ஒளி 11 :
மதுரைக்கு போகாதடி!.. அங்க மல்லிப்பூ கண்ணவைக்கும்!
தஞ்சாவூரு போகாதடி! தலையாட்டாம பொம்மை நிற்கும்!!
தூத்துக்குடி போனா சில கப்பல் கரை தட்டும்!
கொடைக்கானல் போனா அங்க மேகமுந்தான் சுத்தும்!
மாமாவுடன் பைக்கில் அவள் பாட்டி வீடு இருக்கும் தெருவிற்குள் நுழையும் போதே ஸ்பீக்கரில் பாடல் ஒலிக்க அதை கேட்டதும் அவளுக்கு சிரிப்பு வந்தது..
இது எப்பவும் நடக்கும் ஒன்று திருவிழா காலங்களில் பூஜை நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் அந்த தெருவின் இளைஞர்கள் எல்லோரும் சேர்ந்து செய்யும் வேலை இது.
அவர்கள் சொல்ல நினைப்பதை எல்லாம் பாடல் வழியே தூது விடுவர். அதனால் எந்நேரமும் ஒரே காதல் பாட்டுகளும், குத்து பாட்டுகளும் என ஓடிக் கொண்டும் மாலை நேரங்களில் கோவில் அருகே சிறுவர்கள் டான்ஸ் ஆடிக் கொண்டும் என தெருவைச் சுற்றி கோலாகலமாக இருக்கும்..
அக்கா தங்கையுடனும் பாட்டி வீட்டின் அருகில் அவள் வயதை ஒத்த தோழிகளுடனும் சேர்ந்து இதெல்லாம் கேலி பேசி சிரித்ததெல்லாம் நினைவில் வந்தது..
இப்போதும் கோவில் அருகே இளம் பெண்கள் வரவும் அவர்கள் எதிரே இருக்கும் இளைஞர்கள் தான் இந்த பாடலை போட்டு இருந்தனர்.
அந்த சிரிப்போடு வீட்டின் முன் இறங்கி உள்ளே நுழைந்தாள். ஏற்கனவே ஸ்பீக்கரில் பாடல் சத்தம் , வீட்டுக்குள் இருக்கும் குட்டிஸ் சத்தம் என இவள் வந்ததை யாரும் கவனிக்கவில்லை..
சின்ன மாமா , அக்காவின் கணவர், பெரியப்பா, சித்தப்பா ,குட்டிஸ் என எல்லோரும் சாப்பிட அமர்ந்து இருந்தனர்.. “நான் இங்க தான் உட்காருவேன் … இது என் தட்டு” என இடத்திற்கும் சாப்பிடுவதற்கும் அங்கு ஒரு போர் நடந்து கொண்டிருந்தது.
சித்தி ,அக்கா பரிமாற உள்ளே பெரியம்மாவும் அம்மாவும் சமையலறையில் இருக்க இதெல்லாம் ரசித்துக்கொண்டே நின்றவளை அவள் பாட்டி சரோஜா தான் கவனித்தார்.
“ஹே ரதிம்மா!! வா வாம்மா .. இப்ப தான் உனக்கு வழி தெரிஞ்சுதா ??” என அவர் குரல் கேட்டதும் தான் மொத்த குடும்பமே ரதியை கவனித்தனர். அவளைப் பார்த்ததும் அவர்கள் முகங்களில் தெரிந்த மகிழ்ச்சியைக் கண்டு அவளுக்கும் அந்த மகிழ்ச்சி தொற்றியது.
“அம்மாச்சி !! எப்படி இருக்கீங்க ??”
“நான் நல்லா இருக்கேன் … நீ எப்படி இருக்க? சரியா சாப்படறது இல்லையா இப்படி இளைச்சு இருக்க?”
“எல்லாரும் ரொம்ப நாள் அப்புறம் பாக்கறீங்கல அதான் அப்படி தெரியுது நான் நல்லா தான் இருக்கேன்” என அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே பெரியம்மா சித்தி அக்கா என எல்லாரும் அவளை ஒரு பக்கம் சூழ்ந்தனர்.
“மாமா, பெரியப்பா ,சித்தப்பா எல்லாரும் எப்படி இருக்கீங்க??”
“நாங்க எல்லாரும் நல்ல இருக்கோம் … சாப்பிடலாம் வா ரதி ..”
“நான் குளிச்சுட்டு வந்து சாப்பிடறேன் மாமா…”
“எங்க மாமி சிவா மாமாவை காணோம்.. ?” என பெரிய மாமன் மகனைக் கேட்க… அவளே “ மாமாவை பார்த்தும் ரொம்ப நாள் ஆச்சு இந்த திருவிழாவுக்கு பார்க்கலாம்னு நினைச்சேன்..”
“அவனுக்கு ஆபீஸ்ல லீவு கிடைக்கல ரதிமா… ஒரு நாள் லீவு கிடைச்சாலும் வரேன்னு சொல்லி இருக்கான்.. நீ சாப்பிடு வா…” அவளின் மாமி அம்சா சொல்ல,
எல்லோருடனும் நல விசாரிப்பு முடிந்ததும் குளித்து வந்ததும் தான் கவனித்தாள் அவள் அம்மா இன்னும் அவளிடம் சரியாக பேசவில்லை என்று..
சாந்தியோடு சேர்த்து அவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். ஒரு அண்ணன், அக்கா ,தங்கை, தம்பி என எல்லாருக்கும் மத்தியில் பிறந்தவர். நடுத்தர குடும்பம் தான் ஆனால் கூட்டு குடும்பம். பெண் பிள்ளைகளை நல்ல இடத்தில் மணமுடித்தனர் சாந்தியின் பெற்றோரான சரோஜாவும் ராஜமாணிக்கமும்.
ரதி சிறு பிள்ளையாக இருக்கும் போதே ராஜமாணிக்கம் தவறிட அண்ணன் தம்பி இருவரும் தான் சேர்ந்து அந்த குடும்பத்தை தாங்கினர்.
தங்களுக்கு பிறகும் இந்த பந்தம் தொடர உறவு விட்டு போகாமல் இருக்க சாந்தியின் அக்கா வாசுகி அவரின் இரு பெண் பிள்ளைகளை அண்ணன் மகன் பெரியவனுக்கும் தன் தம்பிக்கும் மணமுடித்து வைத்தார்.
இது போல திருவிழாவோ இல்லை ஏதும் பண்டிகையானால் போதும் எல்லோரும் அவர்கள் குடும்பத்தோடு இங்கு வந்து செல்வர். அக்காவின் பிள்ளைகள் , சித்தியின் பிள்ளைகள் என்று பசங்களோடு ரதி ஓடி கொண்டிருப்பாள். அந்த நேரத்தில் வீடே கொண்டாட்டமாக இருக்கும்.
[the_ad id=”6605″]
கூட்டு குடும்பத்தில் இல்லாத பூசல்கள் இல்லை ஆனால் அதை விட உறவுகளை மதிக்கும் இந்த குடும்பத்தில் தானும் ஒருத்தியே , அதே போல சொத்தும் பணத்திற்கு மட்டுமே மதிப்பு தரும் சொந்தங்கள் இருக்கும் இந்த உலகில் இது போல உணர்வுபூர்வமான ஒரு குடும்பம் தனக்கு இருப்பதை எண்ணி ரதிக்கு என்றுமே பெருமையே!!
மூன்று படுக்கறை மற்றும் விசாலமான ஹாலும் கொண்ட அந்த வீட்டில் அவளின் சின்ன மாமா பழனியின் ரூமில் சாந்தி அமர்ந்திருப்பதை பார்த்தவள் அவரிடம் சென்றாள்.
“அம்மா ! உங்களை கிட்ச்சன்ல தேடிட்டு இருக்கேன்… நீங்க இங்க என்ன பண்றீங்க??”
….
“இன்னும் என்மேல என்னமா கோவம், அதான் நான் வந்துட்டேன்ல அப்பறம் என்ன ? நீங்க இன்னும் என்கிட்ட சரியா பேச கூட இல்ல” என அவர் அருகே அமர்ந்தபடியே கேட்டாள்.
“அம்மா !!”
“ஹான் சொல்லு அம்மு !”
“என்னம்மா !”
“ஒண்ணுமில்லை அம்மு ! ஏதோ பழைய ஞாபகம் … எல்லாரும் ஒண்ணா இருக்கும் போது அப்பா மட்டும் இல்லாம இருக்கறது எப்படியோ இருக்கு அதான் வேற ஒன்னும் இல்லை..”
ம்ம்ம்… அவளுக்கும் அதே கவலை தானே … மற்றவர்களுக்காக தானே அதை உள்ளே புதைத்தாள் … இப்பொழுது அம்மாவே அதை பற்றி பேசவும் அவள் முகம் ஒளி இழந்தது… சாந்தி அதை பார்த்ததும் தனக்கு தானே மானசீகமாக ஒரு கொட்டு வைத்தார்.. அவளை கலைக்கும் பொருட்டு,
“அம்மு !! நான் உனக்கு தோசை ஊத்தறேன் வா…போய் சாப்பிடலாம்!”
அவர் முயற்சி புரிந்தாலும் எழுந்த அவரின் கையை பற்றிக்கொண்டு,
“என்னம்மா ..”என மென்மையாக கேட்டதும் சாந்திக்கு கண்கள் கலங்கியது…இவ்வளவு நேரம் கட்டுக்குள் இருந்தது எல்லாம் தொலைந்து போனது…
“என் கூட பிறந்தவங்க தான், எல்லாரும் கூட இருக்காங்க , என்னை நல்லா பார்த்துக்கறாங்க ஆனாலும் ஏதோ போல இருக்கு அம்மு!! நம்ப வீட்டு பக்கம் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வருவோமா”..
“இதெல்லாம் அவங்க கிட்ட கேட்டு அவங்கள கஷ்டப்படுத்த விருப்பம் இல்ல..இவ்வளவு நாளா மனசுல அழுத்திட்டு இருந்தது உன்னை பார்த்ததும் என்னால மறைக்க முடியல … நீ ஊருக்கு போகும் போது என்னையும் கூட்டிட்டு போ!” என அவர் வருந்த,
சாந்தியின் மனவருத்தம் அவளையும் வருத்தினாலும் அவளால் அந்த ரணத்தை வெளியே காட்ட முடியாதே, காட்டினால் அவள் அம்மா இன்னும் உடைந்து போவாரே.. இதற்காக தானே அந்த தனிமை வாசம்..
அங்கு என்னுடன் வந்து இருந்தால் அந்த தனிமை அவரை இன்னும் கவலை கொள்ள செய்யும் என்று தானே இங்கு பாட்டி வீட்டில் விட்டு சென்றாள்.
“அம்மா ! ஒண்ணுமில்லை ! எல்லாம் நான் பார்த்துகிறேன் சரியா.. “
“நீங்க இப்படி கஷ்டப்படுறீங்கனு எல்லாருக்கும் தெரிஞ்சா அவங்களுக்கும் கவலை தானேம்மா… அங்க உங்கள கூட்டிட்டு போறது எனக்கு ஒரு விஷயம் இல்ல .. ஆனால் அங்க புது இடம் ,நான் ஆபீஸ் போய்ட்டு நைட் தான் வருவேன் அதுவரைக்கும் நீங்க தனியா தான் இருப்பீங்க.. அது உங்களுக்கு அவ்வளவு நல்லது இல்லை நீங்க உங்கள இன்னும் அதிகமா வருத்திப்பீங்க… இங்கன்னா நீங்க தனியா இருக்க போல இருக்காது ஒரு நேரம் இருந்தாலும் மத்த நேரம் நீங்க கொஞ்சம் நார்மலா இருப்பீங்கம்மா… பிளீஸ்ம்மா.. எனக்கு நீங்க முக்கியம்மா…”
தானும் வருத்தி அவளையும் வருத்துவது புரிய , “ம்ம்ம் சரி அம்மு ! நீ சொல்ற போல அங்க வந்தா வெட்டு வெட்டுனு சுவரை பார்க்கணும், நான் இங்கயே இருக்கேன்… ரொம்ப நாள் அப்பறம் உன்னை பார்க்கறேன்ல அதான் எல்லாம் கொட்டிட்டேன்… நீ ஒன்னும் கவலைப்படாதே“.. என்று அவர் கூற,
வீட்டோடு கண்டிப்பும் தைரியமும் இருந்தாலும் அவருக்கும் பெண்மையின் மென்மையான குணம் தானே ! தன்னை அதட்டி உருட்டி அன்பு காட்டும் தாய் இன்று அவளுக்கு ஏனோ தனியாக தவிக்கும் குழந்தையாக தெரிந்தார்… உணர்வுகளுக்கும் மனதின் ஏக்கத்திற்கும் வயது கணக்கு உண்டா என்ன ??
“ம்ம்ம் சரிம்மா!! முகம் கழுவிட்டு வாங்க!! எனக்கு பசிக்குது …சாப்பிடலாம்..” என கூறிவிட்டு ஹாலுக்கு சென்று மற்றவர்களுடன் இத்தனை நாள் விட்ட கதை எல்லாம் பேசிக்கொண்டிருந்தாள்..
சாந்தி வந்ததும் பெண்கள் எல்லாரும் உணவருந்த அமர்ந்தனர்.. சாப்பிடும் போது அவரின் முகத்தை மற்றவர்கள் ஆராய்ந்தாலும் ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை. கோவில், திருவிழா என வேறு ஏதோ ஏதோ பேசிபடியே உண்டு முடித்தனர்.
காலை உணவு முடித்துக்கொண்டு வீட்டை ஏறக்கட்டி குழந்தைகளை ரெடி செய்து என எல்லாம் முடித்து எல்லோரும் கோவிலுக்கு கிளம்பினர்.
அன்று கோவில் பூஜைக்கான வழக்கம் ராஜமாணிக்கம் குடும்பத்தினுடையது. நடுத்தர குடும்பம் ஆனாலும் அந்த தெருவில் அக்கம் பக்கம் என அவர்கள் குடும்பத்தின் மேலே எல்லோருக்கும் மரியாதை உண்டு. பூஜைக்கு உரிய கலசத்தினை கோவில் குடையின் கீழே மரியாதையோடு பாண்டியன் மற்றும் பழனி கொண்டு வர, பெண்கள் அவர்கள் பின் வந்தனர்.
பூஜை எல்லாம் முடிந்ததும் அன்றைய அவர்களின் அன்னதானத்திலேயே எல்லோரும் மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்ப , ரதி மட்டும் நின்றாள்.
எல்லோரும் அவளை கேள்வியோடு நோக்க ..
“நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் மாமா… நீங்க வீட்டுக்கு போங்க…”
அவள் எங்கு செல்வாள் என தெரிந்ததும்,
பழனி மட்டும், “வேணாம் வா ரதி ! அப்புறம் போகலாம்”
“இல்ல மாமா நான் போயிட்டு உடனே வந்துடறேன்..” என அவர்களின் பதிலுக்கு காத்திராமல் கிளம்பி விட்டாள்.
மாலை போல அவள் வீடு திரும்ப ,ரதியை ஏதோ கேட்க ஆரம்பித்த பழனியை வாசுகி கண்பார்வையிலே வேண்டாம் என தலையசைக்க, யாரும் அவளை ஏதும் கேட்டுக்கொள்ளவில்லை..
“போ ரதி ! போய் கிளம்பி வா! கோவிலுக்கு போகணும்” என வாசுகி அவளை அனுப்பி வைத்தார்.
[the_ad id=”6605″]
மறுநாள் ஏகாம்பரேஸ்வரர் மற்றும் ஏலவார்குழலியின் திருமண வைபோகம்.. அதற்கு இப்போது பெண் அழைப்பு சம்பிரதாயமாக ஏலவார்குழலியை அலங்கரித்து தாய் வீடு சீதனமாக 108 வரிசை தட்டு வைத்து, வாணவேடிக்கையோடு, பெண்ணை அனுப்பி வைப்பர் அந்த கோவிலின் சுற்று வட்டார மக்கள்..
அதற்கு தான் எல்லோரும் மறுபடியும் கிளம்பி கொண்டிருந்தனர். இரவு வானவேடிக்கையோடு ஏலவார்குழலியை திருமண வைபோகத்திற்கு அனுப்பிவைத்து விட்டு , ஆண்கள் எல்லோரும் அங்கு வந்திருக்கும் மற்ற சுற்றாருத்துடன் பேசிக்கொண்டிருக்க பிள்ளைகளோடு ராட்டினம் சென்று அவர்கள் கேட்டதை வாங்கிக்கொடுத்து என ரதி மற்றவர்களோடு சேர்ந்து கடைத்தெருவில் வலம் வந்துகொண்டிருந்தாள்.
இரவு வீடு திரும்பியதும் குழந்தைகள் களைப்பில் உறங்க, மற்றவர்கள் ஹாலில் அமர்ந்தனர். இன்றைய நாள் சாமி தரிசனம் என பேச்சு ஆரம்பித்து ரதியிடம் வந்து நின்றது. அவள் இதை முன்னமே எதிர்பார்த்தது தான்…
ரதியின் பெரியம்மாவான வாசுகி தான் பேச்சை ஆரம்பித்தார்.
“ரதி! உனக்கு கல்யாணம் பண்றது பத்தி ஏற்கனவே உங்கிட்ட பேசிருக்கோம்.. நீ கொஞ்ச நாள் டைம் கேட்ட , கேட்டது விட அதிக நேரம் கொடுத்தாச்சு.. இந்த வருஷத்துக்குள்ள உனக்கு முடிக்கலாம்னு பார்க்கிறோம்.. ஒரு ரெண்டு வரன் பார்த்திருக்கோம்… நீ பார்த்துட்டு சொல்லு..எதுனாலும் உனக்கு பிடிக்காத எதுவும் நடக்காது அதனால உன் விருப்பம் என்னவோ அதை சொல்லு…”
….
“ரதி ! பெரியம்மா உன்கிட்ட தான் பேசிட்டு இருக்காங்க அமைதியா இருந்தா எப்படி?” என பழனி அதட்ட …
“டேய்… சும்மா இரு .. எப்ப பாரு அவளை அதட்டிட்டு…ரதிமா நீ போய் தூங்கு எதுனாலும் காலைல பேசிக்கலாம்” என சரோஜா ஆதரவாக பேச…
ரதி பெருமூச்செறிந்து…
“நான் உங்க எல்லோர்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என அவள் சொன்னதும் … எல்லோரிடமும் ஒரு ஆர்வம் கலந்த படபடப்பு… என்ன வர போகிறதோ என்று.. இவ்வளவு நேரம் எல்லாவற்றையும் அமைதியாக கவனித்த சாந்தி அவள் பேச்சில் தன் பெண்ணை ஆராய்ந்தார்.
என் பலமான பலவீனம் நீயானாலும்!!
என் தேடல் என்னவோ நீ தான்!!
ஏனெனில் தனிமையில் உணராத தனிமையை!!!
இன்று கூட்டமாக இருக்கும் போது உணர்கிறேன் !!!