நண்பர்களுக்கு வணக்கம்!. சென்ற பதிவினை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி. இந்த பதிவினையும் படித்து விட்டு உங்கள் விருப்பங்களையும் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“என்னமா கிளம்பிட்டியா? வா டைம் ஆச்சு. தீபாராதனை முடிந்து விட போகுது.” என்று மருமகளை அவசரபடுத்தினார் பார்வதி.
“இதோ வந்துட்டேன் அத்தை.” என்று கூறியபடி ஆதித்யாவை ஒரு கையில் பிடித்துக்கொண்டு மாமியாருடன் கோயிலுக்கு செல்ல தயாராகி வெளியில் வந்தாள் மலர்.
மூவரும் சேர்ந்து நடந்து கொண்டிருந்தனர். அப்போது அண்ணாமலையின் கார் அங்கு வந்து நின்றது.
“ கோயிலுக்கு போறீங்களா? இந்த கார்ல போயிட்டு வாங்க.” என்று காரிலிருந்து இறங்கினார் அண்ணாமலை.
“கோயில் பக்கத்தில் தான் இருக்கு. நாங்க நடந்து போயிட்டு வருகிறோம்.” என்றார் பார்வதி.
” ஆமாம் மாமா. டாக்டர் அத்தையை நடக்க சொல்லி இருக்கிறார்.”
“சரிமா. பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க.” என்று கூறிவிட்டு காரில் திரும்ப ஏறி சென்றார் அண்ணாமலை.
சஷ்டி என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாகவே இருந்தது. முருகனை தரிசித்து விட்டு இருவரும் ஒரு இடத்தில் வந்து உட்கார்ந்தனர்.
அப்போது ஆதித்யா
“எனக்கு அதிரசம் வேணும். வாங்கி தாங்க.” என்று மழலை மொழியில் கேட்டான்.
கோவிலில் அதிரசம், முறுக்கு, ரவா லட்டு எப்பொழுதும் விற்பனை செய்வர்.
“கூட்டம் ஜாஸ்தியா இருக்கு ஆதி. வேண்டாம் இன்னொருநாள் வாங்கிக்கலாம். எனக்கு கால் வலிக்குது.” என்று மலர் கூறினாள்.
“பின்ன கால் வலிக்காதா? நீதான் அந்த பெரிய க்யூல நின்னுகிட்டு இருந்தாயே. நான் உட்கார்ந்து கிட்டு இருந்தேன். கர்ப்பக்கிரகம் கிட்ட வந்ததும் உன் கூட சேர்ந்து நின்னுக்கிட்டேன். அதனால எனக்கு கால் ஒன்னும் வலிக்கல. நான் போய் வாங்கிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு பேரனை கையோடு அழைத்துக் கொண்டு அந்த கடைக்கு சென்றார் பார்வதி.
அப்பொழுது அங்கு வந்தாள் சரோஜா.
“என்ன மலர்? எப்படி இருக்க?” என்று கேட்டுக் கொண்டே அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
சரோஜா, அண்ணாமலை கடை வைத்து இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் கடை வைத்திருக்கும் ரத்தினத்தின் மனைவி .
மலருக்கு இவரை கண்டாலே பிடிப்பது கிடையாது. ஏனென்றால் அவர் பேசுவது அப்படி. எப்போதுமே மலரின் மாமியார் வீட்டினரை பற்றி ஏதாவது குறை கூறுவார். எனவே மலர் அவரிடம் பொதுவாக நின்று பேசுவது கிடையாது.
ஆனால் இன்று அவள் கால் வலியுடன் ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் வந்து அவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு பேச ஆரம்பித்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவளும் கேட்கலானாள்.
வயதில் மூத்தவர் என்பதால் வெளிப்படையாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போகவும் அவளால் முடியவில்லை.
“நல்லா இருக்கேன் சித்தி.” என்று ஆர்வமில்லாமல் கூறினாள்.
சரோஜா, மலருக்கு தாய்வழி தூரத்து சொந்தம். சித்தி முறையாகும்.
“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா?” என்று ஆரம்பித்தார்.
அவர் ஏதோ கோல் சொல்லப்போகிறார் என்று புரிந்து போயிற்று மலருக்கு. எனினும் தவிர்க்க முடியாமல் “எனக்கு எதுவும் தெரியாது சித்தி. உங்களுக்கு தான் எல்லாமே தெரியுமே. நீங்களே சொல்லுங்க.” என்று அந்த எல்லாமே என்ற எழுத்தில் சிறிது ராகமாக இழுத்து கிண்டலாக கூறினாள்.
அவள் அவரை கிண்டல் செய்வது அவருக்கு புரிந்தாலும் அதனை அலட்சியப்படுத்தி விஷயத்திற்கு வந்தார் அவர்.
“இன்னிக்கி மதியானம் அந்த வேலாயுதம் இருக்காரு இல்ல?”
“எந்த வேலாயுதம்?” என்று தன் கன்னத்தில் ஒற்றை விரலை வைத்து யோசித்தபடி கேட்டாள் மலர்.
“அதான் உன் மாமனாரின் நண்பர் வேலாயுதம் அவங்களுக்கு கூட சொந்தமா விவசாய நிலம் இருக்கு இல்லையா? அவர்தான்.”
“ஓ அவரா” என்று ஞாபகம் வந்தவளாக கேட்டுக்கொண்டாள் மலர்.
“அவர்தான். அவர் கடைக்கு வந்து அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை விற்க போறாராம். உங்க மாமனாரால் வாங்க முடியுமான்னு கேட்டாரு.”
“அப்படியா? அதுக்கு மாமா என்ன சொன்னாங்க?”
“அவரு என்ன சொல்லப் போறாரு. வேணாம்னு சொல்லிட்டாரு.”
“சரி அதான் மாமா சொல்லிட்டாரே. இப்போ இதை எதுக்கு என்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கீங்க?”
“மலர் நீ இப்படி வெள்ளந்தியா இருக்காதே.” என்று மெல்லிய குரலில் கூறினார் சரோஜா.
“என்ன சொல்றீங்க சித்தி?” என்று புரியாமல் கேட்டாள் மலர்.
“அது விவசாய நிலம். அந்த நிலத்தை வாங்கி போட்டிருந்தா உன் புருஷன் விவசாயம் பண்றதுக்கு வசதியா இருந்திருக்கும் இல்லையா?
ஆனால் அவர் வாங்கவே இல்லை. அதுக்கு என்ன காரணம் சொன்னார் தெரியுமா?”
“எனக்கு என்ன தெரியும் சித்தி?” என்று தனக்கு வந்த எரிச்சலை மறைத்துக் கொண்டு கேட்டாள் மலர்.
“மாதவன் தான் காரணமாம். அவன் பேச்சை கேட்டு கையில் இருந்த மொத்த பணத்தையும் அந்த கடையில போட்டு செலவு பண்ணி விட்டாராம்.
அதனால கையில பணமே இல்லைன்னு சொன்னாரு.”
“இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரிந்ததுதானே? செலவு பண்ணா தானே கடையை விரிவு படுத்த முடியும்.” என்று சாதாரணமாக விஷயத்தை கேட்டுக் கொண்டாள் மலர்.
“என்ன மலர் புரியாம பேசிகிட்டு இருக்க. உன் புருஷனுக்கு கிடைக்கவேண்டிய நிலம் இப்போ கிடைக்காம போயிடுச்சு இல்லையா? அதுக்கு காரணம் அந்த மாதவன் தான்.” என்று தெளிவாக எடுத்துக் கொடுத்தார் சரோஜா.
மலருக்கு இவர் என்ன சொல்ல வருகிறார் என்பது ஓரளவுக்கு தெரிந்தது என்றாலும் தெரியாதது போலவே காட்டிக் கொண்டாள். இப்போது இவர் வெளிப்படையாக கூறவும் அவளுக்கு கோபம் வந்தது.
“இங்க பாருங்க சித்தி. வயசுல என்னைவிட ரொம்ப பெரியவங்கன்னு பார்க்கிறேன். இல்லைன்னா….. “
வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்தினாள் மலர்.
“எங்க வீட்ல நடக்கிற எல்லா விஷயத்தையும் நாங்க பாத்துக்குறோம். நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க. என் மாமாவுக்கு யாருக்கு எப்போ எதை செய்யணும்னு நல்லாவே தெரியும்.
அதுவும் எனக்கு தெரியாம அந்த வீட்டில் எதுவுமே நடக்காது. நீங்க இதையெல்லாம் என்கிட்ட வந்து சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. மாமா எல்லாத்தையும் எங்க கிட்ட வந்து சொல்லுவாங்க. அப்போ நான் கேட்டுக்குறேன். சரியா?
அத்தை வந்துகிட்டே இருக்காங்க.” என்று பேரன் கையை பிடித்துக்கொண்டு நடந்து வந்து கொண்டிருந்த பார்வதியை காட்டி கூறினாள் மலர்.
“சரி சரி. ஏதோ நம்ம சொந்தக்கார பொண்ணாச்சுனு நல்லது சொல்ல வந்தேன். அப்புறம் உன்னோட இஷ்டம்.” என்று கூறியபடி நெருங்கி வந்து கொண்டிருந்த பார்வதியைப் பார்த்து சிரித்தபடி நலம் விசாரித்துவிட்டு சென்றார்.
“என்ன கூட்டம்! என்ன கூட்டம்! நிம்மதியா மூச்சு விட முடியல!” என்று கூறியபடி வீட்டுக்குள் நுழைந்தார் பார்வதி.
“நைட்டுக்கு என்ன டிபன் பண்ணலாம்?” என்று மருமகளை கேட்டார் பார்வதி.
“தோசை ஊற்றலாம்னு நினைச்சேன். ஆனால் இப்போ கால் ரொம்ப வலிக்குது.
அதான் இட்லி ஊற்றலாம்னு நினைக்கிறேன்.”
“அதுவும் சரிதான். நீ போய் ரெஸ்ட் எடு. நான் இட்லி ஊற்றி வைக்கிறேன்.
மதியானம் பண்ண சாம்பார் இருக்கு. எல்லோரும் இன்னிக்கு சாம்பார் இட்லி சாப்பிடலாம். நான் போய் கொஞ்சம் வெங்காயம் கொத்தமல்லி எல்லாத்தையும் கட் பண்ணி வைக்கிறேன்.”
என்று கூறியபடி பார்வதி சமையலறைக்குள் நுழைந்தார்.
ஆனால் அங்கு மாதவன் கையில் தோசைக் கரண்டியுடன் தோசை சுட்டுக் கொண்டிருந்தான். “இங்கே என்னடா பண்ற?” என்று அவனை பார்த்து கேட்டார் பார்வதி.
“என்னமா? பார்த்தா தெரியலையா? எல்லோருக்கும் நான் தான் இன்னிக்கு தோசை ஊத்த போகிறேன்.” என்றான்.
“அய்யய்யோ. அந்த கொடுமை வேறயா? தோசை ஊத்த போறேன்னு எல்லாத்தையும் தீய வச்சு எடுத்துட்டு வர போற.” என்று பதறினார் பார்வதி.
அப்பொழுது உள்ளே நுழைந்தான் ஆறுமுகம்.
“அம்மா நான் பார்த்துக்குறேன். நீங்க போய் சோபால உக்காருங்க. என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு இல்லையா? நான் நல்ல தோசை ஊத்தி எடுத்துட்டு வரேன்.” என்று கூறியதோடு நிற்காமல் தாயின் தோளில் கைவைத்து அவரை திருப்பி அழைத்து வந்து சோபாவில் உட்கார வைத்தான் ஆறுமுகம்.
அப்போது அண்ணாமலை
“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று அறையிலிருந்து வெளியே வந்து கேட்டார்.
“ஆமாம் அப்பா பெரிய ஹெல்ப் வேணும். “
“சொல்லுப்பா. எனக்கு அவ்வளவா சமையல் தெரியாது. கொஞ்சம் பார்த்து சின்ன வேலையா கொடு.” என்றார் அண்ணாமலை சிறு பயத்துடன்.
“அந்த ஹெல்ப் என்னென்ன? நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்றேன்னு கிச்சன் பக்கம் வராம இருக்கணும்.” என்று ஆறுமுகம் கூற பார்வதியும் மலரும் சிரித்தனர்.
“உங்களுக்கு எல்லாம் என்னைப் பார்த்தா கிண்டலா இருக்கு?” என்று மனைவியைப் பார்த்து முறைத்தார்.
“அப்படி இல்லை அப்பா. உங்களுக்கு எதுக்கு கஷ்டம்னு தான்.” என்று சமாளித்தான் ஆறுமுகம் .
அப்போது சமையலறையிலிருந்து கருகிய வாசனை வந்தது.
பார்வதி
“எப்போதும்போல உன் தம்பி தோசையை கருக விட்டுட்டான் போல இருக்கு.” என்று எழுந்து சமையலறைக்குள் நுழைய முயன்றார்.
அப்போது புடவையை மாற்றிக்கொண்டு வந்த மலர் “இருங்க அத்தை. நான் போய் பார்க்கிறேன்.” என்று கூறியபடி அங்கு வந்தாள்.
அப்போது ஆறுமுகம்
“அதெல்லாம் யாரும் கிச்சனுக்குள்ள வரக்கூடாது. இன்னிக்கு உங்களுக்கு தடா போட்டு இருக்கேன். நான் பார்த்துக்குறேன். நீங்க உக்காருங்க.” என்று இரு பெண்களையும் உட்கார வைத்துவிட்டு உள்ளே நுழைந்தான் ஆறுமுகம்.
“என்னடா எப்பவும்போல சொதப்பி விட்டாயா?”
“ஆமாம் அண்ணா. அது என்னமோ எனக்கு தோசை மட்டும் ஒழுங்காவே வரமாட்டேங்குது. ஒன்னு கல்லோட ஓட்டிக்கிட்டு வரமாட்டேங்குது. அப்படி இல்லன்னா தீஞ்சு போயிடுது.” என்றான் சோகமாக.