“ஓகே பாட்டி.” என்று உற்சாகமாக சொன்னான் ஆதித்யா.
“சரி நான் ஆதித்யாவை கூட்டிட்டு போய் வாங்கிட்டு வரேன். நீங்க ரெண்டு பேரும் இங்கேயே இருங்க.”. என்று அவனை கையில் பிடித்தபடி எழுந்து சென்றார் பார்வதி
அப்போது மலர்
“வீட்டில் விபூதி பாக்கெட் தீந்து போச்சு. இங்க விபூதி வாசனையா இருக்கும். நான் போய் விபூதி பாக்கெட் வாங்கிட்டு வரேன்.” என்று எழுந்து சென்றாள்.
“சரி நானும் வரட்டுமா?” என்று கேட்டாள் மதுமிதா.
“இல்லை மது. அத்தை வந்தாங்கன்னா தேடுவாங்க. இங்கேயே இரு”.என்று விட்டு எழுந்து சென்றாள் மலர்.
மதுமிதா மட்டும் அங்கு தனியாக இருந்தாள் அப்போது அங்கு சரோஜா வந்தாள்.
“என்னம்மா மதுமிதா பொண்ணு எப்படி இருக்க?” என்று கேட்டபடி அவள் பக்கத்தில் அமர்ந்தார்.
“நான் நல்லா இருக்கேன். அப்புறம் உங்களை நான் எப்படி கூப்பிடுறது?” என்று கேட்டாள்.
“மலருக்கு நான் சித்தி. உனக்கும் அதே முறை தான்.” என்று சொல்லவும்
“சரி சித்தி.” என்றாள் மதுமிதா.
“அப்புறம் என்ன கோயிலுக்கு வந்தியா?” என்று கேட்டார்.
“ ஆமாம். அத்தை, மலர், ஆதித்யா, நான் நாலு பேரும் வந்திருக்கிறோம்.” என்றாள்.
“என்ன? உன்னை பார்த்தா பட்டணத்து பொண்ணு மாதிரி இல்லையே. நீயும் மலர், பார்வதி கூட சேர்ந்துகொண்டு கோயில் குளம்னு சுத்திட்டு இருக்க. நீயும் மலர் மாதிரி படிக்கலையா?” என்று கேட்டார்.
“நான் படித்திருக்கிறேன். டிகிரி முடிச்சிருக்கேன்.”
“வேலைக்கு எங்கேயும் போகலையா? இல்லை உன் மாமியார் வீட்டில் உன்னை போகக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களா ?” என்று தன் வேலையை ஆரம்பித்தார் சரோஜா.
“அப்படி எல்லாம் என் மாமியார், மாமனார் சொல்ல மாட்டாங்க. எனக்கு வேலைக்கு போக இஷ்டமில்லை. எனக்கு எம்ப்ராய்டரி, புடவை டிசைன் பண்றது தான் பிடிக்கும்.” என்றாள்.
“அப்படின்னா?” என்று கேட்டார் சரோஜா.
“அப்படினா நீங்க ஒரு பிளைன் புடவை கொடுத்தீங்கன்னா, நான் அதில் எம்பிராய்டரி, கலர் கல்லு, மணி இதெல்லாம் வச்சு தைத்து அழகா அந்தப் புடவையை கிராண்டா மாற்றி கொடுப்பேன்.” என்று விளக்கினாள் மதுமிதா.
“ஓ அப்படியா? இப்போ அதையெல்லாம் பண்றது கிடையாதா? இல்லை பண்ண கூடாதுன்னு சொல்லிட்டாங்களா?” என்று கேட்டார் சரோஜா.
“அப்படி எல்லாம் இல்லை. நான் எனக்கு நேரம் கிடைக்கும்போது சுதாராணி, பார்வதி, அத்தை மலரக்கா மூணு பேருக்கும் புடவையில டிசைன் பண்ணிட்டு தான் இருக்கேன் .”
“அப்போ இந்த மூன்று பேரையும் தாண்டி வேறு யாருக்கும் செய்யறது கிடையாதா? இல்லை அதை செய்ய உனக்கு நேரம் கொடுக்கிறது இல்லையா?” என்றார் மீண்டும் சரோஜா.
மதுமிதா திருமணத்திற்கு பிறகு ஒரு கடையை எடுத்து தன் வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.
ஆனால் திருமணமாகி ஒரு மாதம் ஆன பிறகும் இதைப் பற்றி அவள் யோசிக்கவே இல்லை என்பது சரோஜா இப்படி கேட்டதும் தான் உறைத்தது.
அவளுக்கு நேரம் உண்மையாகவே இனிமையாக கழிந்தது. எனினும் அவள் நேசித்த அவளது தொழிலை அவள் தொடர்ந்து நடத்துவதைப் பற்றி யோசிக்கவில்லை அல்லது யோசிக்க நேரம் இல்லை என்பது சரோஜா கேட்டதும் தான் அவளுக்கு புரிந்தது.
‘இதைப்பற்றி மாதவனிடம் பேச வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டாள்
மதுமிதா.
“இனிமேல்தான் ஒரு கடை எடுத்து அந்த தொழிலை தொடர்ந்து நடத்தனும்.” என்று சரோஜாவிடம் சொன்னாள் மதுமிதா.
இவ்வளவு நேரம் மதுமிதா யோசித்து கொண்டிருந்ததை பார்த்த சரோஜா ‘இவளிடம் நம் பருப்பு வெந்து விடும் போல இருக்கே.சரி சரி. இன்னிக்கு இது போதும். அடுத்த தடவை பார்க்கும்போது இன்னும் நிறைய பேசணும்.’ என்று முடிவெடுத்தார் சரோஜா.
மலர் தூரத்தில் வருவதை பார்த்த சரோஜா
“சரி மதுமிதா சாமர்த்தியமாக நடந்து கொள்.” என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு சென்றார்.
இரவு சாப்பாட்டை முடித்து விட்டு மாதவனும் மதுமிதாவும் தங்கள் அறைக்கு சென்றனர்.
மதுமிதா மாதவனிடம் “டெய்லரிங் தொடர்ந்து பண்ணலாம்னு இருக்கேன். கடை ஏதாவது உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். முதல்ல கடை ஆரம்பிச்சு நாலு பேரு வேலைக்கு சேர்த்து செய்யணும். கடை டெவலப் ஆனதுக்கு அப்புறம் இன்னும் கொஞ்சம் பேரை சேர்த்து கடையை விரிவு பண்ணனும்.” என்றாள் மதுமிதா.
“கண்டிப்பா செய்யலாம் மதுமிதா. நான் பார்க்கிறேன்.” என்றான் அவன்.
“நான் இங்க வந்து கொஞ்ச நாள்தான் ஆகுது. எனக்கு இந்த ஊரை பற்றி பெருசா தெரியாது. எங்க கடை வச்சா நல்லா இருக்கும்?” என்று கேட்டாள் மதுமிதா.
“நம்ம அண்ணாமலை ஸ்டோர் இருக்கிற ரோடு மெயின்ரோடு. அங்க பார்க்கலாம்.” என்றான்.
“சரி. நீங்க பாருங்க. நானும் எனக்கு தெரிஞ்ச வகையில் விசாரிச்சு பார்க்கிறேன்.” என்றாள் மதுமிதா.
“சரி. கடைக்கு என்ன பேரு வைக்கலாம்னு இருக்க?”
“மதுமிதா லேடிஸ் டைலரிங். எப்படி இருக்கு?”
“சூப்பர்” என்றான்.
ஆதித்யாவை பள்ளிக்கு அனுப்பி விட்டு சாவகாசமாக சோபாவில் உட்கார்ந்திருந்தாள் மலர்.
“அக்கா சாப்பிட்டீங்களா?” என்று கேட்டபடி அவள் பக்கத்தில் சென்று உட்கார்ந்தாள் மதுமிதா.
“இனிமே தான் சாப்பிடணும் மது. நீ சாப்டியா?” என்று கேட்டாள் மலர்.
“இனிமேதான் சாப்பிடணும் அக்கா.” என்று மதுமிதா சொல்லவும்
“சரி வா. நாம ரெண்டு பேரும் சாப்பிடலாம்.” என்று இருவரும் சேர்ந்து காலை உணவு சாப்பிட தொடங்கினர்.
இடியாப்பம் தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிட்டனர். சாப்பிட்டபடி மதுமிதா மலரிடம்
“அக்கா நான் சென்னையில் செய்துகொண்டிருந்த டைலரிங் வேலையை இங்கே கண்டினியூ பண்ணலாம்னு இருக்கேன்.”
“அப்படியா நல்ல விஷயம்தானே பண்ணு.” என்றாள் மலர்.
“உங்களுக்கு இந்த ஏரியா தெரியும் இல்லையா? இங்க எங்க கடை வச்சா நல்லா இருக்கும்?” என்று விசாரித்தாள்.
“இது ஒரு கிராமம். திருச்சியிலிருந்து கொஞ்சம் தூரத்தில் இருக்கு. அதனால நீ அண்ணாமலை ஸ்டோர்ஸ் இருக்கிற ஏரியாவில் கடைபிடித்தால் நல்லா இருக்கும். ஆனால் தினமும் நீ போயிட்டு வரணும்.”
“அது பரவாயில்லை அக்கா. நான் போயிட்டு வருவேன்.”
“சரி. மாதவன் கிட்ட சொன்னியா?” என்று கேட்டபடி அங்கு வந்தார் பார்வதி.
“நேத்து தான் சொன்னேன். அவர் பார்த்து சொல்றேன்னு சொல்லியிருக்காரு. எதுக்கும் உங்க எல்லார்கிட்டயும் சொல்லி வைக்கலாம்னு சொல்றேன்.”
“சரிதான். நான் மாமா கிட்ட சொல்றேன். மலர் நீயும் ஆறுமுகம்கிட்ட சொல்லிடு. நாமளும் கோயிலுக்கு போகும்போது இல்ல பக்கத்துல வீட்டில் பேசும்போது இதைப்பற்றி சொல்லி வைப்போம். நல்ல கடை சீக்கிரமாகவே நமக்கு கிடைக்கும்.” என்றார் பார்வதி
இரவு உணவு சாப்பிடும் போது பார்வதி கடையை பற்றி பேசினார்.
“என்னடா மாதவா? மதுவுக்கு ஒரு கடை வேண்டுமாம். பார்த்து சீக்கிரம் சொல்லு.” என்றார்.
“சரி மா. நான் சீக்கிரமே பார்த்து சொல்றேன்.” என்றான் மாதவன்.
மதுமிதா சாப்பிட்டு முடித்து எழுந்து அறைக்கு சென்றாள்.
அண்ணாமலைக்கு ஒன்று தோன்றியது. பேச ஆரம்பித்தார்.
“மாதவா நம்ம அண்ணாமலை ஸ்டோர்ஸ் மேல ஒரு கடை கட்டிட்டு இருக்கிறோம் இல்லையா? அந்த கடை மதுவுக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறேன்.” என்று சொல்லவும் ஆறுமுகம்
“ஆமாம். சரியான யோசனை அப்பா.” என்று சொன்னான்.
மலரும் “சூப்பர் ஐடியா மாமா.” என்றாள்.
“ஆமாங்க. அந்த இடத்தை மதுமிதாவுக்கு கொடுக்கலாம். நான் மதுமிதாவை கூப்பிடறேன். அவள் கிட்ட சொல்லுங்க. அவ சந்தோஷப்படுவாள்.” எ.ன்று ஆர்வமானார் பார்வதி
“அம்மா நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க. இன்னும் கடை வேலை நிறைய இருக்கு. கடை வேலை முடியட்டும். அதுக்கு அப்புறம் அவ கிட்ட சொல்லுவோம். இப்ப சொல்ல வேண்டாம்.” என்று அவரைத் தடுத்து விட்டான்.
மாதவன் பால்கனியில் அமர்ந்து கொண்டு லேப்டாப்பில் அன்று பார்க்கவேண்டிய கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மதுமிதா அவன் வேலையை முடித்து விட்டு வருவான் அவனிடம் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தவள் தன்னை மறந்து தூங்கி விட்டாள்.
வேலையை முடித்துவிட்டு அறைக்குள் நுழைந்தவன் மதுமிதா தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்தான்.
அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு விட்டு
“நான் அந்தக் கடையை உனக்காக தான் பார்த்து பார்த்து ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன். அதுக்குள்ள அவங்களே என்னை கேட்டு விட்டார்கள். அதுவும் நல்லதுக்கு தான். தனியா நான் சொல்ல வேண்டியது இல்லை. ஏற்கனவே உனக்கு கிடைக்க வேண்டிய கடை கடைசி நேரத்தில் கிடைக்காமல் போயிடுச்சுன்னு சொன்ன. அதே மாதிரி எந்த தடங்களும் இந்த கடைக்கு வரக்கூடாது. அதுவுமில்லாமல் உனக்கு பர்த்டே வருது. அன்னிக்கி உனக்கு சர்ப்ரைஸா இந்த கடையை கொடுக்கப் ஆசைப்படறேன். அப்போ சந்தோஷத்தில் உன்னோடு கண்ணை விரிச்சு நீ பார்ப்ப. அதை ரசிப்பேன்.” என்று தூங்கிக் கொண்டிருந்தவளிடம் சொன்னான் மாதவன்.
இது தெரியாமல் மதுமிதா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
இப்படியே நாட்கள் சென்றன.