ஒளி 14 :::
சிறிதான பேரும் அதுதான்..!
சட்டென்று முடிந்ததே போகும்! எப்படி சொல்வேன் நானும்!
மொழி இல்லையே!
சொல்லிவிட்டால் உடைத்து ஓட்டும்!
எழுதிவிட்டால் தேனும் சொட்டும்! அது சுத்த தமிழ் பெயர்தான்..!
அயல் வார்த்தை அதில் இல்லை..!
என் பேரின் பின்னால் வரும் பேர் நான் சொல்லவா..?
“எதுக்குடி காலையில இருந்து அந்த பாட்டே போட்டுட்டு இருக்க?” என்று ரதி விஜியிடம் கேட்க,
“அவங்க பெயர் என்னனு தேடிட்டு இருக்கேன்?”
“தெரிஞ்சு என்ன பண்ண போற?” கீர்த்தனா கேட்டாள்.
“ஹான்! ஜஸ்ட் பார் ஜிகே!” என்று விஜி பெருமையாக சொன்னாள்.
“உன் அறிவுல தீயை வைக்க…” ரதி கடுப்போடு சொல்ல ,
“உன்னை கீழே விழ விடாம காப்பாத்தினவரைப் பற்றி நியாயமா நீ தான் தெரிஞ்சுக்க ட்ரை பண்ணனும்… உனக்கு பதில் நான் அதை செஞ்சுச்சுட்டு இருக்கேன் … நேத்து இறங்கும் போது ஆளை காட்டுடினு சொன்னா நீ பாட்டுக்கு ஓடிட்ட… அதான் உன்ன நம்பினா வேலைக்கு ஆகாதுன்னு நானே களத்திலே குதிச்சுட்டேன்…” என்று விஜி ரதியிடம் சிலாகித்தவள் திடீரென,
“இன்னைக்கு ஒரு விஷயம் எல்லாரும் கவனிச்சீங்களா?”
“என்ன விஜி ?” என்று ஜெய் கேட்க ,
“நான் சொல்றேன்” என்று பரிமளா சொன்னார்.
“ஆன்ட்டி! நீங்க சரியாக சொல்லலைனா உங்க டிபன் எனக்கு தான்… சரி விஷயத்தை சொல்லுங்க… சீக்கிரம் சாப்பிடுவோம்…” என்று விஜி சொன்னாள்.
“ஆஹான்! இன்னைக்கு ரதி சீக்கிரம் வந்துட்டா… ரன்னிங்லாம் இல்லை…” என்று பரிமளா சொல்ல
“ஐயோ ! நீங்க சூப்பர் ஆன்ட்டி, கரெக்ட்டா சொன்னதுக்காகவே நானே உங்க டிபன் சாப்பிடறேன்…” என்று அவர் கொடுக்கும் முன் அவளே அவரின் டிபனை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
[the_ad id=”6605″]
“நேற்று ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல ஏதோ போதி மரத்துல அவளுக்கு ஞானம் கிடைச்சிருக்கு போல அதான் இத்தனை நாள் நம்ப சொன்ன போதெல்லாம் கேட்காம இப்போ மட்டும் கேட்டிருக்கா… அதுக்காகவே அந்த போதி மரத்தை நான் பார்க்கணும்னு கேட்கறேன்… எங்க? கண்ணுல காட்ட மாட்றா?” என்று விஜி பொருமியபடியே சாப்பிட்டாள்.
ரதியோ, அவளுக்கு திரும்ப ஏதும் பதில் கொடுத்தால் கண்டிப்பா இன்னைக்கு அவள் டார்கெட்டா நம்ப தான் சிக்குவோம் என்று அவளை முறைத்துவிட்டு மற்றவர்களிடம் பேசினாள்.
ஒரு வாரம் கழித்து,
எப்போதும் பரபரப்பாகவும் கூட்டமாகவும் இருக்கும் கிண்டி ரயில் நிலையம் இந்நேரம் ஏனோ ஓய்ந்து காணப்பட்டது. இத்தனைக்கும் மாலை மணி ஏழரை தான் ஆனது.
“நான் வரும் போது அவ்வளவு கூட்டம் இருக்கும் இப்ப பாரு எவ்வளவு அமைதியா இருக்கு” என்று பொருமியபடியே அவளின் வண்டிக்காக காத்திருந்தாள்.
அவள் அலைபேசி இசைக்க கீர்த்தனா தான் அழைத்திருந்தாள், “எங்க ரதி இருக்க ?”
“ஸ்டேஷன்ல வெயிட் பண்றேன் கீது.”
“இன்னும் கொஞ்சம் முன்னாடி கிளம்பி இருந்திருந்தா பஸ்ல வந்திருக்கலாம்ல…”
“எங்க ! கிளம்பற நேரத்துல மீட்டிங்ன்னு சொல்லி மொக்கை போட்டுட்டு இருந்தானுங்க, இதுக்கு மேல தாங்காதுனு நான் தான் சொல்லிட்டு கிளம்பிட்டேன். பஸ்ல இந்த டைம்க்கு ஏறினா டிராபிக்ல மாட்டுவேன் அதுக்கு இதே பரவால்ல…”
“சரி ! பத்திரமா வா ! பின்னாடிலாம் ஆள் இருக்க மாட்டாங்க… அதனால நம்ப பெட்டி வேணாம் முன்னாடி ஜெனெரல்லயே ஏறு.”
“ம்ம்ம் ! அங்க தான் நின்னுட்டு இருக்கேன்.”
“சரி வைக்கிறேன் ரதி” என்று அவள் வைக்கும் நேரம் “இரு இரு நான் பேசணும்” என்று ஒருத்தி வாங்கினாள்.
“ஹே ரதி!”
“சொல்லு விஜி !”
“இன்னைக்கு நீ வருவன்னு நான் உனக்கு பிடிச்ச பன்னீர் ரோல் வாங்கிட்டு வந்தேன்.. ஆனால் இன்னைக்கு அந்த ரோல் உனக்கு கிடைக்கும்னு அதல உன் பெயர் எழுதல போல…” என்று போலியாக வருந்தினாள்.
“அடியேய்! நான் கேட்கும் போதெல்லாம் வாங்கிட்டு வராம இப்ப ஏன்டி வாங்கிட்டு வந்த?”
“அது, இன்னைக்கு நான் சீக்கிரம் கிளம்பிட்டேன் …அதான் டைம் இருக்கேன்னு வாங்கிட்டு வந்தேன்.. ட்ரெயின் ஏறினதும் தான் நீ வரலன்னு சொன்னாங்க … நான் என்ன பண்றது.”
“நானே செம பசியில இருக்கேன் ஒழுங்கா போனை வை எருமை! என் பங்கும் சேர்த்து நீயே தின்னு..”
“நீ இப்படி தான் சொல்லுவன்னு நானே சாப்பிட்டேன்..” என்று குறும்போடு சொல்ல,
“நல்லது.. வண்டி வருது.. பை..” என அலைபேசியைத் துண்டித்தாள்.
[the_ad id=”6605″]
ஸ்டேஷன் காலியாக இருந்தாலும் வண்டி கூட்டமாக தான் இருந்தது. ஆனால் அவள் ஊர் செல்லும் நபர்கள் குறைவாகத் தான் இந்நேரம் இருப்பர். இந்த கூட்டம் எல்லாம் வழியில் இறங்குபவர்கள் என்பதை அறிந்து அவர்களைத் தாண்டி உள்ளே சென்றாள்.
தன் ஊரின் ஆட்கள் யாரேனும் தென்படுகின்றனரா என்று தேடியவளின் கண்களில் ஒரு நாலைந்து பேர் தென்பட, நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
இன்னும் உள்ளே நகர்ந்து வந்தவள் ஒரு ஓரமாக நிற்க அவளுக்கு பின் சீட்டில் யாரோ இறங்குவதற்கு எழுவதைப் பார்த்து உட்காரலாம் என்று திரும்பியவளின் பார்வையில் அவன் விழுந்தான்.
அவன் அருகே தான் சீட் காலியாக இருந்தது. அவனோ இவளை கவனித்தானா என்று அறிய முடியாத வகையில் புத்தகத்தில் மூழ்கி இருந்தான்.
அவன் அருகே உட்காரலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டே வந்தவளுக்கு வேலை வைக்காதவாறு சிறிது நேரத்தில் அவள் நின்றிருந்த இடமே காலியாக அவனுக்கு நேரெதிர் சீட்டில் அமர்ந்தாள்.
அதன்பின் போகப் போக எல்லோரும் இறங்கி செங்கல்பட்டு வரும் போது அந்த பெட்டியில் மொத்தமாக ஒரு ஐந்து பேர் தான் இருந்தனர். பெண்கள் யாருமில்லை.
என்னவோ பதட்டம்.. இதற்குமுன் கூட இதேப் போல அடுத்த வண்டியில் வந்திருக்கிறாள். ஆனால் உடன் யாரேனும் ஒரு பெண்ணாவது இருப்பர். இன்று அப்படியில்லாதது அவளுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது. கிளம்பும் அவசரத்தில் வந்ததால் ஏதும் சாப்பிட கூட வாங்கவில்லை பசி வேறு ஒரு பக்கம்.
அன்று போல் இன்றும் தன்னை அவன் காப்பான் என்ற நம்பிக்கை அவள் அறியாமல் அவளுள் எழுந்தாலும் அவன் முகம் காட்டாமல் புத்தகத்தில் இருப்பது அவளின் பயத்திற்கு வசதியாகப் போய் விட்டது.
நான் வந்ததை கவனித்தாரா இல்லையா.. பேசாம நம்மளே அவரை கூப்பிடுவோமோ என்று யோசனையில் இருந்தவளை அருகில் யாரோ அமரும் உணர்வு கலைத்தது.
யாரோ என்னவோ என்று அலறி வேகமா அவள் எழ, அவளின் அந்த வேகத்தில் முன்னே நீட்டியவாறு படித்துக் கொண்டிருந்த அவனின் புத்தகத்தை தட்டி விட அது கீழே விழுந்தது.
அந்த செயலில் அவன் நிமிர எதிரே அவள் பதட்டமாக நின்றிருப்பதைப் பார்த்தாலும் அவளை முறைத்தான்.
“சாரி ! வேணும்னு பண்ணலை” என்று புத்தகத்தை எடுத்துக் கொடுத்தாள்.
அப்போதும் அவளை முறைத்தவாறே அதை வாங்கி தன் பையில் வைத்தான். அவள் இன்னமும் அமராமல் நிற்பதைக் கண்டவன்,
“என்ன ?” என்று கண்களால் வினவ,
அவளோ அவள் சீட்டின் அருகே பார்க்க அங்கோ ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அதைப் பார்த்து அசடு வழிந்தவாறே அவள் இடத்திலே அமர்ந்தாள்.
அவனோ அவளை இன்னமும் முறைத்து விட்டு ஜன்னலோரம் திரும்பி விட்டான்.
“எப்ப பாரு முறைக்கறதே வேலையா போச்சு இவருக்கு” என்று மனதிற்குள் குமைந்தவள் அருகே இருக்கும் பெண்ணைப் பார்க்க அவளோ இவளை விட பதட்டமாக இருந்தாள்.
“என்னாச்சு ? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று ரதி அவளிடம் கேட்க,
அந்தப் பெண்ணோ ஏதும் பேசாமல் சுற்றி பார்வையை ஓட்ட, அவனும் அந்த பெண்ணைக் கவனித்தான்.
ரதியோ தோளைக் குலுக்கி விட்டு, எப்படியும் ஊர் போய் சேர இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று சலித்தவாறே கண்மூடி அவள் சீட்டில் சாய்ந்தாள்.
அவனோ அவளை முறைத்து விட்டு, அந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்தான்.
“என்னாச்சு மா ? ஏன் பதட்டமா இருக்க? பயமா இருக்கா?” என்று கனிவாக கேட்க,
அவனின் மென்மை அவளைப் பேச வைப்பதாய் கண்கள் கலங்கியவாறு “ஆம் !” என்பதாய் தலையசைத்தாள்.
“ஷ்! முதல்ல கண்ணைத் துடைங்க… ஒன்ணுமில்லை.. எதுக்கு பயம்.. இங்க தான் எல்லோரும் இருக்கோம்ல..” என்று தன்மையாய் அவன் சொல்ல,
[the_ad id=”6605″]
“இல்லண்ணா… நான் எப்பவும் முன்னாடி வண்டிக்கே போயிடுவேன் இந்த டைம்க்கு வந்தது இல்லை. நான் பின்னாடி பெட்டியில இருந்தேன் போகப் போக அங்கே ஆளே இல்லை அதான் இங்க வந்தேன்…நான் வேற காஞ்சிபுரத்துல இறங்கி அங்கேயிருந்து எங்க ஊருக்கு போகணும்.. கடைசி பஸ் பத்து மணிக்கு. எப்படியாவது அதை பிடிக்கணும்..” என்று இன்னமும் பதட்டத்தோடும் பயத்தோடும் அந்த பெண் சொன்னாள்.
ரதியோ , அவன் பேச ஆரம்பிக்கும் போதே அதைக் கவனித்தவள் அந்த பெண் இவ்வாறு சொல்லவும் உடனே,
“அதுக்கு முன்னாடியே கிளம்பி இருக்கலாம்ல…” என்றதும், அவனோ ரதியை முறைத்தான்.
“இல்லக்கா இப்ப தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்.. உடனே கேட்டுட்டு வர முடியல..”
“இனி இப்படி செய்யாதம்மா.. ஆபீஸ்ல இப்பவே சொல்லிடு இது போல தூரமா போகணும்னு.. முதல்ல உன்னோட சேப்டி முக்கியம்.. அப்புறம் இப்படி பயப்படாதே.. அப்படியே பயம் வந்தாலும் அதை வெளிய காட்டாத… பயம் தான் உன்னோட முதல் எதிரியே… இந்த மாதிரி சமயத்துல உன்ன நீயே தைரியப்படுத்திக்கணும்.. அப்ப தான் உன்ன நீயே காப்பாத்திக்க பண்ணிக்க முடியும்… இப்ப புத்திசாலித்தனமா யோசிச்சு தனியா பயந்துகிட்டு அங்கேயே இல்லாம இங்க ஆளுங்க இருக்க இடத்துக்கு வந்த இல்லையா.. அது போல யோசிச்சு எல்லாம் பண்ணனும் சரியா…” என்று அவனோ மென்மையாக அவளுக்கு பாடமெடுத்தான்.
ரதியோ, ஏதோ அவளுக்காக தான் சொன்னது போல… அவன் பேச்சையே உள் வாங்கிக் கொண்டிருந்தவளின் யோசனையை கலைப்பது போல் அவளை அழைத்தான்.
“ஓய்!”
ஓயாமல் என் பெயரை சொல்லுவதை விட,
உந்தன் ஒற்றை “ஓய்” என்ற அழைப்பு போதும்,
என்னை உயிர்த்தெழ வைக்க…!