ஒளி 34-1::-
உனக்காக பொறந்தேனே எனதழகா!
பிரியாம இருப்பேனே பகல் இரவா!
உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன!
போகாது உன்னோட பாசம்!
என் உச்சி முதல் பாதம் வரை!
என் புருஷன் ஆட்சி !
எனக்காக பொறந்தாயே எனதழகி!
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி!
ஒரு மாதம் சென்ற நிலையில் திடீரென பாணாவரம் வந்து நின்ற குந்தவையைக் கண்டு மகிழ்ந்து,
“ஓய்! நேத்து பேசும் போது கூட வரேன்னு சொல்லல?” என்று அவளை பார்த்த துள்ளலோடு கேட்டவனை,
“ஆமா ! என்னை கூட்டிட்டு போங்கன்னு சொன்னேன்… ஆனால் நீங்க என்னை கூட்டிகிட்டு வரலை அதான் நானே உங்ககிட்ட வந்துட்டேன்…”
“ஆஹான்! எத்தனை நாள் லீவு போட்டிருக்க?”
“லீவா? இனி இங்க தான்…” என்று சிரிப்போடு சொன்னவளை குழப்பத்தோடு பார்த்து “புரியல” என்று அவன் கேட்டதும்,
“நான் அந்த வேலையை விட்டுட்டேன்..” என்றாள்.
“என்னது வேலையை விட்டுட்டியா? ஏன் குந்தவை ? உங்கிட்ட இருந்து நான் இதை எதிர்பார்கலை… உனக்குன்னு ஒரு அடையாளமா இருந்ததை ஏன் விட்டுட்டு வந்த ? நான் தான் ஏதாவது வழி செய்யறேன்னு சொன்னேன்ல அப்புறம் என்ன? அதுக்குள்ள ஏன் இப்படி பண்ண?” என்று கோபம் பாதியும் ஆதங்கம் மீதியுமாக கேட்டவனை கைகளைக் கட்டிக் கொண்டு பொறுமையாக பார்த்திருந்தாள்.
“நான் கேட்டுகிட்டே இருக்கேன் … நீ என்ன அமைதியா இருக்க ?” என்று அவன் கேட்க,
“ஹான் ! நீங்க திட்றதை கேட்டுக்கிட்டு இருக்கேன். ரொம்ப நாளாச்சு நீங்க என்னை இது போல பேசி… ஆனால் இது கூட நல்லா தான் இருக்கு…” என்று சிரிப்போடு சொன்னவளைப் பார்த்து முறைத்தவன், “குந்தவை!” என்று ஓர் அழுத்தத்துடன் அழைத்தான்.
“அந்த வேலையை தான் விட்டுட்டேன்னு சொன்னேன்… மொத்தமா வேலையை விட்டுட்டேன்னு சொல்லையே…” என்று புதிர் போட, புரியாமல் பார்த்தவனை,
அவன் பார்வையை படித்தவள், “நம்ம அந்த சத்துணவு பிரச்சனைக்கு அப்புறம் எல்லா பள்ளிகளிலும் ஆய்வு செய்ய ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஊழியர்களை தேர்வு செய்தோம்ல. அந்த ஊழியர்களை மேற்பார்வை செய்ய ஒரு மண்டலத்துக்குன்னு ஓர் அதிகாரியை தேர்வு செய்யற வேலையை இப்ப தான் ஆரம்பிச்சோம். வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அந்த அதிகாரியா நானே மினிஸ்டர் கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்துட்டேன். அதனால இனி இங்க தான்…”என்றவளின் பேச்சில் இடையிட்டவன்,
“இது இப்ப நீ இருக்கற பதவிக்கு ஒரு படி கீழே தானே வரும்…” என்றவனை முறைத்தவள்,
“இங்க பாருங்க எனக்கு கவர்ன்மெண்ட் வேலைக்கு போற எண்ணமே இல்லை.. எங்க அப்பா சொன்ன மாதிரி அந்த இடம் கைக்கு வரும் போது அதை தக்க வைச்சுக்கற அளவுக்கு நான் நல்ல நிலையில இருக்கணும்னு நினைச்சு தான் இந்த வேலைக்கு முயற்சி பண்ணி வந்தேன்… “
“என்ன தான் எனக்கு விருப்பம் இல்லாம போயிருந்தாலும் இப்ப என்னோட தனிப்பட்ட அடையாளமான அதை எப்படி நான் விடுவேன்… அதான் இதை தேர்ந்தெடுத்தேன்.. ஜஸ்ட் ஒரு படி தானே கீழே இருக்கு… இங்கயே நல்லா வேலை செய்து அதுக்கு அடுத்த இடத்துக்கு சீக்கிரம் போயிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு…”
[the_ad id=”6605″]
“அதே மாதிரி நான் இருக்கற பதவி பெருசா சிறுசான்னு யோசிக்கல, செய்யற வேலையை நேர்மையா மனசுக்கு நிறைவா செய்யணும்னு நினைச்சேன். ஒரு தப்பு நடந்து அது கடைசி நிலைக்கு போன அப்புறம் அதற்கான தீர்வு தேடற இடத்துல இருக்கறதை விட ,அதே தப்பை நடக்க விடாம பண்ற இடத்துல இப்ப இருக்கறது எனக்கு சந்தோசம் தான்…”
“இது எல்லாம் விட ரதி குந்தவைன்ற என்னோட தனிப்பட்ட அடையாளம் எனக்கு கொடுக்கற சந்தோஷத்தை விட இந்த பார்த்திபனோட குந்தவைன்ற அடையாளம் தான் என் வாழ்க்கையோட அடையாளமா நினைக்கிறேன்…அந்த வாழ்க்கையை வாழ தான் இங்க வந்திருக்கே…. ன்…ன்…” என்றவளை முடிக்க விடாமல் இழுத்து இறுக்க அணைத்திருந்தவனிடம் இருந்து விலகி மூச்சு வாங்குபவளைப் பார்த்தவன்,
“ஓய்! சாரி ! சாரி ! நீ சொன்னதைக் கேட்டதுல உணர்ச்சிவசப்பட்டு இறுக்கமா கட்டிப் புடிச்சுட்டேன்… ஆனால் இதுக்கே இப்படி மூச்சு வாங்கினா நான் என்ன பண்றது?” என்றவனின் கேலியில் அவனை முறைத்தவள்,
“எனக்கு பசிக்குது ? சாப்பிட என்ன இருக்கு?” என்றாள்.
“என்னை கொஞ்சம் கூட ரொமான்ஸ் பண்ண விட்டுடாத? சரி நீ போய் முகம் கழுவிட்டு வா…தோசை ஊத்தி தரேன்…” என்றவன் சமயலறைக்குள் நுழைந்த சிறிது நேரத்தில் அவளும் வந்து சேர்ந்தாள்.
“மாமா ! சாப்பிட்டாங்களா….”
“அதெல்லாம் நாங்க எப்பவோ சாப்பிட்டுட்டோம்… நீ வந்து சாப்பிடு…” என்றபடி அவளிடம் முறுகலான தோசையை நீட்டியவனைப் பார்த்து,
“நான் ரொம்ப அதிர்ஷ்ட்டசாலிங்க…” என்று குறும்போடு சொன்னவளைப் புரியாமல் பார்க்க,
“இது போல முறுகலா தோசை ஊத்தி தர புருஷன் கிடைக்கறதுக்கு நான் பெரிய தவம் பண்ணியிருக்கேன் போல…” என்று சிரியாமல் சொன்னவளின் கண்கள் சிரித்ததை அறிந்தவன்,
“ஆஹான்! தவம் தானே நீ பண்ணியிருப்ப பண்ணியிருப்ப …” என்றவனோடு பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து எல்லாம் எடுத்து வைத்துவிட்டு அறைக்குள் செல்ல அவனைக் காணாமல் தேடியவளை பின்னிருந்து அணைத்தவன்,
“ஓய்!” “நான் கேட்காமலே நிறைய விஷயம் செய்யற ஆனால் நான் கேட்கறதை மட்டும் நீ பண்றதில்லை…” என்று அவளின் காதோரம் உரசியவனின் இதழ் கழுத்தருகே வர சிலிர்த்தவள்,
“நான் என்ன பண்ணலை?” என்று ரதி கேட்க,
“கல்யாணம் முடிஞ்ச அப்ப நான் என்ன சொன்னேன் , நான் உனக்கு எதுவும் சும்மா பண்ணலை… இதுக்கு எல்லாம் நான் கேட்கறதை தரணும்னு சொன்னேன்ல…” என்றவனின் இறுக்கம் அவளை வேறு எங்கோ அழைத்து செல்ல முயல அதை தற்காலிகமாக தடுத்து,
“நானும் அன்னைக்கே சொன்னேன்… உங்களுக்கு என்ன வேணுமோ கேளுங்க கண்டிப்பா செய்வேன்னு… நீங்க தான் இன்னும் கேட்காம இருக்கீங்க…” என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை…
“கேட்கட்டுமா……”
“ம்ம்ம்ம் !கேளுங்க ! “என்றவள் குரல் குழைந்திருந்தது.
“எனக்கே எனக்கான உன் காதல் வேணும் !” என்றபடி அதை ஏற்கனவே காட்டிக்கொடுத்த அவளின் விழிகளுக்கு முத்தமிட்டவன்,
“என்னை எப்பவும் உரிமையா எல்லாம் செய்ய வைக்கும் உன்னோட முறைப்பு வேணும் !” என்றபடி அதை செய்த அவளின் நாசியில் முத்தமிட்டான்.
“என் உயிரை உறைய வைக்கற உன் முத்தம் வேணும் !” என்றபடி அவனின் இதழ் வழியே அவளின் உயிரை உறைய வைத்தவனின் விரல்கள் அவளின் வெற்றிடை வழியே வயிற்றை வருடியவாறு,
“நம்மோட உயிரா நமக்கு ஒரு குழந்தை இங்க வேணும்!” என்றவன்
[the_ad id=”6605″]
“நமக்கே குழந்தைங்க வந்தாலும், காலமெல்லாம் நீ என்னை குழந்தையா மடி தாங்கணும்…” என்றபடி அவளை தன் மடியில் தாங்கியவன்,
“எல்லாம் விட என்னை எப்பவும் உன்கைக்குள்ள பொத்தி வைச்சு நீ பார்த்துக்கணும்…” என்றவன் அவளை தன்மேல் போட்டு இறுக்கியபடி,
“இப்ப என்னை கொள்ளையடிக்க நீ வேணும்…” என்றவன் சம்மதத்திற்காக அவள் விழிகளை நோக்க,
“நீங்க கேட்டு இல்லைன்னு மறுக்கறதுக்கு என்கிட்ட எதுவும் இல்லை… நான் உட்பட…” என்று அவள் சொன்ன அடுத்த நொடி அவளை கொள்ளையடிக்க அவளுள் தன் தேடலை ஆரம்பித்தவன், அவளை களவாடினானோ அல்லது அவளால் களவாடப்பட்டானோ, தன் முடிவில்லா தேடலை ஆதவன் வரும் நேரத்திற்கே நிறுத்தினான் அந்த கள்வன்.
தன் சந்தோஷத்தை அவள் நெற்றியில் அச்சாரமாக ஆழப்பதித்த அந்த கள்வனின் நெஞ்சுக்குள் புதைந்துக் கொண்டு தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்தாள் அந்த கள்வனின் காதலி….
நாட்கள் விரைந்ததா அல்ல கரைந்ததா என்று தெரியாத அளவிற்கு கடந்து வந்து அவர்களின் முதல் திருமண நாளை அடைந்திருந்தார்கள். குடும்பத்தை தூக்கி நிறுத்த தலைவன் இருந்தாலும் அந்த குடும்பத்தை அழகான சிற்பமாக செதுக்குவது பெண்ணவளிடம் தானே இருக்கிறது… ரதியும் அதை செதுக்க ஆரம்பித்தாள்…
தன் மாமனாரின் தனிமையை முதலில் தகர்த்தெறிந்து, தினமும் காலையில் அவருடன் பேசியவாறு காலாற நடந்து சென்று அந்த ஊரை வலம் வந்தவள் அதோடு அவருக்கு நல்ல உணவு என்று எல்லாம் பார்த்து பார்த்து செய்ய அதிலே அவர் முக்கால்வாசி குணமடைந்தார்.
பார்த்திபன் அவனின் ஒவ்வொரு அசைவிற்கும் அவளைச் சார்ந்திருக்க வைத்த அவளின் செயலை உணர்ந்திருந்தாலும் அதை விரும்பியே ஏற்றான்.
திருமணம் முடிந்து ஆளுக்கு ஒரு திசையில் இருந்ததால் ரதியின் வீட்டிற்கு செல்ல முடியாமல் இருந்த குறையும் இங்கு வந்ததும் தீர்ந்தது. தன் இடம் வந்து சேர்ந்த நிம்மதியில் இருக்கும் சாந்திக்கு துணையாக சரோஜா அங்கு தங்கியிருந்தார். சிவாவும் ஊருக்கு வந்தால் அங்கு மேலே அவனுக்காக கட்டிய அறையில் தான் தங்கினான்.
பார்த்திபனும் ரதியும் வாரம் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று வந்தனர்.. இங்கிருந்தும் யாரேனும் ஒருவர் அவ்வப்போது பாணாவரம் செல்வர். மாதம் ஒரு முறை சென்று தங்கும் போது பார்த்திபனின் தந்தை வெங்கடேசனையும் அழைத்து செல்வர். இவர்கள் அங்கு சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மொத்த குடும்பமும் அங்கு வந்து கூடிடுவர்.
இன்றைய நாளில் நாம் தடுக்கி விழுந்தால் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் உறவுகளுக்கு மத்தியில் இத்தனை நாட்கள் தனிமையில் இருந்த பார்த்திபனுக்கும் வெங்கடேசனுக்கும் இந்த கூட்டுக் குடும்பத்தின் உண்மையான அன்பில் சிக்குண்டு இருப்பதை மகிழ்ந்தே ஏற்றனர்…..
பணம், பதவி, சொத்து இது எதுவும் கொடுக்காத சந்தோஷத்தையும் நிறைவையும் நமக்காக இருக்கும் உறவுகள் கொடுக்கும் என்பதில் எதுவும் ஐயமில்லையே…
இப்போதும் தங்களுடைய முதல் திருமண நாளான இன்று காலையிலே மூவருமாக கோவில் சென்று விட்டு காஞ்சிபுரம் வந்திருந்தனர். அன்று விடுமுறை நாள் வேறு இவர்கள் திருமண நாளைக் கொண்டாட ரதியின் மொத்த குடும்பமும் அங்கு வந்திருந்தனர்.
பெண்கள் எல்லோரும் சேர்ந்து பெரிய விருந்தே மதியம் செய்திருக்க , எல்லோரும் ஒன்றாக கீழே அமர்ந்து சாப்பிட்டு முடித்து கூடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
“நம்ம சிவாவுக்கு வேலூர்ல ஒரு வரன் வந்திருக்கு… எல்லாம் நமக்கு தோதா நிறைவா இருக்கு.. நீங்க உங்க சார்புல ஒரு முறை விசாரிச்சு சொல்லுங்க…” என்று பாண்டியன் வெங்கடேசனிடம் சொல்லிக் கொண்டிருக்க,
“என்னது எனக்கு கல்யாணமா? பொண்ணு பார்த்தாச்சா? நான் இன்னும் பார்க்கலையே?” என்று கேட்டுக் கொண்டே சிவா உள்ளே நுழைந்தான்.
“அது எப்படிடா இப்படி கல்யாணம் பத்தி பேசும் போது உள்ளே வர ? ஒரு வேளை வெளிய நின்னு என்ன பேசறாங்கன்னு கேட்டுட்டு இந்த டைம்க்கு வர்றியா?” என்று பழனி முறைத்துக் கொண்டே கேட்க,
“ஹி ஹி ! சித்தப்பா எப்ப வரோம் எப்படி வரோம்னு முக்கியம் இல்ல ஆனா வர வேண்டிய நேரத்துக்கு சரியா வந்துடுவான்… இந்த சிவா…” என்று அவனை அவனே பெருமையாக சொல்லிக் கொண்டதைப் பார்த்த ரதி,
“ஆமா! மாமா ! இப்ப கூட கரெக்ட்டா சாப்பாடு நேரத்துக்கு வந்திருக்கான்ல அது போல…” என்று அவனை கேலி செய்ய,
“அதை ஏற்கனவே சாப்பிட்டு முடிச்சு எந்திரிக்க முடியாம படுத்திருக்க நீ சொல்லாத? ஆமா உங்க வீட்ல நீ சமைக்கறதை எப்படி சாப்பிடறாங்க? ஏன் சித்தப்பா நீங்க தான் இவளோட சோதனை எலியா?” என்று வெங்கடேசனிடம் கேட்டவனை அடிக்க வேகமாக எழுந்தவள் திடீரென தலை சுற்றி விழப் போக அருகே இருந்த பழனியும் வள்ளியும் அவளைத் தாங்கிப் பிடித்தனர்.
[the_ad id=”6605″]
“ஓய்! அம்மு ! ரதி !” என்ற பலதரப்பட்ட குரலுக்கு நடுவிலும் அவளுக்கு அவனவளின் குரலைக் கேட்டுக் கொண்டே கண்ணை மூடினாள்.
“அத்தை எல்லோரும் நகருங்க அவளுக்கு காத்து வரட்டும்…” என்று சிவா எல்லோரையும் விலக்க, அதற்குள் பதறி அவளருகே வந்து வள்ளியின் மடியில் படுத்திருந்தவளை தன் மடியில் தாங்கிய பார்த்திபன்,
“ஓய் !”
“குந்தவை எழுந்திரு…” என்று அவளின் கன்னத்தை தட்டியவனிடம்,
“இந்த தண்ணியை அவ முகத்துல தெளிச்சு கொஞ்சம் குடிக்க வைங்க…” என்று வாசுகி தண்ணி கொடுத்தார்.
அவன் கன்னத்தை தட்டும் போதே சிறிது அசைந்தவள் அவன் தண்ணீர் கொடுத்ததும் கண் விழித்து தன்னை மடி தங்கியிருந்தவனைப் பார்த்து சிரித்ததும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.
“என்னாச்சு ரதிம்மா?” என்று சரோஜா பதட்டமாக கேட்க,
“ஒண்ணுமில்லை அம்மாச்சி ! மதியம் ரொம்ப அதிகமா சாப்பிட்டது ஏதோ தள்ளுற போல இருக்கு வேற எதுவும் இல்லை… நீங்க பதறாதீங்க…” என்று அவருக்கு வாய் வார்த்தையில் சொன்னதை தன் கணவனுக்கு கண்ணிலேயே சொன்னாள்.
“தம்பி ! நீங்க அவளை இங்க பக்கத்துல இருக்க கிளினிக்குக்கு கூட்டிட்டு போங்க!” என்று பார்த்திபனிடம் சொல்லி,
“டேய் ! சிவா வள்ளி அத்தையை கூட்டிகிட்டு கூட போயிட்டு வா…” என்று பழனி சொன்னதும் அதற்கு மறுத்த ரதி பார்த்திபனின் ஒற்றை பார்வையில் தன்னாலேயே அவனுடன் சென்றாள்.
அவள் கர்ப்பமாக இருப்பதை டாக்டர் உறுதி செய்ய வெளிய வந்ததும் சிவா பார்த்திபனை கட்டிப் பிடித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்த, வள்ளி ரதியை நெட்டி முறித்தார்.
வீட்டிற்கு வந்து எல்லோருக்கும் சொல்ல, அங்கே சந்தோஷ அலைகளும் கொண்டாட்டங்களும் தான். பெரியவர்கள் எல்லோரும் ஆசி வழங்க, வெங்கடேசனிடம் வந்தனர்,
“ஒவ்வொரு பொண்ணும் இன்னொரு வீட்டுக்கு விளக்கேற்ற போறதே வரம் தான்… ஆனால் உன்கூட சேர்த்து இப்படி ஒரு குடும்பமும் கிடைச்சது எங்களோட பாக்கியம்…”
“இவன் அம்மா எங்களை விட்டு போனதும் இவனை கையில வைச்சிகிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சு போயிட்டேன்.. ஒரு நல்லா நாளு பண்டிகைன்னு எதுவும் இல்லாம, சொந்த பந்தம் இல்லாம தனியா இருக்கற கொடுமையை அனுபவிக்க முடியாம வேலை வேலைன்னு ஓடியே காலத்தை தள்ளினேன்… போக போக முடியல…”
“இவன் வளர்ந்த அப்புறம் அவன் என்னை நல்லா பார்த்துக்கிட்டாலும் ஓட முடியாததால தனிமைல மாட்டிகிட்டேன்… பேச்சு துணைக்கு கூட ஆளு இல்லாம இருந்தேன்… என்ன வாழ்க்கைடா இதுன்னு அப்ப அப்ப தோணும்… நல்ல சாப்பாட்டைக் கூட அக்கறையா அன்பா பரிமாறினா தான்மா உடம்புல ஒட்டும்… இன்னைக்கு இது எல்லாத்தையும் நீ மாத்தியிருக்க..”
“இப்ப ஒரு மகளா நீ என்னை கவனிச்சிக்கறதுக்காகவே நான் இன்னும் இன்னும் வாழணும்னு தோணுது… இப்ப தான் எனக்குன்னு ஒரு குடும்பத்தை நான் உணர்றேன்ம்மா… இன்னும் என் பேர பசங்க எல்லாம் வந்தால் என் வாழ்க்கையே இன்னும் அழகா ஆகிடும்…”
“நீ நாலு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணத்துக்கு சரின்னு சொல்லியிருந்தா நான் சொன்னது எல்லாம் எப்பவோ நடந்திருக்கும்… அதனால என்ன இப்பவும் ரொம்ப சந்தோஷமா இருக்கு.. எந்த குறையும் இல்லாம உன் மனசுக்கு நிறைவா நீ நல்ல இருக்கணும் ரதிம்மா…”என்று மகிழ்வாகவும் நெகிழ்வாகவும் சொன்னவரையே எல்லோரும் கனிவாக பார்த்திருந்தனர் பார்த்திபன் உட்பட…
அவரின் நாலு வருஷத்தக்கு முன்னாடி என்ற வார்த்தையில் குழம்பினாலும், அவரின் கைகளை தன்னிரு கைகளோடு பிடித்தவள், “நான் உங்களை கூப்பிடற முறை தான் வேற மாமா… ஆனால் உங்களை என்னோட அப்பாவா தான் பார்க்கிறேன்…”
“உறவுகள் எப்படி இருக்க கூடாதுன்னும் கத்துக்கிட்டேன் எப்படி இருக்கணும்னும் கத்துக்கிட்டேன்… தாயை விட தாய்மாமனுக்கு தான் உரிமைன்னு சொல்லுவாங்க.. அப்படி இந்த குடும்பம் எனக்கு இல்லைன்னா நானும் தனியா தான் இருந்திருக்கணும்…
“எந்த ஜென்மத்து புண்ணியமோ நீங்க எல்லோரும் எனக்கு கிடைச்சிருக்கீங்க…நீங்கல்லாம் தான் என்னோட உலகமே! எப்பவும் என்னோட இந்த உலகத்தை சிதைய விட மாட்டேன் மாமா !” என்று அவர் கையைப் பிடித்துக் கொண்டு சொன்னாலும் பார்வை எல்லோரையும் சுற்றி வந்து கடைசியில் அவள் கணவனிடம் வந்து நின்றது..