“போ பாட்டி, உன் பேரன் ஒண்ணும் என்னை ஆசை பட்டு கட்டிக்கல. என்னை அடிமையாக்கணும்னு கட்டிருக்கான்”
“அடிமையா இருந்தா தான் என்ன தேனு. அடிமைன்னா என்ன உன்னை வீட்டு வேலை செய்ய சொல்லிறுப்பான். வேற என்ன சொல்லிறுக்க போறான்? ஒரு வேளை அவன் கையை காலை பிடிச்சு விட சொன்னா புருஷன் கை கால் பிடிச்சு விடுறது கூட தப்பு இல்லையே தேனு”
“அம்மா மாதிரியே நீயும் சொல்ற?”
“அப்ப என் மகளை நான் நல்லா தானே வளத்துருக்கேன். நீ நல்ல வாழ்ந்தா தானே உன் அம்மாவுக்கும் பெருமையா இருக்கும். நீ உன் அத்தையை அப்படி பேசினது தெரிஞ்சா உன் அம்மா சந்தோஷப் படுவாளா?”
“அட நீ வேற பாட்டி. விளக்க மாத்தால அடிச்சிருவா உன் மக”
“அப்ப உன் தப்பு புரியுதா தேனு?”
“ஆனாலும் அத்தானுக்கு என்னை பிடிக்கலையே பாட்டி”
அவள் அத்தான் என்று சொன்னதுமே அவள் மன மாற்றத்தை உணர்ந்த அன்னம் “அவனை பத்தி இதுக்கு மேல நான் சொல்ல கூடாது தேனு. நீயே அவனை கவனிச்சு பாரு. அவன் அன்பு உனக்கே புரியும். இதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது. சரி வா எல்லாரும் சாப்பிட வந்துருப்பாங்க. அங்க வந்து முதல் ஆளா சாப்பிட நினைக்க கூடாது கண்ணு. உன் அத்தை கிட்ட பரிமாறவான்னு கேளு”, என்றாள்.
ஒரு தடவை தப்பு பண்ணிட்டேன்னு ஓவரா அட்வைஸ் பண்ணாத. உன் பேரன் மேல உள்ள கோபத்துல தான் அப்படி பண்ணிட்டேன். இனி என் அத்தைக்கு முழுக்க முழுக்க ரெஸ்ட் தான். எல்லா வேலையும் நானே பாத்துக்குறேன்”, என்று சொல்லி அன்னத்துடன் சென்றாள்.
கீழே வேணி அனைவருக்கும் உணவை தரையில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க, அதை பார்த்தவாறே வந்த தேன்மொழி “இங்க டைனிங் டேபிள் இன்னுமா வாங்கலை. ஒரு வேளை கீழே உக்காந்து சாப்பிடுறது தான் எல்லாத்துக்கும் பிடிக்கும் போல?”,என்று எண்ணிக் கொண்டு “அத்தை நீங்க இருங்க. நான் எடுத்து வைக்குறேன்”, என்று சொல்லி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்து வேணியும் அன்னமும் புன்னகைத்துக் கொண்டார்கள். “அவ நம்ம ரத்தம் வேணி”,என்று சொன்ன அன்னம் அங்கிருந்த செல்வா மற்றும் தினேஷைப் பார்த்துக் கொண்டே”இவனுங்க கட்டிக்கிட்டு வர பொண்ணுங்க கிட்ட தான் நீ கவனமா இருக்கணும் வேணி”, என்றாள்.
அதைக் கேட்டு பாட்டியை முறைத்தான் தினேஷ். செல்வாவோ “நான் மாமா கிட்ட போய் சண்டை போட போறேன்”, என்று சொல்லி எழுந்தான்.
அனைவரும் அவனை புரியாமல் பாக்க “அவர் இந்த பொம்பளை ரவுடியை மட்டும் பெத்துட்டு அமைதியாகிட்டார்.கூட ரெண்டு பொண்ணு பெத்துருந்தா, எங்களுக்கு ஜோடி கிடைச்சிருக்கும்ல?”, என்று சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்தான்.
[the_ad id=”6605″]
அவன் அருகில் வந்த வேணி அவன் தலையில் ஒரு கொட்டு கட்டி “இன்னும் தேனை ரெண்டு பேரும் அண்ணின்னு தான் சொல்லணும்”, என்றாள்.
மதியும் அங்கு சாப்பிட அமர்ந்தார். தேன்மொழி எல்லாவற்றையும் செய்வதைப் பார்த்து நிறைவான புன்னகையை சிந்தினார். அவளைப் பார்த்து அவர் சிரிப்பதைக் கண்ட தேன்மொழி “வாங்க மாமா சாப்பிடலாம்”, என்று சொல்லி சிரித்தாள்.
அனைவரும் அங்கே கதை அளந்து கொண்டிருக்க அப்போது தான் உள்ளே வந்த கதிர் ஆனந்த அதிர்ச்சி அடைந்தது மட்டும் உண்மை. அதுவும் தன்னுடைய மனைவி புன்னகை முகமாக அனைவருக்கும் பரிமாறுவதைக் கண்டவன் விழி விரித்தான்.
“டேய் கையை கழுவிட்டு வா சாப்பிடலாம்”, என்று வேணி சொன்னதும் மறுக்காமல் அதை செய்து விட்டு வந்தவனுக்கு அவன் முகம் பாக்காமல் பரிமாறினாள் தேன்மொழி.
அதைக் கண்ட அன்னம் அவர்களுக்குள் இருக்கும் பனிப்போர் உடனடியாக சரியாகாது என்பது தெரியும் ஆதலால் “நீயும் கதிர் பக்கத்துல உக்காந்து சாப்பிடு கண்ணு.”, என்று சொன்னதும் அவன் அருகில் சென்று அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவன் வந்த பிறகு தேன்மொழி அமைதியாக இருந்தாலும் செல்வா தினேஷ் அடிக்கும் லூட்டியால் அங்கே சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது.
அதே நேரம் கீதா பசியால் அழுது கொண்டிருந்தாள். நேற்று துரைராசுவும் கீதாவும் தேன்மொழி திருமணத்துக்கு சென்று வந்ததும் ஒரு சண்டையை ஆரம்பித்தாள் ரேகா.
“எதுக்கு நம்ம எதிரி வீட்டு விஷேசத்துக்கு போனீங்க?”, என்று நேரடியாக கேள்வி கேட்டவளை முறைத்த துரைராசு அமைதியாக இருக்க முயன்றார்.
“அவருக்கு தான் அறிவில்லைன்னா உனக்கு எங்கடி போச்சு அறிவு?”, என்று சொல்லிக் கொண்டே ரேகா கீதாவை அடிக்க போக, அதற்கு மேல் பொறுமை இல்லாமல் ரேகாவுக்கு ஒரு அரை வைத்தார்.
“என்ன டி நினைச்சிட்டு இருக்க? நானும் பொறுமையா போகணும்னு நினைச்சா ரொம்ப துள்ளுற? வயசுக்கு வந்து நாளைக்கு கட்டி கொடுக்குற பிள்ளையைப் போய் கை நீட்டி அடிக்க போற? நீ என் அண்ணனுங்க பத்திரிக்கை கொடுக்க வந்த விஷயத்தை என்கிட்ட மறைச்சா நான் போகாம இருப்பேனா? உன்னால தான் டி நானும் என் பொண்ணும் அனாதையா இருக்குறோம். என்னால எங்க அம்மா அப்பா கூட இருக்க முடியலை. என் மகளுக்கு எல்லா சொந்தமும் இருந்தும் தனியா இருக்குறா. உன் அண்ணன் பேச்சைக் கேட்டு நான் என் அண்ணியோட அண்ணனு தெரிஞ்சும் அவரை அடிக்க போனதுனால தான் ஒரு உயிர் போச்சு. என் அப்பா கடைசி காலத்துல கூட என்னால அவர் கூட இருக்க முடியாம போனப்ப தான் என் தப்பே எனக்கு புரிஞ்சது”
….
“தப்பு பண்ணிட்டு எந்த முகத்தோட அங்க போகன்னு இருந்தப்ப தான் உன் அண்ணன் அவன் மகனை தேன்மொழிக்கு கொடுக்க சம்மதம் சொன்னான். அதை சாக்கா வச்சு போகலாம்னு போனப்ப தான் நீ மறுபடியும் என்னை எங்க வீட்ல இருந்து பிரிச்சிட்டு வந்த? இப்பவும் நான் போனா மொத்த குடும்பமே என்னை தாங்கும். ஆனாலும் எதுக்கு போகாம இருக்கேன் தெரியுமா? மறுபடியும் அங்க உன்னை கூட்டிட்டு போனா, நீ என் குடும்பத்தோட நிம்மதியை மறுபடியும் குலைச்சிறுவ. இன்னொரு தடவை என் மகள் மேல கையை வச்சா உன் அப்பன் வீட்டுக்கு உன்னை துரத்தி விட்டுருவேன் பாத்துக்கோ. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் ரேகா”
….
“நீ உண்மையிலே என்னைக் காதலிச்சிருந்தா என்னோட சேத்து என் குடும்பத்தையும் ஏத்துகிட்டு இருந்துருப்ப? காதல்னு சொல்லி என் கூட வாழ்ந்த வாழ்க்கை பொய்யோன்னு எனக்கு தோணுது”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
முதல் முறையாக உடைந்து போய் அதே இடத்தில் அமர்ந்து விட்டாள் ரேகா.
[the_ad id=”6605″]
தன்னுடைய அப்பா மற்றும் அண்ணன் பேச்சைக் கேட்டு துரைராசுவை அந்த குடும்பத்தில் இருந்து பிரிக்க நினைத்தது நிஜம். ஆனால் அவளுடைய காதல் உண்மை ஆயிற்றே. அதையே நம்பாமல் சென்ற கணவனை அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்தவள் அடுத்த நொடி கீதா தடுக்க தடுக்க கேட்காமல் அவளுடைய பிறந்த வீட்டுக்கு சென்று விட்டாள்.
“அப்பா அம்மா போறாங்கப்பா, கூப்பிடுங்க”, என்று கீதா சொல்லும் போது “விடு கீதா, உண்மை புரிஞ்சு அவளே வருவா. நீ போய் ரெஸ்ட் எடு”, என்று சொல்லி விட்டார்.
மதியம் ரேகா சமைத்து வைத்திருந்த உணவை அன்று இரவு அப்பாவும் மகளும் உண்டார்கள். உள்ளே இறங்க வில்லை என்றாலும் மகளுக்காக அவரும் அவருக்காக அவளும் உண்டு முடித்தார்கள். அதன் பின் தூங்கியும் போனார்கள். காலையில் கண் விழித்த கீதாவுக்கு அப்போது தான் அம்மா இல்லை என்ற நினைப்பே வந்தது. எழுந்து தன் வேலையை முடித்தவள் அப்பாவை தேடிச் சென்றாள்.
அவர் வயலுக்கு சென்றது புரிந்ததும் என்ன செய்ய என்று தெரியாமல் அப்படியே இருந்தாள். ரேகா அவளுக்கு எதையுமே சொல்லிக் கொடுத்திருக்க வில்லை. சிறு சிறு வேலையைக் கற்றுக் கொடுத்திருந்தாலும் கீதா நன்கு பழகி இருப்பாள். ஆனால் இப்போது ஒன்றும் செய்ய இயலாத நிலை.
மணி ஆக ஆக வயிறு பசித்தது. அப்பாவுக்கு அழைக்கலாம் என்றாள் அவர் போன் அங்கேயே இருந்தது. அந்த போனை எடுத்து தேன்மொழியின் திருமணத்தில் எடுத்த போட்டோகளைப் பார்த்தாள்.
[the_ad id=”6605″]
அதைப் பார்த்த பின்னரும் பசி அவளை வறுத்தெடுக்க, தன்னுடைய அம்மாவை அழைத்தாள். அதை எடுத்தது ரேகா தான்.
“பாட்டி அம்மா எங்க? அம்மா கிட்ட போனைக் கொடு”, என்று கீதா சொன்னதும் “அப்பாவும் மகளும் சேந்து என் பொண்ணை அடிச்சு அனுப்பிருக்கீங்க? படிச்சு படிச்சு சொன்னேன். அந்த குடும்பம் வேண்டாம்னு. சொன்னா கேட்டாளா? வைடி போனை”, என்று சொல்லி வைத்து விட்டாள்.
வேறு வழியில்லாமல் தேன்மொழியை அழைத்தாள் கீதா. எல்லாத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. “தேனு, உன் போன் அடிக்கு பாரு”, என்று சொல்லி அவளை போக சொன்னாள் வேணி.
அப்போது அவள் போனை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தான் தினேஷ். அவன் முகத்தில் இருந்த பாவனையை புரிந்து கொள்ள முடியாமல் “யாரு தினேஷ்”, என்று கேட்டுக் கொண்டே அதை வாங்கினாள் தேன்மொழி.
கீதா என்று தெரிந்ததும் ஒரு சிரிப்புடன் அதை எடுத்து காதில் வைத்தாள். அடுத்த நொடி அவள் கேட்டது கீதாவின் அழுகையைத் தான்.
அதில் அதிர்ந்து போன தேன்மொழி “கீதா என்ன ஆச்சு? எதுக்கு அழுற?”, என்று கேட்டாள்.
அதைக் கேட்டு மற்றொரு ஆளும் அதிர்ந்தது, அது வேறு யாரும் அல்ல. தினேஷ் தான்.
காதல் தீயை, நீர் அணைக்குமா?….”