நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மதுமிதா அறைக்கு சென்று புடவையை மாற்றி சல்வார் அணிந்து கீழே இறங்கி வந்து கொண்டிருந்தாள். அப்போது கீழே பேசிக்கொண்டிருப்பது அவள் காதில் விழுந்தது.
மதுமிதாவின் மனதை புரிந்து கொண்ட மலர் குடும்பத்தினரிடம் பேசினாள். எல்லோரும் சேர்ந்து மதுமிதா, மாதவன் இருவரையும் தேன்நிலவு அனுப்ப முடிவு செய்தனர்
ஆறுமுகம் மாதவனிடம் “ஹனிமூன் போயிட்டு வாடா. எந்த ஊருக்கு போறேன்னு சொல்லு. நான் உனக்கு இப்பவே டிக்கெட் போடறேன்.” என்றான்.
“அண்ணா எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. இப்போ எனக்கு ஹனிமூன் போற ஐடியா இல்ல.”
“என்னடா இப்படி சொல்ற?”
“ஆனா இப்ப போகாமல் வேற எப்ப போவாங்க?” என்று கேட்டாள் மலர்.
“ஒரு நாலஞ்சு நாள் போயிட்டு வாடா.” என்றார் பார்வதி.
“அட போம்மா. ஏற்கனவே ஒரு வாரம் சென்னைக்கு போயிட்டு வந்ததுல வேலை நிறைய சேர்ந்து போயி இருக்கு. இதுல ஹனிமொன் வேறயா? அதுக்கெல்லாம் எனக்கு நேரமே கிடையாது.” என்றான்.
“என்னடா இப்படி சொல்ற? உனக்கு அந்த மாதிரி ஆசை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மதுமிதாவுக்கு அந்த மாதிரி ஆசை இருக்கும் இல்லையா?” என்று கேட்டார் பார்வதி .
“ஹனிமூன் போகணும்னு அவள் உங்க கிட்ட வந்து சொன்னாளா?” என்று கேட்டான் மாதவன்.
“இல்லை” என்று பார்வதி சொல்லவும்
“அப்புறம் எதுக்குமா? விடுங்க. ரெண்டு மாசம் போகட்டும். அதுக்கப்புறம் பார்ப்போம்.” என்றான் மாதவன்.
உண்மையில் மாதவன் கடை வேலையோடு சேர்த்து நகையை தேடும் வேலையையும் செய்து கொண்டிருந்தான். அதனை பாதியில் விட்டு தேனிலவு செல்லவும் முடியாமல்
யாரிடமும் சொல்ல முடியாமல் அப்படி பேசினான்.
இவர்கள் பேச்சை படியில் நின்றபடி கேட்டுக்கொண்டிருந்த மதுமிதா ஹனிமூன் பேச்சை எடுத்ததும் ஆர்வமாக கேட்க ஆரம்பித்தாள்.
ஆனால் மாதவன் வேண்டாமென்று உறுதியாக மறுத்ததும் சோர்ந்து போனாள்.
ஹாலிற்கு செல்ல மனமின்றி தோட்டத்திற்கு சென்றாள்.
கல்யாணம் ஆன நாளில் இருந்தே குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் சகஜமாக பழகும் மாதவன் தன்னிடம் மட்டும் சிறிது ஒதுங்கி இருப்பது போல அவளுக்கு தோன்றியது.
‘என் மேல பாசமா இருக்கற மாதிரிதான் தெரியுது. ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம் என்கிட்ட அவனுக்கு இருக்கு. அது என்னன்னு தெரியல.’ என்று யோசித்தாள் சிறிது நேரம் யோசித்த பிறகு
‘ஒரு வேளை மூணு மாசம் இவனை புரிஞ்சிக்க டைம் கேட்டேன் இல்லையா அதனால என்கிட்ட இருந்து ஒதுங்கி போகிறானா?’ என்று யோசித்தவள் ‘அப்படித்தான் இருக்கும்’ என்று முடிவுக்கு வந்தாள்.
‘ச நான் ஏன் தான் அப்படி டைம் கேட்டேனோ இல்லைனா, இந்நேரம் என்கூட சகஜமா பழகி இருப்பான். என் மேல தான் தப்பு.’ என்று நினைத்தாள்.
‘சரி பரவாயில்லை. கொஞ்ச நாள் தானே. பரவாயில்லை.’ என்று முடிவு செய்தாள்.
அதற்கு பிறகு வந்த நாட்கள் மிக இனிமையாக கழிந்தது.
காலை ஆறரை மணிக்கு கீழே இறங்கி வருபவள் தோட்டத்தில் சிறிது நேரம் நடைபயிற்சி முடித்து குளித்துவிட்டு மலருக்கு சமையலறையில் உதவுவாள்.
பார்வதிக்கு பூஜையறையில் உதவுவாள். மாதவன், ஆறுமுகம், சிதம்பரம், அண்ணாமலை நால்வருக்கும் சாப்பாடு பரிமாறுவாள். சாயந்திரம் ஆதித்யா பள்ளியில் இருந்து வந்ததும் அவனுடன் சிறிது நேரம் தோட்டத்தில் விளையாடுவாள். இரவு உணவு செய்ய உதவுவாள். பிறகு அனைவரும் சேர்ந்து சாப்பிட்ட பிறகு உறங்கச் செல்வாள்.
நேரம் கிடைக்கும்போது சென்னையில் இருந்து வாங்கி வந்த மூன்று புடவைகளிலும் ஒரே மாதிரி வேலைப்பாடு செய்வாள். இப்படி ஒரு மாதகாலம் இனிமையாக கழிந்தது.
அன்று கிருத்திகை.
“மது, மலர் வாங்க. சீக்கிரம் போனா தான் கூட்டம் இருக்காது. லேட்டா போனா கூட்டம் அதிகமாகி விடும். அப்புறம் நாம தரிசனம் முடிச்சுட்டு வீட்டுக்கு வர்றதுக்கு லேட் ஆகிடும்.” என்று பரபரத்துக் கொண்டிருந்தார் பார்வதி.
“இதோ வந்துட்டேன் அத்தை. இவன் தான் லேட் பண்றான்.” என்று ஆதித்யாவை கையில் பிடித்து இழுத்தபடி வந்துகொண்டிருந்தாள் மலர்.
“இங்கே பாருங்க அத்தை. இவன் இந்த சட்டை வேண்டாமாம். வேற சட்டை வேணும்னு அடம் பிடிக்கிறான்.” என்று மகனை காட்டி புகார் கொடுத்து கொண்டிருந்தாள் மலர்.
“ஏன்டா அடம் பிடிக்கிற? இந்த சட்டைக்கு என்ன குறைச்சல்?” என்று கேட்டார் பார்வதி.
“அட போங்க பாட்டி. எப்ப கோயிலுக்கு போனாலும் இதே சட்டைதான் அம்மா எனக்கு போடுறாங்க. அலமாரியில் புது சட்டை நிறைய இருக்கு. அதை எல்லாம் போடவே விட மாட்டேங்கிறாங்க.” என்று தாய் மீது புகார் கொடுத்தான் மகன்.
“ஏன் மலர் போட மாட்டேங்குற?” என்று மருமகளைப் பார்த்து நீதிபதி குற்றம்சாட்டியவரை விசாரிப்பது போல விசாரித்தார் பார்வதி.
“இவன் கோயிலுக்கு போனால் அங்கே இருக்கிற விளக்கை எடுத்து விளையாடி அந்த எண்ணெய் பசையை சட்டையில் பூசிக்கிறான். அதனால சட்டை எல்லாம் வீணா போகுது. அதனாலதான் இந்த டார்க் கலர் சட்டையை எப்ப கோயிலுக்கு போனாலும் எடுத்து போட்டு விடறேன். இதுல என்ன அத்தை தப்பு இருக்கு?” என்று மாமியாரை பார்த்து கேட்டாள் மருமகள்.
“நீ ஏன்டா அப்படி பண்ற?”. என்று பேரனை பார்த்து கேட்டார் பார்வதி
“ நான் என்ன பண்றது பாட்டி? பாட்டி அந்த விளக்கை பார்த்தால் எனக்கு எடுத்து விளையாடனும் போல இருக்கு. விளையாடினா என் டிரஸ் அழுக்கு ஆயிடுது. இதுல என்னோட தப்பு என்ன? நான் சின்ன பையன் தானே விளையாட கூடாதா?” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான் ஆதித்யா.
அவன் முகத்தை பார்த்த பார்வதி எல்லாவற்றையும் மறந்து அவனை தூக்கி அணைத்துக் கொண்டார்.
“சரிடா. நான் உனக்கு டார்க் கலர்ல நாலு சட்டை வாங்கி தருகிறேன். அதை மாத்தி போட்டுக்கிட்டு கோயிலுக்கு வா. இன்னிக்கு ஒரு நாள் மட்டும் இந்த டிரஸ்ல வா. சரியா தங்கம்?” என்று அவன் கன்னத்தைத் தடவி கேட்டார் பார்வதி.
“ஓகே பாட்டி. இந்த மாதிரி கொஞ்சி கொஞ்சி சொன்னால்தானே குட்டி பையன் நான் கேட்பேன். எப்ப பார்த்தாலும் இந்த அம்மா என்னை அதட்டிக் கொண்டே இருக்காங்க.” என்று சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு சொன்னவன் பார்வதியின் காதருகில் சென்று ரகசிய குரலில்
“சில நேரம் என் முதுகுல அடி கூட விழும்.” என்று மிக சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு தாயை பற்றி புகார் கூறினான் மகன்.
பார்வதி பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு
“சரிடா ஆதி. இனிமேல் உங்க அம்மா உன்னை அடிக்கக் கூடாதுன்னு நான் ஸ்ட்ரிக்டா சொல்லிடறேன். சரியா? நீ இதுக்கெல்லாம் கவலைப்படாதே.” என்று பேரனுக்கு ஆறுதல் கூறினார் பாட்டி.
அப்போது மதுமிதா கீழே இறங்கி வந்தாள்.
“என்ன மதுமிதா சீக்கிரமா வந்துட்ட? ஓ சல்வார் போட்டுட்டு வந்துட்டியா? நல்ல வேலை, இல்லனா கோயிலையே இழுத்து மூடி இருப்பாங்க.” என்று மருமகளிடம் விளையாடினார் மாமியார்.
“அத்தை நீங்களுமா?” என்று சிணுங்கினாள் சின்ன மருமகள் மதுமிதா.
ஆதித்யா மற்றும் மூன்று பெண்களும் தெருவில் இறங்கினர்.
மதுமிதாவுக்கு கார் ஓட்ட தெரியும் என்பதினால் மாதவன் தன்னுடைய காரை வீட்டிலேயே விட்டு விட்டு செல்ல ஆரம்பித்திருந்தான். அண்ணாமலை, மாதவன் இருவரும் ஒரு காரையே பயன்படுத்திக்கொண்டனர்.
வீட்டுப் பெண்கள் கோயிலுக்கு அல்லது உறவினர் வீட்டுக்கு செல்வதானால் மதுமிதா கார் ஓட்ட மூவரும் செல்வர்.
அப்படி இந்த மூவரும் அந்த ஊரை மகிழ்ச்சியாக சுற்றி வந்தனர்.
இன்றும் அப்படியே மதுமிதா “அத்தை காரை எடுக்கட்டுமா?” என்று பார்வதியைப் பார்த்து கேட்டாள்.
“இல்லை மதுமிதா. இந்த கோயில் பக்கத்துல தான் இருக்கு. நடந்து போயிட்டு வரலாம்.” என்றார்.
“ஓ பக்கத்துல இருக்குற கோயிலுக்கா? சரிங்க அத்தை. காத்து வருது நாம நடந்து போகலாம்.” என்று மூவரும் ஆதித்யாவை அழைத்துக்கொண்டு நடந்து கோயிலுக்கு சென்றனர்.
சுவாமி தரிசனத்தை முடித்துவிட்டு மூவரும் ஓரிடத்தில் அமர்ந்து இருந்தனர்.
அப்போது வழக்கம்போல ஆதித்யா பார்வதி இடம்
“ பாட்டி எனக்கு ரவா லட்டு வாங்கி தாங்க.” என்று கேட்டான்.
“என்னடா இது கெட்ட பழக்கம்? எப்ப வந்தாலும் உனக்கு இந்த கடையில ஏதாவது வாங்கி தரணுமா?” என்று கேட்டாள் மலர்.
“ஆமாம். வாங்கி தரணும்.” என்றான் ஆதித்யா அழுத்தம் திருத்தமாக.
“சரி பரவாயில்லை விடு மலர்.”
“ இல்லை அத்தை. இவங்க எந்த எண்ணெயில் இதையெல்லாம் பண்றாங்கன்னு தெரியல. அடிக்கடி வாங்கி கொடுத்தால் இவனுக்கு வயிற்றுவலி வரப்போகுது.” என்றாள் மலர்.
“ஆதி அம்மா சொல்றதை கேளு. உனக்கு ரவாலட்டு தானே வேணும். நான் உனக்கு நாளைக்கு செஞ்சு தரேன்.” என்று பார்வதி சொல்லவும் அவன்
“எனக்கு இப்பவே வேணும்.” என்று அடம் பிடித்தான்.
“.அம்மா உன்னோட நல்லதுக்கு தான் சொல்றாங்க ஆதி” என்று மதுமிதா சொல்லியும் அவன் கேட்கவில்லை.
“சரி மலர். கொஞ்சம் விட்டு பிடிப்போம். ஆதி இங்க வா.” என்று அவனை அழைத்து மடியில் உட்கார வைத்துக் கொண்டார் பார்வதி.
“இன்னைக்கு ஒரு நாள் மட்டும் சாப்பிடு. ஆனால் அடுத்த தடவை கோயிலுக்கு வரும்போது நீ கேட்கக்கூடாது. ஓகேவா?” என்று கேட்டார் பார்வதி.