“என்னமோ மத்த எல்லா பதார்த்தத்தையும் டேஸ்டியாய் பண்ணிட்ட மாதிரி பேசுற. சமையலே வராதுன்னு மொத்தமா சொல்லு.”
“ஹி ஹி ஹி.” என்று பல்லைக் காட்டி இளித்தான் மாதவன்.
“அப்பா எனக்கு மிக்கி மவுஸ் தோசை செய்து கொடுங்க. அப்பதான் நானே சாப்பிடுவேன். இல்லைன்னா நான் சாப்பிடவே மாட்டேன்.” என்று அடம் பிடித்தான் ஆதி.
அவன் குரல் கேட்டு மாதவன் ஆறுமுகம் இருவரும் ஹாலுக்கு வந்தனர்.
“அது என்ன டா மிக்கி மவுஸ் தோசை?” என்று புரியாமல் கேட்டான் மாதவன்.
“அது ஒன்னுமில்லை மாதவா. மிக்கி மவுஸ் வடிவத்திலே தோசையை ஊற்றி கொடுக்கணும். அப்பதான் அவன் சாப்பிடுவான் தோசை, சப்பாத்தி எல்லாமே அப்படித்தான்” என்றால்a மலர்.
“இது என்னடா வம்பா போச்சு? எனக்கு சாதாரண தோசையே ஒழுங்காக வராது. இதுல மிக்கி மவுஸ் தோசையா? அட போடா. உனக்கு உங்க அப்பாதான் சரி.” என்றான்.
“எனக்கு அப்பவே தெரியும். அதுக்கு தான் நானே பார்த்துக்குறேன்னு சொன்னேன். கேட்கவே இல்லை. சரி இப்படி வாங்க. நான் போய் எல்லாருக்கும் இட்லி ஊத்திட்டு இவனுக்கு மட்டும் மிக்கி மௌஸ் தோசை ஊத்தி எடுத்துட்டு வர்றேன்.” என்று கூறினாள் மலர்.
“அந்த தோசை எல்லாம் எனக்கும் தெரியும். நான் ஊத்தி எடுத்துட்டு வரேன். நீ அவனுக்கு டிரஸ் சேஞ்ச் பண்ணி கூட்டிட்டு வா.” என்று மனைவியை சமையலறைக்குள் நுழைய விடாமல் அனுப்பினான் ஆறுமுகம்.
மலர் கணவனின் அக்கறையை புரிந்துகொண்டு ஆதித்யாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.
ஆறுமுகம் எல்லோருக்கும் மடமடவென தோசை தோசை சுட்டு போட்டான்.
வெங்காய தோசை, கேரட் தோசை, பீன்ஸ் தோசை, பீட்ரூட் தோசை என்று யார் யாருக்கு எது எது வேண்டுமென்று கேட்டு மலர்ந்த முகத்துடன் செய்து முடித்தான்.
அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு அவனுக்கும் தோசை ஊற்றி கொண்டு வந்து உட்கார்ந்தான்.
அப்போது கடையில் வேலாயுதம் வந்து பேசி விட்டு சென்றதை அண்ணாமலை குடும்பத்தினரிடம் கூறினார்.
மலருக்கு இந்த விஷயம் சரோஜா மூலம் ஏற்கனவே தெரியும் என்றாலும் அதனை அவள் மற்றவர்களிடம் காட்டிக்கொள்ளவில்லை. விபரத்தை கேட்டதும் முதலில் பேசியவன் மாதவன் தான்.
“ அவரோட நிலம் ரொம்ப நல்ல விளைச்சல் நிலம் ஆச்சே நம்மளால வாங்க முடியாம போயிடுச்சே. இந்த நேரத்துல போய் நம்ம கையில இருந்த காசை எல்லாம் போட்டு கடையை விரிவு பண்ண வைத்துவிட்டேன்.” என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் மாதவன்.
“வாங்கி இருந்தால் உங்களுக்கு ரொம்ப வசதியா இருந்திருக்கும் இல்லனா?” என்று அண்ணனை பார்த்து கேட்டான் மாதவன்.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. என்கிட்ட இருக்கிற நிலத்தை பார்க்க தான் எனக்கு நேரம் இருக்கு. இன்னும் அந்த நிலத்தையும் வாங்கினால் என்னால பாக்க முடியாது. இப்போதைக்கு வாங்காமல் இருக்கறதுதான் நல்லது. அப்புறம் தேவைப்பட்டால் பார்க்கலாம். அந்த நிலத்தை பார்க்க ஒரு நம்பகமான ஆள் கிடைக்கட்டும். அப்புறம் அதைப் பற்றி பேசுவோம்.” என்று பேச்சை திசை திருப்பினான் ஆறுமுகம்.
அவனால் அந்த நிலத்தையும் சேர்த்து பார்க்கமுடியும். எனினும் வீட்டில் இருப்பவர்கள் இந்த நிலத்தை வாங்க முடியவில்லையே என்று வருந்த கூடாது என்பதற்காக அவன் அப்படி மாற்றி பேசினான்.
மலர் எதுவும் பேசாமல் வெகு சாதாரணமாக
“நான் எல்லோருக்கும் பால் காய்ச்சி எடுத்துட்டு வரேன்.” என்று எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள்.
சொன்னபடி பால் எல்லோருக்கும் எடுத்து வந்து கொடுத்தாள். அனைவரும் குடித்துவிட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.
மாதவனுக்கு அண்ணியை நினைத்து ஆச்சரியமாக இருந்தது. இதே இடத்தில் வேறு ஒரு பெண்ணாக இருந்திருந்தால், இந்நேரம் இந்த வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்து இருக்கும். ஆனால் மலர் எப்போதும் போல சாதாரணமாகவே இருந்தாள்.
தன்னை திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் குடும்பத்தினரை நன்கு புரிந்து கொண்டு எல்லோரிடமும் ஒத்துப்போக வேண்டும். என்று எப்பொழுதுமே நினைப்பான்.
அப்படி அவள் இருப்பாளா? என்று யோசித்தான். பிறகு நிச்சயமாக அவள் அப்படித்தான் இருப்பாள் என்று முடிவு செய்தான். இரவு படுக்கையில் படுத்து கண்மூடிய மாதவனுக்கு அவளது முகம் கண் முன் வந்தது. அவனால் உறங்க முடியவில்லை. எழுந்து அந்தப் பெரிய தோட்டத்திற்கு வந்தான். தோட்டக்காரன் இரண்டு நாட்களாக வராமல் தோட்டம் சிறிது குப்பையாக இருந்தது. மலர் தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறாள் என்றாலும் தோட்டத்தை இரண்டு நாட்களாக பெருக்க அவளுக்கு நேரம் கிடைக்கவில்லை.
தோட்டத்தில் போட்டிருந்த ஊஞ்சலில் கிடந்த காய்ந்த இலைகளை தட்டிவிட்டு உட்கார்ந்தான் மாதவன். இந்த வேலை, அந்த வேலை என்று நினைக்காமல் வீட்டில் எந்த வேலை இருந்தாலும் அதனை தயங்காமல் செய்யக் கூடியவள் மலர். இப்படி ஒரு மருமகள் இருக்கும் இந்த வீட்டில் அவள் பொருந்தி இருப்பாளா? அவளுக்கு இந்த வீடு, வீட்டில் இருப்பவர்களை பிடிக்குமா? என்று அவனுக்கு ஒரு சிறு சந்தேகம் வந்தது. பிடிக்கும் என்றே அவனுக்கு தோன்றியது. அவளைத் தவிர வேறு யாரும் அவனது மன வீட்டில் வாழ முடியாது என்றும் தோன்றவும் அவளைத்தான் நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டான். அதற்கு முதல்கட்டமாக அவளைப் பார்த்து நடந்ததை விவரித்து தன் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்.
வாரத்திற்கு ஒரு முறை ஏதாவது காரணம் சொல்லி விட்டு வெளியூர் செல்வது அவனது வழக்கம். ஆரம்பத்தில் என்ன காரணம் என்று அண்ணாமலையும் ஆறுமுகமும் கேட்டனர். அவன் நண்பனை பார்க்க வேண்டும் அல்லது கடைக்கு பொருள் வாங்க வேண்டும் என்று ஏதாவது காரணம் சொல்லவும் அவர்கள் அவனை இப்போதெல்லாம் காரணம் கேட்பதே கிடையாது.
அவனுக்கும் அது வசதியாகவே இருந்தது. மற்ற நாட்களில் அவன் பொறுப்பாக கடையை கவனித்து கொள்ளவும் இதனை வீட்டினர் பெரிதுபடுத்தவில்லை.
மலர் ஆறுமுகத்தை திருமணம் செய்துகொண்டு இந்த வீட்டிற்கு வந்து எட்டு வருடங்கள் ஆகின்றன
அப்போது மலருக்கு வயது 21. எனினும மிகவும் பக்குவமான பெண் அவள்.
மலருடைய தந்தை குடித்து விட்டு பொறுப்பில்லாமல் ஊரை சுற்றிக் கொண்டிருந்தார். அப்படி சுற்றி கொண்டிருந்தவர் ஒருநாள் வீடு திரும்பவில்லை. அதற்கு பிறகு அவர் வேறு யாரையோ திருமணம் செய்து கொண்டு விட்டதாக கேள்விப்பட்டாள். அவ்வளவுதான். பிறகு அவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. மலருக்கு ஒரு அண்ணன் உண்டு. பெயர் இளங்கோ.
தாய், சரஸ்வதி சின்னதாக ஒரு இட்லி கடை வைத்து குழந்தைகளை பன்னிரண்டாம் வகுப்பு வரைக்கும் படிக்க வைத்து இருந்தார். அதற்குமேல் அவரால் படிக்கவைக்க முடியவில்லை.
பள்ளிப் படிப்பிற்கு பிறகு மலர் படிப்பை நிறுத்திக்கொண்டு தாய்க்கு உதவியாக இருந்தாள். தாயும் மகளும் சேர்ந்து இட்லி கடை நடத்தி மகனை படிக்க வைத்தனர். அவனும் நன்றாக படித்து அரசு வேலையில் சேர்ந்தான். பிறகு சின்னதாக ஒரு வீடு கட்டி தாயையும் தங்கையையும் பார்த்துக்கொண்டான்.
இந்த நிலையில் மலரை பெண்கேட்டு ஆறுமுகம் வீட்டினர் வந்தனர். நல்ல இடம் என்பதால் திருமணம் செய்து கொடுத்தான். பிறகு அவனும் திருமணம் செய்து கொண்டான். திருமணம் ஆகும் வரையில் மலர் மீது பாசமாக தான் இருந்தான். ஆனால் திருமணம் ஆன பிறகு மலர் மீது அவனுக்கு இருந்த பாசம் சற்று குறைந்தது போல மலருக்கு தோன்றியது .
எனவே, தாய்வீடு சென்று தங்கி விட்டு வருவதை தவிர்ப்பாள். மலரை பொருத்தவரை தாய் வீடு, மாமியார் வீடு இரண்டுமே ஒன்றுதான்.
எனினும் தாயை குறையில்லாமல் கவனித்துக் கொண்டான் இளங்கோ.
பார்வதி இன்னொரு தாய் போல மலரை பார்த்துக் கொள்வார் . மலரின் தாய் எப்பொழுதாவது இங்கு வந்து தங்கி மகளுடன் பொழுதை கழித்துவிட்டு செல்வார்.
மலர் திருமணமாகி வரும்பொழுது மாதவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான்.
வீட்டிற்கு வந்த புதிதில் மலர் மச்சினன், மாதவனை “தம்பி, வாங்க போங்க.” என்று தான் அழைத்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால் மாதவன் தான்
“நீங்க என்னை பெயர் சொல்லி வாடா போடான்னு கூப்பிட்டால் போதும்.” என்று திரும்பத் திரும்ப அழுத்தமாக கூறவும் அவளும் பெயர் சொல்லியே கூப்பிட ஆரம்பித்தாள். அதுவே இந்த குடும்பத்திலிருந்த எல்லோருக்கும் சரியாகப்பட்டது. மாதவனுக்கும் மலர் ‘அண்ணி’ என்று உறவினை தாண்டி உடன்பிறந்த தமக்கை ஆகவே தெரிந்தாள். மலரும் மாதவனை உடன்பிறந்த தம்பியை போலவே கருதினாள்.
தன் அறையில் நுழைந்த மலரை பின்நின்று அனைத்து கொண்டான் ஆறுமுகம்.
“விடுங்க. பையன் தூங்கலன்னு நினைக்கிறேன்.” என்றாள் மலர்.
“அதெல்லாம் நான் அப்பவே தூங்க வைத்து விட்டேன். எல்லாம் நம்ம வசதிக்கு தான்.” என்று கண்ணை சிமிட்டினான்.
அவள்
“இன்னிக்கு நீங்க ஊத்தன வெங்காய தோசை முரு முருன்னு ரொம்ப நல்லா இருந்துச்சு.” என்று தோசையை பற்றி பேசினாலே தவிர அந்த நிலத்தைப் பற்றி பேசவே இல்லை.
மனைவியின் பெருமிதத்தை எண்ணி மகிழ்ந்த ஆறுமுகம் அதனை பற்றி பேச ஆரம்பித்தான்.
“அந்த நிலம் நமக்கு கிடைக்காமல் போயிடுச்சுன்னு உனக்கு கஷ்டமா இருக்கா?” என்று பொறுமையாக கேட்டான்.
“அதெல்லாம் எனக்கு எந்த கஷ்டமும் கிடையாது. மாமாவுக்கு யாருக்கு எப்போ எதை செய்யணும்னு நல்லாவே தெரியும். அதுவுமில்லாம மாதவனுக்கு தானே செலவு பண்ணியிருக்காங்க. பணம் மாதவன் கிட்ட இருந்தா என்ன நம்ம கிட்ட இருந்தா என்ன எல்லாம் ஒன்றுதான்.
இந்த வீட்டுக்கு நான் வரும்போது 10 பவுன் நகை கூட இல்லாமல் வந்தேன். இப்போ என்கிட்ட நிறைய நகைகள் இருக்கு. இதையெல்லாம் அத்தையும் மாமாவும் கணக்கு பார்த்தா வாங்கி தந்தாங்க? இவங்க எல்லாம் அப்படி இருக்கும்போது நான் மட்டும் சுயநலமா நிலம் வேணும்னு ஆசைப்பட்டா, இந்த குடும்பத்துல வாழறதுக்கு எனக்கு எந்த தகுதியும் கிடையாதுனு அர்த்தம்.” என்று மனதில் பட்டதை வெளிப்படையாகக் கூறினாள் மலர்.
ஆறுமுகத்திற்கு மனைவியை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அவளை மேலும் இருக்கினான்.
பார்வதி, அண்ணாமலைeடம்
“ஆறுமுகம், மலர் ரெண்டுபேரையும் பார்த்தீர்களா? எவ்வளவு பக்குவமா நடந்துக்கிறாங்க.” என்று பெருமை பொங்க கூறினார்.
“ஆறுமுகம் இப்படி நடந்து கொள்வது எனக்கு பெரிய விஷயமா தெரியல. ஆனால் மலர் வேற ஒரு வீட்டு பொண்ணு. அவளும் இப்படி நடந்து கொள்வது தான் ஆச்சரியமா இருக்கு.” என்றார் அண்ணாமலை.
“ஆமாங்க. உண்மைதான். ஊர் உலகத்துல அண்ணன் தம்பிகள் சொத்துக்காக எப்படி அடித்துக் கொள்கிறார்கள். அதையெல்லாம் பார்க்கும்போது எனக்கு பயமா இருக்கும். ஆனால் மலர் மாதிரி ஒரு மருமகள் நம்ம வீட்டுக்கு வந்ததால், எனக்கு அந்த பயம் பாதி குறைந்து விட்டது.
இனி மாதவனுக்கும் மலர் குணத்தில் ஒரு பொண்ணு அமைந்து விட்டால் போதும். எனக்கு இருக்கிற மீதி பயமும் போய்விடும்.
அதைத்தான் நான் தினமும் முருகன் கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கேன். முருகன் நமக்கு அருள் புரியணும்.” என்று இரு கைகளையும் கூப்பி கும்பிட்டுக் கொண்டார்.
“நம்ம சொந்தகாரங்க எல்லார்கிட்டயும் நல்ல பொண்ணு இருந்தா சொல்ல சொல்லி சொல்லி வச்சிருக்கேன். பார்க்கலாம் மாதவனுக்குன்னு பொறந்து இருக்கிற பொண்ணு கூடிய சீக்கிரம் நம்ம கண்ணுல படுவா. இப்போ நீ எதைப்பற்றியும் கவலைப்படாம நிம்மதியா தூங்கு.” என்றார் அண்ணாமலை.