“சித்தி மதுமிதா கடை வைத்து அவளது டெய்லரிங் வேலை பண்ணனும்னு சொன்னாள். அதனால அந்த புது கடையை எடுத்து நடத்த போகிறாள்.
வீட்டில் நாங்க எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு தான் இது.
அதனால புதுசா இதுல நான் புரிஞ்சிக்க வேண்டியது எதுவும் கிடையாது.
நீங்க இதை தவிர வேற ஏதாவது என்கிட்ட பேசணும்னா பேசுங்க.
இல்லைன்னா என்னை என் வேலையை செய்ய விடுங்க.”
“என்ன மலர் இப்படி பேசுற? எனக்கு மட்டும் வேலை இல்லையா? என் வேலையை எல்லாம் விட்டுவிட்டு உனக்கு நல்லது சொல்ல நான் இங்கே வந்திருக்கிறேன்.” என்று அவள் மீது அக்கறை இருப்பவர் போல பேசினார்.
“அப்படியா நிஜமாவா ?”என்று ஆச்சரியமாக கேட்டாள் மலர்.
“ஆமாம் மலர். எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு.” என்று சொன்னார்.
“அப்படின்னா போய் அந்த வேலையை பாருங்க. இங்கே இருந்து உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீர்கள்.” என்றாள் மலர்.
“என்ன மலர் வீட்டுக்கு வந்து பத்து நிமிஷம் தான் ஆகுது. அதுக்குள்ள கிளம்புங்கன்னு சொல்ற மாதிரி பேசுற.” என்று சிறிது சோகம் காட்டி பேசினார்.
‘அப்படி சொன்னா கூட போக மாட்டீர்களே’ என்று மனதில் நினைத்தாலும்
“அப்படி இல்லை சித்தி. உங்களுக்கு வேலை இருக்குன்னு சொன்னீங்களே அதனால அப்படி சொன்னேன்.” என்று மழுப்பினாள்
‘இவள் கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லை. மதுமிதா கிட்ட பேசுவோம்.’ என்று நினைத்தவர்
“ மதுமிதா எங்கே?” என்று கேட்டார்.
“மதுமிதா தானே உங்க பின்னாடி தான் நிற்கிறாள்.” என்று காண்பித்தாள்.
சரோஜாவுக்கு தூக்கிவாரிபோட்டது.
‘இவ்வளவு நேரம் இவள் இங்கேயா இருந்தாள்? நாம பேசிக்கிட்டு இருந்ததை கேட்டு இருப்பாளா’ என்று யோசித்தார்.
எனினும் அவளைப் பார்த்து சிரித்தபடி அவளிடம் சென்றார்.
“மது இப்படி வா.” என்று அவளை தனியாக அழைத்து சென்றார்.
“இந்த மலர் சரியான மக்கு. நீதான் புத்திசாலி. நான் சொன்ன மாதிரி வீட்ல பேசி அந்த கடையை எடுத்து நடத்த போற இல்ல. பாத்தியா நான் சொன்னது சரியா போச்சு. நீ என் பேச்சை கேட்டதால் தான் உனக்கு இந்த கடை கிடைச்சிருக்கு. நீ எனக்கு நன்றி சொல்லணும்.
இதே மாதிரி நான் சொல்றதை கேட்டு நட. உனக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும். என்ன மது?” என்று கேட்டார் சரோஜா.
மதுமிதா அப்போதே வந்து விட்டாள். சரோஜா மலரிடம் மதுமிதா, மாதவனை பற்றி பேசியது முழுதும் கேட்டுவிட்டாள்.
“என்ன சொன்னீங்க? நீங்க சொன்னதை கேட்டு நடந்ததால் தான் எனக்கு கடை கிடைச்சுதா? இதுக்கு மேல ஏதாவது பேசனீங்க, எனக்கு கெட்ட கோபம் வரும். நீங்க சொன்னதை கேட்டு புத்தி கெட்டு போய் மாதவன் கிட்ட என்னவெல்லாம் பேசினேன் தெரியுமா? எனக்கே என்னை நினைத்தால் வெட்கமா இருக்கு. அந்தக் கடையை நான் கேக்குறதுக்கு முன்னாடி இன்னும் கேட்டால் என் புருஷன் மாதவன் கேக்குறதுக்கு முன்னாடியே அதை எனக்கு கொடுக்கணும்னு வீட்ல இருக்கிற எல்லோரும் பேசி இருக்காங்க.
நான் அவங்களோட மனச புரிஞ்சுக்காம உங்க பேச்சை நம்பி மாதவன் கிட்ட அவங்களை பத்தி தப்பா பேசினது எவ்வளவு தப்புனு நேத்தே நான் புரிஞ்சுகிட்டேன்.
இப்போ நீங்க மலர் அக்காகிட்ட என்னைப் பற்றியும் என் புருஷனை பத்தியும் பேசிட்டு இருந்தீங்க இல்லையா அதை கேட்டு உங்களைப்பற்றியும் புரிஞ்சுகிட்டேன்.
மொத்தத்துல இப்பதான் எனக்கு மூளை ஒழுங்காக வேலை செய்து. மலரக்கா உங்களுக்கு மக்கு. நான் புத்திசாலியா? உண்மையில் நான்தான் மக்கு. முட்டாள்தனமா உங்க பேச்சை நம்பினேன். மலரக்கா புத்திசாலி, பக்குவமானவாங்க. அதனாலதான் உங்க பேச்சை அவங்க பெருசா எடுத்துக்கல.
இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா?
மலரக்கா ரொம்ப பொறுமைசாலி. அதனால் தான் நீங்க பேசிட்டு இருக்குறத பொறுமையா கேட்டுட்டு அமைதியா போறாங்க. நான் மலரக்கா அளவுக்கு பொறுமைசாலி கிடையாது. இன்னொரு தடவை என்கிட்ட இந்த மாதிரி பேசினா நடக்குறதே வேற.
யார் கிட்ட சொல்லி என்ன செய்யனுமோ அதை நான் செய்வேன். அப்புறம் நீங்க மட்டும் இல்லை உங்க வீட்டுக்காரர் கூட அந்த தெருவில் நிமிர்ந்து நடக்க முடியாமல் போய்விடும். இப்போ இருக்கிற மரியாதையும் போய்விடும். அதனால இனிமேல் நீங்க என்கிட்ட பேசாம இருக்கிறது உங்களுக்கு நல்லது.” என்று அவரை எச்சரித்துவிட்டு சென்றாள் மதுமிதா.
இவை யாவையும் கேட்டுக்கொண்டிருந்தாள் மலர்.
“சூப்பர் மது. நல்லா கொடுத்த மது. “ என்றால் மலர்.
“ஆமாம் அக்கா. உங்க அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை.”
“ஆமாம். ஆனால் உனக்கு தைரியம் நிறைய இருக்கு.” என்றால் மலர் தன் ஓரகத்தி யை நினைத்து பெருமையாக.
“உங்க சொந்தகாரங்களை நான் இப்படி பேசினது உங்களுக்கு கஷ்டமா இருக்கா?” என்று தயங்கியபடி கேட்டாள் மதுமிதா .
“சேச்சே நானே இப்படி பேசனும்னு தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் சொந்தகாரங்களா போயிட்டாங்களே அதனால் யோசிச்சேன். நீ கரெக்டா தான் பேசி இருக்க. இனிமேல் இவங்க இப்படி பேச மாட்டாங்க. இவங்க தொல்லை விட்டது .”என்றாள் மலர் நிம்மதியாக.
இரவு பார்வதி சிதம்பரம் மாதவன் மூவரும் வீடு திரும்பினர்.
“ஒரு நாள் புல்லா கார்ல உட்கார்ந்து கிட்டு இருந்தது கால் ரொம்ப வலிக்குது. அந்த தைலத்தை எடுத்துட்டு வா மது.” என்று பார்வதி கூறவும்
மதுமிதா எடுத்து வந்தாள்.
“இப்படி கொடு” என்று கேட்டார் பார்வதி .
மதுமிதா அவரிடம் கொடுக்காமல் தரையில் உட்கார்ந்து கொண்டு பார்வதியின் காலை எடுத்து தன் மடியில் வைத்து தைலத்தை அவர் கால் முட்டியில் இருந்து பாதம் வரை தடவி நீவி விட்டாள்.
“எதுக்குமா? நானே தடவிக் கொள்கிறேன். என்கிட்ட கொடு. நீ போ போய் தூங்கு. நேரம் ஆகுது பாரு.” என்றார் பார்வதி.
“ பரவாயில்லை அத்தை. நான் செய்கிறேன்.” என்று சொன்னவள் தைலத்தை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தபிறகு எழுந்து சென்றாள்.
“ரொம்ப தேங்க்ஸ் மது.” என்று மதுமிதாவிடம் சொன்னான் மாதவன்.
“எதுக்கு தேங்க்ஸ்? இது எல்லாம் நான் உங்ககிட்ட இருந்து கத்துக்கிட்டது தான்.” என்றாள் மதுமிதா.
“சொல்லவேண்டிய எல்லோருக்கும் சொல்லியாச்சு. வேற யாருக்காவது சொல்லனுமா?” என்று குடும்பத்தினரிடம் பொதுவாக கேட்டார் அண்ணாமலை.
“ஆமாம் மாமா. என்னோட சொந்தத்துக்கு வைக்கணும்.” என்று சொன்னாள் மதுமிதா.
அண்ணாமலைக்கு புரியவில்லை. “யாருமா?” என்று கேட்டார்.
“என்னோட தாத்தா பாட்டிக்கு வைக்கணும்.” என்றாள் மதுமிதா.
“சிதம்பரம் உன் தாத்தா பாட்டி வீட்டுக்குப் போனப்போ அவர் உள்ள விடல. உனக்கு தெரியுமா?” என்று தயங்கியபடி கேட்டார் அண்ணாமலை.
“தெரியும் மாமா. இருந்தாலும் நான் என் தாத்தா பாட்டி வீட்டுக்கு போகத்தான் போகிறேன்.” என்றாள் உறுதியாக.
“சரி நீயும் மாதவனும் நாளைக்கு போய்ட்டு வாங்க.” என்றார் அண்ணாமலை.
மதுமிதாவும் மாதவனும் காரிலிருந்து இறங்கினார் . வீட்டுக்கு முன் உட்கார்ந்து இருந்த முருகையனை பார்த்து
“தாத்தா” என்று அவரிடம் சென்றான்.
முருகையன் மாதவனை பார்த்து “வா மாதவா” என்று வாய் நிறைய அழைத்தார்.
பின்பு மாதவனின் பின் வந்துகொண்டிருந்த மதுமிதாவை பார்த்ததும் அமைதியானார்.
மதுமிதா அவரிடம் சென்றாள்.
“தாத்தா என்ன என்னைப்பார்த்ததும் அமைதியாயிட்டீங்க. உங்க வீட்டுக்கு வந்து இருக்கிறேன் வாங்கன்னு சொல்ல மாட்டீங்களா?” என்று கேட்டாள்.
பேச்சுக்குரல் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த ஈஸ்வரி
“வா மாதவா” என்று அவனை அழைத்துவிட்டு மதுமிதாவை பார்த்து கூப்பிடலாமா வேண்டாமா என்று தயங்கியபடி நின்று கொண்டிருந்தார்.
“என்ன பாட்டி நீங்க கூட கூப்பிட மாட்டீங்களா?” என்று மதுமிதா கேட்கவும் தன் மௌனத்தை கலைத்தார்.
“நான் உன்னை கூப்பிடுறேன். நீ வாம்மா.” என்று மதுமிதாவின் கையை பிடித்து அழைத்தார்.
அப்போதும் முருகையன் எதுவும் பேசவில்லை.
“இருங்க பாட்டி. தாத்தாவும் என்னை கூப்பிடட்டும். நான் வீட்டுக்குள்ள வரேன். அது வரைக்கும் இங்கேயே பேசுவோம்.” என்றாள் மதுமிதா.
“தாத்தா, மதுமிதா என்னோட மனைவியா இப்போ இங்க வந்து இருக்கா. என் மனைவியை உள்ள வான்னு சொல்ல மாட்டீங்களா?” என்று மாதவன் கேட்டான்.
முருகையன் “மாதவா?” என்று கூப்பிட்டார் ஆனால் பேசவில்லை.
“ஆமாம் தாத்தா. இப்போ நீங்க மதுமிதாவை உள்ள கூப்பிட்டால் தான் நானும் உள்ள வருவேன். என் மனைவியை நீங்க உள்ள கூப்பிட வில்லை என்றான். நானும் உள்ள வரமாட்டேன். நாங்க ரெண்டு பேரும் வந்த விஷயத்தை இங்கேயே சொல்லிவிட்டு போய் விடுவோம்.” என்றான் மாதவன் .