“கொஞ்சம் தடுமாறிட்டேன் அண்ணா. கட்டுப்போட்டு விட்டதற்கு தேங்க்ஸ்.” என்றுவிட்டு எழுந்து பாத்திரத்தை மீண்டும் எடுக்க சென்றான்.
அப்போது மாதவன்
“வேண்டாம் தம்பி. நீ உட்காரு நான் பார்த்துக்கிறேன்.” என்று அவனை தடுத்தான்.
“இல்லை அண்ணா. அடி ஒன்னும் பெருசா இல்ல. அதுவுமில்லாம முதலாளிக்கு தெரிஞ்சா, எனக்கு பிரச்சனையாயிடும்.” என்றான் சோகமாக.
“அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன். நீ உட்காரு.” என்று கூறியவன் அணிந்திருந்த சட்டையை கழட்டி வைத்துவிட்டு பனியனோடு அந்த பாத்திரங்களை இறக்க உதவினான்.
பாத்திரங்கள் அனைத்தையும் இறக்கி முடித்து வண்டியை அனுப்பி விட்டு திரும்பினான்.
அப்போது ஆறுமுகம் கடைக்கு வருவது தெரிந்தது. “என்ன மாதவா பனியன் எல்லாம் அழுக்கா இருக்கு. வியர்த்து வழிந்து கொண்டிருக்கு.” என்று கேட்டபடி தரையில் அடுக்கி வைத்திருந்த பாத்திரங்களை பார்த்த ஆறுமுகம்
“நீயா இதையெல்லாம் வண்டியில இருந்து இறக்கின?” என்று ஆச்சரியமாக கேட்டார்.
“ஆமா அண்ணா அந்தப் பையனுக்கு கால்ல அடிபட்டுருச்சி. அதனாலதான்.”
“ஓ அப்படியா? சரி உள்ள வா.” என்று ஆறுமுகம் மாதவனை அழைத்துக்கொண்டு கடைக்குள் சென்றான்.
மாதவனின் அறைக்குள் சென்றதும் ஆறுமுகம் ஏசியை போட்டுவிட்டான்.
மாதவன் சட்டையை அணிந்து கொண்டான். “என்ன அண்ணா? இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்கனா. ஏதோ முக்கியமான விஷயம் பேச தான் வந்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன். என்ன முக்கியமான விஷயம்?” என்று ஆர்வமாக விசாரித்தான் மாதவன்.
“அது நம்ம அப்பா அம்மாவுக்கு அறுபதாம் கல்யாணம் வருது. நாம இந்த விசேஷத்தை கிராண்டா பண்ணலாம்னு நினைக்கிறேன். நீ என்ன சொல்ற?” என்று கேட்டான்.
“அதுக்கு என்ன அண்ணா? பண்ணிடலாம். நான் என்ன செய்யணும்? சொல்லுங்க. செய்றேன்.” என்றான் உற்சாகமாக.
“முதல்ல பத்திரிக்கை அடிக்கணும். அப்புறம் அம்மா அப்பாவுக்கு துணி எடுக்கணும். அப்புறம் எல்லாரையும் கல்யாணத்துக்கு அழைக்கனும். சமையலுக்கு ஏற்பாடு பண்ணனும். மேடை அலங்காரம், இன்னும் நிறைய வேலை இருக்கு.”
“சரி அண்ணா. ” என்றான்.
“நாளைக்கு குடும்ப ஜோசியர் வீட்டுக்கு வருவார். அவர் கிட்ட நல்ல நேரம் பார்த்து முகூர்த்த நேரத்தை பிக்ஸ் பண்ணலாம்.” என்றான் ஆறுமுகம்.
“இது நாம பண்ற கல்யாணம். அதனால நாமதான் எல்லாமே பண்ணனும்.”
“ஓகே அண்ணா. எல்லாத்தையும் சிறப்பா பண்ணிடலாம்.” என்றான் மாதவன்
“காலை 9 மணிக்குள்ள நேரம் நல்லா இருக்கு. அந்த நேரத்துல கல்யாணத்தை வச்சுக்கோங்க.” என்று ஜோசியர் வீட்டு ஹாலில் உட்கார்ந்து கொண்டு சொல்லிக்கொண்டிருந்தார்.
“அப்புறம், வேறு யாருக்காவது ஜாதகம் பாக்கணுமா?” என்று ஜோசியர் தன் வருமானத்திற்கு மேலும் வழி வகுத்துக் கொண்டார்.
“வேற யாருக்கும் இல்லை.” என்று ஆறுமுகம் கூற பார்வதியோ வேறு கூறினார்.
“இருங்க ஜோசியரே. நான் போய் மாதவன் ஜாதகத்தை எடுத்துட்டு வரேன்.” என்று எழுந்து உள்ளே சென்று அவனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு வந்து அவரிடம் நீட்டினார்.
“என்ன ஜோசியரே, மாதவனுக்கு எப்போ கல்யாணம் பண்ணலாம்னு சொல்லுங்கள்.” என்று கேட்டார் பார்வதி ஆர்வமாக.
ஜாதகத்தை சிறிதுநேரம் புரட்டிப் பார்த்து கையில் ஏதோ கணக்கு பண்ணிய ஜோசியர் சிரித்த முகத்துடன் நிமிர்ந்தார்.
“என்ன ஜோசியரே சொல்லுங்க.” என்று கேட்டார் பார்வதி.
“எல்லாம் நல்ல விஷயம் தான் அம்மா. மாதவனுக்கு குருபார்வை வந்து ரொம்ப நாள் ஆயிடுச்சு. இன்னும் 3 மாசத்துல அவனுக்கு கல்யாணம் பண்ணிடுங்க .”
“ என்ன சொல்றீங்க ஜோசியரே? மூணு மாசத்துல பெண்ணை தேடி கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணனுமா?” என்று சிறிது தயக்கத்துடன் கேட்டார் பார்வதி.
“அதெல்லாம் உங்களை தேடி பொண்ணு வரும் கவலைப்படாதீங்க.
அப்படி நீங்க பண்ணலைன்னா அப்புறம் கல்யாணம் பண்றது கஷ்டம்.” என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.
மாதவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. 3 மாசத்தில் கல்யாணமா? என்று அதிர்ந்தான்.
“சரி ஜோசியரே. நாங்களும் நிறைய பேர் கிட்ட சொல்லி வைத்திருக்கிறோம். நீங்க சொன்ன மாதிரியே மூணே மாசத்துல கல்யாணம் செய்து வைத்து விடுவோம்.” என்று கூறினார் பார்வதி.
அப்பொழுது மலர் காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து ஜோசியரிடம் நீட்டினாள்.
“அப்படியா ரொம்ப சந்தோஷம். அப்போ கூடிய சீக்கிரம் நம்ம வீட்டுக்கு இன்னொரு மருமகள். எனக்கு தங்கையா வரப்போகிறா.” என்று மகிழ்ச்சியாக கூறினாள்.
அப்பொழுது “அம்மா” என்று ஆதித்யாவின் குரல் கேட்க மலர் அத்தை ஆதி கூப்பிடறான். நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்று கூறியவள் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஆதித்யாவிடம் சென்றாள்.
அவள் தங்கை என்று கூறியதை கேட்டதும் ஜோசியர் “உங்க வீட்டு மருமக தங்கம்மா.” என்று வாயார மலரை புகழ்ந்தார்.
“நானும் உங்ககிட்ட ரொம்ப நாளா ஒரு விஷயம் கேட்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.”
“அப்படியா என்ன விஷயம் ஜோசியரே?” என்று கேட்டார் வள்ளி.
“அது எப்படி அம்மா? உங்க வீட்டு மருமக இவ்வளவு பாசமா உங்க வீட்டு பொண்ணு மாதிரி இருக்கிறாங்க. அது என்ன ரகசியம்? எங்களுக்கும் சொல்லுங்க.” என்று ரகசியம் கேட்பதுபோல கேட்டார் ஜோசியர்.
“நான் என்னோட பொண்ணையும் மருமகளையும் ஒரே மாதிரி தான் பார்க்கிறேன் .
அவங்க சின்னதா ஏதாவது வேலை செஞ்சாலும் நான் வாயார புகழ்வேன்.
ரெண்டு பேர்ல யாரு தப்பு பண்ணினாலும் பொறுமையா அவங்க தப்பை சொல்லி புரியவைப்பேன். என் பொண்ணுக்கு எதை செய்தாலும் அதை என் மருமகளுக்கும் செய்வேன். அது வேலையாய் இருந்தாலும் சரி, இல்லை பொருள் வாங்கி தருவதா இருந்தாலும் சரி. ரெண்டுபேருக்கும் நான் செய்வேன். அவ்வளவுதான்.” என்று முடித்தார் பார்வதி.
“என்னமா? எவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமாக சொல்லிட்டீங்க. நம்ம பொண்ணை நாம பார்க்கிற மாதிரி மருமகளை பார்க்க முடியுமா? பார்த்தாலும் நம்ம பொண்ணுக்கு நாம செய்யற மாதிரி செய்ய முடியுமா? அப்படியே செய்ய நினைச்சாலும் வசதி வேண்டுமே.”
“ பார்க்க முடியும் ஜோசியரே. நம்மால் முடிந்த அளவுக்கு செய்தாலே போதும். அதையெல்லாம் அவங்க புரிஞ்சுபாங்க. ” என்றார் புன்னகையுடன்.
“சரி மா. நான் கிளம்புகிறேன்.” என்று கூறியபடி எழுந்து சென்றார் ஜோசியர்.
மாதவன் எப்படியாவது அவள் மனதில் இடம் பிடித்து அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பல திட்டங்கள் போட்டிருந்தான்.
அன்று நடந்த எல்லாவற்றையும் அவளிடம் விவரித்து தன் மீது எந்தத் தவறும் இல்லை என்று அவளுக்கு புரிய வைத்து அவளிடம் தன் காதலை தெரிவிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான் மாதவன்
இப்பொழுது இவர் இப்படி சொல்லிவிட்டார். இந்த 3 மாதத்திற்குள் அவனால் அதையெல்லாம் செய்ய முடியுமா? என்று யோசித்தான். (Xanax)
பூங்காவில் அவள் குடும்பத்தினர் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அவன் அவர்களின் அருகில் சென்று மரத்தின் பின் ஒளிந்து கொண்டு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டான்.
அவன் கேட்டதை ஒருமுறை நினைவு படுத்தி யோசித்தான்.
‘மது அப்பா சொல்ற பையனை தான் கல்யாணம் பண்ணிக் கொள்வாள் என தெளிவா தெரியுது. நம்ம தப்பு பண்ணலைன்னு நிரூபிக்க நம்மகிட்ட இப்போ எந்த ஆதாரமும் கிடையாது. அப்படி இருக்கும்போது நாம வாயால சொன்னா, அவ கேட் பாளா என் மேல இருக்கிற கண்மூடித்தனமான கோபத்தால் நாம சொல்வதை நம்ப மாட்டாள்.
பேசாம அவளை கரெக்ட் பண்றதுக்கு பதிலா அவங்க அப்பாவை கரெக்ட் பண்ணிடலாம். சரி இதுதான் சரியான வழி. அவரே இவன் தான் மாப்பிள்ளைனு சொல்ல வைக்கணும். அப்பதான் அவளை கல்யாணம் பண்ணிக்க முடியும்.’ என்று முடிவெடுத்தான் .
என் வருங்கால மாமனார் பேசிக்கிட்டு இருக்கும்போது அவருடைய பூர்வீகம் தஞ்சாவூர்னு சொன்னாரு . அப்பாவின் பூர்வீகம் கூட தஞ்சாவூர் தான். என் மாமனார் டிகிரி படிச்சிட்டு சேல்ஸ் டாக்ஸ் ஆபீஸரா ஒர்க் பண்றாரு.
அப்பாவும் காலேஜ் படிச்சி இருக்காரு. அந்த காலத்தில் காலேஜ் படிச்சவங்க எல்லாம் ரொம்ப கம்மிதான். ஒரே ஊர் வேற. ஒரு வேளை அப்பாவுக்கு என் வருங்கால மாமனாரை தெரிந்திருக்குமோ? தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கு. சரி விசாரித்துப் பார்க்கலாம்.” என்று நினைத்தபடி உறங்கினான்.