ஒளி 34 -2::
நான் முழுசா உன்னை எனக்குள்ள பொதைச்சேன்…
என் உசுர அழகே உன்ன நித்தம் நித்தம் நெனச்சேன்…
இனி வரும் ஜென்மம் மொத்தம் நீயும் தான் உறவா வரணும்!…
மறுபடி உனக்கென பிறந்திடும் வரம் நான் பெறணும்!
பெண்ணே பெண்ணே வாழ்க்க நீள என் கூட நீ மட்டும்!
போதும் போதும் நீ நாளும்!
ரதி மற்றும் பார்த்திபனின் முதல் திருமண நாளிற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசை அந்த குடும்பமே கொண்டாடியது.
“எதுக்கு எல்லோரும் இப்படி சிலையா இருக்கீங்க? என் கல்யாண விஷயத்துக்கு வாங்க… எப்ப பாரு என்னை டீல்ல விடறீங்க? இவளே இன்னும் ஒழுங்கா வளராத பாப்பா ஆனால் இவளுக்கே பாப்பா வர போகுது…” என்று எப்போதும் போல சிவா ரதியை கேலி செய்ய எல்லோரும் சேர்ந்து அவனை முறைத்தனர்.
சிவாவின் அம்மாவோ “உனக்கு அவளை வம்பிழுக்கலைன்னா தூக்கம் வராதே…” என்று அவனை அதட்டி விட்டு, ரதியிடம், “அவன் கிடக்கிறான்… நீ போய் கொஞ்ச நேரம் படு ரதி!” என்று சொல்ல அவளுக்கும் சோர்வாக இருக்க உள்ளே சென்றாள்.
அவள் பின்னே வந்த பார்த்திபனைப் பார்த்து மலர்ந்தவள் கட்டிலில் கால் நீட்டி அமர, அவளருகே அமர்ந்தான்.
“என்ன பாஸ்? நீங்க கேட்டதை நான் கொடுத்துட்டேன். நீங்க எனக்கு எதுவும் தரல…”
அவனோ அமைதியாக இருக்க,
“சரி விடுங்க நான் ஒன்னும் கேட்கலை…” என்று முறுக்கிக் கொண்டு சொன்னவளின் கைகளை தன்னிரு கைகளில் பிடித்தவன் கண்களைப் பார்த்து,
“ஓய் !”
“ம்ம்ம்”
“தேங்க்ஸ்!” என்று ஆழ்ந்து சொன்னான்.
“தேங்க்ஸ்ஸா! அவ்வளவு தானா? வேற ஒண்ணுமில்லையா?” என்று கேட்டவளைப் பார்த்து,
“ஆமா ! அவ்வளவு தான் ? வேற என்ன?” என்று சிரிப்போடு சொன்னவனை முறைத்தாள்.
“ஓய் ! என்னடி முறைக்கற?”
“எதுக்கு டி சொல்றீங்க? தேங்க்ஸ் மட்டும் சொல்லி வேற எதுவும் இல்லைன்னு சொன்னீங்கல்ல இனி என்னை டி சொல்லாதீங்க?”
“என் பொண்டாட்டியை மட்டும் தான் நான் டி சொல்ல முடியும் ! என் பொண்டாட்டிட்டுக்கு மட்டும் தான் தேங்க்ஸ் சொல்ல முடியும் !..” என்று அவளை தன் தோள் வளைவில் கொண்டு வந்தவன் அவள் நெற்றியில் ஆழமாக முத்தம் பதித்து,
“தேங்க்ஸ் ! மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு… இது எல்லாமே நீ என் கூட இருக்கறதால மட்டும் தான்…” என்று நெகிழ்ந்து சொன்னவனை கனிவாக பார்த்தவள்,
“நான் ஒன்னு கேட்கட்டுமா?” என்று அவனிடம் கேட்க,
“ம்ம்ம் ! கேளு !”
“என்னை இந்த அளவுக்கு உங்களுக்குப் பிடிச்சிருக்கே, அப்புறம் ஏன் முன்னாடி என்னை பார்க்க வரல… நீங்க நினைச்சிருந்தா முடியுமே? மாமாவும் ஏதோ நாலு வருஷம் முன்னாடி சம்மதம் சொல்லைன்னு சொல்லறாரு? ஏன்?” என்று கேட்டவளைப் பார்த்து,
“உன்னை கொஞ்சம் நேரம் படுத்து ஓய்வெடுக்க சொன்னாங்க? நீ என்னடான்னா கேள்வி கேட்கற? அது எப்படி நம்ப ஃபர்ஸ்ட் நைட்ல கேட்டா மாதிரி சரியா இதே நாளுல கேட்கற?” என்று கேலி செய்தவனை முறைத்தாலும்,
“இப்ப நீங்க சொல்றீங்களா இல்ல நான் மாமாவை கேட்கவா…” என்று மிரட்டியவளைப் பார்த்து சிரித்தவன்,
“இரண்டு முறை உன்னை பொண்ணு கேட்டு இல்லைன்னு சொல்லிட்டாங்க…. அப்புறம் நான் எங்க எப்படி வந்து உன்னைப் பார்க்க?” என்றவனை அதிர்ந்து பார்த்தாள்.
“ஓய் ! ஷாக்கை குறை! ஷாக்கை குறை! நீ நினைக்கற மாதிரி பெருசா எதுவும் இல்லை…” என்றவனிடம்,
“சரியா எதுவும் சொல்லாம அப்புறம் என்ன ஷாக்கை குறைன்னு சொல்றது… ஒழுங்கா முழுசா என்னன்னு சொல்லுங்க?” என்று அதட்டியவளைப் பார்த்து புன்னகைத்தவன் தொடர்ந்தான்.
[the_ad id=”6605″]
“நான் கவர்ன்மெண்ட் வேலைக்கு போக ஆரம்பிச்ச ஒரு ஆறு மாசத்துலயே அப்பா எனக்கு பொண்ணு பார்க்க தெரிஞ்சவங்ககிட்ட எல்லாம் சொல்லி வைச்சிருப்பாரு போல…”
“நம்ம இரண்டு குடும்பத்துக்கும் தெரிஞ்ச ஒருத்தர் எனக்காக உங்க அப்பாகிட்ட, “பொண்ணுக்கு வரன் எதுவும் பார்க்கறீங்களான்னு” கேட்டிருக்காங்க… அப்ப நீ கடைசி வருஷம் படிச்சிட்டு இருந்த போல மாமா இல்லைன்னு சொல்லிட்டாங்க… இது எதுவும் எங்களுக்கு முதல்ல தெரியாது…”
“நான் வேலைக்கு சேர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு… எனக்கு வரன் எதுவும் அமையலன்னு அப்பாவுக்கு ரொம்ப கவலை… சரி அவரை வெளியே கூட்டிட்டு போனா கொஞ்சம் நல்லா இருக்கும்னு ஒரு நாள் “கடைஞாயிறு” திருவிழாவுக்கு கூட்டிட்டு வந்தேன்… அங்க தான் அப்பாவுக்கு தெரிஞ்சவரைப் பார்த்தோம்…”
“என்ன ஆறுமுகம் பையனுக்கு ஒரு நல்லா இடமா பார்த்து சொல்ல கூடாதா?” என்று ஆதங்கமாக வெங்கடேசன் கேட்க,
“நான் மட்டும் பார்க்காமையா இருக்கேன்… பாணாவரம் கிராமம், மாப்பிள்ளைக்கு வீடு தவிர வேற எதுவும் இல்லை, ஜாதகம் செட் ஆகலைன்னு ஏதாவது ஒரு காரணம் சொல்றாங்க… நமக்கு தோதாக ஒரு வரன் பார்த்தேன் ஆனால் பொண்ணு படிச்சுக்கிட்டு இருக்கு இப்போதைக்கு கல்யாணம் இல்லைன்னு சொல்லிட்டாங்க… அந்த பொண்ணு நம்ம பார்த்திபனுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்…” என்று அவர் பேசிக் கொண்டே சென்றவர் அப்போது தான் அங்கு ராஜதுரை குடும்பத்தோடு அமர்ந்திருப்பதை கண்டார். பார்த்திபன் இங்கு கவனமில்லாமல் எதையோ சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
ரதி திடீரென “பெரியவங்க பேசிக்கிட்டு இருக்கும் போது உங்களுக்கு அப்படி என்ன வேடிக்கை வேண்டி கிடக்கு….” என்று கடிய,
“ஹான் ! சைட் அடிச்சிட்டு இருந்தேன்…” என்று பார்த்திபன் சொல்ல,
“யாரு நீங்க ? காமெடி பண்ணாதீங்க? நீங்க அதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்டிங்க? என்று அவனை கேலி செய்து , “அப்படி என்ன தான் பார்த்துட்டு இருந்தீங்க?” என்று கேட்டாள்.
“உன்னைத் தான் பார்த்துட்டு இருந்தேன்…”
“என்ன்ன்னனதுது?” என்று அதிர்ந்தவளைப் பார்த்து சிரித்தவன்,
“இப்பாவது ஒத்துக்கோ நான் உன்னை சைட் அடிச்சிருக்கேன்னு… இப்படி பிளாஷ்பேக் சொல்லும் போது குறுக்க வராத ஃப்ளோ மிஸ் ஆகுதுல்ல…” என்றவனை அவள் முறைக்க, அவன் தொடர்ந்தான்.
“நான் அன்னைக்கு பார்த்தது இன்னைக்கும் என் கண்ணுக்குள்ள இருக்கு… அங்க துர்கை சன்னதியில இருக்க படிக்கட்டுல நீயும் உங்க அப்பாவும் மேல உட்கார்ந்திருந்தீங்க… அடுத்த படியில உங்க அம்மா இருந்தாங்க… ஏதோ பிரசாதம் போல அதை சாப்பிட்டுக்கிட்டே நீ உங்க அம்மாவை வம்பிழுக்க அதுக்கு அவங்க உன்னைத் ஏதோ சொன்னாங்க போல…”
“அதை நீ உங்க அப்பா கிட்ட சிணுங்கிட்டே சொன்னதும், உங்க அப்பா உனக்கு சப்போர்ட் பண்ணி அவங்களை ஏதோ சொன்னாரு, அதுக்கு நீ உங்க அம்மாவை பார்த்து சிரிச்சதும் அவங்க உன்னை முறைச்சாங்க… இது எதுவும் எனக்கு வார்த்தையா காதுல விழல… எல்லாமே உன் முகம் காட்டிக் கொடுத்தது தான்…”
“அப்ப உன் முகத்துல இருந்த சந்தோஷமும் சிரிப்பும் எனக்கே எனக்கு வேணும்னு தோணுச்சு ! உங்க அப்பா கிட்ட குழந்தையா நீ சிணுங்கினாலும், நீ சாப்பிடற பிரசாதத்தை அவங்க ரெண்டு பேருக்கும் கொடுத்துட்டே அதுவும் உங்க அம்மாவுக்கு ஊட்டி விட்டதை பார்த்த போது எனக்கும் அது போல நீ ஊட்டி விட மாட்டியான்னு தோணுச்சு…”
“உங்க அப்பா இடத்துல நானும் உன் இடத்துல உன்னை மாதிரியே நம்மோட பொண்ணும் சேட்டை செய்ய, எங்களை பார்த்து நீ முறைச்சிகிட்டே இருக்க போல எல்லாமே ஒரு நொடியில தோணுச்சு…“
“நீ யாருன்னு தெரியல? உன் பேரு தெரியல? ஆனால் ஒரு நிமிஷத்துல நம்ப வாழ்க்கையில என்ன வேணும்னாலும் நடக்கும்னு அன்னைக்குத் தான் அனுபவ பூர்வமா உணர்ந்தேன்… அது வரைக்கும் ஏதோ கடமைக்குன்னு இருந்த கல்யாணம் இது போல அழகான குடும்பமா உன்கூட வாழணும்னு தோணுச்சு…” என்று அந்த நாளுக்கே சென்றவன் போல பேசிக் கொண்டிருந்தவனை இமைக்க மறந்து பார்த்திருந்தாள்.
அந்த ஆறுமுகம் அங்கிள் கூப்பிட்டதும் தான் என்னோட எண்ணத்தை நினைச்சு திகைச்சு போயிட்டேன்… என்ன இது திடீருன்னு நம்ம இப்படி எல்லாம் நினைக்கறோம்னு…
“வெங்கடேசா ! நான் சொன்னேன்ல நம்ம பார்த்திபனுக்கு பொருத்தமான பொண்ணுன்னு.. அதோ அந்த குடும்பம் தான்…” என்று ராஜதுரையின் குடும்பத்தை காட்ட பார்த்திபன் அதை கண்டு இன்பமாக அதிர, வெங்கடேசனோ,
“பொண்ணு கல்யாணம் முடிஞ்ச அப்புறம் கூட படிக்க வைக்கிறோம்னு சொல்லி கேட்டு பாரேன்… பொண்ணும் நல்லா பொண்ணா தான் தெரியுது…”
“நம்ம நினைக்கறது எல்லாம் நடந்துடுமா வெங்கடேசா… அவரோட அப்பா காலத்துல இருந்து எனக்கு அந்த குடும்பம் தெரியும்… அவங்க என்ன எண்ணத்துல இருக்காங்கன்னு தெரிஞ்சுக்காம எடுத்தவுடனே பொண்ணை கேட்கறது சரி வராதுன்னு தான் நம்ம பையன் விவரம் எதுவும் அவர்கிட்ட சொல்லாம வரன் எதுவும் பார்க்கறீங்களான்னு கேட்டேன்… அவரு இப்போதைக்கு அந்த எண்ணமே இல்லைன்னு சொல்லிட்டாரு”
“பொண்ணு பேரு என்ன ஆறுமுகம்?”
“அந்த பொண்ணு பேரு ஏதோ குந்தவைன்னு வருமே….” என்று ஒரு நிமிடம் யோசித்தவர் “ஹான்! ரதி குந்தவை” என்றதும், இத்தனை நேரம் இருவரின் பேச்சு வார்த்தையை அமைதியாக கேட்டவனின் மனதில் அவள் பெயர் தானாக சென்று அமர்ந்தது.
“இன்னாருக்கு இன்னாருன்னு நம்மகிட்ட என்ன இருக்கு? அந்த கடவுளே இவனுக்கு ஒரு வழி காட்டட்டும்…” என்று வெங்கடேசன் சொல்ல, அவர் நண்பரும் அதை ஆமோதிக்க, பார்த்திபன் அன்றைய மனநிலையை தொடர்ந்தான்,
“உன்னை பார்த்து எனக்கு எந்த எண்ணமும் வராம இருந்திருந்தா மாமா வேணாம்னு சொன்னது எனக்கு பெருசா தெரிஞ்சிருக்காது… ஆனால் அப்ப தெரிஞ்சது ரொம்ப வருத்தமா இருந்துச்சு… ஒரு நிமிஷம் கூட அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாம அப்பவே அது முடிஞ்சு போச்சுன்னு நினைச்சேன்.. ஆனால் மறுபடியும் உன்னை ஸ்டேஷன்ல பார்த்ததும் எல்லாம் மாறி போச்சு…”
“கோவில்ல பார்த்ததுக்கு மறுநாளே நீ என்னை இடிச்சுட்டு ஓடின அன்னைக்கு சாயங்காலமே ட்ரைன்ல உன்னை கீழே விழாம காப்பாத்தினது எல்லாம் நடந்தது… நீ எனக்கு இல்லைன்னு நான் என் மனசுல பதிய வைக்கறதுக்கு சந்தர்ப்பமே இல்லாம போச்சு.. அதுக்கு அப்புறம் உன்னை பார்க்கும் போதெல்லாம் நீ என் வாழ்க்கைக்கு வேணும்ன்ற எண்ணம் அதிகமாகிட்டே இருந்தது…”
“ஒரு வேளை என் மனசு மாமாக்கு புரிஞ்சதோ என்னவோ அவரே மறுபடியும் இன்னொரு சந்தர்ப்பம் கொடுத்தாரு… உங்க வீட்டு பிரச்சனை ஆரம்பிச்ச நேரம் போல அது… மாமாக்கு உன்னைப் பத்தின கவலைல உனக்கு நல்லபடியா கல்யாணம் முடிச்சு ஒருத்தர்கிட்ட ஒப்படைக்கணும்னு அவரே அந்த ஆறுமுகம் அங்கிள் கிட்ட, “நீங்க வந்து கேட்கும் போது பொண்ணு வளர்ந்துட்டான்னு தெரியல ஆனால் இன்னைக்கு அதை தெரிஞ்சுக்கற அவசியம் வந்துடுச்சுன்னு சொல்லி நல்ல வரன் ஏதாவது இருந்தா சொல்லுங்கன்னு சொல்லியிருக்காரு…”
அவரும் ரொம்ப சந்தோஷமா என் போட்டோ எல்லாம் கொடுத்து என்னைப் பத்தி சொன்னதுக்கு, “அம்மா இல்லைன்னு சொல்றீங்க அப்ப கண்டிப்பா வர போற பொண்டாட்டியை நல்லா பார்த்துப்பாரு… சொந்தபந்தம் இல்லாததே இந்த காலத்துக்கு நல்லது தான்னு சொல்லி எனக்கு ரொம்ப நிறைவா இருக்கு… நான் பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்றேன்னு சொன்னாரு…”
மறுநாள் “பொண்ணு இன்னும் மூணு வருஷம் போகட்டும்னு சொல்லுதுப்பான்னு” சொன்னவரே, “நான் மறுபடியும் பேசி சம்மதிக்க வைக்கறேன்னு சொல்லியிருக்காரு…” ஆனால் அதுக்கு மறுநாளே அவர் இல்லைன்ற செய்தி தான் வந்துச்சு… என்று பார்த்திபன் எல்லாவற்றையும் சொல்ல சொல்ல ரதியின் கண்களில் கண்ணீர்.
[the_ad id=”6605″]
அந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் திடீரென அவள் திருமண விஷயம் பற்றி அவர் அதிகம் பேசியதின் காரணம் இன்று புரிந்தது.
“ஓய்! என்ன ? எதுக்கு இப்ப அழற?” என்று அவளின் கண்ணீரை துடைத்தவனிடம்,
“ஒருவேளை அப்பவே நான் சரியின்னு சொல்லியிருந்தால் அந்த சந்தோஷத்திற்காகவே அவருக்கு ஒன்னும் ஆகியிருக்காதுல்ல… நீங்களும் என்னால கஷ்டப்பட்டு இருக்கமாட்டீங்கல்ல…” என்று அவள் சொல்ல,
“குந்தவை ! நடக்கற எதுவும் நம்மகிட்ட இல்லை… முடிஞ்ச எதையும் மறுபடியும் கொண்டு வராதே..” என்று சொன்னவனின் வார்த்தையை அவள் ஏற்றதும் அவன் தொடர்ந்தான்.
“எனக்குன்னு ஒரு வாழ்க்கை கிடைக்க போகுதுன்னு கொஞ்சம் சந்தோஷப்பட்டேன்.. ஆனால் அது எல்லாம் உடனே முடிஞ்சு போச்சு.. நம்மோட கடைசி சந்திப்புல, நீ வேற ஏதோ பயமா இருக்குனு சொல்லிட்டு போனியா மறுநாள் உன்னைப் பார்க்க ஸ்டேஷன்ல வெயிட் பண்ணேன்.. நீ வரல… ஏன் வரலன்னு யோசிச்சுட்டே ஆபீஸ் போன அப்புறம் தான் இதுபோலன்னு போன் வந்துச்சு…”
“நேரா அடிச்சு பிடிச்சு உங்க வீட்டுக்கு லேட்டா தான் வந்தேன்… அங்க வந்தா, அன்னைக்கு உன்னை விட்டுட்டு போன இடத்துல வீடில்லாம வெளியேவே எல்லா சாங்கியமும் நீ பண்ணிட்டு இருந்த… அக்கம் பக்கம் எல்லாரும் விஷயம் சொன்ன பிறகு தான் எல்லா பிரச்னையும் தெரியும்..”
“உன்னை அந்த நிலைமையில பார்த்த அப்ப உனக்கு நானிருக்கேன்னு சொல்ல தோணுச்சு… ஆனால் என்னால உங்கிட்ட கூட வர முடியல… அவ்வளவு தான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு உன்னை உங்க மாமா கூட்டிட்டு போன அப்ப, அவளுக்கு நானிருக்கேன் என்கூட அனுப்புங்கன்னு கேட்க தோணுச்சு… ஆனால் என்னால எதுவுமே பண்ண முடியல…”
“ஏன்னா உன்னை யாரோ ஒரு தெரிஞ்ச பொண்ணுன்ற அளவுக்கு மட்டும் என்னால பார்க்க முடியல…அப்படி உன்னை யாரோன்னு நினைச்சு தூரமா நின்னு ஆறுதல் சொல்ற அளவுக்கு அன்னைக்கு எனக்கு தைரியம் இல்லை…”
“அதுக்கு அப்புறம் உன்னை பார்க்க முடியாம, நீ எப்படி இருக்கன்னு தெரியாம நரகமா இருந்துச்சு… இதுக்கு மேல முடியாதுன்னு இரண்டு வருஷம் ஆனதும் உங்க மாமாகிட்ட பேச சொல்லி அந்த ஆறுமுகம் அங்கிளை அனுப்பினேன்…”
“அந்த அங்கிளை மாமாவுக்கும் அத்தைக்கும் மட்டும் தான் தெரியும், அதனால மாமாவைப் பத்தி விசாரிக்கற சொந்தக்காரரா போங்கன்னு சொல்லி ஏற்கனவே நாங்க பேசி வைச்சதைப் பத்தியும் என்னைப் பத்தியும் சொல்லாம பொதுவா பேசுங்கன்னு சொல்லி அனுப்பினேன்… ஏன்னா மாமா இல்லாதப்ப அவர் பேசி வைச்சதுன்னு சொல்லி கேட்கறது சரி வராது… அதை விட அப்ப உன்னோட மனநிலை எப்படி இருக்குன்றது எனக்கு முக்கியமா பட்டுச்சு…”
“ஆனா உங்க வீட்டுல உன்னை சிவாவுக்கு பேச போறதா சொன்னதும் அதுக்கு அத்தை எதுவும் மறுப்பு சொல்லாததையும் பார்த்து தான் அவங்களுக்கும் விஷயம் எதுவும் தெரியாதுன்னு தெரிஞ்சது…”
“அவ்வளவு தான் இனி நீ எனக்கில்லைன்னு தெரிஞ்சாலும் என்னால அதை ஏத்துக்க முடியல… உன்னை நெருங்கவும் முடியாம நீ என்னை நெருங்கறதை தடுக்கவும் முடியாம கொடுமையா இருந்துச்சு… ஜஸ்ட் லைக் தட்ன்னு உன்னை என்னால கடந்து போக முடியல…அப்படியே இரண்டு வருஷம் ஓடி போச்சு..” என்று பார்த்திபன் பெருமூச்சு விட்டான்.
“ஆபீஸ்ல நான் தான்னு தெரிஞ்சு வந்தீங்களா?” என்று ரதி இடையிட,
“இல்லை… அங்கிள் பேசிட்டு வந்த அப்புறம் சும்மா இருக்கற மனசு ஏதேதோ நினைக்கும்னு மறுபடியும் வேலைக்கு போயிட்டே படிக்க ஆரம்பிச்சேன்… அதுல பாஸாகி தான் சென்னைக்கு வந்தேன்.. அதுக்கு முன்னாடி நாள் வேலைக்கு போக போற இடத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னு விசாரிச்சா என்னோட மேலதிகாரியா உன்னோட பெயர் சொல்றாங்க…”
“ஆறுமுகம் அங்கிள் நீ ஏதோ படிக்கறன்னு சொன்னாரு ஆனால் என்னனு விவரம் தெரியாது நானும் எதுவும் விசாரிக்கல… இது நீயா இல்லை வேற யாரோவான்னு ஒரு பக்கம், இந்த பெயரு வேற யாருக்கும் இருக்காது அது நீ தான்னு இன்னொரு பக்கம்னு எனக்கு ஒரே குழப்பம்..”
“ரதிகுந்தவை யாருன்னு தெரிஞ்சே ஆகணும்னு ஒரு முடிவோட வந்தேன், ஆபீஸ் போய் தெரிஞ்சுக்கற அளவுக்கு பொறுமை இல்லாம மறுநாள் காலையிலே உன் குவார்ட்டர்ஸ்க்கு வந்தா நீ தான் என் எதிரே நிக்கற… முழுசா நாலு வருஷம் கழிச்சு அன்னைக்கு தான் உன்னை பார்த்தேன்…”
“உன்னைப் பார்த்தது சந்தோஷமா இருந்தாலும் நீ எனக்கில்லைன்ற விஷயம் தான் எனக்கு முதல்ல நினைவுக்கு வந்தது… அதனால தான் உன்னை ஏற்கனவே எனக்கு தெரியும்ன்ற மாதிரி நான் காட்டிக்கல அதே போல நான் தற்காலிகமா தானே இங்க வந்தேன் பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன்…”
“அப்படியும் எனக்கே தெரியாம என் மனசை வெளிப்படுத்தற போல ஒரு நாள் உங்கிட்ட பேச வந்தேன் அப்ப தான் சிவா உனக்கு போன் பண்ணதும் நான் என்ன பண்ண இருந்தேன்னு புத்தியில உறைக்க என்மேலேயே எனக்கு கோபம்.. “
“அதுக்கு அப்புறம் ஊருக்கு போறதுக்கு முன்னாடி நீ என்கிட்ட பேசணும்னு சொன்னதும் எங்கயோ மனசோரமா ஒரு எதிர்பார்ப்பு… ஆனால் நீ என்னை உன் பலமா தேடியிருக்கன்னு சொன்ன போது அதை நினைச்சு சந்தோஷப்பட்டாலும் அதைத் தாண்டி உனக்கு என்மேல எந்த விருப்பமும் இல்லைன்னு தெரிஞ்சது… “
“என்னவோ தொடர்ச்சியா ஏமாற்றம் மேலே ஏமாற்றம். வாழ்க்கையே வெறுமையான உணர்வு…ஆனால் அடுத்த ஒரு வாரத்திலே இந்த உலகத்துல நமக்கு மேலே ஒரு சக்தி இருக்குன்னு புரிஞ்சுது…” என்று இத்தனை நேரம் ஆதங்கமாக பேசியவனின் முகம் இப்போது ஒரு வித பரவசம் காட்டுவதை ரதி குழப்பமாக பார்த்தாள்.
“ஆமா! சிவாவுக்கு உன்னோட ஜாதகம் பொருந்தலைன்னு உனக்கு வெளிய வரன் பார்க்க சொல்லி பாண்டியன் பெரியப்பா தெரிஞ்சவங்ககிட்ட சொல்லி இருக்காங்க போல… எந்த ஆறுமுகம் அங்கிள் நீ எனக்கு பொருத்தம்னு சொன்னாரோ அவர்கிட்டியே மறுபடியும் உன் ஜாதகம் வந்தது நினைச்சா எனக்கே பிரம்மிப்பு தான்…. இதான் கடவுள் போடற முடிச்சுன்னு சொல்லுவாங்க போல…”
“ஒருவேளை இதெல்லாம் நடக்காம, நீ இல்லாத என்னோட வாழ்க்கையை நினைச்சாலே நான் எப்படியோ போய்…..ர்ர்ர்…” என்று அவனை சொல்லவிடாமல் இறுக்கி அணைத்திருந்தவளின் கண்ணீர் அவன் தோளை நனைத்தது.
“ஓய்! இப்ப எதுக்கு இந்த அழுகை ? என்னோட கஷ்டத்துல உனக்கு என்மேல பாசம் வந்ததா இருக்க கூடாதுன்னு தான் இதெல்லாம் நான் முன்னாடி சொல்லல… ஆனால் இப்ப இந்த நிலைமையில நீ அழறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு…” என்று அவன் சொன்னதும்,
[the_ad id=”6605″]
“இல்லை ! இல்லை ! நான் அழலை! மனசளவுல உங்களோட தேடலா நான் இருந்திருக்கேன்னு நினைக்க நினைக்க ஏதோ சொல்ல முடியாத சந்தோஷம் மனசை அடைக்குது… அதான் கண்ணுல தண்ணி வருது…” என்று சிரித்துக் கொண்டே சொன்னவளின் நெற்றியில் முட்டியவன்,
“இன்னைக்கு எனக்கே எனக்குன்னு நீயும் நம்ம குழந்தையும் என்கைக்குள்ள இருக்கும் போது வேற என்ன எனக்கு வேணும் சொல்லு… நான் தான் இந்த உலகத்துலேயே பணக்காரன்னு தோணுது பார்த்தி ஹாப்பி அண்ணாச்சி…” என்று புன்னகையோடு சொன்னவனை ஆதுரமாக பார்த்தவள்,
“நீங்க பணக்காரர் இல்லைங்க அப்பாடக்கருங்க…” என்று சிரிப்போடு சொன்னவளைப் பார்த்து அவன் முறைக்க,
“உண்மையாங்க!..” என்று அப்பாடக்கருக்கு அவள் விளக்கம் சொன்னதும் வாய் விட்டு சிரித்தவனைப் பார்த்து,
“நீங்க கேட்டதெல்லாம் கொடுத்துட்டேன்… ஆனால் நீங்க எனக்கு எதுவும் தரலையே…” என்று மறுபடியும் ஆரம்பித்தவளை மெதுவாக இழுத்து தன் மடியில் அமர்த்தியதும் அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டவளின் கண்களைப் பார்த்து,
“உனக்கு என்ன வேணும்னு கேளு ! நான் செய்யறேன் !” என்று அவன் சொன்னதும்,
“நான் எவ்வளவு குழப்பத்துல கஷ்டத்துல இருந்தாலும் உங்களோட ஆறுதல் மட்டும் தான் வேணும்” என்றபடி அதை ஏற்கனவே கொடுத்த அவனின் விழிகளில் முத்தமிட்டபடியே,
“நான் ஏதாவது தப்பு பண்ணா கோபப்படாம என்னை எப்பவும் முறைச்சிகிட்டே சொல்ற அந்த முறைப்பு வேணும்” என்று அவளை முறைக்கும் நாசியில் முத்தமிட்டாள்.
“இப்ப இந்த நிமிஷம் நகராம அப்படியே உறைஞ்சு போற அளவுக்கு எப்பவும் உங்க முத்தம் வேணும்” என்றபடியே அவன் இதழில் முத்தமிட்டு அவன் கையை எடுத்து வயிற்றில் வைத்தவள்,
“நம்ம வீட்ல ஒரே சத்தமா இருக்கற அளவுக்கு குறைஞ்சது நாலு குழந்தையாவது கண்டிப்பா எனக்கு வேணும்…” என்றவாறே அவன் மடியில் படுத்தவளை தன் மேல் போட்டுக் கொண்டு படுத்தவனைப் பார்த்து,
“உங்களை மாடி தாங்க நான் இருந்தாலும் என்னை உங்க நெஞ்சுல வைச்சு தாங்கணும்….” என்று ஏற்கனவே அவளை தாங்கி கொண்டிருக்கும் அவன் நெஞ்சில் முத்தமிட்டாள்.
“நமக்கு எத்தனை குழந்தைங்க வந்தாலும் உங்களோட முதல் கொஞ்சல் நானா தான் இருக்கனும்…” என்றவள்,
“நமக்கிடையே இருக்க இந்த கொடுக்கல் வாங்கலெல்லாம் கணக்கே இல்லாம எந்த அளவுக்கு ஏறுதோ அந்த அளவுக்கு ஜென்மஜென்மமா உங்ககூட திகட்ட திகட்ட வாழணும்…” என்று மலர்ந்து சொன்னவளைப் பார்த்து மகிழ்ந்தவன்,
“என்னோட எல்லா கஷ்டமும் போன ஜென்மமோன்னு தோணுது… இருட்டா இருந்த என் வாழ்க்கையோட வெளிச்சமா நான் உன்னை தேடினாலும், நீ எனக்கு சம்மதம் சொன்னதால தான் இன்னைக்கு நம்மோட வாழ்க்கையும் பிரகாசமா இருக்கு இனிமேலும் இருக்கும்…” என்றவர்களின் வாழ்க்கையில் என்றும் ஆனந்த ஒளி வீசட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்… நன்றி ! வணக்கம்!
கண் பார்த்து காதல் கதை பேசியது இல்லை !
காதல் கடிதங்கள் பரிமாறியது இல்லை !
கள்ளத்தனமாக சந்தித்தது இல்லை !
கைகோர்த்து நடந்தது இல்லை !
முதல் பார்வையின் தாக்கம் எக்கணம்..
என்பதை நான் அறியேன்!…..
அந்த ஒற்றை பார்வையில் எந்தன் உயிராய்…
உணர்வாய் நீ கலந்ததன் காரணமும் நான் அறியேன் !…
ஆனால் எந்தன் சிரிப்புக்கான உயிர்ப்பு…
உன்னிடத்தில் தான் உள்ளது என்பதை அக்கணம் அறிந்தேன்!…
இருண்ட என் வாழ்வில் ஒளியாக வந்த தேவதையே!
இன்று உந்தன் நெஞ்சமெனும் மஞ்சத்தில் தஞ்சமடைய வைத்த வஞ்சி மகளே!
இனி வரும் பிறவியிலும் உன் காதலாக உன் கணவனாக உன் உரிமையாக வரவே இந்த விஜயன் வரம் கேட்கிறேன்!