ஒளி 25 :::
சொல்லாத சொல்லுக்கு விலை ஏதும் இல்லை!
விலை ஏதும் இல்லை!
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே!
உயிர் சேர்ந்த பின்னே!
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை!
வேறேதும் இல்லை!
அவன் , அவள் வீடு வரை கொண்டு வந்து விட்டு சென்ற மறுநாள் ராஜதுரையும் சீக்கிரமே வந்திருந்தார். டிவியில் பாடல் ஓடிக் கொண்டிருக்க, ரதி தந்தையோடு பேசிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். ஆனால் அவரிடம் இருந்த அமைதி ஏனோ அவளுக்கு உறுத்தியது.
“என்னப்பா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? என ரதி கேட்க
“கொஞ்சம் களைப்பா இருக்குடா…வேற ஒண்ணுமில்லை..”
“நான் தான் இப்ப வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டேன்ல நீங்க வீட்ல ரெஸ்ட் எடுங்களேன்ப்பா…”
“ஹே அம்மு ! நீ கவலைப்படற அளவுக்கு ஒண்ணுமில்லை… இன்னைக்கு கொஞ்சம் வேலை அதிகம் அவ்ளோ தான்… சாப்பிட்டு தூங்கி எழுந்தால் எல்லாம் சரி ஆகிடும்…” என்று ரதியின் கவலையை அகற்ற சொன்னார்.
“ம்ம்ம்! நான் லோனுக்கு ஜெய் கிட்ட பேசி இருக்கேன்… ஆனால் பரிமளா ஆன்ட்டி வேற ஒரு ஐடியா சொன்னாங்கப்பா…”
“என்ன சொன்னாங்க?” என்று சாந்தி கேட்டதும்,
“அது, ஒரே லோனாக ஹோம் லோன் போட சொன்னாங்க.. என்ன, லோன் முடியற வரைக்கும் வீட்டு பத்திரம் அவங்ககிட்ட இருக்குமாம். எனக்கும் இது ஓகேன்னு தோணுதுப்பா.. அமௌன்ட்க்காக வெளியே கேட்டு கஷ்டப்பட வேணாம்ப்பா… நான் தான் கடன் வாங்க வேணாம்னு சொன்னேன். ஆனால் இது வீடு கட்ட தானே அதுமில்லாமல் என் சம்பளத்துல மாசம் மாசம் கட்டி சீக்கிரம் திரும்ப மீட்டுடலாம். என்ன சொல்றீங்க?” என்று பெற்றோர் இருவரையும் நேருக்கு நேராய் பார்த்து உற்சாகமாய் கேட்டாள்.
அவள் உற்சாகம் பார்த்து அவர்களுக்கு கவலையாக இருந்தது. வீட்டின் மேல் இருக்கும் பிரச்சனையே அவர்களுக்கு நேற்று தான் தெரிந்தது. தங்களைச் சுற்றி எத்தனை பெரிய சூழ்ச்சி நடந்திருக்கு… இது ஏதும் அறியாமல் இருந்த தங்கள் மடத்தனத்தைக் கண்டு அவர்களே வருந்தினர். இவளிடம் என்னவென்று சொல்லுவது?
அவள் இன்னும் தங்கள் பதிலுக்காக காத்திருப்பது பார்த்து சாந்தி தான் பேசினார். “அம்மு ! அப்பாக்குத் தான் களைப்பா இருக்குல்ல நாளைக்கு பேசிக்கலாம்”
அவர் சொன்னதைக் கேட்டதும் அவளும் தன் தவறு உணர்ந்தாள்.
“சாரிப்பா!” என்று அவள் சொல்ல,
“அச்சோ ! சாரி சொல்ற அளவுக்கு ஏதுமில்லைடா.. நீ சொன்னது எப்படி பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருந்தேன் அவ்ளோ தான்…” என்று முகத்தில் எதையும் காட்டாது அவர் சொன்னார்.
“ம்ம்ம் ! சரிப்பா ! நம்ப பொறுமையாவே பண்ணிக்கலாம்.”
[the_ad id=”6605″]
“காத்தாட கொஞ்சம் வெளியே நடந்தால் நல்ல இருக்கும்னு தோணுது போகலாமா அம்மும்மா” என்று ராஜதுரை கூப்பிட்டதும் புன்னைகையோடு அவருடன் கிளம்பினாள்.
சில்லென்று காற்று வீச , இரவின் அமைதியில் இருவரும் அவர்களின் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தனர்.
“அப்பா ! நான் பத்திரம் வைச்சு லோன் வாங்கலாம்னு சொன்னது உங்களுக்கு பிடிக்கலையா ?” என்று ரதி கேட்க,
இன்னமும் அவள் அதிலே உழப்பிக் கொள்வதை உணர்ந்தவர் அவள் மனதை மாற்றும் பொருட்டு அவளை சீண்டினார்.
“ஏன் அம்மு என்னை விட நீ தான் மாப்பிள்ளையை பார்க்க ஆவலா இருக்க போலவே?”என்று குறும்பாய் கேட்டார்.
அவர் சொல்லுவதை குழப்பமாக பார்த்தவள் அதன்பின்னே அதன் அர்த்தம் உணர்ந்தாள். அவள் திருமணத்தை முன்னிறுத்தியே வீடு கட்டணும் என்று தந்தை முன்னாடி சொன்னதை வைத்து இப்போது தன்னை சீண்டுவதை உணர்ந்து அவரை பொய்யாக முறைத்தவாறே,
“அப்பா ! எப்பப்பாரு நீங்க என்னை விட உங்க அப்பாடக்கர் மாப்பிள்ளைக்கு சப்போர்ட் பண்ணி பேசறீங்க… இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்..” என்று ரதி முறைப்பாய் சொல்ல,
“பின்ன என்னைக்கு இருந்தாலும் அவர் தானே உனக்கு எல்லாம்… அவர் மேல உன்மேலேன்னு தனித் தனியா எப்படி அக்கறை இருக்கும்.. ஏன்னா நீயும் அவரும் வேற வேற இல்ல…” என்று மென்மையாக சொன்னார்.
“ஆஹான்! என்ன இன்னைக்கு பார்க்கவே பார்க்காத உங்க மாப்பிள்ளை புகழ் அதிகம் பாடறீங்க?” என ரதி கிண்டலாய் கேட்டாள்.
“புகழ் எல்லாம் இல்லம்மா… நிதர்சனம் சொல்றேன்.. இந்த உலகத்திலே கடைசி வரைக்கும் உனக்கே உனக்குன்னு முழு உரிமையான சொந்தம்னு ஒரு நபரை சொல்லனும்னா யாரை சொல்லுவ?” என்று ராஜதுரை கேட்டதும்,
“இது ஒரு கேள்வியாப்பா? கண்டிப்பா நீங்க தான் எனக்கு முதல்ல அப்புறம் தான் அம்மா” என்று யோசிக்காமல் சொன்னாள்.
“இல்லை! நான் உனக்கு சொந்தம் இல்லை என்னோட முதல் முழு உரிமை என்னோட மனைவிக்குத் தான்.. அதே மாதிரி தான் உங்க அம்மாவுக்கும்… இங்க மனைவி முக்கியமா மகள் முக்கியமா என்ற கேள்வியே நான் கொண்டு வரல…”
அவளின் முகம் குழப்பதைக் காட்ட, மேலும் தொடர்ந்தார். “ஒரு தனி மனுஷன் தனக்கே தனக்கு மட்டும்னு சொந்தம் கொண்டாட உரிமையுள்ள நபர் அவங்க சரி பாதி மட்டும் தான்… நம்மோட பிள்ளைங்களை கூட சொந்தம் கொண்டாட முடியாது… ஏன்னா அவங்க கூட வளர்ந்த அப்புறம் அவங்களுக்கு உரிமையானவங்களுக்கு சொந்தமாகிடுவாங்க…”
“அதனால கடைசி வரைக்கும் கூட இருக்கறது நம்ப சரி பாதி தான்… அதுக்காக நீங்க எங்க பிள்ளை இல்லை உங்க மேல பாசம் இல்லை அப்படின்னு நான் சொல்லல… கணவன் மனைவி அன்பில் சேர்ந்து அதிலிருந்து தனியே வெளியே வர்றவங்க தான் நீங்க… ஆனால் உங்களை எங்களால கடைசி வரைக்கும் சொந்தம் கொண்டாட முடியாது… நீங்களும் அப்படியே..”
“காலமும் சூழ்நிலைகளும் எப்படி வேணும்னாலும் இருக்கலாம். ஆனால், வாழ்க்கை முழுசுக்கும் யாரோடவும் பங்கு போட்டுக்க முடியாத உனக்கே உனக்குன்னு மட்டும் இருக்க சொந்தம்னா அது அவங்க தான்… நான் சொல்றது புரியுதா அம்மு…” என்று அமைதியாக கேட்டார்.
“ம்ம்ம் புரியுதுப்பா… வரப் போற அப்பாடக்கர் தான் எனக்கு எல்லாம்னு நல்லா புரியுது…” என்று இலகுவாய் அவள் சொல்ல,
அவரோ உடனே உற்சாகமாய் “நீ முன்னாடி சொன்ன போல அப்பா கடையில வாங்கற காசும் நீ போடற லோனும் வைச்சு நீ கல்யாணம் பண்ணிக்கோயேன் அம்மும்மா… லோனை நான் அடைச்சுகிறேன்”
[the_ad id=”6605″]
ரதியோ அவரை முறைத்துக்கொண்டே, “அப்பா ! உங்களுக்கு இது கொஞ்சம் ஓவராத் தெரியல.. இப்ப தான் வேலைக்கு போக ஆரம்பிச்சு இருக்கேன்… ஒரு மூணு வருஷம் போன அப்புறம் தான் கல்யாணம் பத்தி எல்லாம் பேசணும் சொல்லிட்டேன்…”
“அப்பாவுக்கு என்னவோ உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும் போல ஆசையா இருக்கும்மா… உனக்கு சொந்தமானவருகிட்ட உன்னை ஒப்படைச்சிட்டா எனக்கும் என் கடமை முடியும்…” என்று நெகிழ்ச்சியாக சொன்னார்.
அவரின் உணர்வுகள் அவளை ஏதோ செய்ய, “அப்பா! கொஞ்ச நாள் போகட்டும்ப்பா…” என்று ரதி சொன்னதும் அவர் முகம் சோர்வைக் காட்டியது.
“ம்ம்ம்! சரிம்மா! என்னவோ தோணுச்சு இதெல்லாம் போட்டு நீ ஒன்னும் குழப்பிக்காத”
“அப்பா! என்னாச்சு ? இன்னைக்கு ஏன் இதைப் பத்தியே அதிகம் பேசறீங்க?”
ரதியின் குரலில் இருந்த வருத்தம் அவரையும் வருத்தியது.
“ஒண்ணுமில்லைம்மா நீ வளர்ந்துட்டன்னு வெளியே இருந்து உன்னை வரனா கேட்கும் போது தான் தெரியுது. இப்ப தான் நீ காலேஜ் போகும் போது இதை பத்தி பேசினா போல இருக்கு அதுக்குள்ள நாலு வருஷமாகிடுச்சு பாரேன்…” என்று இலகுவாய் அவர் சொல்ல,
“இவ்வளவு தானா…” என்று ஆசுவாசமடைந்தாள்.
“எவ்ளோ பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் ஒரு மூணு வருஷம் வெயிட் பண்ண சொல்லுங்கப்பா… எனக்கு முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு…” என்று கோபமாக சொன்னாள்.
“ஹா ஹா ! ஏன்டா எப்ப பாரு அப்பாடக்கர்னு அந்த முகம் தெரியாத மனுஷனை கூப்பிடற? பாவம்மா அவரு..” என்று சிரிப்போடு கேட்க,
அப்பாவிற்கும் பெண்ணிற்கும் இடையே இத்தனை நேரமிருந்த இறுக்கம் தளர்ந்தது.
“அதுவாப்பா! சொன்னா சிரிக்கக் கூடாது சரியா?” என்று அவள் இழுத்தாள்.
மகளின் முகத்தில் இருந்த குறும்பைக் கண்டு ஆர்வமாக, “சிரிக்கமாட்டேன் சொல்லுடா…” என்று சிறு சிரிப்போடு சொல்ல,
“அப்பா ! பாருங்க சொல்றதுக்கு முன்னாடியே சிரிக்கறீங்க?” என ரதி சிணுங்கினாள்.
“சரி ! சரி ! அப்பா சிரிக்கல நீ சொல்லுடா…” என்று சிரிப்பை அடக்கியவாறு அவர் கேட்க,
“அது…. அது… ! எங்க அப்பா பார்த்த டக்கரான மாப்பிள்ளை அவரு அதான் அப்பாடக்கரு… எப்புடி..?” என்று இல்லாத காலரைத் தூக்கியவாறு அவள் சொன்னதும்,
“ஹா ஹா ஹா !”
ராஜதுரை சத்தமாக சிரிக்க, அந்த இரவின் அமைதியில் அது அதிகமாக கேட்க… சாந்தியும் உள்ளே இருந்து அவர்களை நோக்கி வந்தார்.
ரதியோ அப்பாவின் சிரிப்பையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள். சாந்திக்கும், நேற்றிலிருந்து வீட்டின் பிரச்சனையில் வருத்தத்தோடு இருந்தவரின் இப்போதைய சிரிப்பு மனதை நிறைத்தது.
“என்ன இங்க அப்பாவும் பொண்ணும் என்னை விட்டுட்டு சிரிச்சுட்டு இருக்கீங்க? சொன்னால் நானும் சிரிப்பேன்ல…” என்று சாந்தி கேட்க,
“அம்மா ! நாங்க சிரிச்சா யாரும் பயப்படமாட்டாங்க… ஆனால் நீங்க இந்த நேரத்திற்கு சிரிச்சால் பேய் தான் வந்துடுச்சோன்னு பயந்துக்குவாங்க…அதான் உங்ககிட்ட சொல்லல…” ரதியோ குறும்போடு சொல்ல, ராஜதுரையோ இன்னும் பலமாக சிரித்தார்.
சாந்தியோ அவளின் முதுகில் ஒன்று போட்டவாறு “பேயோட பொண்ணு நீயும் பேய் தான்…” என்று அவளை வார, அவளோ அவரை செல்லமாக முறைத்துக் கொண்டு இருந்தாள்.
[the_ad id=”6605″]
சாந்தியோ கணவரிடம் திரும்பி, “அப்படி உங்க பொண்ணு என்ன தான் சொன்னா ?” என்று கேட்டதும்,
ரதி சொன்னதை சிரித்தவாறே சொல்லியவர், “சீக்கிரம் அந்த அப்பாடக்கரை……. எனக்கு கூட பார்க்கணும் போல இருக்கு… எங்க இருக்காரோ…” என்று அப்பாடக்கரை அழுத்தியவாறே சிலாகித்து சொன்னார்.
அவர் சொன்ன பாவனையில் சாந்திக்கும் சிரிப்பு வந்தது. ரதியோ இருவரையும் பார்த்து சிணுங்கியவாறே ,
“போங்கப்பா! நீங்களும் கலாய்க்கறீங்க …”
இப்போது அவளைப் பார்த்து இருவருமே சிரித்தனர். “எங்களையே இப்படி படுத்தற இதுல நீயும் உன் பிள்ளைகளும் சேர்ந்து அந்த அப்பாடக்கரை என்ன பாடுபடுத்த போறீங்களோ…” என்று சாந்தி கேலி செய்ய,
மகள் அவளின் பிள்ளைகள் என்று சாந்தி சொன்னதை நெகிழ்வோடு கேட்ட ராஜதுரையோ ஆதுரமாக தன் மகளையே பூரிப்போடு பார்த்திருந்தார். அவரின் அந்த மகிழ்ச்சியை ரசித்தவள்,
“போதும் ! போதும் ! வாங்க போய் தூங்குவோம்… நான் மட்டும் தான் அவரை அப்பாடக்கர்னு சொல்லுவேன்… நீங்கல்லாம் சொல்ல கூடாது… என்னை ரொம்ப கேலி பண்றீங்கம்மா… என்னோட அப்பாடக்கர் வரட்டும் நான் சொல்றேன்…“ என்று ரதி சிலிர்த்துக் கொண்டாள்.
“ஆஹான் ! நீ சொல்றியா இல்ல நாங்க சொல்றோமானு பார்க்கலாம்…” என்று சாந்தி சொல்லியவாறே வீட்டை நோக்கி நடக்க , ரதியோ தந்தையின் கையை பிடித்தவாறு தாயைப் பின்தொடர்ந்தாள்.
நாளை தன் பெண் தனியாக இருப்பாள் என்று அந்த தந்தைக்கு முன்னாடியே தெரிந்ததோ.. முகமறியா அந்த உறவை இவளின் முகவரியாக மாற்றவே இன்று அதைப் பற்றி பேசினாரோ… அவர்களின் இந்த சிரிப்பும் சந்தோஷமும் இன்று தான் கடைசி என்று அந்த விதி நியமித்ததை அவள் நாளை அறிய வரும் போது………..
என் தாய் தந்தையருக்கு இல்லாத உரிமை!
என் பிள்ளைகளுக்கு கிடைக்காத உரிமை!
அன்பின் முழு உரிமை எனக்கு தந்த உறவு நீ – என்னவன்!
எனக்கே எனக்கானவன்!