ஒளி 28 :-
நேற்று நான் பார்த்ததும் உன்னைத்தானா சொல்!
இன்று நான் காண்பதும் உன்னைத்தானா சொல்!
ஆடை மாற ஜாடை மாற கூந்தல் பாதம் யாவும் மாற!
கண்களோ உன் கண்களோ மாறவில்லை!
கண்களோ என் கண்களோ ஏமாற வில்லை!
பொய் கூறவில்லை!
“தன் காதில் விழுந்தது சரி தானா?” என்று அதிர்ச்சியோடு அவனைப் பார்த்தாள்.
அவனோ ஓர் புன்சிரிப்புடன் அவளையே பார்த்திருந்தான்.
“என்ன சொன்னீங்க?”என்று குழப்பமாகவே அவனிடம் மறுபடியும் கேட்டாள்.
“ஹான்! உனக்கு கேட்டதைத் தான் சொன்னேன்… சொல்லு வீட்ல சொல்லி அரேன்ஞ் மேரேஜா பண்ணிக்கலாமா இல்லை லவ் பண்றோம்னு சொல்லி லவ் மேரேஜ் பண்ணிக்கலாமா? எதுவானாலும் எனக்கு ஓகே…” என்று குறும்போடு அவன் கேட்க,
“என்ன நீங்க இப்படிலாம் பேசறீங்க?” என்று ரதி குழப்பமாக கேட்டாள்.
“ஓய்! நீ தானே என்ன பண்ணலாம்னு கேட்ட, அதுக்கு நான் வழி சொல்றேன்.” என்று அதே குறும்போடு அவன் தொடர,
“அப்பாடா! நீங்க உண்மையா தான் கேட்கறீங்கன்னு நினைச்சுட்டேன்” என்று ஆசுவாசமடைந்தவள் அவனிடமே அதற்கானத் தீர்வை கேட்டாள்.
“சரி சொல்லுங்க ! என்ன பண்ணலாம்.”
என்றவளிடம் திரும்பியவன் வந்து உட்காருமாறு சைகை செய்ய அவளும் அமர்ந்தாள்.
“முதல்ல நீ ஏன் கல்யாணத்துக்கு இவ்வளவு தயங்கற? நீ என்ன யோசிக்கறன்னு சொன்னா தான் நான் அதுக்கு தகுந்த மாதிரி ஏதும் சொல்ல முடியும்…”
அவளோ அமைதியை பதிலாகத் தந்தாள்.
“ஓய்! உன்னைத் தான் கேட்கிறேன்… உனக்கு சொல்ல விருப்பம் இல்லைனா ஒன்னும் பிரச்சனை இல்ல… நான் கிளம்பறேன்…” என்று அவன் எழுந்துக் கொண்டான்.
அவளோ உடனே பதறி,
“இல்ல இல்ல போகாதீங்க!” என்று அவனைத் தடுத்தாள். அவனோ அவளை முறைத்தவாறே அமர்ந்தவன் அவளே பேசட்டும் என்று அமைதிக் காத்தான்.
“நான் கல்யாணம் வேணாம்னு எதுவும் இருந்ததில்லை, இது வரைக்கும் அதைப் பற்றி யோசிச்சது இல்லை. இவ்வளவு நாள் என்னோட எண்ணம் எல்லாம் வீடு கட்டணும்னு மட்டும் தான் இருந்தது”
“சரி விடு! இவ்வளவு நாள் யோசிக்கலை இனி கண்டிப்பா யோசிச்சு தான் ஆகணும். வீட்ல பார்த்திருக்க வரனை நேர்ல போயிப் பாரு, பேசியும் பாரு உனக்கு பிடிச்சிருந்தால் சரின்னு சொல்லு…” என்று பார்த்திபன் ஆதரவாக சொன்னான்.
“ம்ம்ம்!” என்றவாறு தலையசைத்து அதை ஏற்றாள்.
[the_ad id=”6605″]
“ஒரு விஷயம் மட்டும் மனுசுல வைச்சுக்கோ, இதுக்கு அப்புறம் கிட்டத்தட்ட, உன்னோட ஒரு நாற்பது வருஷ வாழ்க்கையை முடிவெடுக்க வேண்டிய இடத்தில இருக்க… அதைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இப்படி இருக்கறது சரி இல்லை…”
“உனக்கு என்ன வேணும், உன்னோட எதிர்பார்ப்பு என்னன்னு கொஞ்சம் யோசி… இதுல இருக்க நல்லது கெட்டது வேணும்ன்னா நீ மத்தவங்க சொல்றது வைச்சு முடிவு பண்ணலாம்”
“ஆனால், உனக்கு பிடிக்குதா இல்லையான்னு நீ தான் யோசிக்கணும். ஏன்னா இது உனக்கே உனக்கான ஒரு உறவைப் பற்றின முடிவு… எப்படியும் உன்ன வீட்டில கட்டாயப்படுத்த மாட்டாங்க… அதனால யோசிச்சு முடிவு பண்ணு…” என்று அவளுக்கு புரிய வைத்தான்.
அவன் சொன்னதையெல்லாம் உள் வாங்கியவள், “ம்ம்ம் ! சரி. அது என்னன்னு தெரியல நான் இது போல குழப்பத்தில் இருந்தாலோ இல்ல ஒரு பிரச்சனையில் இருந்தாலோ நீங்க தான் அதை சரி பண்றீங்க… தேங்க்ஸ்…” என்று ஆத்மார்த்தமாக சொன்னாள்.
“ஆஹான்! சரி.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்பறேன்” என்று பார்த்திபன் கிளம்பி விட்டான்.
ரதியோ அவன் சொன்னதை அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.
அதன்பின் அந்த வாரம் முழுவதும் அவனை அலுவகத்தில் மட்டுமே சந்திக்க நேர்ந்தது. அவர்கள் தனியே பேசுவதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.
அவன் சொன்ன விஷயங்களை உள் வாங்கினாலும் என்னவோ ஒரு குழப்பத்துடனே இருந்தவள், “சரி விடு! அங்க போய் பார்த்திருக்க மாப்பிள்ளையை நேரில் பார்த்து பேசிட்டு முடிவு பண்ணிக்கலாம்” என்று முடிவோடு சென்றவள் அங்கு மாப்பிள்ளையாக வந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து தான் போனாள்.
பின்னே அன்று அவளை உட்கார வைத்து பாடம் எடுத்தவனே இன்று மாப்பிள்ளையாக வந்திருக்க அவள் மூளை செயலிழந்து தான் போனது.
ஏதோ ஒரு ரோபோ போல யார் யார் வந்திருக்கிறார்கள்? என்ன நடந்துக் கொண்டிருக்கிறது? என்று கூட உணராமல் காபி கொடுத்து விட்டு தன்னிச்சையாக உள்ளே சென்றாள்.
அவளின் முக மாறுதல்களை ஒரு புன் சிரிப்போடு பார்த்திருந்தவன் பாண்டியனிடம் திரும்பி,
“பெரியப்பா! நான் குந்தவைக் கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்று அவரிடம் அனுமதி வேண்டி நின்றான்.
வந்த நேரத்தில் இருந்து அவன் பேச்சும் குணமும் ஏற்கனவே எல்லோருக்கும் நிறைவாக இருக்க, இப்போது அவன் பாண்டியனையும் ரதியையும் அழைத்த அழைப்பிலே அவன் மனமும் அவர்களுக்கு புரிந்தது.
“சரிங்க தம்பி! நீங்க போய் பேசுங்க அதோ அந்த ரூம் தான்” என்று பாண்டியன் அவனை அனுப்பி வைத்தார்.
கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றவன் அவளைத் தேட, அவளோ கட்டிலுக்கு அந்த பக்கம் சாய்ந்தவாறு கீழே அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு நேரெதிரே சற்று இடைவெளியிட்டு அமர்ந்தவன் கன்னத்தில் கையை முட்டு கொடுத்தவாறு அவளையே பார்த்திருந்தான்.
அவன் வந்ததை கவனியாமல் இன்னமும் அதிர்வில் இருந்தவள் தன்னையே யாரோ பார்ப்பதை அப்போது தான் உணர்ந்து நிமிர்ந்தவள், தன்னெதிரே இருந்தவனைக் கண்டு அதிர்ச்சியில் எழ முயல சேலைத் தடுக்கி விழப்போனாள்.
அதைப் பார்த்து பார்த்திபன் வேகமாக எழுந்து அவள் அருகே வர அதற்குள் கட்டிலை பிடித்துக் கொண்டு தன்னை நிலைப்படுத்தினாள்.
“ஓய்! இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன்… ரிலாக்ஸா இரு.. என்னைப் பார்த்தா அவ்ளோ பயங்கரமாவா இருக்கு… இப்படி பதறிப் போற…” என்று அவளை வம்பிழுத்தான்.
இத்தனை நேரம் பலதரப்பட்ட மனநிலையில் இருந்தவள் அவனின் பேச்சில் நிமிர்ந்து அவனை முறைத்து “ ஏன் இப்படி பண்ணுனீங்க?” என்று காட்டமாக கேட்டாள்.
“ஓய்! நான் ஒன்னுமே பண்ணலை நீயா தான் விழப் போனே… உனக்கு ட்ரைன்ல கை கொடுத்தாப் போல இப்பவும் கை கொடுக்கலாம்னு பார்த்தேன் அதுக்குள்ள நீயே சுதாரிச்சிட்ட… “ என்று வாய்க்குள் சிரிப்பை அடக்கியவாறு சொன்னான்.
அவளோ பதில் ஏதும் பேசாமல் கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு அவனை முறைத்தவாறு நின்றிருந்தாள்.
[the_ad id=”6605″]
“ஓய்!”
“ஓய்!”
என்று இரு முறை அழைத்தும் அவளிடம் பதில் இல்லாமல் போக, தன் விளையாட்டை எல்லாம் ஓரம் கட்டியவன் முறைக்கும் அவள் கண்களை நேருக்கு நேர் பார்த்தவாறு
“குந்தவை!” என்று அழுத்தமாக கூப்பிட்டான்.
அவன் அழைப்பில் அவளுள் ஒரு அதிர்வு அதை அவன் கவனித்தாலும் அமைதியாக நின்றான்.
“ஓஓ! உங்களுக்கு என் பெயர் எல்லாம் தெரிஞ்சு இருக்கு போல…” என்று நக்கலாக கேட்டவளிடம்,
“ஹான்! அதெல்லாம் நாலு வருஷத்துக்கு முன்னாடியே உன் பெயர் எனக்குத் தெரியும்… இங்க வேலைக்கு வந்த முதல் நாள்ல இருந்து உன் பெயர் சொல்லி தான் கூப்பிட்டு இருக்கேன்… நீ கவனிக்கலன்னு சொல்லு…”
“என்னது? நாலு வருஷத்துக்கு முன்னடியேவா..” என்று அதிர்ந்தவளை “இப்ப உன் பெயரோட ஆராய்ச்சி ரொம்பத் தேவையா” என்று அவள் மனசாட்சி கேட்க, “ஆமா! எனக்கு முக்கியம் தான்” என்று அதனோடு வாதிட்டவளை அழைத்தான்.
“ஓய்! அப்ப அப்ப ஏதோ ஒரு உலகத்துக்கு ட்ராவல் பண்ற போல, போகும் போது என்னையும் கூட்டிட்டு போயேன்… அங்க நீ என்ன பாக்கற, யோசிக்கறன்னு நானும் தெரிஞ்சுப்பேன்ல..” என்று கேலியாக கேட்டான்.
அவனிடம் இது போல கிண்டல் கேலி பேச்சுக்களை அதிகம் கண்டிராதவள் அவன் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உன்கிட்ட பேசணும்னு வந்திருக்கேன்… நீ என்னடான்னா என்னையே புதுசா பார்க்கற போல பார்த்துட்டு இருக்கற?”
அவன் பேச்சில் தெளிந்தவள்… மறுபடியும் அதே கேள்வியை இந்த முறை ஒரு இயலாமையோடு கேட்டாள், “ஏன் இப்படி பண்ணுனீங்க?”
பார்த்திபனோ அமைதியாக நிற்க, அவளே தொடர்ந்தாள்.
“அன்னைக்கு உங்ககிட்ட பேசும் போது என்கிட்ட எதுவும் சொல்லாம இப்படி வந்து நிற்கறீங்க? அப்ப எல்லாமே முன்னாடியே உங்களுக்கு தெரியும் அப்படி தானே…”
“எனக்குத் தெரியும் தெரியாது இதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். இப்ப உன்னோட முடிவு என்னன்னு சொல்லு…” என்று பார்த்திபன் ஒரு அழுத்தத்தோடு கேட்டான்.
“என்ன முடிவு சொல்ல சொல்றீங்க? எனக்கு இதெல்லாம் பிடிக்கல… நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை… உங்க மேல எவ்வளவு மரியாதை வைச்சிருந்தேன்…”என்று அவள் பேசிக் கொண்டே போக, பார்த்திபன் இடையிட்டான்.
“என் மேல மரியாதை வைன்னு நான் சொன்னேனா…” என்று காட்டமாக கேட்டவனை முறைத்தவள்,
“மரியாதை வைன்னு நீங்க சொல்லல தான் அதே போல கல்யாணத்துக்கு ஒத்துக்கோன்னும் நீங்க சொல்ல முடியாது…” என்று அதே காட்டத்துடன் திருப்பிக் கொடுத்தாள்.
“நான் எப்ப உன்னை ஒத்துக்க சொன்னேன்…” என்று அவன் குறும்போடு கேட்டான்.
“எப்ப பாரு இவன் கிட்ட பல்பு வாங்கறதே உனக்கு வேலையா போச்சு பேபி…” என்று எப்போதும் போல மனதோடு அசடு வழிந்தவாறே நிமிர்ந்தவள் முதல் முறையாக அவன் பார்வையில் தடுமாறினாள்.
அவள் தடுமாற்றத்தை உணர்ந்தவன் சிறு சிரிப்போடு அவளைப் பார்த்து,
[the_ad id=”6605″]
“உன்னை ஏற்கனவே சாரியில நிறைய முறை பார்த்திருக்கேன்.. ஆனால் முதல் முறை எனக்கே எனக்காக இப்படி அலங்காரம் பண்ணிட்டு இருக்கறது ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று அவன் பார்வைக்கான அர்த்தத்தை ரசனையோடு சொன்னான்.
ஏற்கனவே அவன் பார்வையில் தடுமாறியவள் அவன் பேச்சில் முதல் முறையாக ஒரு சலனம் அவளுக்குள்…ஆனால் அதை மறைத்தவாறு,
“என்ன நீங்க இப்படி எல்லாம் பேசறீங்க? உங்களை எவ்வளவு நல்லவன்ன்னு நினைச்சுட்டு இருக்கேன்… இன்னைக்கு உங்க பேச்சும் பார்வையும் செயலும் எதுவும் சரியில்லை?” என்று காரமாக கேட்டாள்.
அவன் அழுத்தமான பார்வை மட்டுமல்லாமல் அவனும் அவளருகே நெருங்கி வந்து அவளின் பார்வையை எதிர்கொண்டு நின்றவன்.
“நான் நல்லவன்ன்னு எப்போ சொன்னேன்?” என்று உணர்வற்ற குரலில் கேட்க ,ரதியோ அவன் செயலில் அதிர்ந்து விழி விரித்து நின்றிருந்தாள்.
எண்ணிடலங்கா வார்த்தைகள் சொல்லி..
என் காதலை நான் யாசித்தாலும்…
நீ சொல்லும் ஒற்றை சம்மதத்தில் தான்..
என் காதல் வெற்றி அடையும்!
அது உன் மௌனம் !