“என்ன மேடம்? அந்த இரவு நேரத்துல என் கணவர் என் கூட தானே இருந்தார். அப்படி இருக்க அவர் எப்படி அங்க போயிருக்க முடியும்? நான் அந்த நியூசே பொய்ன்னு சொல்றேன். நீங்க என்னடான்னா நான் அவரை வேண்டாம்னு சொல்லிட்டு போனதா கற்பனை பண்ணி பேசிட்டு இருக்கீங்க. அது அவருக்கு வேண்டாதவங்க யாரோ செஞ்ச சதி தான்”, என்றாள் யுக்தா.
“அவருக்கு அப்படி எதிரி யார் இருக்காங்க? இதோ உங்களுக்கு எதிரா யாராவது செஞ்சா ஏதாவது சொல்லலாம். ஏன்னா நீங்க ஒரு ஸ்டார். எதிரி இருக்குற அளவுக்கு உங்க கணவர் ஒண்ணும் பெரிய ஆள் இல்லையே. உங்களை வச்சு தானே அவருக்கு பேர். அப்படி இருக்க அவரை எதுக்கு யாரோ மாட்ட வைக்கணும்?”, என்று கேட்டாள் ஒரு பெண்.
“ஓஹோ, நீங்க சொல்றது சரி தான். இப்ப நான் உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கவா?”, என்று நிதானமாக கேட்டாள் யுக்தா.
“கேளுங்க மேடம்”
“உங்க பேரைச் சொன்னா இந்த சென்னைல எத்தனை பேருக்கு உங்களைத் தெரியும்?”
“எங்க சொந்தக்காரங்க. எங்க தெருல இருக்குறவங்க, நான் வேலை பாக்குற இடத்துல உள்ளவங்க எல்லாருக்கும் தெரியும்”
“சரி என்னோட கணவரை உங்கள்ள எத்தனை பேருக்கு தெரியும்?”
“எல்லாருக்குமே தெரியும்”
“அது எதனால? அவர் என்னோட கணவர் அப்படிங்குறதுனாலயா?”, என்று அவள் கேட்டதும் பத்திரிக்கையாளர் கூட்டத்தில் இருந்து இது வரை பேசாத ஒரு பெண் எழுந்து “இல்லை மேடம், பயோ டெக்னாலஜி ஃபீல்ட்ல ஏதோ பெரிய புராஜெக்ட் பண்ணினதுக்காக முதலமைச்சர் கையாள விருது வாங்கிருக்கார் மிஸ்டர் யுவன். அப்ப கூட அவரைப் பத்தி எல்லா பத்திரிக்கைலயும் போட்டோ போட்டாங்க. அதுக்கப்புறம் தான் நீங்க படம் நடிக்க வந்தீங்க. உங்க படம் ஹிட். அதுக்கு அப்புறம் அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. அதுல இருந்து சாதனையாளர் யுவன் அப்படிங்குற பேர் போய் சினிமா நடிகை யுக்தாவின் கணவர் யுவன் அப்படிங்குற பெயர் பெருசா ஆகிட்டு”, என்று சொன்னாள்.
அந்த பெண்ணை பார்த்த யுக்தா “தேங்க்ஸ்”, என்று சொல்லி விட்டு மற்றவர்கள் புறம் திரும்பி “கேட்டுக்கிட்டீங்களா? என்னால என் கணவருக்கு பெருமை கிடையாது. ஏற்கனவே பல விருதுகளை வாங்கினவர் தான் அவர். அதனால அவருக்கும் எதிரிகள் உண்டு. அவங்க அவரோட பியூச்சரைக் கெடுக்குறதுக்காக இப்படி பண்ணிருக்காங்க. இதுக்கு காரணமானவங்க யாருன்னு கண்டு பிடிக்க போலீஸ் கிட்ட கம்ப்லைண்ட் கொடுக்க போறேன். அவங்க மேல மான நஷ்ட வழக்கு போடப் போறேன்”, என்று யுக்தா சொன்னதும் யுவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தான். செல்வமோ பயத்தில் உறைந்து போய் நின்றிருந்தார். அவர் முகத்தில் வியர்வை அரும்பியது.
“அம்மு இருந்தாலும் உனக்கு தைரியம் அதிகம் டி. தப்பு முழுக்க என் மேல இருக்கும் போது நீ யார் மேல மான நஷ்ட வழக்கு போட போற? ஆனா உன் மிரட்டலைப் பாத்து கூட உன் அப்பா பயந்து போய் நிக்குறதைப் பாத்து தான் எனக்கு சிரிப்பா வருது”, என்று எண்ணிக் கொண்டான் யுவன்.
“எப்பா கணவருக்காக எவ்வளவு சப்போர்ட் பண்ணி சண்டை போடுறீங்க? உங்களைப் பத்தி தப்பான நியூஸ் வரும் போது கூட நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகலையே? மிஸ்டர் யுவன் மேல உங்களுக்கு அவ்வளவு காதலா?”, என்று கேட்டார் ஒரு பத்திரிக்கையாளர்.
இந்த கேள்விக்கு யுவனுக்கும் அவள் என்ன பதில் சொல்வாள் என்று ஆவல் அதிகரித்தது.
யுக்தா அந்த கேள்வி கேட்டவரைப் பார்த்து மென்மையாக புன்னகைத்து விட்டு “ஆமா, இந்த உலகத்துலே நான் அதிகமா நேசிக்கிறது என் கணவரைத் தான். மாசத்துக்கு ஏழு லட்சம் சம்பளம் தறோம், எங்க கம்பெனிக்கு வேலைக்கு வாங்கன்னு கூப்பிட்டப்பவும், பாரின் வாய்ப்பு வந்தப்பவும் எனக்கு துணையா இருக்கணும்னு என் கம்பெனில எனக்கு கீழே வேலை பாத்தாங்க. அதுக்கப்புறம் நான் சினிமா துறைக்கு வரும் போதும் என்னோட துணைக்காகவே எனக்கு மேனேஜர் வேலை பாத்தாங்க. இப்படி என்னை கண்ணுக்குள்ள வச்சு தாங்குற கணவரை யாருக்கு தான் பிடிக்காது? நான் என் கணவரை ரொம்ப ரொம்ப லவ் பண்ணுறேன் போதுமா?”, என்று சிறு வெட்கத்துடன் அவள் சொல்ல அந்த காட்சியை பல கேமராக்கள் கிளிக் செய்து கொண்டது.
யுவனும் தன்னுடைய மனைவியை, அவளுடைய அந்த வெட்கம் சுமந்த புன்னகையை தன்னுடைய மனதினுள் பதிந்து வைத்துக் கொண்டான்.
அவள் அப்படிச் சொன்னதும் மேலும் பல கேள்விகளை கேட்டு விட்டு பத்திரிக்கை கூட்டம் அங்கிருந்து கலைந்தது. அவர்கள் சென்றதும் அங்கு நின்ற இயக்குனர் ரவியிடம் சென்ற யுக்தா “என்னை மன்னிச்சிருங்க சார்”, என்றாள்.
“என்ன பாப்பா மன்னிப்பெல்லாம்? நீ சந்தோஷமா இருந்தா அதுவே போதும்? நம்ம நாட்டுல அழகான நடிகைகளுக்கா பஞ்சம்? நான் வேற ஆள் பாத்துக்குறேன். நீ உன் ஹீரோ கூட சேந்து சந்தோஸமா இரு”, என்று சொன்ன ரவி அவள் தலை மீது கை வைத்து அவளை வாழ்த்தி விட்டுச் சென்றார்.
“நீ என்ன பண்ணிட்டு இருக்கேன்னு தெரியுதா யுக்தா?”, என்று கேட்டார் செல்வம். அவர் முகம் கோபத்தால் சிவந்திருந்தது.
அவரையும் அவருடைய கோபத்தையும் அலட்சியமாக பார்த்தவள் “சும்மா என்னை மிரட்டுறதை இதோட விடுங்க பா”, என்று சொன்னாள்.
“இதுக்கெல்லாம் நீ பெருசா அழப் போற”, என்று அவர் சொல்லிக் கொண்டிருக்க அவரைக் கண்டு கொள்ளாமல் “வாங்க மாமா”, என்று அங்கு வந்த சிவசுந்தரத்தை அழைத்தாள் யுக்தா.
அவரைக் கண்டதும் “யோவ் நீ எதுக்கு யா இங்க வந்துருக்க?”, என்று கேட்டார் செல்வம். யுவனுக்கும் அவர் வந்தது குழப்பமே.
“மேடம் கிட்ட ஒரு சைன் வாங்கணும், அதான் சார் வந்தேன்”, என்றார் சிவசுந்தரம்.
“இன்னொரு தடவை என்னை மேடம்னு சொல்லாதீங்க மாமா”, என்று சிணுங்கினாள் யுக்தா.
“உறவு வேற தொழில் வேற மேடம்”, என்று சொல்லி சிரித்தார் சிவசுந்தரம்.
“சரி பேப்பர்ஸ் எல்லாம் கொடுங்க, நான் கையெழுத்துப் போடுறேன்”, என்று சொன்ன யுக்தா அவர் கொடுத்த பேப்பர் அனைத்திலும் கையெழுத்துப் போட்டாள்.
“என்னய்யா இவ்வளவு கையெழுத்து வாங்குற?”, என்று குழப்பத்துடன் கேட்டார் செல்வம்.
“சொத்து கைமாறனும்னா இவ்வளவு கையெழுத்து வாங்கணும்ல சார்?”, என்று குண்டைத் தூக்கிப் போட்டார் சிவசுந்தரம்.
“என்ன யா சொல்ற? சொத்து கை மாறுதா?”, என்று திகைப்புடன் கேட்டார்.
“ஆமா சார், யுக்தா மேடம் அவங்க பேர்ல இருக்குற சொத்தை எல்லாம் அவங்களோட கணவர் யுவனுக்கும், இவங்களுக்கு பிறக்கப் போற வாரிசுகளுக்கும் எழுதி வச்சிட்டாங்க”, என்று செல்வத்தின் தலையில் இடியை இறக்கினார். யுவனும் அவர் சொன்னதைக் கேட்டு திகைத்துப் போனான்.
“இது என்ன இவ இப்படி பண்ணுறா? கடவுளே இவ அப்பன் சும்மாவே சாமியாடுவான். இப்ப சலங்கையை வேற கட்டி விடுறாளே? இன்னும் என்னல்லாம் பாக்கணுமோ? இப்ப எதுக்கு டி என் பேர்ல சொத்தை எழுதி வைக்கிற?”, என்று மானசீகமாக கேட்டான்.
அதை அவள் எதிரில் சென்று நேருக்கு நேர் அவளிடம் கேட்க அவனுக்கு ஆசை தான். ஆனால் இப்போது அவன் சென்றால் செல்வம் நாக்கில் நரம்பில்லாமல் பேசுவார். “இந்த சொத்துக்காக தானே என் மகளை மயக்கி கல்யாணம் பண்ணின?”, என்று கேட்பார் என்பதால் அப்படியே நின்றான்.
சிவசுந்தரம் சொன்னதைக் கேட்டு கொதித்துப் போன செல்வம் “யார் சொத்தை யார் யாருக்கு எழுதி வைக்கிறது?”, என்று கோபத்துடன் கேட்டார்.
“என் சொத்தை என் குடும்பமான என் கணவருக்கும் எனக்கு பிறக்க போற பிள்ளைகளுக்கும் எழுதி வச்சிருக்கேன்.. இதுல என்ன தப்பு இருக்கு?”, என்று கேட்டாள் யுக்தா.
“கொன்னுறுவேன் கொன்னு. இது எனக்கு சொந்தமானது”
“என்னது உங்களுக்கு சொந்தமா? இதெல்லாம் என்னோட அம்மா தாத்தா எனக்கு கொடுத்த சொத்து. இதை நான் யாருக்கு வேணும்னாலும் எழுதி வைப்பேன். நீங்க கூட கேக்க முடியாது. ஏன்னா இது உங்க அப்பா சம்பாதிச்சது கிடையாது”
“யுக்தா”
“கத்தாதீங்க, உங்களை நான் வெறுங்கையோட விட நினைக்கல. தாத்தாவோட வீடும், கார் கம்பெனியும் உங்க பேருக்கு எழுதிட்டேன். அதுவும் நீங்க எனக்கு அப்பா அப்படிங்குறதுனால மட்டும் தான்”
“ஏய் என்ன வாய் நீளுது? பயம் விட்டுப் போச்சுல்ல? இதுக்கெல்லாம் காரணம் நான் தாலி கட்டினவ தானே? இன்னைக்கே அவளுக்கு ஒரு முடிவு கட்டி என் சொத்தை எப்படி உன் கிட்ட இருந்து எழுதி வாங்கணும் எனக்கு தெரியும்”
“அப்படியா? முடிஞ்சா வாங்கிக்கோங்க. இனி அம்மா மேல நீங்க கை வைக்க நினைக்க கூட முடியாது”
“அவ நான் தாலி கட்டின பொண்டாட்டி. அவளைக் கொல்லக் கூட செய்வேன்”’
“ஓஹோ, ஆனா நீங்க எங்க அம்மாவுக்கு மட்டும் தான் தாலி கட்டிருக்கீங்களா?”, என்று அவள் கேட்க திகைத்து போன செல்வம் “யுக்தா”, என்று அதிர்ந்து போய் கத்தினார்.
“உங்களைக் கத்தாதீங்கன்னு சொன்னேன். எல்லாம் எனக்கு தெரியும். இனி என்னோட வாழ்க்கைலயோ அம்மா வாழ்க்கைலயோ நீங்க வரவே முடியாது. உங்க சொத்துக்கான டாக்குமெண்ட்ஸ் உங்களைத் தேடி வரும். ரப்பர் பேக்டரி பக்கம், ஃபுட் வேர்கவுஸ் பக்கம் நீங்க வரவே கூடாது. அப்படி வந்தா வாட்ச்மேன் விரட்டுவான். நான் உங்களுக்கு கொடுத்த சொத்தை திருப்பிக் கேக்க மாட்டேன். ஆனா நீங்க அதை பிச்சைன்னு நினைச்சு வேண்டாம்னு முடிவு பண்ணினா அதை திருப்பி கொடுக்குறதா இதுல ஒரு கையெழுத்து மட்டும் போட்டுக் கொத்துருங்க”, என்று நக்கலாக சொன்னாள்.
அதைக் கொடுக்க அவர் என்ன முட்டாளா? அதனால் அவளை முறைத்த படி அங்கிருந்து சென்றார்.
அவர் சென்றதும் சிவசுந்தரமும் அங்கிருந்து சென்றார். யுக்தா மட்டும் அந்த இடத்தில் தனியே நின்றாள். அவளைப் பார்த்த படி யுவனும் நின்றிருந்தான். பின் தளர்ந்த நடையுடன் தன்னுடைய காரை நோக்கி நடந்தாள்.
கார்க் கதவைத் திறக்கும் போது அவள் தடுமாற்றத்துடன் கீழே விழப் போக அவளைத் தன்னுடைய கைகளில் தாங்கிக் கொண்டான் யுவன்.
“இவன் எப்ப இங்க வந்தான்?”, என்று அவன் முகத்தைப் பார்த்த படியே நின்றாள் யுக்தா.