ஒளி 12 :
உன் நெஞ்சிலே பாரம்! உனக்காகவே நானும்!
சுமைதாங்கியாய் தாங்குவேன் !
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்!
கண்ணீரை நான் மாற்றுவேன் !
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்!
வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம்!
டிவியில் ஒலிக்கும் பாடல் சத்தம் தவிர அந்த இடமே நிசப்தமாக இருந்தது… எல்லோரிடமும் கலவையான உணர்வுகள் பிரதிபலிக்க சாந்தியின் முகம் மட்டும் மலர்ந்து விகசித்தது.
“ஏன் ரதி இந்த முடிவு? நாங்க ஏதும் மனசு நோக நடந்துக்கிட்டோமா ?” என பாண்டியன் கேட்டதும் ,
“ஐயோ! அப்படிலாம் இல்ல மாமா … எனக்கோ அம்மாக்கோ எந்த குறையும் நீங்க வைக்கல..நான் முன்னாடியே யோசிச்சு இருந்த விஷயம் இது இப்ப எனக்கு சாதகமா வரும் போது அதை நிறைவேத்திக்கலாம்னு தோணுது..”
“கண்டிப்பா அந்த இடத்தை வாங்கியே ஆகணுமா ? உன்னால மறுபடியும் எப்படி அங்க இருக்க அந்த சுயநல மனுஷங்க கூட இருக்க முடியும் ரதி” என பழனி கேள்வி எழுப்ப ..
“மாமா ! எனக்கு அவங்களாம் ஒரு விஷயமே இல்ல… முதல் முறை அவங்களால நான் கஷ்டப்பட்டேன் தான் ஆனால் அதிலிருந்து நிறைய கத்துக்கிட்டேன்… இப்ப அந்த இடம் வாங்கறது எனக்காக மட்டும் இல்ல அப்பாவுக்காக .. என்னோட குழந்தை காலத்துல இருந்து கிட்டத்தட்ட இருபத்தைந்து வருஷம் அங்க அப்பா அம்மாவோட இருந்தது மாமா…”
“அது எனக்கு வெறும் இடம் இல்ல , என்னோட உலகமே அதான் அவங்க எல்லாரும் அங்க பக்கத்துல தான் இருக்காங்க, எனக்கும் அவங்களுக்கும் இனி எந்த பேச்சும் இல்ல… அதை கூட காலம் தான் முடிவு செய்யும்… ஆனால் இது எல்லாத்தையும் விட எனக்கு அப்பா முக்கியம் அவரோட நினைவுகளாவது என்கூட அங்க இருக்கட்டுமே…”
“கண்டிப்பா உங்க சப்போர்ட் இல்லாம நான் இதை செய்ய மாட்டேன்…ஆனா அந்த இடம் வாங்கிறதுல உறுதியா இருக்கேன்… கடைசி வரை வாடகை வீட்ல இருக்கறது வேற , வீடே இல்லாம இருக்கறதும் வேற ஆனால் நமக்குனு இருந்ததை, கூட இருந்து பறித்து நடுரோட்ல நிற்க வைத்தது ரொம்ப கொடுமை மாமா …”
“இது உரிமைக்கும் உணர்வுக்கும் நடுவுல நடக்கற போராட்டம்… அதை முடிக்கணும்னு நினைக்கிறேன் …ப்ளீஸ் மாமா …”
அவளின் உணர்வுகள் அவர்களுக்கு புரிந்தது, அந்த நாட்களில் வயது பெண்ணாய் அவள் பட்ட கஷ்டத்தை கூட இருந்து பார்த்தவர்களாயிற்றே…
“நீ ஏன் சாந்தி ஏதும் பேசமாட்றா?” என வாசுகி கேட்டதும்
“நான் நினைச்சது அவ பேசிட்டா? நான் பேச இன்னும் என்ன இருக்கு ?எதிர்பாராமல் நடந்த விஷயம் தான், கஷ்ட ஜீவனம் இல்ல தான் ஆனாலும் என்னோட குடும்பம்னு நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தேன் தீடிர்னு ஒரு நாள் அது ஏதும் இல்லாம மொத்தமா சிதைஞ்சு வயசு பொண்ணை நடுரோட்ல வச்சுட்டு நின்னது இந்த ஜென்மத்துக்கு ஆறாது.”
“நீங்க எல்லாரும் பக்க பலமாக இருந்ததால தான் நாங்க ரெண்டு பேரும் இன்னைக்கு உயிரோட இருக்கோம் , கண்டிப்பா நீங்க எனக்கோ என் பொண்ணுக்கோ எந்த குறையும் வைக்கல.. இருந்தாலும் என்னவோ முழு மனசா என்னால இங்க ஒட்ட முடில…”
“இது எங்க இடம் இல்லைனு தோணுது… ஒரு வேளை சந்தர்ப்ப சூழ்நிலைகள் வேற மாதிரி நடந்து இங்க வந்து இருந்திருந்தா அப்படி தெரிஞ்சு இருக்காதோ என்னவோ … பட்ட அடி கிடைச்ச ஏமாற்றம் என்னவோ மனசு கேட்கல..”
[the_ad id=”6605″]
“என்னோட கடைசி காலமும் இப்படியே போய்டுமோனு கவலைப்பட்டேன், எங்களை கீழே தள்ளி விட்ட மனுஷங்க முன்னாடி எழுந்து நிற்க முடியாதோனு நினைச்சேன்.. ஆனால் அம்மு சொல்றது கேட்கும் போது இப்ப தான் மனசுக்கு நிறைவா இருக்கு…”
ஏமாற்றம் , இழப்பு ,வலி, பயம் , இறுக்கம் என பலவித உணர்வுகளை அவர் முகம் பிரதிபலித்து கடைசியில் ரதியின் பேச்சில் மலர்ந்தது.
இதை கவனித்த அனைவர் மனமும் கனத்தது… நாளை என்ன நடக்கும் எனத் தெரியாத இந்த புதிரான வாழ்க்கையில் காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறது என்பதும் தெரியாமல் ஒரே நாளில் சிதைந்த இவர்களின் நிலையை என்னவென்று கூறுவது…
“சரி விடுங்க.. எதுக்கு முடிஞ்சது பத்தி பேசிட்டு இதுக்கு அப்பறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்..”என்று அந்த அமைதியை சரோஜா கலைத்தார்.
ஒரு பெருமூச்செடுத்தவாறு “சரி சொல்லு ரதி நீ என்ன யோசிச்சு வைச்சிருக்க” என பாண்டியன் கேட்க ?
“அந்த இடத்தை நம்பகிட்ட இருந்து வாங்கி வேற ஒருத்தர்க்கு பணத்துக்காக வித்தாங்கள்ல, வாங்கினவங்க அந்த இடத்தை விற்க பார்த்துட்டு இருக்காங்க..அவங்களுக்கு இப்ப பணத் தேவை இருக்கு அதனால வாங்கின விலைக்கே கூட விற்க தயாரா இருக்காங்க …”
அவள் பேச்சில் குறுக்கிட்டு, “அந்த இடத்திலே இவ்வளவு நாள் பழைய பொருள்லாம் விக்கற கடைக்காரனே வாங்க போறான்னு சொன்னாங்க” என பழனி கேட்க…
“ஆமா மாமா! முன்னாடி அப்படி ஒரு பேச்சு இருந்தது, ஆனால் அவனை வாங்க விடாம பண்ணிட்டேன்..”
“என்ன சொல்ற ரதி? என்ன பண்ண ?” என இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த அவள் சித்தி வள்ளி அதிர்ச்சியாய் கேட்க…
“நமக்கு நடந்தது அந்த தெருவிலே இருக்க எல்லாருக்கும் தெரியும் சித்தி… நான் இவ்வளவு நாள் அங்க இல்லனாலும் அங்க என்ன நடக்குதுன்னு அப்ப அப்ப விசாரிச்சு கேட்டுப்பேன்… அப்படி தான் இந்த இடம் விக்கறது அந்த கடைக்காரன் வாங்க இருக்கறது எல்லாமே தெரிய வந்தது…”
“அந்த இடத்தை முதல்ல வீடு கட்ட தான் வாங்கினாங்க , ஆனால் அப்ப தான் மொத்தமா பணத்தை வாங்கினதுக்கு கொடுத்ததால கொஞ்சம் நாள் போனதும் ஆரம்பிக்கலாம்னு இருந்திருக்காங்க…”
“ஆனால் நம்ப இடத்துக்கு பக்கத்திலுள்ள ஒருத்தரே பணத்துக்காக அந்த பழைய பொருள் விக்கிறவனை வர வைக்க அவங்ககிட்ட பேசி இங்க அவனை வாடகைக்கு விட்டிருக்காங்க.. ரெண்டு பக்கமும் அவங்களுக்கு கமிஷன் கிடைத்தது அதான் இந்த வேலை பார்த்திருக்காங்க…”
“ஆனால் பப்ளிக் குடும்பம், குழந்தைகள் என இருக்க இடத்திலே இந்த பழைய பிளாஸ்டிக், இரும்பு, பேப்பர்னு அந்த இடம் ஒரே பொலுஷனா மாறி இருக்கு… “
“அதான் நம்ப தெரு கவுன்சிலரை வச்சு கம்பளைண்ட் கொடுத்து அந்த கடைக்காரனை காலி பண்ண வச்சேன்… கொஞ்சம் என்னோட அதிகாரத்தையும் உபயோகப்படுத்திக்கிட்டேன் … அதனால அவன் அந்த இடத்தை வாங்க முடியாது…”
“தெருவிலே அப்பாக்குனு ஒரு மரியாதை இருக்கு, அதான் நான் கேட்டதும் எனக்காக அவங்க உதவி பண்ணாங்க..”
“இடத்தை வாங்கினவங்களுக்கும் இப்ப ஏதோ தொழில்ல நஷ்டம் போல அதான் இடத்தை விக்கிறாங்க… நான் அதை வாங்க போறேன்…”
“இவ்வளவு நாள் சேர்த்து வைத்த பணம் அப்புறம் அப்பாவோட கடையிலிருந்து கொடுத்த செட்டில்மென்ட் பணம் வைத்து அந்த இடத்தோட ஒரு பாதி தான் இப்போதைக்கு வாங்க முடியும், வாங்கிட்டு பேங்க்ல லோன் போட்டு வீடு கட்டணும்… வீடு கட்டிட்டு அம்மா கூட அங்க போய் இருக்கலாம்னு …இன்னும் ஆறு மாசம் போனால் இங்க டிரான்ஸ்பெர் வாங்கிட்டு வந்துடுவேன்..”
அவள் ஏன் அந்த இடத்தை அவள் உலகம் என்று சொன்னாள் என அவர்களுக்கு புரிந்தது… அதற்காக அவள் இறங்கி செய்த வேலைகளும் தெரிந்தது..
அந்த இடத்தை பணத்துக்காக கடைக்காரனுக்கு வாடகை விட பேசியது அவள் சித்தப்பாக்களில் ஒருவர் என்பது அவள் சொல்லாமலே சாந்திக்கும் அவள் மாமன்களுக்கும் தெரிந்தது…உண்மை முகங்கள் சில சமயம் கசக்கத்தான் செய்யும்…
“சரி நீ சொன்ன எல்லாமே நல்லது தான் .. ஆனால் எங்ககிட்ட சொல்லாம இனி இது போல பண்ணாத.. ஏன்னா அந்த கடைக்காரனும் சரி அந்த இடத்தை வாங்கினவனும் சரி அரசியல் ஆளுங்க சப்போர்ட் இருக்கவனுங்க.. அதனால் உன் நலம் முக்கியம்…” என பாண்டியன் சொல்ல,
“ம்ம்ம் .. சரி மாமா …”
“அப்புறம் அந்த இடத்தை முழுதாகவே வாங்கிடு.. மீதி பணத்தை நான் தரேன்..”
“இல்ல இல்ல வேணாம் மாமா.. அது முழுக்க முழுக்க என்னோட சம்பாத்தியத்துல வாங்கணும்.. நானும் அம்மாவும் மட்டும் தானே அதனால அந்த இடம் போதும் எங்களுக்கு …”
“நான் சொல்றதை கேட்கறேன்னு சொன்ன ரதி , வேணும்னா கடனா வாங்கிக்கோ பத்திரத்துல கூட எழுதிக்கலாம். முழுசா வாங்கிடு..”
“இல்ல வேணாமே மாமா ப்ளீஸ்..புரிஞ்சிக்கோங்க..”
“சரி விடு உன்ன கட்டாயப்படுத்தல… அண்ணா பாதி இடத்தை நீங்க நம்ப பசங்க ஞானம் சிவா பேர்ல வாங்கிடுங்க” என பழனி அண்ணனை அவரின் மகன்கள் பேரில் வாங்க சொல்ல,
[the_ad id=”6605″]
எல்லோருக்கும் அதே சரியாகப்பட்டது… ரதிக்கும் அது பிடித்திருந்தது..
“சரி பழனி நாளைக்கு நம்ப போய் அந்த இடத்துக்காரனிடம் பேசிட்டு என்னனு முடிவு பண்ணிக்கலாம்.. மாப்பிள்ளை அவன் உங்கவூருகாரன் தான் நாளைக்கு நீங்களும் கூட வாங்க” என வள்ளியின் கணவரை அழைத்தனர்..
“போகலாம் மாமா!” என அவர் கூறியதும் ஆண்கள் எல்லோரும் அது சம்பந்தமாக பேச ஆரம்பித்தனர்.
“காலையிலே சாமி கல்யாணத்துக்கு கிளம்பனும்.. போங்க போய் தூங்குங்க…” என சரோஜா தான் அனைவரையும் கலைத்தார்.
அளவிட முடிந்த பணம் சொத்து பதவி இதெல்லாம் விட அளவிட முடியாத விலைமதிப்பில்லாத அன்பின் உறவுகள் கிடைப்பதும் கூட வரம் தானோ…
எதிரிகளோடு போரிட நால்வகைப் படையாக என் உறவுகள் இருந்தாலும்!
எந்தன் தலைக்கவசமாக நான் தேடுவது உனைத் தானே!!