காதல் 15:
வருணின் பின்னாடியே வந்த சாதனா…
“என் கூட பேச மாட்டியா கிருஷ்ணா..?” என்றால் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு.
“கௌசி நான் இங்க இருக்கவா இல்லை கிளம்பிப் போகவா..?” என்றான் பட்டென்று.
“இல்லையில்லை..! நான் ஒன்னும் பேசலை. நீ இங்கயே இரு..!” என்று வேகவேகமாக சொன்ன சாதனா, பட்டென்று உள்ளே சென்று விட,
“கொஞ்சம் நிதானமாத்தான் பேசேன் வருண். பாரு, அவ முகம் எப்படி செத்துப் போச்சுன்னு..!” என்றால் கௌசி.
“அவ செஞ்ச காரியத்துக்கு என்கிட்டே இருந்து நிதானத்தை எதிர்பார்க்குறிங்க..? எதுவுமே உடனே மாறிடாது..!” என்றான்.
“அது உண்மைதான்..! நட்பும் கூட உடனே மாறிடாது. அது நியாபகத்துல இருந்தா சரித்தான்..!” என்றான் கார்த்தியும்.
“இப்ப அவன் வந்த உடனே இதையெல்லாம் பேசி ஆகணுமா..? இன்னும் அவங்க யாரும் சாப்பிடவே இல்லை. முதல்ல சாப்பாட்டைப் போடுங்க..!” என்று மோகனா வெடுக்கென்று சொல்ல, இது தான் சமயம் என்று அங்கிருந்து நழுவினான் வருண்.
“வருண் நீயும் மாமாவும் ஒரு ரூமை எடுத்துக்கோங்க. நாங்க இன்னொரு ரூம்ல தங்கிக்கிறோம்..!” என்று கௌசல்யா சொல்ல,
“தங்கிக்கிறோம் அப்படின்னா..?” என்று மோகனா சந்தேகமாக கேட்க,
“அந்த பொண்ணு சக்தியையும் சேர்த்து சொன்னேன்..!” என்றால் கௌசி.
“இங்க பாரு வருணு. நீங்க சொல்றது எல்லாம் சரித்தான். ஆனா, ஒரு கல்யாணம் ஆகாத பிள்ளைய எப்படி நம்ப வீட்ல தங்க வைக்க முடியும். இதைச் சொன்னா கூட என்னைத்தான் வில்லியைப் பார்த்த மாதிரிப் பார்ப்பிங்க. நான் சொல்றதை சொல்லிட்டேன். அவங்க குடும்பத்து ஆளுங்க யாருன்னு விசாரிச்சு, அவங்க கிட்ட இந்த பொண்ணை ஒப்படைக்கிற வழியைப் பாரு..!” என்றார் மோகனாம்பாள்.
அவர் சொன்ன விதம் விகாரமாய் இருந்தாலும், சொன்ன விஷயம் சரியென்றே பட்டது வருணுக்கு.
‘அவளை எத்தனை நாள் தங்களோடு வைத்திருக்க முடியும். அது மட்டும் இல்லாமல், அவள் குடும்பத்தோடு அவளை அனுப்பி வச்சா, பாதுகாப்பா இருப்பா. இல்லைன்னா இப்படி எவன் கிட்டயாவது சிக்கி, அதுக்கு நான் தேடித் போயி, வேற வேலை வெட்டி இல்லையா எனக்கு..?’ என்று தனக்குத் தானே மனதிற்குள் பேசிக் கொண்டான் வருண்.
“நீங்க சொல்றதும் சரிதான் அத்தை. அப்படியே பண்றேன்..!” என்று வருண் சொல்ல, மோகனாவிற்கு பெருமை பிடிபடவில்லை.
“என்ன இருந்தாலும் நம்ம வருணு என் பேச்சை மதிக்கிறான் நித்தியா, உங்களை மாதிரி இல்லை..!” என்று பெருமை பேச,
“உங்கம்மாவுக்கு, குவார்ட்ரஸ்ல அவன் கிட்ட வாங்குன பேச்சு மறந்து போய்டுச்சு போல..?” என்ற கௌசி சத்தமில்லாமல் சொல்லி சிரிக்க, அவளின் வாயசைவை வைத்தே, அவள் என்ன சொல்லியிருப்பாள் என்பதை புரிந்து கொண்ட வருணும் நமட்டு சிரிப்பு சிரித்தான்.
குளித்து விட்டு வந்த சக்திக்கு குளிர் வாட்டி எடுக்க, மீண்டும் வருணுடைய ஜெர்க்கினையே அணிந்து கொண்டாள். அதை அணிந்தவுடன் ஏனோ வருண் அவளுடன் இருப்பதைப் போன்ற உணர்வு அவளுக்கு. அந்த குளிருக்கு, அவள் முகம் மேலும் சிவந்து தெரிய, இப்போது பளிச்சென்று மின்னினாள்.
அங்கே சாதனா சோகமாய் அமர்ந்திருக்க, அவளிடம் எப்படிப் பேசுவது என்று யோசித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பற்றி சக்திக்கு அவ்வளவாக தெரியாதே.
சக்தி யோசனையுடன் நிற்பதைப் பார்த்த சாதனா,
“என்ன சக்தி அப்படிப் பார்க்குற..? டிரஸ் எல்லாம் சரியா இருக்கா..?” என்று எதார்த்தமாய் பேச்சை வளர்த்தாள் சாதனா.
“சரியா இருக்குங்க..!” என்றால் சக்தி, தயங்கியபடி.
“இவ்வளவு தயக்கம் தேவையில்லை. நானும் வருணுக்கு ஒரு அக்காதான். ரொம்ப வித்யாசம் எல்லாம் இல்லை. ஜஸ்ட் ஒன் இயர் தான்.கௌசி கிட்ட எப்படி பேசுவியோ அப்படியே பேசு சக்தி..!” என்றால் சாதனா.
‘கௌசியா..? அவங்க கிட்ட நான் எங்க பேசிப் பழகுனேன்..?’ என்ற சக்தி, அதை வாய் விட்டும் சொல்ல,
“அப்ப சரி..! வேணுமின்னா கிருஷ்ணாகிட்ட எப்படி பேசுவியோ அப்படியே பேசு..!” என்று அவளை ஆழம் பார்த்தாள் சாதனா.
“சுத்தம் அவன் கிட்ட எங்க நான் பேசிப் பழகுனேன். மிஸ்டர் காவல்துறை எப்பவும் கஞ்சி போட்ட மாதிரி இருப்பாரே..? அவர்கிட்ட எங்க இருந்து பேச..?” என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க,
“என்ன சக்தி..? யோசனை எல்லாம் பலமா இருக்கு. என்கிட்டே சொல்லலாம்னா சொல்லு..! நான் உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்றேன்..!” என்றாள்.
“லவ்வா..????” என்று சக்தி அதிர்ந்து விழிக்க,
“ம்ம்..! நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றிங்க தானே..?” என்றாள் நமட்டு சிரிப்புடன்.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லைங்க. நீங்க வேற எதையாவது புதுசா கிளப்பாதிங்க..!” என்ற சக்திக்கு பதட்டத்தில் முகத்தில் வியர்வை அரும்புகள் பூக்க,
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு உனக்கு இப்படி வேர்க்குது. உண்மையை சொன்னா சிலருக்கு படபடன்னு வருமாம். சொல்லு, நீ வருணை லவ் பன்றதான?” என்று சாதனா விடாப் பிடியாக கேட்க, நொந்து போனாள் சக்தி.
“சொல்லு சக்தி..!”
“காதல் அப்படின்ற வார்த்தைக்கு எல்லாம் எனக்கு அதிர்ஷ்ட்டம் இருக்கான்னு தெரியலை. ஆனா..” என்று அவள் இழுக்க,
“சொல்லு, ஆனா..” என்று சாதனா எடுத்துக் கொடுக்க, சக்தி வாயைத் திறக்கும் நேரம் அங்கே வந்தான் வருண்.
“சக்தி எல்லாம் ஓகேவா..?” என்றான் அவளையே பார்த்தபடி.
வருணையே பார்த்தவள், ’ஆம்..’ என்பதைப் போல் தலையை ஆட்ட, இவர்களின் நாடகத்தை பார்க்காததைப் போல் பார்த்து வைத்தாள் சாதனா.
வருணின் கண்களில் சக்தியின் மீதான அக்கறையைக் காட்டிலும் ஒரு உரிமை உணர்வு தெரிவதை சாதனா கண்டு கொண்டாள்.
“என்ன ரெண்டு பேரும் தெரிஞ்சே கண்ணாமூச்சி விளையாடுறாங்களா..?” என்று சாதனா யோசிக்க,
“சரி வா சாப்பிடலாம்..!” என்ற வருண் முன்னே செல்ல, சாதனாவிற்கு ஒரு மாதிரி ஆனது.
“நானும் தான் இன்னும் சாப்பிடலை. ஆனா, இவனுக்கு என்னை கண்ணுத் தெரியலை போல..?” என்றவளுக்கு ஏதோ நெஞ்சை அடைத்தது. அதே நேரத்திற்கு வந்தான் கார்த்தி.
“வா, சாப்பிடலாம்..!” என்று அழைக்க, அவளால் நம்பவே முடியவில்லை. கார்த்தி தானாக வந்து அவளிடம் பேசினானா..? என்று ஆச்சர்யப்பட்டவள், மனம் முழுவதும் மகிழ்ச்சியுடன் அவன் பின்னே சென்றாள். இவை அனைத்தும் வருணின் பார்வையில் இருந்து கொஞ்சமும் தப்பவில்லை. அவன் மண்டைக்குள் அலாரம் அடித்துக் கொண்டே இருந்தது. ஏதோ சரியில்லை என்று. அதே சமயம் கார்த்தி, சாதனாவை எங்கும் விட்டுக் கொடுக்கவில்லை. அதையும் குறித்துக் கொண்டான் வருண் கிருஷ்ணா.
வருண் சாப்பிட்டு முடிக்க, சக்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவன்,
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும் சக்தி. சாப்பிட்டு முடிச்சுட்டு வா..!” என்றபடி எழுந்து சென்றான்.
சாப்பிட்டுக் கொண்டிருந்தவளுக்கு திக்கென்று ஆகி, புரை ஏறியது.
“பார்த்து சாப்பிடுமா..! தண்ணியைக் குடி..!” என்று நித்யா சொல்ல,
“மிஸ்டர் காவல்துறை எதுக்கு கூப்பிடுறாரு..? மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிப்பாரோ..?” என்று மனதிற்குள் என்ன,
“இப்ப மட்டும் அவன் ஏதாவது கேட்டான்னா, எல்லா உண்மையும் சொல்லிடு. இதுக்கு மேலயும் இப்படியே இருந்தா உன்னை யாராலையும் காப்பாத்த முடியாது. அவன் இருக்குறப்போ உனக்கு என்ன கவலை..?” என்று மனசாட்சி அவளை அதட்டியது.சக்தியும் ஒரு முடிவுடன் சாப்பிட்டு விட்டு சென்றாள்.
“கௌசிக்கா..! கன்பார்ம்மா இது லவ்வுதான்..!” என்றாள் சாது நமட்டு சிரிப்புடன்.
“அப்படியே தனியா கூட்டிட்டு போய் அவன் பேசுற காதல் மொழியில, அந்த பொண்ணு அப்படியே மயங்கி, எப்ப மாமா கல்யாணத்தை வச்சுக்கலாம்ன்னு கேட்கப் போகுது…? அதை நீங்க பார்க்க போறீங்க..? அடிப் போங்கடி..!” என்றான் முரளி.
“அப்படியா மாமா..?” என்று சாதனா கேட்க,
“கிழிஞ்சுடும்..! அவன் என்ன பேசுவான்னு எனக்கும் கார்த்திக்கும் நல்லாவே தெரியும்..! இல்லையா கார்த்தி..” என்றான் முரளி.
“ஆமா, ஆமா..!” என்று அவன் ஆமாம் சாமி போட,
“என்ன பேசுவான்..?” என்றாள் கௌசி ஆர்வமாக.
“இங்க பாரு..! உன்னை கடத்துனவன் இவன் மட்டும் தானா..? வேற யாரும் இருக்காங்களா..? எதுக்கு உன்னை கிட்னாப் பண்ணாங்க..? ஏன் பண்ணாங்க…? எங்க பண்ணாங்க..? இப்படி விசாரணைக் கைதியை விசாரிக்கிற மாதிரி, பேசியே கொள்ளப் போறாண்டி..!” என்று முரளி சிரிக்காமல் சொல்ல, அதைக் கேட்ட கார்த்திக்கு அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்தது.
“என் தம்பி ஒன்னும் அப்படியெல்லாம் கிடையாது…” என்று கௌசி பிகு பண்ண,
“இன்னுமாடா இந்த உலகம் அவனை நம்புது..! நவரசத்துல எது நல்ல ரசம்ன்னு கேட்டா, எங்கம்மா வைக்கிற புளிரசம்ன்னு சொல்றவண்டி உன் தம்பி…! அவனை ஆராய்ச்சி பண்றதை விட்டுட்டு, போய் வேலை வெட்டியைப் பாருங்க..!” என்று முரளி சொல்ல,
“உங்களை வச்சுக்கறேன்..!” என்று முறைத்து விட்டு சென்றாள் கௌசி.
“உண்மையை என்னிக்குடா நீங்க நம்பியிருக்கிங்க…? அதெப்படி சாதனா உங்க வீட்ல எல்லாரும் ஒரேமாதிரி அரை மெண்டலா இருக்கீங்க…?” என்று முரளி கேட்க,
“கௌசிக்கா..!” என்று அக்காவை அழைத்தாள் சாதனா.
“அம்மா தாயே..! இன்னைக்கு இது போதும், ஆளை விடு. டேய் கார்த்தி..! உன் பொண்டாட்டி வாயைக் கொஞ்சம் மூடுடா..!” என்றபடி ஜகா வாங்கினான் முரளி.
முரளி அங்கிருந்து நகன்றவுடன் இருவர் மத்தியிலும் மவுனம். சாதனா குனிந்த தலை நிமிராமல் சாப்பிட, அவளை யோசனையுடன் பார்த்தான் கார்த்தி. இன்னும் சகஜமாய் பேசுவதற்கு அவன் பழகவில்லை.
வருனுடனேயே இருந்ததாலோ என்னவோ, கல்யாணத்திற்கு முன்பு, ஒரு தடவை கூட சாதனாவை அவன் அக்கா என்று அழைத்ததில்லை. வருண் அப்படி கூப்பிடாததால், கார்த்தியும் கூப்பிட மாட்டான். வருணைப் போலவே கார்த்திக்கும் இவள் சாது தான். அவளும் ஒரு தடவை கூட இவனை தம்பி என்றெல்லாம் அழைத்ததில்லை. எப்போது போல்..’டேய் கார்த்தி..’ தான்.
சாதனாவைப் பார்த்தாலே தலையை குனிந்து கொள்ளும் கார்த்தி, இப்போதெல்லாம் நிறுத்தி நிதானமாகப் பார்க்கிறான். தாய்மையின் பூரிப்பில் அவள் இன்னமும் அழகாய் தெரிய, அதை வெளிக்காட்ட வழி தெரியாமல் தவித்துப் போனான்.
அங்கே லெனின் காணாமல் போன விஷயமும், அறையில் சக்தி இல்லாத விஷயமும் தேவனுக்கு தெரிந்து விட்டிருந்தது.
“என்னடா சொல்றிங்க..?” என்று கோபத்தில் குதித்தான் தேவன்.
“நாங்க போய் பார்த்தப்ப, யாரும் இல்லண்ணே..! கயிறு எல்லாம் தரையில கிடந்துச்சு..!” என்றான் ஒருவன்.
“இல்லடா..! எங்கயோ, என்னவோ தப்பு நடந்திருக்கு. லெனின் யார் கையிலையும் சிக்கியிருக்க மாட்டான்..!” என்று கோபத்தில் புலம்ப,
“அண்ணா..! போலீஸ் ஸ்டேஷன்லையும் நம்ம ஆளை வச்சு விசாரிச்சாச்சு. லெனின்னு யாரையும் அரஸ்ட் பண்ணலைன்னு சொல்றாங்களாம்..!” என்றான் மற்றொருவன்.
“ரூம்லையும் இல்லை, போலீசும் அரஸ்ட் பண்ணலைன்னா, அப்பறம் எங்க தான் போனான் அவன்..?” என்று தேவன் எறிந்து விழுந்தான்.
“தெரியலைண்ணே..!”
“இதுக்குத்தான் உங்களை வச்சிருக்கிறதா..? இதுக்குத்தான் அவளைப் பார்த்த உடனே போட்டுத் தள்ளுங்கன்னு சொன்னேன். இப்போ, இங்க வரைக்கும் கடத்திட்டு வந்து, இவ்வளவு பிரச்சனை தேவையா..? எல்லாம் லெனினால வந்தது. இப்ப அவனை நான் எங்கன்னு போய் தேடுவேன். அவன் போலீஸ் கைல மாட்டாம இருக்குற வரைக்கும் தான் நம்ம சேப்டி..” என்று நடந்து கொண்டே யோசித்தவன்,
“அந்த வருண் பய கீழ இறங்கிட்டானா..? இல்ல இன்னும் கொடைக்கானல்ல தான் சுத்திட்டு இருக்கானா..?” என்றான் தேவன் சந்தேகத்துடன்.
“ஆளு எங்க இருக்கான்னு தெரியலைண்ணே..! போலீஸ் ஸ்டேஷன் போயிருக்கான். அதுக்கு அப்பறம் எங்க போனான்னு தகவல் இல்லைண்ணே..!” என்றான் ஒருவன்.
“விளங்கிடும்..! இப்படி தகவல் சொல்லத்தான் உங்களை வச்சிருக்கேன் பாரு. எனக்கு லெனினும், அந்த சக்தியும் உயிரோட வேணும். முக்கியமா லெனினுக்கு எதுவும் ஆகக் கூடாது..!” என்றான் தேவன்.
“விடுங்கண்ணே..! நாங்க பார்த்துக்கறோம்..!” என்று அவர்கள் செல்ல, தேவனுக்கு மனதின் ஓரத்தில் சற்று பயம் வந்து போனது. இதுவரை வெளியே காட்டிக் கொண்டிருக்கும் நல்லவன் வேஷம் கலைந்து விடுமோ என்ற என்ற காரணத்தினால் வந்த பயம் தான் அது.
தேவனை யாரென்று தெரியாமலேயே அவனை வருண் நெருங்குகிறான் என்று தெரிந்து தான், அவனை இங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்ற வைத்தது. ஆனால், வருண் செல்வதற்குள் தன்னுடைய கதையை முடிக்காமல் போக மாட்டான் போல..! என்பதும் தேவனின் பயத்திற்கு ஒரு காரணம்.
இங்கே ஒருவனின் கோபத்தை அதிகப் படுத்தியது தெரியாத வருண் அங்கே சக்தியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
“அடுத்து என்ன செய்யப் போறதா உத்தேசம்..?” என்றான் வருண்.
“புரியலை சார்..!” என்றால் சக்தி.
“உனக்கு எதுதான் உடனே விளங்கியிருக்கு..? அடுத்து என்ன செய்யப் போறன்னு கேட்டேன். இல்லைன்னா, இன்னும் எவனாவது கடத்த வருவான்.. நான் பின்னாடியே வரணும். எனக்கு வேற வேலை இல்லைன்னு நினைச்சியா..?” என்றான்.
அவன் பேச்சில் சக்திக்கு சுள்ளென்று கோபம் வந்தது.
‘என்னவோ நானே போய், அவனுங்ககிட்ட, என்னைக் கடத்துங்க..!கடத்துங்கன்னு சொன்ன மாதிரி பேசுறான்..!’ என்று மனதிற்குள் நினைத்த சக்தி, அதை வெளியில் சொல்லவில்லை.
“இப்படி கம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்..?” என்றான்.
“கம்முன்னு இருக்கேன்னு தான் அர்த்தம்..!” என்றவள், அவன் முறைப்பதைப் பார்த்து பட்டென்று வாயை மூடிக் கொண்டாள்.
“அந்த லெனின், உங்க அண்ணிக்கு தெரிஞ்சவன்னு உனக்கு முன்னாடியே தெரியுமா..?” என்றான்.
“தெரியும்..!” என்றாள்.
வருணின் முகம் கோபத்தை குத்தகைக்கு எடுக்க, அதைப் பார்த்த சக்தி பதறினாள்.
“தெரிஞ்சவன் அப்படின்னு தான் தெரியும். தப்பான முறையில் தெரிஞ்சவன்னு எனக்கு சத்தியமா தெரியாது. எனக்கு மட்டும் இல்ல, சிவாண்ணாக்கும் தெரியாது..!” என்று சொன்னவள், சிவாவின் நினைப்பில் கண் கலங்கினாள்.
அவளின் வேதனையை அவள் முகத்தை வைத்தே உணர்ந்து கொண்டான் வருண்.
“என்னதான் அழுது புரண்டாலும், மாண்டார் மீள்வதில்லை..! அப்படின்னு சொல்லுவாங்க..! அடுத்து என்ன செய்றதுன்னு மட்டும் தான் யோசிக்கணும்..!” என்றான் சுவரைப் பார்த்துக் கொண்டு.
“மிஸ்டர் காவல்துறை எனக்கு அட்வைஸ் பண்றாரா..? இல்லை சுவத்துக்குப் பண்றாரா..?” என்று அவள் யோசிக்க,
“சந்தேகமே வேண்டாம்..! உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்..!” என்றான்.
“இதெல்லாம் தெளிவா தெரிஞ்சுடும். என்ன தெரியனுமோ அது மட்டும் சுத்தமா தெரியாது..!” என்று அவன் நினைக்க,
“எனக்குத் தெரியாதுன்னு நீங்களா முடிவு பண்ணிட்டா எப்படி மேடம்..?” என்றான், நக்கல் குரலில்.
“நான் ஒன்னும் நினைக்கலையே..?” என்றாள்.
“நானும் ஒன்னும் சொல்லலியே..?” என்றான் வருண் பதிலுக்கு.
அடுத்த சில நிமிடங்கள் இருவரும் பேசவில்லை. அமைதி மட்டுமே அங்கு ஆட்சி செய்தது. வருண் யோசனையில் இருந்தான். சக்தி அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அவள் பார்ப்பது தெரிந்தும், யோசனையில் மட்டும் இருப்பவனைப் போல காட்டிக் கொண்டான் வருண்.
இவர்களின் பேச்சு வார்த்தையை வெளியில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த நால்வரும் வெறுத்துப் போயினர்.
“கேட்டுக்கம்மா சாது..! உங்கண்ணன் பேசுற காதல் வார்த்தைகளை நல்லா கேட்டுக்க..?” என்று முரளி சிரித்தபடி சொல்ல, அவளுக்கும் சப்பென்று ஆனது.
“நான் இதை எதிர்பார்க்கலை. ஆனா, ரெண்டு பேரும் கன்பார்மா லவ் பண்றாங்க..!” என்றான் சாதனா உறுதியா.
“ஐயோ..! அது எங்களுக்கும் தெரியுமே..? அவங்க ரெண்டு பேரைத் தவிர்த்து நமக்கும் தெரியும், படிக்கிறவங்களுக்கும் தெரியும். ஆனா, அதுங்களுக்குத் தான தெரியனும்..!” என்றான் முரளி.
“அதுவும் சரிதான்..!” என்றாள் சாதனா.
“என்ன சரி…? இப்படி ஒட்டுக் கேட்குறது எல்லாம் தப்பு..! நடையைக் கட்டுங்க முதல்ல..!” என்றான் கார்த்தி.
“பாரேன் இவனை..! கேட்கிறதை எல்லாம் கேட்டுட்டு, இப்போ திடீர்ன்னு நல்லவனாட்டம் பேசுறான்..!” என்று முரளி சொல்ல,
“நான் ஆரம்பத்துல இருந்தே நல்லவன் தாண்டா..! நம்புங்கடா என்னய்யா..?” என்று கார்த்தி சொன்ன விதத்தில் அனைவரும் சிரிப்புடன் அங்கிருந்து நகன்றனர்.
“இன்னும் அங்க தனியா என்ன பேச்சு வேண்டி கிடக்கு..?” என்று மோகனா ஆரம்பிக்க,
“அக்கா..! பேசாம நீ போய் தூங்குக்கா..! அவன் ஏதாவது முக்கியமா பேசிட்டு இருப்பான்..!” என்று சத்யமூர்த்தி சொல்ல,
“நான் சொல்லலை..!” என்றான் முரளி, கௌசியிடம்.
“என்னன்னு..?”
“ம்ம்..! உங்க குடும்பமே லூசுன்னு..!” என்று சொன்ன முரளி, கௌசியின் முகம் மாறுவதற்குள் அங்கிருந்து சென்றான்.
“இப்படி எல்லாரும் ஒரே குடும்பமா இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்..?” என்றார் நித்யா.
“அப்படித்தான இருக்கோம்..!” என்றார் மோகனா.
“இல்லை..! இங்கயே எத்தனை நாள் இருக்க முடியும். சாதுவையும் நம்ம கூட கூட்டிட்டு போய்டலாமா..? வருண் எப்படியும் சென்னை வந்துடுவான். கார்த்திக்கும் டிரான்ஸ்பர் கேட்டா உடனே கிடைச்சுடுமாம்…!” என்று நித்யா சொல்ல, யோசனைக்குப் போனார் மூர்த்தி.
“அதெல்லாம் சரி வராது நித்யா..?” என்றார் மோகனாம்பாள்.
“ஏன் அண்ணி அப்படி சொல்றிங்க..?” என்று கேட்ட நித்யாவின் குரலில் கொஞ்சம் எரிச்சலும் கலந்திருந்தது.
“வருண் இதுக்கு சம்மதிப்பான்னு எனக்குத் தோணலை..!” என்றார் மோகனா.
“அதெல்லாம் என் பையன் சம்மதிப்பான். நீங்க பேசாம இருந்தாலே போதும்..!” என்று நித்யா பட்டென்று சொல்லி விட்டார்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி பட்டுன்னு பேசுற நித்யா. அவ செஞ்ச தப்பை மறந்த உடனே, நான் பேசுறது எல்லாம் உங்களுக்குத் தப்பாத்தான் தெரியும். என்னமோ செய்ங்க…!” என்ற மோகனாவின் முகத்தைப் பார்த்த நித்யாவிற்கு ஒரு மாதிரியாகிப் போனது.
“நான் மனசுல எதுவும் வச்சுகிட்டு பேசலை அண்ணி..!” என்றார் நித்யா.
அதற்குள் மோகனா அறைக்குள் சென்றிருந்தார். இவர்கள் அனைவரையும் விட சாதனா மேல் அதிகப் பாசம் கொண்டிருந்தவர் மோகனா. அவரால் இன்னமும் அவளை மன்னிக்க முடியவில்லை என்பது மட்டுமே காரணம். இல்லை என்றால் அவள் வீட்டிற்கு வந்திருப்பாரா என்ன..?
இதையெல்லாம் தெளிவாக புரிந்து கொண்டவர் சத்யமூர்த்தி மட்டுமே.
“விடு நித்யா..! எல்லாரும் ஒரே நேரத்துல மனசு மாற முடியுமா என்ன..? ஒவ்வொருத்தருக்கும் நேரம் பிடிக்கும். யாரையும் கட்டாயப்படுத்தாம இருந்தாலே, எல்லாம் தன்னால நடக்கும்..!” என்றார்.
இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த சாதனாவிற்கு அப்போது தான் குற்ற உணர்ச்சி மேலும் அதிகமானது. எவ்வளவு அன்பையும் தொலைத்து விட்டு வந்திருக்கிறேன்..? என்று மனம் மறுகிப் போனாள்.
“இப்ப கவலைப் பட்டு ஒரு பிரயோஜனமும் இல்ல. அப்ப, நான் தான் அவ்வளவு சொன்னேனே..? யாரோட பேச்சும் மண்டைக்கு ஏறாம இருந்தா, பின்னாடி இப்படித்தான் கவலைப் படனும்..!” என்றான் கார்த்தி.
“போதும் கார்த்தி..! நீயும் எத்தனை தடவை தான் குத்திக் குத்திக் காட்டுவ..? உனக்கு கஷ்ட்டமா இருந்தா இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகலை. நான் டைவர்ஸ் தரேன்.. நீ வேற கல்யாணம் பண்ணிக்கோ..!” என்று சாதனா வார்த்தையை விட,
கைகளை இறுக மூடிக் கொண்டான் கார்த்தி. அவனும் என்னதான் செய்வான் பாவம்.
“அடிச்சேன்னா பல்லு பதினாறும் கொட்டிடும். நீ வான்னா வரதுக்கும், போன்னா போறதுக்கும் நான் என்ன உன் வீட்டு நாயா…? ஜாக்கிரதை..!” என்று சொல்ல,
அரண்டு விட்டாள் சாதனா. அவளுக்குத் தெரிந்து கார்த்தி இவ்வளவு கோபப் பட்டது இதுவே முதல் முறை.
அவளுக்கு மனஉளைச்சல் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில் தோன்றக் கூடியதுதான் என்றாலும், அவளுக்கு கொஞ்சம் அதிகமாக. வருண் அவளிடம் பேசிவிட்டால் அவளின் பாதி பாரம் குறைந்து விடும் என்று கார்த்திக்கும் நன்றாகத் தெரியும். அவள் கலங்கிய கண்களுடன் நிற்க, அதைப் பார்த்தவனுக்கு மனசு கேட்கவில்லை.
சாதனாவின் அருகில் சென்றவன், அவளை இறுக்கி அனைத்துக் கொண்டான். அவளுக்கு இது தான் பெரிய அதிர்ச்சி. அவனாக அவளை அணைத்தது இது இரண்டாவது முறை. ஏனோ அந்த அணைப்பில் அவள் பாரங்கள் எல்லாம் பனியைப் போல் விலகியதைப் போல உணர்ந்தாள்.
“சாரி கார்த்தி..!” என்று அழ,
“அழாத சாது. இந்த நேரத்துல அழக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க தானே..!” என்றவனுக்கும் அப்படி ஒரு நிம்மதி.
ஏனோ அவள் மீது எவ்வளவு கோபம் இருந்தாலும், தன்னுடைய மனைவி, அன்புக்காகவும் சின்ன ஆறுதலுக்காகவும் வருனைத் தேடி போய், அவனிடம் பேச்சு வாங்குவதைப் பார்க்க முடியவில்லை.அதற்காக வருணையும் அவனால் குறை சொல்ல முடியாது.
“வருணுக்கு கொஞ்சம் டைம் குடு. நம்ம வீடு வரைக்கும் வந்திருக்கானே..! அதுவே பெரிய மாற்றம் தான்..! சீக்கிரம் புரிஞ்சுக்குவான்..!” என்றான் கார்த்தி.
“இவனால் மட்டும் எப்படி இப்படி இருக்க முடியுது. இவ்வளவு பொறுமையும், தன்மையும் எப்படி இருக்கும்..?” என்று அவளுக்கு தினமும் தோன்றும் அதே சந்தேகம், இப்போதும் தோன்றாமல் இல்லை.
“என்னால தான கார்த்தி,வருனுக்கும் உனக்கும் பிரச்சனை..? அதைத்தான் என்னால தாங்கிக்க முடியலை..!” என்றாள்.
“ஒரு விஷயம் செய்றதுக்கு முன்னாடி தான் யோசிக்கணும்..!
செஞ்சதுக்கு அப்பறம் இல்லை.எனக்கு அவனை விட்டா ஒருத்தனும் இல்லை. அவனுக்கும் என்னை விட்டா ஒருத்தனும் இல்லை.ப்ரீயா விடு..!” என்றான்.
அங்கே வருண், சக்தியிடம் இன்னும் பேச்சு வார்த்தையை முடித்த பாடில்லை. அவளின் நிலை தான் பரிதாபம்.