நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இன்னும் மூன்று அத்தியாயங்கள் மட்டுமே உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்
அவனது கோபத்தை முதன்முதலாக பார்த்த மதுமிதா திகைத்துப்போய் நின்றுகொண்டிருந்தாள்.
மதுமிதாவின் கையை பிடித்து அந்த கடையில் இருந்த ஓர் அறைக்கு அழைத்து சென்றான்.
அந்த அறையில் இருந்த ஒரு பெயர் பலகையை அவளிடம் காண்பித்தான்.
அதில் “மதுமிதா லேடிஸ் டைலரிங்.” என்றும் எழுதி இருந்தது.
அதனை பார்த்து மதுமிதா அதிர்ச்சியானாள்.
“இந்த கடையை உனக்காக தான் பார்த்து பார்த்து மூணு மாசமா ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன். எப்போ நீ கடை எடுத்து நடத்துவது உன் ஆசை, லட்சியம்னு சொன்னியோ அன்றிலிருந்து இந்த வேலையை நான் செஞ்சுகிட்டு இருக்கேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நான் இந்த விஷயத்தை வீட்ல சொல்றதுக்கு முன்னாடியே அப்பா, அம்மா அண்ணன், அண்ணி நாலு பேருமே என்கிட்ட வந்து மதுமிதாவுக்கு இந்த இடத்தை கொடுக்கலாம்னு சொன்னாங்க.
நான் தான் அவங்களை பொறுமையா இருக்க சொன்னேன். கடை வேலை முழுசா முடிஞ்சதுக்கு அப்புறம் இந்த கடையை உன்னோட பர்த்டே கிப்ட் கொடுக்கலாம்னு நினைத்து சர்ப்ரைஸா வைத்திருந்தேன். ஆனா அதுக்குள்ள நீ வாய்க்கு வந்தபடி பேசிட்ட.” என்றான் கோபம் குறையாமல்.
அவன் சொன்னதை கேட்டதும் மதுமிதாவின் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.
“சாரி சாரி மாதவன். உங்க எல்லாரையும் நான் தப்பா புரிஞ்சுகிட்டேன். செல்பி ஷனு தப்பா பேசிட்டேன். உண்மை தெரியாமல் நான் அப்படி பேசியிருக்க கூடாது. சாரி மாதவன். என்னை மன்னிச்சுடுங்க ப்ளீஸ். என்னை மன்னிப்பீர்களா?” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள் மதுமிதா.
மாதவன் கோபத்தில் இருந்தான். மதுமிதா மன்னிப்பு கேட்ட பின் கொஞ்சம் கொஞ்சமாக அவனது கோபம் குறைந்தது.
மதுமிதாவிடம் “நீ இப்படி பேசி இருக்கேன்னு வீட்டில தெரிஞ்சா எவ்வளவு பீல் பண்ணுவாங்க தெரியுமா?” என்று கேட்டான்.
“ப்ளீஸ் . கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் இப்படி பேசிட்டேன். சொல்லிடாதீங்க ப்ளீஸ்.” என்று கெஞ்சினாள்.
“நான் சொல்லமாட்டேன் மதுமிதா. சொன்னா அவங்க ரொம்ப வருத்தப்படுவார்கள். அதனால் இதை எப்பவும் வீட்ல சொல்லவே மாட்டேன்.”
“ரொம்ப தேங்க்ஸ் மாதவன். நீங்களும் என்னை மன்னிச்சிடுங்க.” என்று மீண்டும் கேட்டாள்.
“இரண்டாவது தடவையாக என்கிட்ட நீ சாரி கேக்குற. ரூபா விஷயத்தில் என்னை தப்பா புரிஞ்சுகிட்டடு பேசிட்டு மன்னிப்பு கேட்ட. முதல் தடவை என்பதால் உன்னை நான் மன்னித்தேன். இப்போ இரண்டாவது தடவையும் என்னை மட்டும் இல்லை. மொத்த குடும்பத்தையும் தப்பா நினைச்சு முன்பின் யோசிக்காமல் பேசிட்டு சாரி கேக்குற. சரி நான் உன்னை இந்த தடவையும் மன்னிக்கிறேன். ஆனால் ஒரு கண்டிஷன். “
“நீங்க என்னை மன்னித்தால் போதும். என்ன கண்டிஷனாக இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்க. “என்றாள் மதுமிதா.
மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. ஒன்று தோன்றியது
“அது என்னன்னா? நீ ரெண்டு தடவை தப்பு பண்ணப்போ நான் உன்னை மன்னித்தேன். அதே மாதிரி நான் தப்பு பண்ணினேன்னு உனக்கு தெரிய வந்தால் நீ பொறுமையா இருக்கணும். நான் சொல்ற விளக்கத்தை நீ காதுகொடுத்து கேட்கணும் .என் மேல தப்பு இல்லைன்னு நிரூபிக்க எனக்கு டைம் கொடுக்கணும். முக்கியமா என்னை விட்டு போகக்கூடாது.” என்று கேட்டான்.
“நீங்கள் என்ன தப்பு பண்ண போறீங்க? அந்த மாதிரி சிச்சுவேஷன் வரவே வராது. எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு.”
“இருக்கட்டும் மதுமிதா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு .”
“நீங்க சொன்ன எல்லாத்துக்கும் சரி மாதவன்.”
“நானும் இங்க நடந்ததை மறந்து விடுகிறேன்.” என்றான் சற்று தெளிந்த மனதுடன் மாதவன்.
இரவு உணவை குடும்பத்தினர் பெரும்பாலும் சேர்ந்து அமர்ந்து உண்ணுவது வழக்கம். அன்றும் அப்படியே அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மாதவன் பேச்சை ஆரம்பித்தான்.
“கடை வேலை இன்னும் நாலு நாள்ல முடிஞ்சிடும். நீங்கள் எல்லாரும் ஆசைப்பட்டபடி அந்தக் கடையில் மதுமிதா டெய்லரிங் ஸ்டார்ட் பண்ணலாம்.” என்றான் மாதவன்.
இதனைக் கேட்டதும் குடும்பத்தினர் அனைவரது முகமும் மலர்ந்தது.
இதனை கவனித்த மதுமிதா அவர்களது மனதை புரிந்து கொண்டாள் .
“அத்தை மதுமிதாவின் பிறந்தநாள் இன்னும் ஒரு வாரத்தில் வருது. அன்னிக்கி நாம கடை கிரகப்பிரவேசம் வச்சுக்கலாமா?” என்று கேட்டாள் மலர்.
“ என்னோட பர்த்டே உங்களுக்கு ஞாபகம் இருக்கா?” என்று ஆச்சரியமாகக் கேட்டாள் மதுமிதா.
“இதில் என்ன ஆச்சரியம் மதுமிதா? எனக்கு இந்த வீட்டில் இருக்கிற எல்லாரோட பர்த்டேவும் ஞாபகம் இருக்கு.
அதுவும் உனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வர்ற ஃபஸ்ட் பர்த்டே. அதனால இந்த பர்த்டே ரொம்ப ஸ்பெஷல். அதை நான் மறப்பேனோ?” என்றாள் மலர் சாதாரணமாக.
“ஆமாம் அம்மா. மலர் சொன்ன ஐடியா நல்ல ஐடியா. நாம அன்னிக்கு கடை கிரகப்பிரவேசம் வச்சிக்கலாம்.” என்றான் ஆறுமுகம்.
“நல்ல ஐடியாதான். ஆனால் கிரகப்பிரவேசம் வைக்க நல்ல நாள் பார்க்கணும். அன்னிக்கி நல்ல நாளா இருந்தால் அன்னிக்கே வெச்சுடுவோம்.
ஏங்க நீங்க ஜோசியரை வீட்டுக்கு வர சொல்லுங்க. அன்னிக்கி நல்ல நாளான்னு பார்ப்போம்.” என்றார் பார்வதி.
“பார்வதி இப்ப எல்லாம் ஜோசியர் ரொம்ப பிசி. வீட்டுக்கு வரணும்னா கொஞ்சம் டைம் ஆகும். பேசாம நான் போய் கேட்டுட்டு வந்துடறேன்.” என்றார். அண்ணாமலை.
“சரி நீங்க கேட்டுட்டு வந்துடுங்க.” என்றார். பார்வதி
“அப்போ நம்ம வீட்ல அடுத்த விசேஷம் வரப்போகுது.” என்று மகிழ்ந்தாள் மலர்.
குடும்பத்தினர் பேசியதை கேட்ட மதுமிதா அவர்களது தூய்மையான அன்பை புரிந்து கொண்டாள்.
‘இவங்கள போய் நான் தப்பா நினைச்சு பேசிட்டேன். எல்லாம் அந்த சரோஜா சித்தியால் வந்தது. என்னென்னமோ சொல்லி என்னை குழப்பி இப்படி பேச வச்சுட்டாங்க.
அவங்க என்ன சொன்னா என்ன? எனக்கு எங்க போச்சு புத்தி?’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள் மதுமிதா.
“பார்வதி அன்னிக்கி நாள் நல்லா இருக்குன்னு ஜோசியர் சொன்னாரு. காலை 10 மணிக்கு வச்சுக்கலாமாம்.” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார் அண்ணாமலை.
“ரொம்ப சந்தோஷம். அப்போ அப்படியே பண்ணிடலாம்.” என்ற பார்வதி குடும்பத்தினரிடம் விவரத்தை தெரிவித்தார்.
“மதுமிதா” என்று மதுமிதாவை தனியே அழைத்தார்.
“என்ன அத்தை?” என்று பார்வதியிடம் வந்தாள் மதுமிதா.
“உன் அப்பா அம்மாவுக்கு சொல்லணும். நீ போன் பண்ணி சொல்லு. நானும் மாமாவும் சென்னைக்கு போய் நேர்ல கூப்பிட்டு விட்டு வருகிறோம்.” என்றார் பார்வதி.
“நான் சொல்றேன் அத்தை.” என்றாள் மதுமிதா.
“அப்புறம் மலர் உங்க அம்மாவையும் கூப்பிடணும். நானும் மாமாவும் அவங்களையும் கூப்பிட்டுட்டு வருகிறோம். ஒரு வாரத்தில் கிரகப்பிரவேசம். அதனால நெருங்கிய சொந்தங்களை மட்டும் கூப்பிடுவோம்.” என்றார் பார்வதி.
“சரிங்க அத்தை. அப்படியே பண்ணிடலாம்.” என்றாள் மலர்.
“மாதவா நாளைக்கு நீ, நான், அப்பா மூணு பேரும் மதுமிதா அம்மா வீட்டுக்கும் மலர் அம்மா வீட்டுக்கும் போயிட்டு வந்துடலாம்.”என்றார்.
“சரிமா. நாம மூணு பேரும் கார்ல போயிட்டு வந்துரலாம்.” என்றான் மாதவன்.
சொன்னபடி மாதவன் ,பார்வதி, அண்ணாமலை மூவரும் அதிகாலை காரில் சென்னையை நோக்கி புறப்பட்டனர்.
“ஆதி பஸ் வந்துடுச்சு. சீக்கிரம் வா.” என்று பரபரத்துக் கொண்டிருந்தாள் மலர்.
ஆதித்யா “இதோ வந்துட்டேன் அம்மா.” என்று ஓடி வந்தான்.
அவனை கையைப் பிடித்து அழைத்து சென்று பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு திரும்பினாள் மலர்.
அங்கு சரோஜா நின்று கொண்டிருந்தார்,
‘காலங்காத்தால வந்துட்டாங்களா?’ என்று மனதில் நினைத்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல்
“என்ன சித்தி இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க?” என்று கேட்டாள். மலர்
“என்ன மலர் உன் வீட்டுக்கு வந்து இருக்கிறேன். வாசலில் நிக்க வச்சு பேசிட்டு இருக்க. உள்ள வான்னு கூப்பிட மாட்டியா?” என்று குறைகூறும் குரலில் கேட்டார் சரோஜா.
“என்னமோ வான்னு சொல்லலனா திருப்பி போகிற மாதிரி தான் கேட்கிறது.’ என்று மனதில் நினைத்துக் கொண்டு
“வாங்க சித்தி.” என்று அழைத்தாள்.
“வீட்ல யாரும் இல்லையா?” என்றபடி வீட்டுக்குள் நுழைந்தார் சரோஜா.
பார்வதி, அண்ணாமலை, மாதவன், ஆறுமுகம் வெளியே போவதை தெரிந்து கொண்டுதான் அவர் அங்கு வந்து இருந்தார்.. எனினும் தெரியாதமாதிரி அப்படி
கேட்டார்.
“ஆமாம் எல்லாரும் வெளியே போயிருக்காங்க.”
“அப்புறம் மலர், நா கேள்விப்பட்டது உண்மையா?”. என்று ஆரம்பித்தார்.
“என்ன கேள்விப்பட்டீர்கள்?” என்று கேட்டாள் மலர்.
“அதான் அந்த புது பொண்ணு அது பெயர் என்ன? ஆ மதுமிதா. அந்தப் பொண்ணு அண்ணாமலை ஸ்டோர்ஸ் நாலாவது மாடியில் கட்டியிருக்கிற புது கடையை எடுத்து நடத்த போகிறாளாமே”
“ ஆமாம் சித்தி. அதுக்கு என்ன இப்போ?” என்று பொறுமையாக கேட்டாள்.
“மலர், புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்துகொண்டு மொத்த கடையையும் புடிச்சுகிட்டாங்க பாரு.” என்றார்.
“என்ன சித்தி சொல்றீங்க? புடிச்சுகிட்டாங்களா?”
“ஆமாம் புடிச்சிகிட்டாங்க. ஏற்கனவே மாதவன் அண்ணாமலை ஸ்டோர்ஸ் நடத்திட்டு வரான். இப்போ அவனோட பொண்டாட்டி அங்க கடை நடத்த போகிறாள். புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து பிளான் பண்ணி அண்ணாமலை ஸ்டோர் மொத்த கடையையும் அவங்க கைக்குள் கொண்டு வந்துட்டாங்க. உனக்கு இது புரியலையா மலர்?” என்று கேட்டார்.