ஒளி 19 :
உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்!
அந்தத் திங்கள் தீண்டவும் விடமாட்டேன்!
உனை வேறு கைகளில் தரமாட்டேன்!
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்!
நிலத்தினில் உன் நிழல் விழ ஏங்குவேன்!
நிழல் விழுந்தால் மணலையும் மடியினில் தாங்குவேன்!
அவள் பேசியதிலிருந்து அவன் கவனித்த விஷயம் இது தான்.. அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு உட்கொண்டதில் கிட்டத்தட்ட நூறு குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இன்று அலுவகத்தில் அவர்கள் ஆலோசித்த விஷயங்களில் இதுவும் ஒன்று.. மதிய உணவின் தரத்தையும் குழந்தைகளின் நலத்தையும் ஆராய என்ன என்ன செய்யலாம் என்பது பற்றி பேசினர். ஆனால் அதற்குள்ளே இப்படி நடந்து விட்டதே.. இருவரும் யோசனையில் இருக்கும் போதே மருத்துவமனை வந்து விட,
ரதி வேகமாக இறங்கி மருத்துவரிடம் விரைந்தாள். மருத்துவருடன் சேர்த்து அவளையும் சூழும் பெற்றோர்களின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லுவது என்று கலங்கினாள்.
பார்த்திபன் உடனே நிலைமையை கையிலெடுத்து தன்மையாக, “குழந்தைங்களுக்கு ஒன்னும் இல்லை நீங்க பயப்படாதீங்க.. சரி பண்ணி விடலாம்” என்று அவர்களுக்கு ஆறுதல் சொல்லியவாறே அவர்களுடன் இருந்தான்.
ரதி மருத்துவரிடம் திரும்பி , “என்ன ஆச்சு டாக்டர் ? குழந்தைங்க எப்படி இருக்காங்க?”
“இங்க வேணாம் மேம்! அங்க என்னோட ரூமிற்கு போய் பேசலாம்” என்றவாறே நடக்க..
“ஐயோ ! விஷயம் நம்ப எதிர்பார்த்த அளவை விட பெரியது போலவே” என்றவாறே அவருடன் சென்றாள்.
“உட்காருங்க மேம் !”
“முதல்ல என்னனு சொல்லுங்க டாக்டர் ! குழந்தைங்க எப்படி இருக்காங்க?”
“குழந்தைங்க நல்லா இருக்காங்க.. ஸ்டொமக் வாஷ் பண்ணிட்டோம் ஒன்னும் பிரச்சனை இல்லை..” என்று சொல்லும் போது தான் நிம்மதியாக மூச்சை விட்டாள்.
“ஆனால்….” என்று டாக்டர் வார்த்தையை நிறுத்தியதும் அவளின் நிம்மதி மூச்சின் ஆயுள் ஒரு நொடி கூட இல்லை ..
“என்னாச்சு டாக்டர் ?”
[the_ad id=”6605″]
“அட்மிட் பண்ண தொண்ணுற்று ஆறு குழந்தைகளில் எழுபத்தாறு குழந்தைகள் பத்து வயசுக்கு மேல இருக்கவங்க, அதனால் ஸ்டொமக் வாஷிலேயே சரி செய்ய முடிந்தது.. இருந்தும் அவங்க வயிறு கொஞ்சம் ரணமா தான் இருக்கு , போக போக மருந்து மாத்திரை, சாப்பிடற சாப்பாட்டுல சரி பண்ணிடலாம்”
“ஆனால் இதில் இருபது குழந்தைகள் பத்து வயசுக்கு கீழே இருக்காங்க..அவங்களோட நுரையீரல் ரணமாகியிருக்கு அதனால மூச்சு விட சிரமப்படறாங்க.. அதுமட்டுமில்லாம அவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வேற குறைவா இருக்கு அதனால கொஞ்சம் க்ரிட்டிக்கல் ஸ்டேஜ்ல தான் இருக்காங்க..”
டாக்டர் சொல்வதை கேட்கக் கேட்க அவளுக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது.. சேரைப் பற்றியிருந்த அவள் கைகள் பலமிழந்து கீழே விழ போனவளைப் பார்த்த டாக்டர் பதறி வந்து பிடிப்பதற்குள் அவளை தன் தோளில் தாங்கியிருந்தான் பார்த்திபன்.
டாக்டர் அவளின் பல்ஸ் பார்த்துவிட்டு ,“லோ பிபி ஆகியிருக்கு.. அதிர்ச்சியில் இருக்காங்க… ஒரு இன்ஜெக்ஷன் போடறேன், கூட கொஞ்சம் சூடா நிறைய சுகர் போட்டு காபி குடிச்சா நார்மல் ஆகிடுவாங்க..”
அவர் சொல்லுவதைக் கேட்டவன், அவளை தாங்கியவாறே சேரில் அமர வைக்க அவள் தலை பலமின்றி சேரின் பின்னால் தொய்ந்தது.
“டாக்டர்! கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் போய் காபி வாங்கிட்டு வந்துடறேன்.”
அவளுக்கு இன்ஜெக்ஷன் போட்டவாறே, “இல்ல வேணாம்! நீங்க இங்கயே இருங்க நான் போய் நர்ஸை கொண்டு வர சொல்றேன். அவங்க காபி குடிச்சதும் ஒரு பத்து நிமிஷம் ரெஸ்ட் எடுத்தால் சரி ஆகிடுவாங்க..”
“ம்ம்ம் சரி!”
அவர் வெளியேறியதும் , அவளருகே இருந்த சேரில் அமர்ந்து அவள் தலையை தோளில் தாங்கிக்கொண்டான்.
எவ்வளவு தான் வெளியே பெண்கள் திடமானவர்களாக இருந்தாலும் இது போல சந்தர்ப்பங்களில் அவர்களின் மென்மையான குணமும் தாய்மை உணர்வும் அவர்களை இப்படி பலமிழக்க தான் வைக்கிறது என்று அவளின் இந்த நிலையை நினைத்து வருந்தினான்.
ஒரு கால் மணி நேரம் கழித்து தான் சுயநினைவடைந்தாள். அதன் பிறகு நர்ஸ் வந்து காபி கொடுக்கவும் அவளை குடிக்க வைத்தான்..
கொஞ்சம் தெம்பு வந்து எழுந்ததும் தான் கவனித்தாள் அவன் தோளில் சாய்ந்திருப்பதை, அதிர்ந்தெல்லாம் விலகவில்லை. பொறுமையாகவே நிமிர்ந்து அவனை நோக்க அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவனை பார்த்ததும் கண் கலங்கினாள்.
“ஸ்ஸ்ஸ்! ஒண்ணுமில்லை.. நீ இப்படி இருந்தா அவங்க பேரெண்ட்ஸ் கிட்ட எப்படி பேச போற.. மீடியாக்கு வேற நியூஸ் போய்டுச்சு.. சமாளிக்கணும்…சரி பண்ணிடலாம்.”
“பத்து வயசுனா அந்த குழந்தை என்ன மிஞ்சி போனா நாலாவது இல்ல ஐஞ்சாவது படிக்குமா.. அவங்களுக்கு போய் இப்படி நடந்திருக்க வேணாம்.. “என்று அவள் அழ,
“குந்தவை! இப்ப அழறத நிறுத்தரியா இல்லையா… நடந்து போச்சு .. இனி அதை எப்படி சரி செய்யணும்னு யோசி , அதை எப்படி இனிமேல் நடக்க விடாம பண்ணனும்னு யோசி, அதை விட்டுட்டு இப்படி இருந்தால் எல்லாம் சரி ஆகிடுமா… டாக்டர் கிட்ட இன்னும் என்ன காரணம்னு கூட விசாரிக்கல, உங்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்க்கலை.. “என்று அவன் அதட்ட அது சரியாக வேலை செய்தது.
“சாரி ! குழந்தைங்கள்னதும் எனக்கு கொஞ்சம் பயமாகிடுச்சு. இனி இப்படி இருக்க மாட்டேன் “என்றவாறே முகத்தை துடைத்தாள்.
“எனக்கும் புரியுது! மினிஸ்டர் வேற வந்துட்டு இருக்காங்க.. அவங்களையும் பேஸ் பண்ணனும். நான் தான் கூட இருக்கேன்ல பார்த்துக்கலாம்.. வா போய் குழந்தைகளைப் பார்த்துட்டு பேரெண்ட்ஸ் கிட்ட பேசலாம்”
“ம்ம்ம் ! சரி!” இது போதுமே அவளுக்கு யானை பலம் தர.. இந்த முறையும் அவன் பேரிட்டு அழைத்ததோ ஒருமையில் பேசியதோ அவள் கவனிக்கவில்லை. அவனுடன் சென்று குழந்தைகளைப் பார்த்தாள்.
வாடிய கொடியாய் உறங்கி கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்ததும் நெஞ்சம் கனத்தது. உடன் இருந்த மருத்துவரிடம் என்ன என்ன மாதிரியான ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கீங்க, வேறு ஏதும் வசதிகள் தேவைப்படுகிறதா என்று விசாரித்தாள்.
“இப்போதைக்கு இங்க இருக்கறது போதும்.. குழந்தைங்களை கவனிக்கும் முன்னாடி அவங்க பேரெண்ட்ஸ்கிட்ட பேசணும்.. அவங்களுக்கு நம்பிக்கை தரணும்.. ஏன்னா குழந்தைங்க முன்னாடி இவங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா அவங்க பயந்துக்குவாங்க..”
“ம்ம்ம்.. நீங்க சொல்றது புரியுது நாங்க பேசறோம், டாக்டர்!“
[the_ad id=”6605″]
“டாக்டர், அந்த இருபது குழந்தைங்க எப்படி இருக்காங்க?” என்று பார்த்திபன் கேட்க ,
“அவங்களை ஐசியூல வைச்சு இருக்கோம். முதல்ல அவங்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தனும். அதுக்கான ட்ரீட்மெண்ட் போய்ட்டு இருக்கு.. இப்ப தான் அவங்க நுரையீரல் ரணமான விஷயமா அதுக்குரிய பெஸ்ட் டாக்டர்ஸ்கிட்ட பேசினோம்.. அவங்க ஒரு சில பாசிட்டிவ் வழிமுறைகளை சொல்லி இருக்காங்க அதை நாளைக்கு செய்யலாம்னு இருக்கோம்…”
“ஏன் டாக்டர் அதை இன்னைக்கே பண்ணக்கூடாதா?” என்று ரதி இடையிட்டாள்.
“இல்ல மேம் ! நம்ப பண்ற ட்ரீட்மெண்ட்க்கு குழந்தைங்க ஹெல்த் சப்போர்ட் பண்ணனும். அதுக்கு முதல்ல ரெடி பண்ணிட்டு தான் மற்றது பண்ண முடியும்..”
“ம்ம்ம் ! ஓகே டாக்டர்!”
“எதனால் இப்படி நடந்ததுனு ஏதும் கண்டுபிடிக்க முடிஞ்சுதா?சாப்பாட்டில் ஏதும் விஷ பூச்சி விழுந்துடுச்சா?” என ரதி கேட்க…
அவர் யோசனையாகவே தொடர்ந்தார்..”இப்ப தான் பிளட் சாம்பிள்ஸும் வந்துது, அதில் பூச்சி விழுந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை..”
“அப்புறம் எப்படி டாக்டர்? கெமிக்கல் போல ஏதும் கலந்து இருக்காங்கங்களா?” பார்த்திபன் கேட்க,
“இன்னும் என்னனு முழுசா கண்டுபிடிக்க முடியல.. குழந்தைங்க சாப்பிட்ட சாப்பாட்டை லேப்க்கு அனுப்பி இருக்கேன். கொஞ்ச நேரத்துல ரிப்போர்ட்ஸ் வந்துடும்” என்று சொல்லிக்கொண்டிருக்கையிலே நர்ஸ் ஒருவர் வந்து ரிப்போர்டைக் கொடுத்தார். அதை பார்த்த டாக்டர் அதிர்ந்தார்.
அவர் அதிர்வை பார்த்த இவர்கள் இருவரும் பதறினர்,
“என்னாச்சு டாக்டர்? ரிப்போர்ட்ல என்ன வந்திருக்கு ?” ரதி கேட்க,
“சாப்பாட்டுக்கு உபயோகிச்ச சமையல் பொருள்களில் சிலது கெட்டு போனது, அதாவது காலாவதி ஆன பொருள்களை போட்டு சமைச்சிருக்காங்க..”
“என்னதுதுது ?”, என இருவரும் பலமாக அதிர்ந்தனர்.
ஏதேதோ காரணிகளை யோசித்தவர்கள் இதுபோல ஒன்றை யோசிக்கவில்லையே..ஆக! இது தெரியாமல் தவறி நடந்தது இல்லை ,தெரிந்தே நடந்திருக்கு..
“கடவுளே !” பார்த்திபன் தான் உடனே சுதாரித்தான்,
“டாக்டர் ! அப்படி கெட்டு போன பொருள் போட்டு சமைச்சிருந்தால் சாப்பிடும் போது டேஸ்ட்லயோ இல்ல வாசனையிலோ கண்டுபிடிக்க முடியாதா?”
“சார், நீங்க சொல்றது சின்ன அளவுல செஞ்சா கண்டுபிடிக்கலாம்.இது போல ஒரு நூறு பேருக்கு செய்யும் போது எப்படி தெரியும்.உதாரணமா , பத்து லிட்டர் எண்ணைல ஒரு மூணு லிட்டர் இது போல கெட்டு போன எண்ணெய் கலந்தால் கண்டுபிடிக்க முடியுமா?”
“இதுவும் புட் பாய்சன்ல ஒரு வகை தான் ..இந்த உணவை பெரியவங்க சாப்பிட்டு இருந்தால் வேற, ஆனால் சாப்பிட்டது குழந்தைகள் அதான் உடனே அவங்க உடல் நிலையில காட்டி கொடுத்திருக்கு. “
என்ன ஒரு அலட்சியம் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியாத நிலை, பின்விளைவுகளை யோசிக்காமல் இந்த குழந்தைகளின் நலத்தில் விளையாடிருக்கிறார்கள். நினைக்க நினைக்க ரதிக்கு கோவம் பெருகியது..
“மேம் ! மீடியா ஆளுங்க வேற வெளியே இருக்காங்க..” என்று ஹாஸ்பிடல் ஊழியர் ஒருவர் வந்து சொல்லி விட்டு செல்ல…
“நான் போய் உண்மையை சொல்றேன் .. டாக்டர் ! உங்ககிட்ட கேட்கும் போதும் ஏதும் மறைச்சு சொல்லணும்னு இல்லை ..உண்மை நிலவரம் என்னவோ அதை அப்படியே சொல்லுங்க…” என்று வெளியேற பார்த்தவளை,
“ஒரு நிமிடம்!” என பார்த்திபன் அவளை நிறுத்தினான்.
“என்ன?” என்று கண்களால் வினவியபடி திரும்பியவளிடம்,
“டாக்டர் ! புட் பாய்சன்னு மட்டும் சொல்லுங்க .. புட் சாம்பிள் ரிசல்ட் இப்ப சொல்லாதீங்க.. சும்மாவே மீடியா நியூஸ் போடுவாங்க இப்ப இதை வேற மாதிரி கிளப்பிடுவாங்க.. அப்புறம் கண்ட்ரோல் பண்ணமுடியாம போய்டும்.. அவங்க சேனலுக்கு தீனி போட பேரெண்ட்ஸை வேற மனதளவில் இன்னும் கஷ்டப்படுத்துவாங்க..”
“நாளைக்கு எப்படியும் நம்ப அந்த இருபது குழந்தைங்களை ட்ரீட்மெண்ட் பண்ணி நார்மலுக்கு கொண்டு வந்துடுவோம்.. எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு.. அதனால உடனே இதை பெருசு பண்ண வேண்டாம்..” என்றான்.
[the_ad id=”6605″]
ரதியோ ஆத்திரத்தில் “அப்ப உண்மை எல்லாத்தையும் மறைக்க சொல்றீங்களா?”
அவனோ அவளை முறைத்தவாறு, ” நான் எப்ப அப்படி சொன்னேன். இப்போதைக்கு சொல்ல வேண்டாம்னு தான் சொன்னேன். இப்ப வந்த ரிசல்ட்டை நாளைக்கு அந்த ட்ரீட்மெண்ட் முடிஞ்சதும் குழந்தைங்க நல்லா இருக்காங்கனு சேர்த்து சொல்லலாம்னு சொல்றேன்.”
“அப்ப தப்பு பண்ணவங்களை அப்படியே விட சொல்றீங்களா?” என்று அவள் சீற ,
“நான் அப்படி ஏதும் சொல்லல கொஞ்சம் உங்க கோவத்தை விட்டு பொறுமையா யோசிங்க.. இப்ப நீங்க எல்லா உண்மையும் சொன்னால் தப்பு பண்ணவங்க எஸ்கேப் ஆகிடுவாங்க..”
“நமக்கு முதல்ல குழந்தைங்க தான் முக்கியம் அவங்க முழுக்க நல்லா ஆகிட்டாங்கனு டாக்டர் சொல்லட்டும் அதுக்கு அப்பறம் அவங்களுக்கு என்ன தண்டனை தரணும்னு உங்களுக்கு தோணுதோ அதை கொடுங்க..”
“ஒருவேளை நீங்க முன்னாடியே சொன்னால் அவங்க தப்பிச்சிருவாங்க அப்படியே கிடைச்சாலும் அவங்களுக்கு என்ன தண்டனைனு அரசியல்வாதிகளும் மீடியா ஆளுங்களும் தான் முடிவு பண்ணுவாங்க.. அது கண்டிப்பா அவ்ளோ கஷ்டமான தண்டனையா இருக்காதுனு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை..”
“அதனால எல்லாத்தையும் உங்க கண்ட்ரோலுக்கு கொண்டு வந்துட்டு அப்பறம் மீடியால சொல்லுங்க …” என்று அவன் நீண்ட விளக்கம் கொடுத்தான்.
“எனக்கும் இதான் சரியாக தோணுது மேம்! குழந்தைகளோட நலனில் போய் அலட்சியம் காட்டியிருக்காங்க.. இப்ப தெரிஞ்சால் ஜஸ்ட் சஸ்பெண்ட் பண்ணுவாங்க அவ்ளோ தான்…இதுவே நீங்க நினைத்தால் உங்க அதிகாரம் கொண்டு எல்லாம் முடித்துவிட்டு அப்புறம் சொல்லிக்கலாம்… நானும் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்” என்று டாக்டர் கூறினார்.
அவளும் யோசித்தபடியே வெளியேறினாள் கூடவே பார்த்திபனும் டாக்டரும்…
காலம்(ன்) துரத்திய என் வாழ்க்கையில் இளைப்பாற நான் தேடிய இடம் உன் தோள் தான்!
என்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி இப்போது !