“ஹிஹிஹி” என்று இளித்தான் மாதவன்.
“உன்னை எல்லாம் பிரெண்ட்னு நம்பி உன்னை அந்த ஆட்களுக்கு வழிகாட்ட சொன்னேனே என்ன சொல்லணும்.” என்று நொந்து கொண்டான் துரை.
“அப்படி இல்லைடா. பார்த்தா நல்ல பொண்ணுங்க மாதிரி தெரிஞ்சது. அதனாலதான் போகட்டும்னு விட்டுட்டேன்” என்றான் திரும்பவும்.
“டேய் உன்னை மாதிரி எனக்கு நாலு பிரிண்ட், இல்லை இல்லை நீ ஒரே ஒரு பிரிண்ட் இருந்தால் போதும். நான் நல்லா வந்துடுவேன்.” என்றான் துரை நக்கலாக.
“சரி வா. திருவிழாவுக்கு போகலாம்.” என்று அழைத்தான் துரை.
“டேய் எல்லாரும் எழுந்திரிங்க. டைம் ஆகுது. இன்னிக்கி திருவிழாவுக்கு போகலாம்னு சொன்னேன் இல்ல?” என்று எல்லோரையும் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தான் துரை.
“ஆனால் குமரன் மட்டும்தான் எழுந்தான். மற்ற மூன்று நண்பர்கள் எழுந்திரிக்கவில்லை. ஒருவன் தூக்கக்கலக்கத்தில் உளறினான்.
துரை அருகில் சென்று கேட்டான்.
அவன் “டயர்டா இருக்குடா. நாளைக்கு போகலாம்.” என்றான்.
இதைக்கேட்டதும் துரை
“என்னடா இவன் இப்படி சொல்றான்?” என்று மாதவன் குமரன் இருவரையும் பார்த்து கேட்டான்.
“சரி போகட்டும். நாளைக்கு போகலாம். இன்னிக்கி ரெஸ்ட் எடுக்கட்டும்.” என்று ஒத்துக்கொண்டனர்.
“அம்மா நான் பிரண்டு கூட திருவிழா கடைக்கு போயிட்டு வரேன்.” என்று கூறிவிட்டு தோழிகளுடன் வெளியே சென்றாள் துரையின் தங்கை லதா.
துரையின் தாய் மாலினி காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தார்.
“என்னப்பா இந்த பசங்க இன்னும் எழுந்திரிக்க வில்லையா?” என்று ஆச்சரியமாக கேட்டார்.
“ஆமா ரொம்ப டயர்டா இருக்காங்களாம். சரி விடு. நாளைக்கு போய் சுத்தி பாருங்க.” என்று கூறிவிட்டு சென்றார்.
காபி டம்ப்ளரை வாங்கிய மாதவன் எங்கோ பார்த்தபடி சிரித்துக்கொண்டிருந்தான்.
இவனை கவனித்த குமரன்
“மாதவா மாதவா, மாதவா” என்று மூன்று முறை கூப்பிட்டான். ஆனால் அது மாதவன் காதில் விழுந்த மாதிரி தெரியவில்லை.
அப்போது குமரன் துரையிடம் திரும்பி
“என்னடா இவன்? எங்கேயோ பார்த்து சிரிக்கிறான்.” என்று மாதவனை வினோதமாக பார்த்தபடி கேட்டான் குமரன்.
“ஆமாம்டா குமரா. நானும் இப்பதான் பார்க்கிறேன்.” என்றான் ஆச்சரியமாக.
“இப்ப கூட பாரு. நாம ரெண்டு பேரும் இவனை பத்தி பேசிட்டு இருக்குறது கூட தெரியாம ஏதோ கனவு உலகத்தில் இருக்கிறான்.”
“டேய்! டேய் மாதவா.” என்று அவன் தோளை தொட்டு குலுக்கினான் குமரன்.
அப்போதுதான் அவனுக்கு தன்னை சுற்றி நடப்பது தெரிந்தது.
“என்னடா? என்ன வேணும்? என்னை கூப்பிட்டியா?” என்று தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போல கேட்டான் மாதவன்.
“சரியா போச்சு போடா. இவ்வளவு நேரம் மாதவா மாதவானு ஏலம் போடாத குறையா கூப்பிட்டுக்கிட்டு இருக்கேன். நீ சாவகாசமா என்னடானு கேக்குற. என்னடா நல்லாதானே இருந்த?” என்று அவன் நெற்றி, கழுத்து இரண்டையும் தொட்டுப்பார்த்தான் குமரன்.
“இப்பவும் நல்லா தான்டா இருக்கேன்.” என்றான் மாதவன் அவன் கையை தட்டிவிட்படி.
“பாத்தா அப்படி தெரியலையே.” என்றான் அவனை கூர்ந்து நோக்கி குமரன்.
“ஆமாண்டா. இவனுக்கு என்னமோ ஆயிடுச்சு.” என்றான் துரை.
“ஊர்ல இருந்து வரும்போது நல்லா தானடா இருந்த. அதுக்குள்ள என்ன ஆச்சு உனக்கு?” என்று விடாமல் விசாரித்தான் குமரன்.
“ஒன்னும் இல்லைன்னு சொன்னா விட மாட்டியே.
சரி வா. கொஞ்ச நேரம் வெளிய நடந்துகிட்டே பேசலாம்.” என்று குமரனை அழைத்தான் மாதவன்.
“துரை” என்று துரையின் தாய் கூப்பிடுவது கேட்டது.
“துரை நீ போய் பாரு. நாங்க ரெண்டு பேரும் வெளிய ஒரு வாக் போயிட்டு வருகிறோம்.” என்று சொன்ன மாதவன் குமரனை அழைத்துக்கொண்டு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
“என்னடா என்ன விஷயம்? உன்கிட்ட ஏதோ சேன்ஜ் தெரியுதே.” என்று அவன் முகத்தை உற்று பார்த்தபடி கேட்டான் குமரன்.
“கண்டுபிடிச்சிட்டியா டா? நீ தூங்கிட்டு இருந்தப்போ நானும் துரையும் மாந்தோப்புக்கு போயிருந்தோம். அங்க ரெண்டு பொண்ணுங்களை பார்த்தேன்.” என்று ஆரம்பித்தான்.
அதற்குள் குமரன் இடைபுகுந்து
“அடப்பாவி ரெண்டு பொண்ணா? அவன் அவனுக்கு ஒரு பொண்ணு கிடைக்கிறதே குதிரை கொம்பா இருக்கு. நீ என்னடான்னா ரெண்டு பொண்ணுக்கு ஒரே நேரத்துல ரூட் போடுறியா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
“அட ஏண்டா நீ வேற. சொல்றதை முழுசா கேளு டா. முந்திரிக்கொட்டை. அதில ஒரு பொண்ணு குருவிக் கூட்டை எடுத்துக்கிட்டு மரத்து மேல ஏறினா. நாங்கெல்லாம் அங்கு வந்துகிட்டு இருக்கிறோம்னு தெரிந்து கூட துணிச்சலா அந்த கூட்டை பத்திரமா வச்சுட்டு தாண்டா கீழே இறங்கினா.”
“சார் அந்த பொண்ணோட இரக்க குணத்தை பார்த்து விழுந்துடீங்க போல இருக்கு.” என்று கேட்டான்.
“ஆமாம்டா இரக்ககுணம், துணிச்சல் ரெண்டுமே அவகிட்ட இருக்குடா.”
“அப்போ இது ரெண்டு மட்டும் தான் இருக்கா? பொண்ணு எப்படி இருப்பா?” என்று ஆர்வமாக கேட்டான் குமரன்.
“ பொண்ணு ரொம்ப அழகா இருக்காடா. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு. நான் அவளை லவ் பண்றேன். அந்த பொண்ணை எப்படி கரெக்ட் பண்றதுனு தான் எனக்கு தெரியல.” என்று சோகமாக கூறினான் மாதவன்.
“அந்த பொண்ணு அந்த பொண்ணுனு சொல்றியே. அந்த பொண்ணுக்கு பேரு ஏதாவது இருக்கும் இல்லையா?”
“ஆமால்ல.”
“ஆமாவா? இல்லையா?” என்று கேட்டான் குமரன்.
“ஆமாண்டா. அந்த பொண்ணு பேரு கூட எனக்கு தெரியாது. எப்படிடா கண்டுபிடிக்கிறது?” என்று சோகமாக கேட்டான் மாதவன்.
“மாதவா மாதவா” என்ற குரல் கேட்டு நிகழ்காலத்துக்கு வந்தான் மாதவன்.
அங்கு ஆறுமுகம் நின்றுகொண்டிருந்தான். “இன்விடேஷன் அடிக்க கொடுத்துட்டேன். சமையலுக்கு ஆள் சொல்லியாச்சு. வீட்ல தானே கல்யாணம் நடக்கப்போகுது அதனால மண்டபம் புக் பண்ற வேலை மிச்சம். அப்புறம் அதனால வீட்டை பெயிண்ட் பண்றதுக்கு ஆட்களை வரச் சொல்லியிருக்கேன். அதனால நாளைக்கு நீ வீட்டிலேயே இருந்து வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குதானு பாரு. எனக்கு நிலத்துல வேலை இருக்கு. என்னால வீட்ல இருக்க முடியாது. சரியா டா?” என்று கேட்டான் ஆறுமுகம்.
“சரி அண்ணா. நான் நாளைக்கு வீட்டிலேயே இருந்து எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ உன் வேலையை நிம்மதியா பாரு.” என்றான் மாதவன் பொறுப்பாக.
“பார்த்து பார்த்து. அலமாரி ரொம்ப வெயிட்டா இருக்கும். பார்த்து நகர்த்துங்க.” என்று கூறியபடி அங்கு வந்தான் மாதவன். அந்தப் பெரிய வீட்டில் பொருட்களை எல்லாம் நகர்த்தி சுவற்றிற்கு பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தனர்.
மூன்று அடுப்பு கொண்டிருந்த கேஸ் ஸ்டவ் அது. ஒன்றில் சாம்பார் கொதித்துக் கொண்டிருந்தது. மற்றொன்றில் பீன்ஸ் பொரியல், மூன்றாவது அடுப்பில் பாகற்காய் பொறியல் தயாராகிக்கொண்டிருந்தது.
கொதித்துக் கொண்டிருந்த சாம்பாரில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம் மூன்றையும் தாளித்து கொட்டினாள். மலர்.
பார்வதி தேங்காயை துருவி எடுத்து எடுத்துவந்து பீன்ஸ் பொரியலில் சேர்த்து கிண்டினார்.
பிறகு ரசத்திற்கு புளி கரைத்து கொண்டிருந்தார்.
“அம்மா சீக்கிரம் வேலையை முடிச்சுட்டு வெளியே வாங்க. கிச்சனுக்குள் பெயிண்ட் அடிக்கணும்.”
“இருடா நீ வேற. காலையிலிருந்து பறக்கற. ஆதித்யாவுக்கு லீவு நாள் தானேனு கொஞ்சம் பொறுமையா பண்ணலாம்னு நினைச்சா, இன்னிக்கு கூட பறக்கவிடற.”
“அதுக்குதான். நான் உங்களை ஏதாவது சிம்பிளா பண்ண சொன்னேன் . நான் சொன்னாதான் கேட்கவே மாட்டாங்க.
அண்ணி நீங்க சொல்லி இருக்கலாம் இல்லையா?” என்று மலரிடம் கேட்டான் மாதவன்.
“மாதவா சிம்பிளா தான் பண்றோம். இல்லைனா நிறைய பண்ணி இருப்போம்.
நீ சொன்னதால தான் சாம்பார், பீன்ஸ் பொரியல், ரசத்துடன் நிறுத்தி விட்டோம்.”
“இதுதான் உங்க சிம்பிள் மெனு வா? நான் தயிர் சாதம் பண்ணுவீங்கன்னு நினைத்தேன்.” என்றான்.
“சரி இரு மாதவா. இன்னும் பத்து நிமிஷம் தான். ரசம் தாளித்து விட்டால் முடிஞ்சிடும்.” என்று கூறியபடி பார்வதி கரைத்து கொடுத்த புலியை கொண்டு ரசம் தாளித்துக் கொண்டிருந்தாள் மலர்.