கடையில் கணக்கு பார்த்து முடித்த மாதவன் கண்ணை மூடிக்கொண்டு அவனது அருகில் உட்கார்ந்திருந்தாள் அப்போது
மதுமிதாவை முதன் முதலில் பார்த்தது மாதவனுக்கு ஞாபகம் வந்தது.
மாதவன் தன் கல்லூரி நண்பனான துரையின் வீட்டிற்கு சென்று இருந்தான். அவனது வீடு தேனியில் இருந்தது. தேனியில் திருவிழா என்று நண்பர்களை அழைத்து இருந்தான் துரை.
மாதவன் மற்றும் அவனது நண்பர்கள் துரையின் வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தனர்.
“ வாங்கப்பா. வாங்க.” என்று வந்த பசங்களை வரவேற்றார் துரையின் தாயார் மாலினி.
“வாங்க அண்ணா.” என்று எல்லோரையும் வரவேற்றாள் துரையின் தங்கை லதா.
“எல்லாரும் போய் குளிச்சிட்டு ரெடி ஆயிட்டு வாங்க. சாப்பிடலாம்.” என்று வந்தவர்களை உபசரித்தார் மாலினி.
“சரிங்கமா.” என்று கூறிவிட்டு பத்து நிமிடத்தில் எல்லோரும் கிளம்பி வந்து அவர் செய்து வைத்திருந்த சாதம், சாம்பார், கூட்டு, பொரியல் என்று பல பதார்த்தங்களை ஒரு பிடி பிடித்தனர்.
அதில் ஒருவனான குமரன்,
“துரை என்னடா சிக்கன், மட்டன், ஃபிஷ்னு நான்வெஜ் வெரைட்டியா சாப்பாடு போடுவாய்னு பார்த்தா, ஒரே வெஜிடேரியனா இருக்கு? அட போடா.” என்றான் ஏமாற்றத்துடன்.
“கோயில் திருவிழா முடியும் வரைக்கும் இந்த தெருவுல எந்த வீட்டிலேயும் நான்வெஜ் செய்ய மாட்டார்கள் அதனால அலையாம சாப்பிடுடா.”
“ஓ அப்படியா விஷயம்?”
“ஆமாண்டா. அப்படித்தான் விஷயம் .”என்றான் துரை.
அதற்கு இன்னொரு நண்பன் கபிலன்
“இப்படித்தான் விஷயம்னு தெரிந்திருந்தால் அவன் திருவிழா பார்க்க வந்தே இருக்க மாட்டான். இல்ல டா குமரா? அவன் வந்ததே நல்லா சாப்பிடத்தான்”. என்றான் சிரித்தபடி.
“சாப்பிட்டு முடித்து விட்டு கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திருங்க. சாய்ந்தரம் நாம திருவிழா பாக்க போகலாம்.” என்றான் துரை.
இதமான மாலை நேர குளிர் காற்று
ஜன்னல்வழியாக
முகத்தில் பட எழுந்தான் மாதவன்.
மற்ற நண்பர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
மாதவன் எழுந்து அறையை விட்டு வெளியே வந்தான். துரை அவனிடம் வந்தான்.
“என்ன டா மாதவா? சீக்கிரமா எழுந்துட்ட.” என்றான்.
“ தூக்கம் கலைஞ்சு போச்சு. அதான் எழுந்து விட்டேன்.”
“அப்படியா? சரி. மத்த பசங்க எல்லாம் எழுந்திரிக்க எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதுக்குள்ள நான் மாந்தோப்பு பக்கம் போயிட்டு வரேன். அங்க எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு.” என்றான் துரை.
“மாந்தோப்புக்கு போறியா? நானும் வரேன் டா.” என்றான் மாதவன்.
“ சரிடா. சீக்கிரம் முகத்தை கழுவிட்டு வா. “
தோட்டத்திற்கு சென்று முகத்தை கழுவி விட்டு அடர்த்தியான தலை முடியை வாரி கொண்டு வந்து நின்றான். இருவரும் துரையின் பைக்கில் ஏறி மாந்தோப்புக்கு சென்றனர் .
“உன்னோட மாந்தோப்பு ரொம்ப பெருசா இருக்குடா. காய் எல்லாம் செழிப்பா இருக்கு . ஒன்னு ரெண்டு மாங்காய்கள் பழுக்க தொடங்கிடுச்சி போல இருக்கு.”
“ஆமாண்டா. ஆள் வச்சு எல்லாத்தையும் பறிக்கணும் இல்லைனா இந்த ஊரு பசங்க இந்த மாம்பழத்தை சும்மா விட மாட்டாங்க. ஏற்கனவே கல்லை விட்டு எறிந்து அந்த வேலி பக்கத்துல இருக்கிற மாங்காயை எல்லாம் பறிச்சிக்கிட்டு போயிடுறாங்க.
இவனுங்க கிட்ட இருந்து இந்த மாங்காயை காப்பாற்றுவதே எனக்கு பெரிய வேலையா போச்சு.” என்று சலித்துக் கொண்டு இருக்கும்போதே வேலி அமைந்திருந்த திசையில் யாரோ பேசும் சத்தம் கேட்டது.
இதனை கேட்ட துரை இன்னைக்கும் எவனோ மாம்பழத்தை திருட வந்துட்டானுங்க. இருடா இன்னிக்கி இவனுங்களை சும்மாவே விடப்போவதில்லை. நான் போய் நாலு ஆளுங்களை கூட்டிட்டு வரேன். நீ அவங்களை போக விடாமல் பார்த்துக்கொள்.” என்று கூறிவிட்டு விரைந்து சென்றான் துரை.
சொன்னபடிய அடுத்த நிமிடம் கையில் கம்புடன் 4 ஆட்களுடன் அங்கு வந்தான்.
“மாதவா. நான் போய் உனக்கும் எனக்கும் கம்பு எடுத்துட்டு வர்றேன். அதுக்குள்ள நீ இந்த நான்கு பேரையும் அவங்க கிட்ட கூட்டிட்டு போ.” என்று கூறிவிட்டு துரை சென்றான்.
மாதவன் அந்த ஆட்களை அழைத்துக் கொண்டு சப்தம் வந்த திசையை நோக்கி நடந்தான். அப்பொழுது மரத்தில் ஏதோ ஒரு பெண் இருப்பது போல தெரிந்தது.
ஆனால் அவனுக்கு தெளிவாக அவள் தெரியவில்லை.
எனவே எல்லோரிடமும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிவிட்டு அங்கேயே அவர்களை நிறுத்தி விட்டு அவன் மட்டும் சில அடிகள் எடுத்து வைத்து அந்த திசையை நோக்கி நடந்தான்.
“சீக்கிரம் வாடி. குருவி கூட்டை வைத்து விட்டாயா?” என்று ஒரு பெண் தரையில் நின்று கொண்டு பதறிக் கொண்டிருக்க, ஆற அமர அந்த கூட்டில் இருந்த குருவிகளுக்கு எதுவும் ஆகாமல் மிகப் பொறுமையாக காரியமே கண்ணாக அந்த மரத்தில் பத்திரமாக வைத்துக் கொண்டிருந்தாள் இன்னொரு பெண்.
மற்ற பெண்கள் அனைவரும் ஓடிக்கொண்டிருக்க இவள் மட்டும் துணிச்சலாக அந்த குருவிகளை காப்பாற்றுவதற்காக அந்த மரத்தில் ஏறி அதனை வைத்துக் கொண்டிருந்தாள்.
அவளது துணிச்சலும் இரக்ககுணமும் மாதவனை கவர்ந்தது.
‘ஆனாலும் இந்த பொண்ணுக்கு ரொம்ப துணிச்சல்தான்’ என்று நினைத்துக்கொண்டான்.
அவள் மரத்தில் இருந்து இறங்கும் வரையில் அவளையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அவனுக்கே தெரியாமல் அவன் இதழ் புன்னகைத்தது.
அவள் குருவி கூட்டினை அங்கே வைத்துவிட்டு மெதுவாக மரத்தை விட்டு கீழே இறங்கினாள்.
மாதவன் அவனுடன் வந்திருந்த ஆட்களிடம்
“இந்த பக்கம் யாரும் இருக்கிற மாதிரி தெரியல. நீங்க அந்தப் பக்கம் போய் பாருங்க.” என்றான்.
அதற்கு அந்த ஆட்களில் ஒருவன்
“இல்லை தம்பி. இந்த பக்கம் தான் சத்தம் வர்ற மாதிரி இருக்கு.” என்றார் தயங்கினார்.
“அப்படியா சொல்றீங்க? சரி நான் இந்த பக்கம் போகிறேன். நீங்க அந்த பக்கம் போங்க.” என்றான்.
அந்த இரு பெண்களும் வேலி தாண்டி வெளியே செல்லும் வரையில் யாரும் அவர்களை பார்த்து விடாமல் பார்த்துக் கொண்டான்.
அந்தப் பெண்கள் சென்ற பிறகுதான் துரை இரண்டு கம்புடன் அங்கு வந்தான்.
வந்தவன் அந்த நான்கு ஆட்களையும் பார்த்து
“என்ன கண்டுபிடித்தீர்களா? யாராவது இருக்காங்களா?” என்று கேட்டான் ஆர்வமாக.
அவர்கள் “நாங்க மாந்தோப்பு முழுதும் பார்த்துட்டோம். யாருமே இல்லை. இந்த பக்கம் மட்டும் பார்க்க முடியல. அதை தம்பி பாத்துக்கறேன்னு சொல்லுச்சு.” என்றனர்.
“அப்படியா? இன்னிக்கும் நாம அவங்களை விட்டுட்டோமே.” என்று கவலையாக கூறினான் துரை.
“சரி. நீங்க போங்க. நான் பாத்துக்கிறேன்.” என்று அவர்களை அனுப்பி விட்டான்.
பிறகு மாதவன் இடம் திரும்பி “என்னடா மாதவா? யாரையாவது பார்த்தியா?” என்றான் துரை.
“பார்த்தேன். ஏதோ பொண்ணுங்க வேலியை தாண்டி இங்க வந்து மாம்பழம் பறித்துக் கொண்டு போயிருக்காங்க.”
“அடிப்பாவிங்களா? நேத்து நிறைய மாம்பழம் காணாமல் போயிருந்தது. அதையெல்லாம் இந்த பொண்ணுங்க தான் திருடி இருப்பார்களோ?” என்று சந்தேகமாக கேட்டான் துரை.
“இந்த பொண்ணுங்களை பார்த்தா அப்படி தெரியல. விளையாட்டா வந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன். ஒன்னு, ரெண்டு மாம்பழம் எடுத்துட்டு போய் இருப்பாங்க. அவ்வளவுதான்.”
“அப்போ, சார் எல்லாத்தையும் பாத்துக்கிட்டு சும்மா நின்னுட்டு இருந்தீங்க இல்லை இல்லை மத்தவங்க யாரும் அவர்களை பார்க்காமல் அவர்களை காப்பாற்றி இருக்கீங்க. அப்படித்தானே மாதவா?”