும்மா உன் கிட்ட வம்பு பண்றான். அதையெல்லாம் பெருசா எடுத்துக்காதே.”. என்று சமாதானப்படுத்தினார் சிதம்பரம்
பிறகு தொடர்ந்து வந்த அடுத்த சில நாட்கள் இனிதாக கழிந்தது.
அன்று சனிக்கிழமை. விடுமுறை என்பதால் சிதம்பரம், மதுசுதன் வீட்டில் இருந்தனர்.
காலையில் எழுந்ததும் வழக்கம்போல மதுசுதன், சிதம்பரத்துடன் சமையல் அறைக்குள் நுழைந்தார்.
இதனை கவனித்த பள்ளிv
“இன்னிக்கி நீங்க ரெண்டு பேரும் சமைக்க வேண்டாம். மாப்பிள்ளை வீட்ல இருக்காரு. ஏதாவது தப்பா எடுத்துக்க போறாரு.” என்றார்.
அதை கவனித்த மதுமிதா “அவர் ஏன் தப்பா எடுத்துக்க போறாரு? இதில் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? இன்னும் கேட்டால் அவரும் உங்க கூட சேர்ந்து இந்த வேலையை செய்யலாம்.” என்று சொல்லவும் மாதவன் அங்கு வரவும் சரியாக இருந்தது.
“என்ன? என்ன வேலை நான் செய்யலாம்?” என்று மனைவியை பார்த்து கேட்டான் மாதவன்.
“அது ஒண்ணும் இல்லை மாப்பிள்ளை . அவள் ஏதோ விளையாட்டா சொல்லிக்கிட்டு இருந்தா. அதை விடுங்க.” என்று மறைக்க முயன்றார் சிதம்பரம்.
எல்லோரது முகத்தையும் கவனித்த மாதவன்
“ஏதோ விஷயம் இருக்கு. என்கிட்ட சொல்லணும்னு நினைச்சா சொல்லுங்க. இல்ல வேணாம்னு நெனச்சா விட்டுடுங்க.” என்றான் சிறிது சோகமாக.
“மாப்பிள்ளை தப்பா எடுத்துகிட்டாருnu நினைக்கிறேன். ஏதாவது சொல்லி சமாளிங்க” என்றார் வள்ளி சிதம்பரத்திடம் மெல்லிய குரலில்.
“சரி. சரி. இரு.” என்ற சிதம்பரம் யோசித்தார்.
‘சரி. சனிக்கிழமை, நாங்க எல்லாரும் சேர்ந்து பார்க் போவோம்னு சொல்லிவிடலாம்.’ என்று நினைத்து
“எல்லா சனிக்கிழமையும் நா….” என்று அவர் ஆரம்பிக்க
மதுசுதன் “அப்பாவும் நானும் சமைப்போம்.” என்று முடித்து விட்டதோடு நிற்காமல் தந்தையைப் பார்த்து
“என்னப்பா கரெக்டா சொல்லிட்டேனா?” என்று பெருமையாக கேட்டுக்கொண்டான்.
‘சரியான முந்திரிக்கொட்டை.’ என்று உள்ளூர நினைத்துக்கொண்டே
“ சரியா சொல்லிட்ட டா அறிவாளி!” என்று அறிவாளி என்ற சொல்லில் அழுத்தம் கொடுத்து சொன்னார் சிதம்பரம்.
“ஓ அப்படியா?” என்று கேட்டான் மாதவன் ஆச்சரியமாக.
“ஆமாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் வீட்டு ஆண்கள் சமைப்பாங்க. வீட்டுப் பெண்கள் சோபாவில் உட்கார்ந்து கிட்டு டிவி பார்த்துகிட்டு ரிலாக்ஸ்டா இருப்போம். வீட்டு பெண்களுக்கும் ரெஸ்ட் வேணும் இல்லையா?” என்று விளக்கினாள் மதுமிதா.
‘சுத்தம்’ ‘இதையும் சொல்லி விட்டாளா’என்று நினைத்துக்கொண்டார் வள்ளி.
“நல்ல யோசனை. அப்போ நானும் வரேன். செய்யலாம் வாங்க.” என்றான் மாதவன்.
மதுசுதன் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
வள்ளி “அய்யோ அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை. அவள் ஏதோ விளையாட்டா சொல்கிறாள். நீங்க பெருசா எடுத்துக்காதீங்க? என்று பதறியபடி கூறினார்.
“ஆமா மாப்பிள்ளை. நீங்க வாங்க நாம போகலாம். வள்ளியே இன்னிக்கி சமைக்கட்டும்.” என்றபடி மாதவனை ஹாலிற்கு அழைத்தார்.
“அப்போ நான் இந்த வீட்டு ஆள் இல்லையா?” என்று சிறிது சோகமாக கேட்டான் மாதவன்.
“ஐயோ அப்படி சொல்ல வரலை மாப்பிள்ளை. நீங்க எப்படி இங்க…” என்று கேட்டார் சிதம்பரம்.
“எனக்கு சமையல் தெரியாது. நீங்கள் ஏதாவது சொல்லுங்க. நான் செய்றேன்.” என்றான் மாதவன்.
“இல்லை மாப்பிள்ளை. வேண்டாம்.” என்று வள்ளி கூறவும்
மாதவன்
“சரி அப்போ நீங்க என்னை இந்த வீட்டு பிள்ளையா நினைக்கல. சரி விடுங்க.” நான் ஹாலிற்கு போய் விருந்தாளி மாதிரி உட்கார்ந்து கிட்டு இருக்கேன்.” என்று திரும்பினான்.
இதை கவனித்த சிதம்பரம்
“மாப்பிள்ளை மாப்பிள்ளை சரி நீங்களும் வாங்க. நாம மூணு பேரும் இன்னிக்கி சமைக்கலாம்.” என்று அவனையும் அழைத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார் சிதம்பரம்.
வள்ளிக்குதான் தர்மசங்கடமாக இருந்தது.
மதுமிதா சாவகாசமாக சோபாவில் உட்கார்ந்துகொண்டு தொலைக்காட்சியை உயிர்ப்பித்து விட்டு செந்தில் கவுண்டமணி நகைச்சுவையை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
“பெட்ரமாஸ் லைட்டேதான் வேணுமா?” என்ற கவுண்டமணி நகைச்சுவை பார்த்து “ஹாஹாஹாஹா” என்று பலமாக குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டிருந்தாள் மதுமிதா.
அவள் தோளை தட்டி வள்ளி
“ஏய் மது உனக்கு எப்படி தாண்டி சிரிப்பு வருது? பாவம் மாப்பிள்ளை. அங்க அடுப்படியில் வேர்க்க விருவிருக்க வேலை செய்துகொண்டு இருக்காரு. வீட்டுக்கு விருந்துக்கு வந்த மாப்பிள்ளையை இப்படியா வேலை செய்ய விடுவாங்க?” என்று மகளிடம் கோபத்தை காட்டினார்.
“இது என்னடா வம்பா போச்சு? நான் என்னமோ அவர்கிட்ட போய் நீங்கதான் எல்லோருக்கும் சமைக்கவேண்டும்u சொன்ன மாதிரி என்கிட்ட கோபத்தை காட்டுறீங்க. அவரா செய்யறேன்னு கிச்சனுக்கு போனா, நான் என்னம்மா பண்ண முடியும் ?”
“நீ வேணான்னு சொல்லணும். அதான் நீயும் அப்பாவும் சொன்னீர்களே. அவர் கேட்டாரா?” என்று தாயைப் பார்த்து கேட்டாள் மதுமிதா.
“அது அது வந்து… நீ சொல்லி இருந்தால் கேட்டு இருப்பார். என்று நினைக்கிறேன்.” என்று சந்தேகமாகவே சொன்னார் வள்ளி.
“பார்த்தீங்களா? உங்களுக்கே கன்ஃபார்மா தெரியல. அப்புறம் என் மேல பழி சொல்றீங்க.” என்று கேட்டாள் .
“அது இல்லடி மாப்பிள்ளையின் அப்பா அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியவந்தால் அவங்க நம்மை தான் தப்பா நினைப்பாங்க.”
“அம்மா. அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது. அவரா ஆசைப்பட்டு ஏதோ பண்றாரு. நாம வேணாம்னு சொல்லியும் கேட்கல. இதுக்கு மேல நம்மை யாரும் தப்பு சொல்ல முடியாது. நீங்க ஃப்ரீயா விடுங்க. அவங்க வீட்ல நான் சமையல் வேலை செய்வேன் தானே. அதை நீங்க தப்புன்னு சொல்லுவீங்களா?”
“மது. அது வேற. இது வேற. உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது?” என்று கேட்டார் வள்ளி.
“அம்மா உங்களுக்கு தான் புரிய மாட்டேங்குது. ஒண்ணுமே இல்லாத விஷயத்தை நினைச்சு குழப்பிக் கொண்டு இருக்கீங்க. டிவி பார்த்து என்ஜாய் பண்ணுங்க.” என்றாள் மகள்.
ஆனால் வள்ளியால் அப்படி இருக்க முடியவில்லை.
சமையலறை வாசலில் நின்றுகொண்டு
“மாப்பிள்ளை நீங்க எதுக்கு இதையெல்லாம் பண்ணிக்கிட்டு?” என்றார்.
ஆனால் மாதவன் “அத்தை நீங்க இன்னிக்கி கிச்சனுக்குள் வரவே கூடாது.” என்று உறுதியாக சொல்லவும் அங்கேயே நின்று அவனை பார்த்துக் கொண்டிருந்தார்.
காய்கறிகளை சிதம்பரம் சொன்ன விதத்தில் வெட்டி கொடுத்துக்கொண்டிருந்தான் மாதவன் .
மதுசுதன் புளி கரைத்து கொண்டிருந்தான்.
சிதம்பரம் சாதம் வடித்துக்கொண்டிருந்தார்.
சிறுது நேரம் கழித்து மதுமிதாவும் சமையலறை வாசலில் வந்து நின்று பார்க்க ஆரம்பித்தாள்.
மாதவன் மிக மும்முரமாக தன் வேலையில் மூழ்கி இருந்தான். கருவேப்பிலை முதல் எல்லா காய்கறிகளையும் வெட்டிக் கொடுத்தான்.
சிதம்பரத்திற்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
மதுமிதாவுக்கு மாதவன் மீது அன்பும் மரியாதையும் கூடிக்கொண்டே போனது.
காதோரம் வியர்வை வழிய வேலை செய்து கொண்டிருந்த கணவனை கட்டியணைத்து முத்தம் கொடுக்க தோன்றியது.
தோன்றிய அடுத்த கணமே ‘நாம இப்படி நினைத்தோம்?” என்று ஆச்சரியமாகக் கூட இருந்தது.
“எனக்கு கொஞ்சம் தண்ணீர் வேண்டும்.” என்று சொல்லி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்த மதுமிதா தன் கையிலிருந்த கைபேசியை எடுத்து எல்லோருடனும் ஒரு செல்பி எடுத்துக்கொண்டாள்.
பிறகு தனித்தனியாக ஒவ்வொருவருடனும் செல்பி எடுத்தாள். அப்போது மாதவனுடன் செல்பி எடுத்த போது அவனது வியர்வை அவள் மீது லேசாக பட அதை கவனித்த மாதவன்
“சாரி” என்றான்.
“இட்ஸ் ஓகே.” என்றவள் அவனுக்கு மிக அருகில் சென்று ஒரு செல்பி எடுத்துக்கொண்டாள்.
அவனது வாசம் அவள் நாசியைத் தொட்டு அவளை ஏதோ செய்தது.
“சாதம், சாம்பார், ரசம், பூசணிக் கூட்டு, வெண்டைக்காய் பொரியல் மற்றும் கேசரி செய்திருந்தனர்.
டைனிங் டேபிளில் அமர்ந்து அனைவரும் பேசியபடி சாப்பிட்டனர்.
சாப்பிட்ட பிறகு மதுசூதன் ஒரு நகைச்சுவை படத்தை தொலைக்காட்சியில் போட அனைவரும் சேர்ந்து சிரித்தபடி பார்த்து மகிழ்ந்தனர்.
மாதவன் மெல்லமெல்ல அந்த வீட்டில் இருந்த அனைவரது மனதிலும் இடம் பிடித்துக் கொண்டிருந்தான்.