ஒளி 9:::-
பொன் மகளின் புன்னகைப்போல்
யுக பூக்களுக்கு புன்னகைக்க தெரியவில்லை!
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப்போல எந்த
இலக்கண கவிதையும் நடந்ததில்லை!
முத்துக்கள் தெறிக்கின்ற மழலை போல ஒரு
உள்ளூரு மொழிகளில் வார்த்தை இல்லை!
தந்தைக்கும் தாய் அமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே!…
காலையிலே ரேடியோவில் கேட்ட பாடலின் இனிமையை ரசித்தபடியே ராஜதுரை உட்கார்ந்திருந்தார்.
“ஏங்க! உங்க அத்தை காலையிலேயே வர சொன்னாங்கனு சொன்னீங்க இன்னும் கிளம்பாம இருக்கீங்க? போயிட்டு வந்து கடைக்கு போகணும்ல… அதிசயமா உங்க பொண்ணே ரெடி ஆகிட்டா? “என்று சாந்தி அவரிடம் பேசியபடியே ரதியை வார,
“ஏன்மா? இப்படி என்னை வம்புக்கு இழுக்கறீங்க? நானும் அங்க போயிட்டு வந்து காலேஜ்க்கு அப்ளிகேஷன் கொண்டு போய் தரணும் அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன்..” என்று அம்மாவிடம் அலுத்தபடியே,
“அப்பா ! வாங்க போகலாம்” என்று அவள் அழைத்தும் அவர் கவனம் இங்கில்லாததை உணர்ந்தவள், ரேடியோவில் ஒலித்த பாடலை ரசித்தபடியே இருந்த தந்தையைக் கண்டாள்.
இவரின் அன்பிற்காக எத்தனை இன்னல்களும் தாங்கலாம், எந்த ஜென்மத்தின் பயனோ இவரின் பெண்ணாக பிறந்தேன் என்று அவள் மகிழ்ந்தாள்.அவரின் அருகில் சென்று அவர் தோளை அசைத்தவாறு அழைத்தாள்.
“அப்பா ! அப்பா !”
“ஹான்! சொல்லுமா !”
“அங்க கமலா பாட்டி வீட்டிற்கு போகணும்னு சொன்னீங்க? டைம் ஆகுதுப்பா…” ரதி சொல்ல,
“இரு இப்ப தான் உங்க அப்பா தெளிஞ்சு இந்த உலகம் வந்திருக்காரு… பொறுமையா போகலாம்… “ என்று சாந்தி அவரையும் வம்பிழுக்க, அவரோ சாந்தியை கண்டு அசடு வழிந்தவாறு ரதியிடம் திரும்பினார்.
[the_ad id=”6605″]
“இப்ப தான் நீ பொறந்த போல இருக்கு அதுக்குள்ள காலேஜ் போற அளவுக்கு வளர்ந்திட்டம்மா.. அதான் இதுக்கு முன்னாடி நீ ஸ்கூல்ல பண்ண சேட்டையெல்லாம் நினைச்சுட்டு இருந்தேன்… இப்ப காலேஜ் போய் என்ன பண்ண போறியோனு தான் யோசிச்சுட்டு இருந்தேன்…” என்று ரதியை கேலி செய்ய,
“அப்பா” என்று அவள் சிணுங்க,
“உண்மையாடா ! இன்னும் ஒரு மூணு நாலு வருஷத்தல உனக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு வயசு வந்துடும்ல அதுக்குள்ள காலம் எப்படி ஓடி போகுது பாரேன்…”என்று அவர் நெகிழ்ச்சியாக பேச,
“ஆமா! உங்களுக்கு பொண்ணை பத்தி பேச ஆரம்பிச்சால், ஏன் அவளை பத்தி நினைக்க ஆரம்பிச்சாலே நேரம் காலம் போறது தெரியாது.. இப்ப கூட அப்படி தான் உட்கார்ந்திருக்கீங்க…” சாந்தி அவரை கிண்டலடிக்க,
“உங்களுக்கு பொறாமைமா எங்க அப்பா என்னை இப்படி தாங்கறாரு… உங்க அப்பா உங்களை இப்படி பார்த்துக்கலைனு…” என்று ரதி சாந்தியை வார,
“ஹே ! எங்க அப்பாக்கு மூன்று பொண்ணுடி நாங்க, ஆனால் ஒரு குறையும் சொல்லாத அளவுக்கு எங்களை தாங்கினாரு… சும்மா தங்கமாட்டும் பார்த்துக்கிட்டாரு… நீ ஒத்த பொண்ணுக்கே இந்த அலம்பல் பண்ணாத… போவியா அங்கிட்டு… என்று அவர் பொங்க,
“அம்மா ! எனக்கு ஒரு டவுட் !”
“என்ன ?”
“இல்லை … உங்க அப்பாவைப் பத்தி பெருமையை சொன்னா மாதிரி இல்லையே ஏதோ எனக்கு அடுத்து யாரும் இல்லையேனு ஆதங்கமாக சொல்ற போல இருக்கே..” ரதி குறும்பாய் கேட்க,
அம்மாவும் பொண்ணும் சண்டை போடுவதை ரசித்துக் கொண்டிருந்தவர், அடுத்த அம்பு தன்னை நோக்கி வருவற்குள் மனைவியையும் சேர்த்து காக்க,
“அம்மு ! வாம்மா போகலாம்! அப்புறம் பாட்டி எங்கயும் கிளம்பிட போறாங்க?” தந்தையின் முயற்சி புரிந்தவள்,
“இருங்கப்பா ! அம்மா இன்னும் என் டவுட்க்கு பதில் சொல்லலை..”
“உனக்கு உங்க அப்பா உசத்தினா எனக்கு எங்க அப்பா ஒசத்தி தான்.. போ போய் கிளம்பற வேலைய பாரு…” என்று சாந்தி அவளை முறைத்தவாறே பதில் சொல்ல,
“நான் கேட்டதுக்கு பதில் இது இல்லைம்மா… நான் போயிட்டு வந்து கேட்டுக்கிறேன்.. நீங்க யோசிச்சு வைங்க …” என்று வம்பிழுத்தவள் தந்தையுடன் கிளம்பினாள்.
ஏற்கனவே அங்கு போய் வந்த அனுபவம் மனதை வாட்டினாலும் தந்தையின் வார்த்தைக்காக உடன் வந்தாள். எப்போதும் போல அவர்களை வெகு நேரம் காக்க வைத்து அதன் பின்னர் வெளியே வந்து ராஜதுரையிடம் பேசினார்.
“சொல்லுங்க அத்தை! வர சொல்லியிருந்தீங்க ?”
“ம்ம்ம் ! ஆமா.. என்ன முடிவு பண்ணியிருக்க?” என்று ரதியை பார்த்தவாறே கேட்க,
“பி. எஸ்சிக்கு போட்டு இருக்கேன் பாட்டி.. இன்னைக்கு அப்ளிகேஷன் கொடுக்க போகணும்… “என்று அவருக்கு பதில் அளிக்க,
“ஓஓ! அதெல்லாம் வேணாம் .. “ என்று கமலம்மாள் சொன்னதும் இருவருமே அதிர்ந்தனர்.
மகளின் கலக்கம் கண்டு ராஜதுரை தான் சுதாரித்தார், “ஏன், என்னாச்சு அத்தை?”
[the_ad id=”6605″]
“ஒன்ணுமில்லை, இந்த அந்த பிசி இன்ஜினியரிங் காலேஜில MLA கோட்டால ரெண்டு சீட் கொடுத்து இருக்காங்க … அதல ஒரு சீட்டை இவளுக்கு கொடுக்கலாம்னு…” என்று அவர் கூறியதும் ராஜதுரையின் முகம் மலர்ந்தது.
ரதிக்கோ அதில் விருப்பம் இல்லை, பள்ளி படிக்கும் காலத்திலே அவளுக்கு என்னவோ இந்த டீச்சர் , இன்ஜினியரிங் படிப்பில் நாட்டம் இல்லை.. இப்பொது அவர் சொல்லுவதை குழப்பத்தோடு பார்த்திருக்க..
“அத்தை ! அதுக்கும் நிறைய செலவாகுமே?” என்று அவர் கவலையாக கேட்க,
“அதெல்லாம் இவ மார்க் வச்சு நான் பேசிட்டேன், மேனேஜ்மென்ட் சீட்டாக இருந்தாலும் பீஸ் மட்டும் கவர்ன்மெண்ட் வாங்கற காசே வாங்கிக்க சொல்லி இருக்கேன்.. இப்ப தான் அவனுங்க காலேஜ் திறந்து இருக்காங்க…அதனால நம்ப சொல்றதை கேப்பானுங்க… அது மட்டுமில்லாம வருஷத்துக்கு பத்தாயிரம் நான் தரேன்…” என்று அவர் பெருமையை சொல்ல,
அந்த பெருமை எப்படி என்பதை தான் ரதி நேரில் பார்த்தவளாயிற்றே!!!
“இப்ப ஒரு முறை நேர்ல இவளை கூட்டிட்டு போய் அவங்ககிட்ட பேசிட்டு வரலாம்னு தான் உங்களை வர சொன்னேன்…” என்று கமலம்மாள் சொல்ல,
“சரியத்தை! போகலாம்… நீங்க இந்த அளவிற்கு எங்களுக்காக செய்ததே ரொம்ப சந்தோஷம்… “என்று மகிழ்வோடு தந்தை சொன்னதும், எனக்கு இன்ஜினியரிங்லாம் வேணாம் பாட்டி என்று சொல்ல வாயெடுத்தவள் தந்தையின் பதிலில் அமைதியாகி விட்டாள்.
“அம்மும்மா ! போகலாமா…”
தன் விருப்பு வெறுப்புகளுக்கு முன் தந்தையின் சந்தோஷம் முக்கியமாகப் பட, “சரிப்பா! போகலாம்! என்று அவள் சிறு சிரிப்போடு சொல்ல, தந்தையும் மகளும் கமலம்மாவோடு சென்றனர்.
அங்கு சென்று பேசி எல்லாம் முடிவு செய்து ராஜதுரை அப்படியே கடைக்கு செல்ல ரதி வீட்டிற்கு வந்தாள்.
செல்லும் வழியில் பாட்டி அவளின் தந்தையை நடத்திய விதத்தை நினைத்து வருந்தினாள். ஏதோ அவரிடம் அடிமையாக இருக்கும் ஆட்களை ஏவுவது போல இருந்தது.
அவரும் முகம் சுளிக்காமல் அத்தை தானே என்று அவர் சொன்னதையெல்லாம் செய்தார்.வயதில் பெரியவர்களுக்கு, உறவுகளுக்கு செய்யலாம் ஆனால் இது போல நடத்துவதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அதிலும் அந்த காலேஜ் அதிகாரிகளிடம் பேசும் போது ,“ இவன் என் அண்ணன் பையன் தான்! பெருசா படிக்கல… புடைவை கடையில தான் வேலை செய்யறான்… ஏதோ இந்த பொண்ணு மார்க் எடுத்து இருக்கு அதான் அந்த சீட்டை இவளுக்கு கொடுக்கலாம்னு…” என்று வெகு அலட்சியமாக தந்தையை மட்டம் தட்டி , அவர் தான் எங்களை வாழ வைப்பது போல பேசுவதை எல்லாம் கேட்க கேட்க அவளுக்கு வெறுமை அதிகமானது.
ஆனால் தந்தையை மீறி அவளால் ஏதும் செய்ய முடியாதே… தனக்காக தானே அவரும் எல்லாம் பொறுத்துக் கொள்கிறார். நினைக்க நினைக்க அவளின் ஆதங்கம் அதிகமானது.
வீட்டிற்கு வந்தவளிடம் சாந்தி கேள்வி கேட்க, ஏதும் பெரியதாக சொல்லிக் கொள்ளாமல் படிப்பை மட்டும் பற்றி பேசினாள்.
“விஜி வேற வந்து உன்னை கேட்டுட்டு போனா அம்மு!’ என்று அவர் சொல்ல ,
“சரிம்மா ! நான் போய் அவளை பார்த்து சொல்லிட்டு வந்துடறேன்” என கிளம்பினாள்.
விஜியிடம் எல்லாவற்றையும் சொல்லி புலம்பி தீர்த்து விட்டாள்.
“அப்பாகிட்ட சொல்றதுதான ரதி“,என்று விஜி கேட்க,
“அங்க எனக்கு பேச சந்தர்ப்பமே கிடைக்கல, நைட் வீட்டுக்கு வந்த அப்புறம் பேசி பார்க்கலாம்னு இருக்கேன்.” என ரதி சொல்ல,
“ம்ம்ம் சரி !”
“ நீ எனக்காக வெயிட் பண்ணாத காலேஜ்ல அட்மிஷன் போட்டு ஜாயின் பண்ணிடு … நான் என்னனு பார்த்து உனக்கு சொல்றேன்…சரி நான் கிளம்பறேன். ” என்று கிளம்பி விட்டாள்.
[the_ad id=”6605″]
இரவு ராஜதுரை வந்ததும் அவரிடம் பேசலாம் என்று காத்திருந்தவள் அவர் வரும் போதே ஸ்வீட் , சாக்லேட்டுடன் சந்தோஷமாக வருவதைக் கண்டு, இந்த சந்தோஷத்தைக் கலைக்கணுமா என்று தடுமாறினாள்.
“என்னங்க! என்ன விஷேஷம்? ஸ்வீட்லாம் வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என்று சாந்தி ஒன்றுமறியாதவராய் கேட்க ,
“ஏன்னு உனக்கு தெரியாதா? என்னையும் என் பொண்ணையும் வம்பிழுக்கலனா உனக்கு தூக்கம் வராதே?”
“ஆஹான்! சரி சொல்லுங்க ! என்ன விசேஷம்னு” என்று அவர் விடாப்பிடியாக வம்பிழுக்க,
“ஹே ! என் பொண்ணு இன்ஜினியரிங் படிக்க போறா… எவ்வளவு பெரிய படிப்பு, அதெல்லாம் படிச்சா வெளிநாட்டுக்குலாம் போவாங்கலாமே கடையில சொன்னாங்க…அவ டாக்டர்க்கு படிக்க முடியலைன்னு ரொம்ப கவலைப்பட்டேன் அதான் கடவுளா பார்த்து இப்படி ஒரு வாய்ப்பை நம்பளை தேடிக் கொண்டு வந்து கொடுத்திருக்காரு… நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்…” என்று அவர் புன்னகையோடு பேசிக் கொண்டிருக்க, ரதியோ அவர் சந்தோஷத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“இன்னும் உங்க பொண்ணு காலேஜ்க்கே போகலை அதுக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா…?” என்று சாந்தி நக்கலடிக்க,
“ஏன் நம்ப பொண்ணு இன்ஜினியரிங் படிக்கறதுல உனக்கு சந்தோஷமா இல்லையா என்ன? என்னடா அம்மு அப்படித்தானே..” என்று ராஜதுரை கேட்க,
“அதானே கேளுங்கப்பா”, என்று அவளும் அதில் இணைந்தாள்.
“ஏன் இல்லாமல், உங்க குடும்பத்திலும் சரி எங்க குடும்பத்திலும் சரி யாரும் இந்த அளவுக்கு படிச்சது இல்லையே.. இவ்வளவு ஏன் இரண்டு குடும்பத்திலும் இருக்க பொம்பளை பிள்ளைங்கள்ல யாரு முதல்ல காலேஜ் வரைக்கும் படிக்க போய் இருக்காங்க? எல்லாமே நம்ப அம்மு தானே போய் படிக்க போறா…” என்று சாந்தி சந்தோஷத்தில் அலுத்துக்கொள்ள,
இருவரும் பேசுவதைக் கேட்டவள் தன் முடிவை மாற்றிக் கொண்டு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு இந்த படிப்பே நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போய் இவங்க இரண்டு பேரையும் நல்லா பார்த்துக்கணும் என்று முடிவெடுத்தவள் அவர்களின் மகிழ்ச்சியில் சேர்ந்து கொண்டாள்.
அவள் கல்லூரி செல்லும் முதல் நாளன்று மூவரும் குடும்பமாக கோவில் சென்று அதன் பின் ரதியை கல்லூரி கூட்டி சென்றனர். தங்கள் பெண் இத்தனை பெரிய இடத்திலா படிக்க போறா? என்று இடத்தைப் பார்த்து பிரம்மித்து போயினர்.
ஆனால் அவர்களுக்கு தெரியவில்லை இந்த பெரிய போலி பூச்சுகள் எல்லாம் நெடுங்காலம் நிலைக்காதென்று… அவர்களைச் சுற்றியுள்ள மாயவலையின் முதல் பின்னல் தான் இந்த படிப்பு என்பதை உணரவும் நேரம் வருமோ…
இப்போதும், தான் ஒரு வார்த்தை வேண்டாம் என்று சொன்னால் அதை அவர் மறுக்க போவதில்லை ஆனால் அவரிடம் மறுக்கும் அளவுக்கு அவளிடம் தைரியம் இல்லை. ஆனால் மறுத்திருக்கலாமோ என்று பின்னாடி வருந்த போவதை அவள் அறியவில்லை.
என் கனவு!
என் சந்தோஷம்!
எனது ஆசையை விட!
என் பெற்றோரின் புன்னகை எனக்கு விலைமதிப்பில்லாதது…!