ஒளி 26 :::
கருவறை எல்லாம்!
முதலும் அல்ல!
முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல!
கண்ணீர் வருது உண்மை சொல்ல!
பாழும் மனது கேட்குதுமில்ல!
நீ எங்கே நீ எங்கே!
நாளைக்கு நானும் அங்கே!
மறுநாள் ட்ரைனில் அந்த கர்பிணிப் பெண்ணுக்கு உதவி செய்து விட்டு என்னவோ ஒரு இனம் புரியாத பயத்தோடும் கலக்கத்தோடும், அவனும் தன்னுடன் வந்து அந்த பயத்தை போக்கிட மாட்டானா என்ற எண்ணத்தோடும் வீட்டிற்கு வந்தவள் அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்து பதட்டத்துடனே செல்ல வீட்டின் சுற்று சுவர் எல்லாம் இடிந்து இருந்ததைப் பார்த்து அதிர்ந்து நின்றாள்.
என்ன ஆனதோ என்று பதறியவாறு இன்னும் முன்னேறி அருகில் செல்ல அங்கு கண்ட காட்சியைக் கண்டு அதிர்ச்சியில் தள்ளாடினாள்.
“அப்பா !” என்று கத்தியவாறு அவரிடம் ஓடினாள்.
இத்தனை நேரம் கமலாம்மாவின் காலில் விழுந்து இந்த வீட்டிற்காக யாசித்துக் கொண்டிருந்தவர் மகளின் குரலில் கலங்கியவாறு நிமிர்ந்தார்.
அவர் முகத்தில் தெரிந்த வலியைக் கண்டு வருந்தியவளின் கண்ணில் இருந்து கண்ணீர் தானாக கொட்ட, “இல்லை இப்போது நீ உடைந்து போகக் கூடாது” என்று யாரோ அவள் செவி அருகே சொல்லுவது போல இருக்க தன்னைத் திடப்படுத்திக் கொண்டு அவர்களிடம் விரைந்தாள்.
அவரின் அருகில் சாந்தியும் இருப்பதைப் பார்த்ததும் அவளால் பொறுக்கமுடியாமல் “என்னப்பா? என்னாச்சு ?முதல்ல எழுந்திருங்கப்பா… அம்மா இதெல்லாம் வேணாம்னு சொல்லாம நீங்களும் ஏன்மா இப்படி பண்றீங்க? என்று அவர்கள் அருகில் சென்று இருவரையும் கைக் கொடுத்து தூக்கினாள்.
தந்தை முழுமையாக தளர்ந்து போய் இருப்பதைக் கண்டு, கோபமாக கமலாம்மாவிடம் திரும்பினாள்.
அவரோ, “என்ன ராஜதுரை? உன் பொண்ணுக்கிட்ட ஏதும் சொல்லலையா?” என்று நக்கலாக கேட்க, ராஜதுரையோ தலைக் குனிந்தார்.
“அப்பா ! என்ன தான்ப்பா ஆச்சு? சொல்லுங்களேன்…ஏன் வீட்டை இடிக்கறாங்க?” என்று ரதி கேட்க,
இத்தனை நாட்கள் தங்களுக்கு சொந்தம் என்று நினைத்த இடம், வீடு அவர்களுக்கு சொந்தம் இல்லையென்று எப்படி சொல்லுவார். அதனைப் பற்றி இது வரை விசாரிக்காமல் இருந்ததை அறியாமை என்று சொல்லுவதா? மடத்தனம் என்று சொல்லுவதா ?அல்லது உறவுகளின் மேல் இருந்த நம்பிக்கை என்று சொல்லுவதா? என்னவென்று அவளிடம் சொல்லுவார்.
அவரோ எதுவும் பேச முடியாமல் அமைதியாக நிற்க,
சாந்தியிடம் திரும்பி, “அம்மா நீயாவது சொல்லும்மா….” என்று கேட்க,
இதையெல்லாம் அலட்சியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கமலம்மாள் ரதியிடம், “உனக்கு இப்ப என்ன தெரியணும்?” என்று அதிகாரமாக கேட்க,
“ஏன் பாட்டி வீட்டை இடிக்கறீங்க?”என்று காரமாக ரதி அவரிடம் கேட்டாள்.
[the_ad id=”6605″]
“ஏன்னா இது என்னோட இடம்…”என்று அவர் அதிகாரமாக சொன்னார்.
“உங்க இடம் ஏற்கனவே காலியாக தானே இருக்கு நீங்க ஏன் எங்க இடத்தில இருக்க வீட்டை இடிக்கறீங்க?”என்று அவள் விடாது கேட்டாள்.
அவளை அலட்சியமாக பார்த்தவாறு “அதுவும் என்னோட இடம் தான்…” என்று அவர் அழுத்தமாக சொல்ல,
ரதியோ அதிர்ந்து தன் பெற்றோரைப் பார்த்தாள். அவர்களோ இன்னமும் நடந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வராமல் நின்றிருந்தனர்.
“என்ன சொல்றீங்க பாட்டி? இது தாத்தாவுக்கும் உங்களுக்குமான பங்கு தானே… எப்படி முழுசா உங்க இடம்னு சொல்லுவீங்க?” என்று ரதி படபடப்பாக கேட்க,
“ஏன்னா உங்க தாத்தாக்காரன் அந்த காலத்திலேயே என்கிட்ட தொழிலுக்காக வாங்கின கடனுக்கு இந்த இடத்தை எனக்கு எழுதி கொடுத்துட்டான்… நான் தான் போனா போகுதுன்னு இத்தனை நாள் உங்களை இங்க இருக்க விட்டேன்… இப்ப எனக்கு இந்த இடம் விற்கணும்…”
“இரண்டு நாளைக்கு முன்னாடியே காலி பண்ண சொல்லி உங்க அப்பன் கிட்ட சொன்னேன்… அவன் பண்ணாம இருந்திருக்கான்.. நான் நாளன்னைக்கு பார்ட்டிக்கு இடத்தை கொடுக்கணும்… அதான் இப்ப ரெடி பண்றேன்…” என்று அவர் கறாராக பேசினார்.
அவர் சொல்லுவதை எல்லாம் கேட்டு அதிர்ந்து, தன் தந்தையிடம் சென்றாள்.
“அப்பா ! அவங்க என்னவோ சொல்றாங்க? நீங்க ஏன் அமைதியாக இருக்கீங்க? அவங்க சொல்றது உண்மையா?” என்று இவள் கலங்கியவாறு கேட்டாள்.
“இல்ல அம்மு! அப்படி ஒரு விஷயம் நடக்கல.. அப்படி பணம் வாங்கியிருந்தா என்கிட்ட கண்டிப்பா சொல்லியிருப்பாரு…” என்று அவர் சோர்வாக சொன்னார்.
“அப்ப எப்படி அவங்க இப்படி சொல்றாங்க? இது தாத்தாங்க உங்களுக்கு அப்ப இருந்து பிரிச்சு கொடுத்த சொத்துன்னு தானே சொல்லுவீங்க?” என்று சொல்லிக் கொண்டே வந்தவள் “அப்பா ! இந்த இடத்தோட பத்திரம் எங்கப்பா? எல்லா விவரமும் அதில இருக்கும்ல…” என்று அவள் பளிச்சென்று கேட்டாள்.
ராஜதுரையோ இன்னும் சோர்வாக, “ஒரிஜினல் பத்திரம் நம்ப கிட்ட இல்லம்மா…” என்று கூறினார்.
“என்ன்ன?” என்று அவள் அதிர்ந்து விழிக்க, எத்தனை முறை பத்திரம் அடமானம் வைத்து படிக்கலாம் வீடு கட்டலாம் என்று பேசியிருப்போம். ஒரு முறை கூட அதைக் கண்ணில் எடுத்து பார்த்தது இல்லையே… அன்று எல்லாம் தோன்றாத யோசனை இன்று வந்து என்ன பயன்? அதான் எல்லாம் முடிந்து நிற்கிறதே!…
“ஹா ஹா உனக்கு விவரம் பத்தலை… இந்த இடத்தோட தாய் பத்திரம் என்கிட்ட தான் இருக்கு…” என்று கமலம்மாள் கேலியாக சொன்னார்.
இவ்வளவு நேரம் திடமாக பேசிக் கொண்டிருந்தவள் மொத்தமாக தளர்ந்து போனாள். இப்போது என்ன செய்வது? என்று யோசிக்க யோசிக்க ஏனோ மூளை வெறுமையாக இருந்தது.
மகள் தளர்ந்து போனதை அறிந்த ராஜதுரை சுற்றி வேடிக்கை பார்க்கும் யாரையும் கவனிக்காமல் கமலாம்மாவிடம் மறுபடியும் கெஞ்சினார்.
“அத்தை! திடீர்னு போக சொன்னால் எங்க போவோம்… தயவுசெஞ்சு வீடு இருக்க இடம் மட்டும் எங்களுக்கு கொடுத்துடுங்க மிச்ச இடத்தை என்ன வேணுமோ நீங்க பண்ணிக்கோங்க… சும்மா தர சொல்லலை அத்தை அதுக்கு என்ன பணமோ நான் சீக்கிரம் கொடுத்துடறேன்.. தயவுசெஞ்சு இதெல்லாம் நிறுத்துங்க, வயசு பொண்ணு வைச்சுட்டு நடுரோட்ல நிற்கிறேன்… கொஞ்சம் கருணை காட்டுங்களேன்… உங்க கால்ல வேணும்னா விழறேன்” என்று ராஜதுரையோ மறுபடியும் அவர் காலில் விழப் போக,
சாந்தியோ கணவரின் செயலில் கதறினார். தாயின் குரலில் சுயநிலை வந்து வேகமாக தந்தையின் செயலைத் தடுத்தாள்.
“அப்பா ! வேணாம் விடுங்கப்பா… நமக்கு வேற ஏதும் வழி இருக்கும் யோசிக்கலாம்…” என்று ஆறுதலாக அவர் கையை பிடித்துக் கொண்டு பேசியவளிடம்,
“நான் உன்னை இப்படி நடு ரோட்ல நிற்க வைச்சுட்டேனே” என்று கதறினார்.
தந்தையின் கண்ணீர் அவளை அதிகமாக பாதித்தது… அவளும் அழ ஆரம்பித்தவள் இல்லை இல்லை இதை சரி பண்ணனும் என்று எப்போதும் போல அவளுக்குள் ஒரு குரல் ஒலிக்க,
“அப்பா ! ஒன்னுமில்லைப்பா… எல்லாம் சரி ஆகிடும்…சரி பண்ணிடலாம்… நீங்க இப்படி வருத்தப்படாதீங்கப்பா… என்னால உங்களை இப்படி பார்க்க முடியலப்பா ப்ளீஸ்..” என்று அவள் அழுதவாறே சொன்னாள்.
“மகளின் வருத்தத்தை உணர்ந்தவர் இல்ல அம்மும்மா ! அப்பா அழல… ஒண்ணுமில்லை…” என்று அவளுக்கு ஆறுதல் சொல்லியவாறே அருகில் கதறிக் கொண்டிருந்த சாந்தியின் கைகளை அழுந்தப் பிடித்து அவரை நேர்கொண்டு பார்த்து கலங்காதே என்று தலையசைத்தவர், கண்களாலே இந்த நிலைக்கு மன்னிப்பை யாசிக்க,சாந்தியோ வேகமாக அவரின் தோள் சாய்ந்து இன்னும் அழுது தீர்த்தார்.
சுற்றி பார்த்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினர் அனைவருக்குமே அவர்களின் நிலைக் கண்டு நெஞ்சம் கனத்தது.
“அதான் எல்லாம் பேசி முடிச்சாச்சுல்ல, இடத்தைக் காலி பண்ணுங்க..” என்று கமலம்மா அதட்டினார்.
கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர், “ஏன்மா? இந்த ராத்திரி நேரத்தில வயசு பொண்ணோட இருக்க அவங்களை வெளிய போக சொன்னால் எங்க போவாங்க? என்ன தான் பதவி பணம் உங்கிட்ட இருந்தாலும் இப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம நடந்துக்கிறீங்க” என்று அவர் கேட்க,
கமலம்மாவோ முறைப்போடு “இவ்வளவு நாள் அவங்க கிட்ட வாடகை வாங்காம இங்க விட்டிருக்கேன் ,பொண்ணை இன்ஜினியரிங் படிக்க வைச்சிருக்கேன்…இதெல்லாம் உங்களுக்கு தெரியலையா…” என்று அவர் செயல்களுக்கு நியாயம் சொல்லிவிட்டு, தன் ஆட்களிடம் வேலைகளை ஏவினார்.
அங்கிருந்து வெளியே வந்தவர்கள் அடுத்து எங்கு போவது என்ன பண்ணுவது என்று அறியாமல் தெருவில் நிற்க, விஷயம் கேள்விப்பட்டு சாந்தியின் பிறந்த வீட்டினர் எல்லோரும் வந்திருக்க அவர்களின் நிலையைப் பார்த்து ஸ்தம்பித்து நின்றனர்.
ரதி வேகமாக பாண்டியனிடம் ஓடி சென்று அவரைக் கட்டியணைத்து, “மாமா ! நீங்களாவது சொல்லுங்க மாமா… வீட்டை இடிக்க வேணாம்ன்னு” என்று அவரிடம் கதறினாள்.
[the_ad id=”6605″]
அவளின் கதறல் எல்லோரையும் வலிக்க செய்ய, கமலாம்மாவிடம் சென்று பேசினர். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான்.
அப்போது தான் ரதிக்கு தன் அருகிலிருந்த சித்தப்பாக்களின் ஞாபகம் வர அவர்களை நோக்கி ஓடினாள். யாரவது எதாவது செய்து இந்த செயல்களை நிறுத்தி விட மாட்டாரா என்ற நப்பாசை தான்…
“சித்தப்பா ! நீங்களாவது சொல்லுங்களேன்… இது தாத்தாங்க இடம் தானே… வாங்க வந்து சொல்லுங்க” என்று அவர்களிடமும் கேட்க,
அவர்களோ ஒரே வார்த்தையில் “பாட்டி சொல்றதை கேளு” என்று சொல்லி விட்டனர்.
அவர்களின் பேச்சில் அதிர்ந்து நின்றவள் அப்போது தான் கவனித்தாள் இவ்வளவு நேரம் நடந்த செயலுக்கு அவர்கள் யாரும் அந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கவில்லை என்று…
என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள்… இது தெரியாமல் இத்தனை நாள் ஒரே குடும்பம் என்று நினைத்து பழகியது எல்லாம் அவளுக்கு இப்போது மடத் தனமாக தெரிந்தது..
வெறுமையான மனநிலையோடு தந்தையின் அருகே வந்தாள். அங்கு பாண்டியன் முதற் கொண்டு எல்லோரும் ராஜதுரையை அவர்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டிருந்தனர்..
அவரோ முற்றிலுமாக உடைந்து போய் இருந்தார். தான் எங்கும் வரவில்லை என்று அழுத்தமாக மறுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பெரியவர் ஒருவர் ராஜதுரையிடம் வந்து, “உன் நிலைமை புரியுதுப்பா… நீ வேணும்னா எங்க வீட்டுக்கு வா… மேல மாடியில ஒரு ரூம் இருக்கு.. இப்ப தான் காலியாச்சு… அங்க வந்து வாடகைக்கு தங்கிக்கோ..” என்று அவர் மனநிலைக்கு ஏற்றவாறு பேச்சுக் கொடுக்க,
அப்போதும் ராஜதுரை மறுக்க இன்னொருத்தர், “இங்க பாருப்பா வயசு பொண்ணு கூட இருக்க நீ இப்படி பண்றது சரியில்லை…” என்று அதட்டினார்.
அவரின் பேச்சில் நிதர்சனம் உரைக்க அந்த பெரியவரின் வீட்டிற்கு சென்றார்.
இதற்கு கூட அருகில் இருக்கும் சொந்தங்கள் அழைக்கவில்லை என்பதை நினைத்து ரதி வெறுத்தே போனாள்.
அந்த பெரியவரின் வீடு ரதியின் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளித் தான் இருக்கும். சாந்தியின் பிறந்த வீட்டினரில் சரோஜாவை அவர்களுக்கு துணைக்கு வைத்து விட்டு மற்றவர்கள் கிளம்பினர்.
முன்னாடி சென்ற ராஜதுரையோ மாடியில் நின்றுக் கொண்டு இடித்துக் கொண்டிருக்கும் அவர்களின் வீட்டையே பார்த்து மனதில் வெதும்பிக் கொண்டிருந்தார்.
பின்னாடி வந்த மகளும் மனைவியும் அவரின் நிலைக் கண்டு வருந்த, சரோஜா தான் “எல்லாம் சரி ஆகிடும் வாங்க!” என்று அவரை அழைக்க ராஜதுரையோ அசையவில்லை.
சாந்தி சரோஜாவிடம் திரும்பி “அம்மா ! நீங்க உள்ள போய் படுங்க நாங்க கூட்டிட்டு வரோம்” என்று கூற , அவர் உள்ளே சென்றார்.
ரதி தந்தையின் அருகே சென்று அவர் கையை தன் கையோடு பிணைத்துக் கொண்டு, “அப்பா ! பழனி மாமா கோர்ட்ல கேஸ் போட்டு ஸ்டே ஆர்டர் வாங்கலாம்னு சொல்லி இருக்காங்கப்பா… எதாவது பண்ணி இதை சரி செய்யலாம்… நீங்க வருத்தப்படாதீங்க…”என்று அவள் ஆதரவாக சொல்ல,
அவரோ, “இல்லை அம்மு ! எதுவும் செய்ய வேணாம்… இது நமக்கு தான்னு இருந்தா நம்பகிட்டேயே தேடி வரும்… அப்ப பார்த்துக்கலாம்..” என்று நிதானமாக சொன்னார்.
சாந்தியோ மனம் தாங்காமல் “கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இப்படி நடுரோட்ல நிற்க வைச்ச அவங்க……” என்று சொல்ல ஆரம்பித்தவரை வேகமாக திரும்பிய ராஜதுரை அவர் வாயை பொத்தினார்.
“வேணாம் சாந்தி எதுவும் சொல்லிடாத! நம்மோட சாபமும் பாவமும் யாரையும் துரத்த வேணாம்… வேணவே வேணாம்” என்று அழுத்தமாக கூறியவாறே கையை எடுத்தார். ரதியோ தந்தையின் வார்த்தையில் பிரம்மித்துப் போனாள்.
அவரின் தோளில் சாய்ந்துக் கொண்டு “உங்க பொண்ணா இருக்கறதுல நான் ரொம்ப லக்கிப்பா…” என்று அவள் கூற,
“அம்மும்மா ! அப்பா மாதிரி எப்பவும் விவரம் இல்லாம எல்லோரையும் நம்பி இருக்காதம்மா… நிதானமாக பண்ணாலும் ஒரு முறைக்கு ஆயிரம் முறை யோசிச்சு செய்… நீ செய்யற விஷயத்தில ஒரு திடமும் நம்பிக்கையும் இருக்கணும்…” என்று அவர் கூறினார்.
“நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி நான் செய்யறேன்ப்பா.. நீங்க கூட இருக்கும் போது எனக்கு என்ன கவலை?” என்று ரதி மென்மையாக சொன்னாள்.
அவரோ அவள் தலையை வருடியவாறே, “சரி நீ உள்ள போய் பாட்டிக் கூட படு, நான் கொஞ்சம் நேரம் பொறுத்து வரேன்” என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பி வைத்தவர் மாடியின் சுவரில் சாய்ந்தாற் போல கீழே அமர சாந்தியும் உடன் அமர்ந்தார்.
நேற்று சிரித்த சிரிப்பும் சந்தோஷமும் எல்லாம் முன் ஜென்மமோ என்று தோன்றியது.
மனைவியிடம் திரும்பி, “மன்னிச்சுக்கோ சாந்தி.. உன்ன நல்லா பார்த்துப்பேன்னு வாக்கு கொடுத்து கல்யாணம் பண்ணி என்னோட முட்டாள் தனத்தால் இன்னைக்கு நடுரோட்ல நிற்க வைச்சுட்டேன்” என்று அவர் மனைவியின் தோளில் சாய்ந்து கலங்கியவாறே சொல்ல,
“அப்படியெல்லாம் இல்லை நீங்க ஏங்க அதையே நினைச்சு கலங்கறீங்க… நீங்களும் அம்முவும் தான் என் உலகமே… ஏதோ நம்ப கெட்ட நேரம் இப்படி ஆகிடுச்சு.. எல்லாம் சரி ஆகிடும்… இது நிரந்தரம் இல்ல… எதையும் யோசிக்காமல் கொஞ்சம் நேரம் கண்ணை மூடித் தூங்குங்க…” என்று அவர் ஆதரவாக சொல்ல,
“ம்ம்ம் ! எல்லாம் சரி ஆகிடும்..” என்று அவருக்கு அவரே சொல்லிக் கொண்டு விழிகளை மூடினார்.
யாருக்கும் காத்திராமல் யாரை பற்றியும் கவலை கொள்ளாமல் தனது பணியை ஆதவன் தொடங்க அந்த வெளிச்சம் பட்டு கண் விழித்த சாந்தியோ முதலில் கண்டது தன் மடியில் இருந்த கணவனைத் தான்…
தூக்கத்தில் படுத்திட்டார் போல என்று அவரை எழுப்ப தோளில் கை வைக்க அதுவோ சில்லிட்டு இருந்தது. உடனே பதறியவாறே,
“என்னங்க! என்னங்க!”
என்று அவர் தோள் தொட்டு வேகமாக அசைக்க,
[the_ad id=”6605″]
தாயின் பதட்டமான குரலில் பதறி ரதி வெளியே வர, சரோஜாவும் அவள் பின்னால் வந்தார்.
“என்னங்க ! எழுந்திரீங்க! அம்மு உங்க அப்பாவை எழுப்பு!” என்று பதறி மகளிடம் முறையிட,
“அப்பா ! எழுந்துருங்க! எனக்கு பயமாக இருக்கு!” என்று ரதி வேகமாக வந்து அவரை உலுக்கினாள்.
அவரிடம் அசைவில்லை என்பதை ஊகித்து அவர் நெஞ்சில் சாய்ந்து இதய துடிப்பை அறிந்தவள் உணர்ந்தாள் தன் தந்தை மீளாத் தூக்கத்தில் இருப்பதை……
வேகமாக நிமிர்ந்து அவரை நோக்க அவரோ நிர்மலமாக தூங்கிக் கொண்டிருந்தார்…
“அவ்வளவு தானா! என் தந்தை இனி எனக்கில்லயா !”
“அப்ப்ப்ப்பா!”
என் சிரிப்பில் மகிழ்ந்தவர் !
என் தடுமாற்றத்தில் தவித்தவர்!
என் வெற்றியில் பூரித்தவர் !
என் கண்ணீரில் கலங்கியவர்!
எனக்கு உயிர் கொடுத்தவர்!
இன்று உயிர் துறந்த நிலை!
என் தூக்கம் துக்கமாக மாற அவரோ மீளாத் துயிலில்!
என் கண்ணீருக்காகவாது துயில் கலைந்து மீண்டு விட மாட்டாரா!…