காவல் 8:
வருணின் முகத்தை வைத்து சக்தியால் ஒன்றும் கணிக்க முடியவில்லை. நடந்து முடிந்த சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னமும் அவள் வெளி வரவில்லை. வருண் வேறு கோபமாக இருந்தான். சக்திக்கு மனதிற்குள் குளிர் எடுத்தது.
“வருண் சார்..!” என்றாள் தயங்கியபடி.
“ஸ்டாப் இட்..! இன்னொரு தடவை நீ வாயைத் திறந்து பேசுன..? இன்னொரு வருணை நீ பார்க்க வேண்டி வரும்..?” என்று எரிச்சலுடன் சொல்லிவிட்டு, ஜீப்பை நேராக அவன் வீட்டின் முன்பு நிறுத்தினான்.
“சாவி..!” என்று அவள் சொல்லும் முன்பே, தன் கையில் இருந்த இன்னொரு சாவியால் கதவைத் திறந்தவன், அவளை வலுக்காட்டாயமாக உள்ளே இழுத்து சென்றான்.
அவனின் இறுகிய பிடியில் அவள் கை வலியெடுக்க, அவளுக்கு வலியில் கண்கள் கலங்கிப் போனது.
“சார்..! பிளீஸ்..!” என்று அவள் சொன்னது வருணின் காதில் விழவே இல்லை. அவளை உள்ளே இழுத்து கதவை அடைத்தவன், ஒருநிமிடம் யோசனையுடன் பார்த்து விட்டு, பட்டென்று அவளை இழுத்து அணைத்தான்.
எதிர்பாராத அவனின் அணைப்பில் சக்தி திகைத்துப் போனாள். அவளின் கால்கள் பலமின்றி காற்றில் ஆடுவதைப் போல இருந்தது. அவளால் திமிரக் கூட முடியவில்லை. அவனின் அணைப்பு இன்னமும் இறுகிக் கொண்டே செல்ல, அவளுக்குத் தான் அவஸ்தையாகிப் போனது.
ஒரு நிலைக்குமேல் அவன் வசம் போய்க்கொண்டிருந்த தன் மனதையும், உடலையும் தனதாக்கியவள்,
“விடுங்க சார்..!” என்று தன் பலம் முழுவதையும் திரட்டி, அவனிடம் இருந்து விலகினாள்.
“நீங்க இப்படிப் பண்ணுவிங்கன்னு நான் சத்தியமா நினைச்சுப் பார்க்கலை சார்..!” என்று அவள் கண்ணீருடன் சொல்லிக் கொண்டிருக்க,
அவள் பேசுவதை எல்லாம் அவன் காதில் வாங்கியது போலவே தெரியவில்லை. விரல்கள் மூடியிருந்த அவனுடைய கையைத் திறந்தான். அதில் சக்தி கழுத்தில் அணிந்திருந்த டாலர் செயின் இருந்தது.
“இதை எப்ப கழுத்துல இருந்து எடுத்தான்..!” என்று அவள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க, வருணோ சற்றும் அவளைப் பற்றிய கவலையின்றி, அந்த செயினையே ஆராய்ந்து கொண்டிருந்தான்.
“என்ன சார் பண்றிங்க..?” என்று அவள் செயினைப் பற்றி வாயைத் திறக்கப் போகும் நேரம், அவள் வாயை அடைத்தான்.
“ஏதாவது பேசுன இங்கயே சூட் பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்..!” என்று கோபமாக சொல்ல, அவனின் கோபத்தில் மிரண்டு அமைதியானாள் சக்தி.
அந்த செயின் டாலரை சோதித்துப் பார்க்க, அவன் தேடியது கிடைக்கவில்லை போலும். மேலும் அவனின் முகம் ரௌத்திரமானது. அவளை மீண்டும் யோசனையுடன் பார்க்க, அவள் கையில் இருந்த வாட்சில் சென்று நின்றது அவனின் பார்வை.
வேகமாக அவள் கையைப் பிடித்து இழுக்கப் போக, அதை அறிந்தவள் தன் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டாள். வருணுக்குப் பொறுமை போய் கொண்டிருந்தது.
எரிச்சலுடன் அவள் கையை வலுக்காயமாகப் பிடித்து, அந்த வாட்சைக் கழட்டினான்.
“சார்..! அது என்..!” என்று அவள் அந்த வாக்கியத்தை முடிக்கவில்லை.
“மூச்..!” என்றான்.
‘என்ன இவனுக்கு இவ்வளவு கோபம் வருமா..?இதுக்கே இப்படி கோபப்படுறானே..? உண்மை தெரிஞ்சா?” என்று அவள் மனதிற்குள் கடிகார முட்கள் ஓடத் தொடங்கியிருந்தது.
அவள் கட்டியிருந்த வாட்ச்சை அக்கு வேறாக, ஆணி வேறாக கழட்டி இருந்தான் வருண். அதில் இருந்த ஜிபிஎஸ் டிராக்கர்,மைக் என அவன் ஒவ்வொன்றாய் எடுக்க, அதைப் பார்த்த சக்தியின் கண்கள் வெளியே தெறித்து விழுந்து விடும் அளவிற்கு அதிர்ச்சியைக் காட்டியது.
வருணின் கையில் சிக்கிய சாதனங்கள், சிக்கிய அடுத்த நிமிடமே தன்னுடைய செயலை நிறுத்திக் கொண்டன. அதை நிறுத்தியிருந்தான் வருண். அதை அனைத்தையும் ஓரமாக வைத்தவன், சக்தியை நேருக்கு நேர் பார்க்க, அவன் கண்களை சந்திக்கும் அளவிற்கு அவளிடம் தைரியம் இல்லை போலும். மேலும் அவளே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை.
“இதெல்லாம் என்ன..?” என்றான் அதிகாரக் குரலில்.
“எனக்குத் தெரியாது..!” என்றாள் நடுங்கிக் கொண்டே.
“உனக்குத் தெரியாம அதெப்படி உன்னோட வாட்சுல வரும்..?” என்றான்.
“சார்..! சத்தியமா எனக்குத் தெரியாது..!” என்றவளுக்கு கண்ணீர் கன்னங்களில் இறங்கியது.
“உட்கார்..!!!” என்று அருகில் இருந்த சேரை இழுத்துப் போட்டான். சக்தி யோசிக்க,
“உட்காருன்னு சொன்னேன்..! காதுல விழல..?” என்றான் கோபமாக.
பட்டென்று அமர்ந்தாள் சக்தி. அவளின் எதிரே தானும் ஒரு சேரை இழுத்துப் போட்டவன், தோரணையாக கால்மேல் கால் போட, அந்த ரணகளத்திலும் சக்தியின் மனம் அதை படம் பிடித்துக் கொண்டது.
“சொல்லு யார் நீ..?” என்றான்.
“நான் தான் சொன்னேனே.. வருண் சார்..!” என்று அவள் சொல்ல,
“ஏய்..! என்னை மறுபடியும் மறுபடியும் கோபப்பட வைக்காத. நான் ஐபிஎஸ் படிச்சது, நீ என் காதுல பூ சுத்துறதுக்கு இல்லை… அன்டர்ஸ்டேன்ட். இப்போ நீயா சொல்லப் போறியா இல்லையா..?” என்றான்.
“சார்..!” என்று அவள் அதிர்ந்து விழிக்க,
“என்ன மேடம் இன்னமும் உங்களுக்குப் புரியலையா..? இல்லை புரியாத மாதிரி நடிக்குறியா..?” என்றான்.
“நான் எதுக்கு நடிக்கணும்..?” என்றாள் பதட்டத்தை மறைத்து.
“அதைத்தான் நானும் கேட்கிறேன். நீ எதுக்கு நடிக்கிறே..? என்னை கொலை செய்யணும்ன்னு திட்டத்தோட வந்தவளுக்கு, இடையில என்ன வந்துச்சு..? எதுக்கு வந்த காரியத்தை நிறைவேத்தாமா சாக்கு போக்கு சொல்லிட்டு இருக்க..?” என்றான்.
“உங்களை நான் கொலை செய்ய வந்தனா…?” என்றவள் பதட்டத்தை மறைக்க,
“இன்னும் இந்த வேஷம் தேவையில்லை சக்தி. எனக்கு வந்த ரிப்போர்ட்படி, என்னைக் கொலை செய்ய உன்னை அனுப்பியிருக்காங்க. அவங்க பிளான்படி நான் போற ரூட்ல வேணும்ன்னே ஆளை செட் பண்ணி, உனக்குப் பிரச்சனை வந்த மாதிரி நடிச்சிருக்க. என்கூட கார்ல ஏறி, கூடவே வந்து என்னைக் கொலை பண்ணனும் அப்படிங்கிறது தான் உன் பிளான். ஆனா அதை இன்னமும் செய்யாம இருக்குறதுக்கு காரணம் என்ன..? சொல்லு..?” என்றான் ஆத்திரமாய்.
அவள் மௌனமாய் அதிர்ந்து நிற்க,
“அவங்க கொடுத்த டைம்குள்ள என் கதையை முடிக்கலைன்னா உன்னை கொலை பண்ணிடுவோம்ன்னு சொல்லித்தான் அனுப்பியிருக்காங்க. அவங்க சொன்ன மாதிரி நீ செய்யலை. சோ, இன்னைக்கு நடந்த ரெண்டு மர்டர் அட்டெம்ப்ட்டும் உனக்குத் தான்.இப்போ சொல்லு, ஏன் என்னைக் கொலை செய்யலை. அதான் அவங்க கொடுத்த அந்த பாய்சன் ஸ்ப்ரே இருந்ததே. அதை அடிச்சிருக்கலாமே..?” என்றான் நக்கலாய்.
“சார்..!”
“என்ன சாரு..? என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது..? சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கா..? இந்த வாட்ச் விஷயமாவது உனக்குத் தெரியுமா தெரியாதா..?” என்றான்.
“எனக்குத் தெரியாது சார்..!” என்றாள் குற்ற உணர்வுடன்.
“இந்த வாட்ச் நீ எங்க வாங்குன..?” என்றான்.
“வாங்கலை சார்..! கிப்ட் வந்தது..!” என்றாள்.
“யாரு கொடுத்தது..?” என்றான்.
அவள் அமைதியாய் இருக்க,
“கேக்குறேன்ல சொல்லுடி யார் கொடுத்தது..?” என்றான் கோபமாய்.
‘என்னது டியா…’ என்று மனதிற்குள் நினைத்தவள், பதில் சொல்லத் தயங்கினாள்.
“பதில் சொன்னா, ஏற்கனவே சொன்ன பொய் வெளிய வந்துடும்ன்னு யோசிக்கிறியா..?” என்றான் சரியாக நாடி பிடித்ததைப் போல்.
“அண்ணி..!” என்றாள் பயந்த குரலில்.
“சபாஷ்..!” என்றவன்,
“நீதான் அநாதை ஆச்சே..? அப்பறம் அண்ணி மட்டும் எங்க இருந்து வந்தது..?” என்றான்.
“சார் பிளீஸ்..!” என்று கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
“நீ சொன்னதைத்தான் உனக்குத் திருப்பிச் சொல்றேன். அதுக்கு ஏன் அழற..? என்னோட இடத்துல வேற ஒரு போலீஸ்காரன் இருந்த்திருந்தா தெரிஞ்சிருக்கும் உனக்கு வேடிக்கை. தைரியமா ஒரு போலீஸ்காரனையே கொலை பண்ண வந்திருக்கயே..?சபாஷ்..!” என்றான்.
அவனை எதிர்கொள்ளும் தைரியம் அவளிடம் சுத்தமாக இல்லை. அவன் சொல்வது அனைத்தும் உண்மை என்று அவள் மனசாட்சிக்குத் தெரியுமே..?
அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன்,
“என்னை எதுக்காக கொலை செய்ய வந்த..? உன்னை அனுப்பினது யார்..? கொலை பண்றதுக்கான எந்த முயற்சியும் ஏன் எடுக்கலை..? நீ ஒரு அனாதைன்னு ஏன் பொய் சொன்ன..? உன்னை கொலை செய்ய வந்தவங்க யாரு..? மேட்டுப்பாளையத்துக்கும் கொடைக்கானலுக்கும் என்ன சம்பந்தம்..? பிரச்சனை எங்க இருந்து ஆரம்பிச்சது..? இப்படி எல்லா கேள்விக்கும் எனக்கு பதில் தெரிஞ்சே ஆகணும்…” என்றான் கடினமான குரலில்.
“எனக்கு அப்பா அம்மா கிடையாது..!” என்றாள்.
“பொய்..! அன்னைக்கு கல்யாண மண்டபத்துல, உன்னோட கல்யாணம் நின்னப்போ.. ஒரு பெரிய குடும்பமே இருந்ததே..?” என்றான் வருண்.
“அவங்க என் பெரியப்பா, பெரியம்மா..!” என்றவள்.. சட்டென்று,
“அதெப்படி உங்களுக்குத் தெரியும்..?” என்றாள்.
“உன்னோட கல்யாணத்தை அப்போ நிறுத்துன போலீஸ்காரனே நான்தான்..!” என்றான் வருண் கடுப்புடன்.
“நிஜமாவ சார்..!” என்றாள் கண்களில் பெரிய எதிர்பார்ப்புடன்.
“இதுல பொய் சொல்ல என்ன இருக்கு. அன்னைக்கு இருந்த டென்ஷன்ல உன்னைத்தான் அரைகுறையா பார்த்தேன். ஆனா, உன் குடும்பம் முழுசும் எனக்கு நல்லாத் தெரியும்..!” என்றான் வருண்.
“நான் உங்களைப் பார்க்கவேயில்லை சார்..!” என்றாள் சக்தி, கொஞ்சம் தெம்பான குரலில்.
“அதுக்கு நான் என்ன செய்ய முடியும்..!” என்றான் தெனாவெட்டாய்.
‘அப்போதே தன்னைக் காப்பாற்றி இருக்கிறானா..? அந்த கல்யாணம் மட்டும் நடந்திருந்தா..?’ என்று யோசித்துப் பார்த்தவளுக்கு, உடல் முழுவதும் நடுங்கத் தொடங்கியது.
“என்னாச்சு..?” என்றவன், தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் கொடுக்க, அதை வாங்கி வாயிக்குள் ஊற்றிக் கொண்டாள் சக்தி.
“என்னோட எல்லா சந்தேகத்துக்கும் விடை கிடைக்குற வரை, நீ எங்கயும் போக முடியாது..!” என்றான் வருண்.
“சார்…!”
“எஸ்..! அதுக்கு முன்னாடி முக்கியமான வேலை இருக்கு. இந்த டிரஸை மாத்திட்டு வா, கொஞ்சம் வெளிய போக வேண்டிய வேலை இருக்கு..!” என்றான்.
மறுபடியுமா..? என்று நினைத்தவளுக்கு மீண்டும் பயம் வந்து அப்பிக் கொள்ள,
“பயபடாத..! இந்த வருண் கிட்ட எவன் திட்டமும் பலிக்காது. என்னை மீறி ஒருத்தனும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது. போ..!” என்றான். அவளும் பயத்துடனேயே உள்ளே சென்றாள்.
அவள் சென்ற பின்பு, தலையை கைகளால் தாங்கிக் கொண்டான் வருண். அவனுக்கும் பல குழப்பங்கள். ஆபத்து அவளிடம் இருந்து அவனுக்கு வருகிறதா..? இல்லை அவனிடம் இருந்து அவளுக்கு செல்கிறதா..? என்று அவனுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாய் தெரிந்தது. சக்தியின் மேல் தப்பிருக்க அதிக பட்சமாய் வாய்ப்பில்லை என்பது தான்.
தன்னைக் கொலை செய்ய வந்தவள், அதை செய்யாமல் விட்டதற்கும் அவனுக்குக் காரணம் தெரிந்து தான் இருந்தது. ஆனால் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவன் இல்லை. பொதுவாக அவனுக்கு காதலின் மீது கொஞ்சம் நம்பிக்கை இல்லை. அவனின் அக்கா சாதனா-கார்த்திக் விஷயத்தில் மிகவும் அடிபட்டிருந்தான் வருண்.
அதே நேரம் சக்தியைப் பார்க்கும் போது, ஏதோ ஒன்று தன்னை மீறுவதை உணர்ந்தான். அது காதல் என்று அவனுக்குத் தெரியவில்லை. அவளுடைய பிரச்சனைகளை உடனே சரி செய்து கொடுக்க வேண்டும் என்று மனம் துடியாய் துடித்தது. அந்த துடிப்பிற்கு பெயர் காதல் என்று அவன் அறிந்திருக்கவில்லை. அவள் அழுதால், அந்த கண்ணீரைத் துடைக்க மனம் வெகுவாய் பாடு பட்டது. அந்த உணர்விற்கு பெயர் காதல் என்று தெரியவில்லை.
இரண்டு நாட்கள் பார்த்த ஒரு பெண்ணின் மீது காதல் வருமா..? அதிலும் அவள் வந்த நோக்கம் தெரிந்த பின்பும் காதல் வருமா..? என்று தான் அவன் கேள்வி கேட்டுக் கொண்டான்.
வருண் எப்போதும் யதார்த்தத்தை நம்புபவன். எந்த செயலும் அவர்களை மீறி நடந்து விடாது என்று நம்புவான். கோவம், அழுகை, சிரிப்பு போன்ற உணர்ச்சிகளை எல்லாம் அடக்கி ஆளத் தெரிந்தவன். மற்றவர்களும் அப்படியே இருப்பார்கள் என்று நினைத்தது தான் அவன் தவறு.
கார்த்தி- சாதனா விஷயத்திலும் அப்படித்தான் அவன் நினைத்தான். யதார்த்தத்தை மீறிய செயலை அவனால் ஆதரிக்க முடியவில்லை. அதனால் அவன் பிரிந்தது உயிருக்கு உயிரான நண்பனையும், உயிரினும் மேலாக நேசித்த தன் உடன் பிறப்பையும் தான்.
வருணின் யோசனைகள் மீண்டும் பழைய இடத்திற்கு வந்து நிற்க,
“சார்..!!” என்றபடி வந்து நின்றாள் சக்தி.
அவளின் குரலில் நிமிர்ந்தவன், அவளின் முகத்தையே பார்க்க, அவளுக்குத் தான் சங்கடம் ஆகிப் போனது. ஆனால் அவன் பார்வை மட்டும் தான் அவள் முகத்தில் இருந்தது. சிந்தனை வேறு எங்கோ இருந்தது.
“சார்..!!!” என்று அவள் மீண்டும் அழுத்தி அழைக்க,
“ம்ம் போலாமா..?” என்றான்.
“சரி” என்பதைப் போல் ஆடியது சக்தியின் தலை.
அவர்கள் நேராக சென்றது அந்த டெட்பாடி இருந்த பிணவறைக்கு தான். எங்கு செல்கிறோம் என்று சொல்லாமலேயே அழைத்து வந்திருந்தான் வருண். அந்த இடத்தைக் கண்ட சக்திக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. எதற்காக அங்கு வந்திருக்கிறோம் என்று கூட அவளுக்குத் தெரியவில்லை.
அந்த இடத்தின் தன்மை அவளுக்கு கொஞ்சம் ஒவ்வாத தன்மையுடன் இருந்தது. ஏதோ வரக் கூடாத இடத்திற்கு வந்தது போல், மனம் அடித்துக் கொள்ள,
“இங்க எதுக்கு சார் வந்திருக்கோம்..?” என்றாள் மெதுவாக.
“கொஞ்ச நேரம் அமைதியா இரு. உனக்கே தெரியும்..!” என்றான். அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே அருகில் வந்தான் கார்த்திக்.
“சார்…” என்று ஒரு சல்யூட்டை வைத்தான்.
“ம்ம்..” என்றவன்,
“எங்க அவங்க வந்துட்டாங்களா..?” என்றான் வருண்.
“நோ சார்..! அவங்க வர மதியத்து மேல ஆகும் போல சார்..!” என்றான் கார்த்திக். பதில் வருணுக்கு சொல்லிக் கொண்டிருந்தாலும், அவனின் அருகில் இருந்த சக்தியைப் பார்த்த கார்த்திக்கின் புருவம் நெரிந்தது. அவளை எங்கோ பார்த்தது போல இருந்தது அவனுக்கும். அவன் யோசனையின் பிடியில் சிக்க,
“அப்ப ஓகே..! இவங்களைக் கூட்டிட்டுப் போய் டெட்பாடியைக் காட்டுங்க..!” என்றான் வருண்.
அதிர்ந்து போனாள் சக்தி.
“யாரோட டெட்பாடி..? நான் ஏன் பார்க்கணும்..?” என்று அவளுக்கு வார்த்தைகள் திக்கித் திணற,
“கண்ட்ரோல் யுவர் செல்ப்..! கண்டிப்பா இப்போ நீ பார்த்து தான் ஆகணும்..!” என்ற வருண், அவளின் பதிலை எதிர்பார்க்காமல் முன்னே செல்ல, கார்த்தியும் அவனைத் தொடர்ந்து சென்றான். சக்தியும் வேறு வழியில்லாமல் அவர்களைத் தொடர்ந்து சென்றாள்.மனதிற்குள் ஒரு பிரளையமே வெடித்துக் கொண்டிருந்தது.
அவர்களின் பின்னே சென்று அவர்கள் காட்டிய பிணத்தைப் பார்த்தவளுக்கு தலையே சுத்தி விடும் போல் இருந்தது. கைகால்கள் எல்லாம் அழுகிய நிலையில் இருந்த அந்த பிணத்தைப் பார்த்தவளுக்கு, அதிர்ச்சியில் கண்கள் தெறிக்க,
“சக்தி..!” என்ற வருணின் உலுக்கலில்,
“சிவாண்ணா..!” என்று கத்தத் தொடங்கினாள். அவளின் குரல் அழுகையுடன் சேர்த்து அந்த கட்டிடத்தையே இரண்டாக்கியது.
“சார்..! இது என் அண்ணன் சிவ பிரகாஷ் சார்..! இவர் எப்படி சார் இங்க..? அதுவும் இப்படி ஒரு நிலையில..?” என்று கதறத் தொடங்க, ஏனோ அவளின் அழுகையை வருணால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“சக்தி..! கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணு. நீ நிதானமா இருந்து, எங்களுக்கு தகவல் சொன்னா தான், மேற்கொண்டு என்ன செய்றதுன்னு முடிவு பண்ண முடியும்..!” என்றான் வருண்.
ஆனால் அவளின் அழுகையோ கொஞ்சமும் குறையவில்லை. தனக்கு என்று இருந்த அந்த ஒரு ஜீவனையும் இழந்திருந்தாள் சக்தி. அவளிடம் அன்பு காட்டிய அண்ணன், அவளுக்கு எல்லாமுமாய் இருந்த அண்ணன்…இன்று இந்த நிலைமையில்… என்று எண்ணியவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“கடவுள் இருக்குறது எல்லாம் பொய் சார்..! என்னை இவ்வளவு பாடு படுத்துறத்துக்கு பேசாம என்னை முதல்ல சாகடிச்சிருக்கலாம் சார்..!” என்று கதறிக் கொண்டிருந்தாள்.
அழுது கொண்டிருந்த பெண்ணும், அவளை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கும் வருணும் முற்றிலும் புதிதாய் தெரிந்தார்கள் கார்த்திக்கு. அவனுக்கு தெரிந்த வரை வருண் இவ்வளவு பொறுமையானவன் இல்லை. அதுவும் பொண்ணுங்க கிட்ட இவ்வளவு பொறுமையா பேசுறது இதுவே முதல் முறை…கார்த்தி பார்ப்பது.
சக்தியை வெளியே அழைத்து வந்திருந்தான் வருண். அவளும் ஓரளவுக்கு தெளிய,
“இவங்ககிட்ட டீட்டைல்ஸ் வாங்கிக்கங்க… அவங்க பேமிலியில இருந்து வந்த உடனே மத்த டீட்டைல்ஸ் வாங்கிக்கங்க. பாடியை அவங்க கிட்ட குடுத்துட்டு மேற்கொண்டு என்ன செய்றதுன்னு பாருங்க..! கொலைக்கான காரணம் என்ன? யார் கொலை செஞ்சாங்க..? இதெல்லாம் உடனே கண்டு பிடிக்கணும்..!” என்றான் வருண்.
“சிவாண்ணாவை கொலை பண்ணிட்டாங்களா…?” என்ற சக்திக்கு ஒன்றுமே புரியவில்லை. சிவாவை கொலை செய்யும் அளவுக்கு அவனுக்கு எதிரிகள் என்று யாருமே இல்லை. அவர்கள் குடும்பத்திலேயே மிகவும் அன்பானவன், கொஞ்சம் அமைதியானவனும் கூட.
“என்ன சார் சொல்றிங்க..? எங்க அண்ணாவை கொலை பண்ணிட்டாங்களா..?” என்றாள் வருணிடம்.
“எஸ்..! அட்டம்ட் மர்டர். கழுத்துல கத்தியை வச்சு அறுத்திருக்கு..!” என்றான் வருண்.
“ஆனா, சிவாண்ணா அமெரிக்கால தான் இருந்தாரு. இங்க எப்ப வந்தாரு..?” என்றாள் சக்தி புரியாமல்.
“வாட் அமெரிக்காவுலையா..?” என்ற வருணுக்கு புது தலைவலி ஆரம்பமானது.
“ஆமா சார்..! அண்ணா அங்க தான் வொர்க் பண்ணாங்க..!” என்றாள்.
“புதுசு புதுசா பிரச்சனை தான் வருதே தவிர, இருக்குற பிரச்னைக்கு ஒரு தீர்வும் கிடைக்க மாட்டேங்குது..?” என்ற வருண்,
“அந்த சிசிடிவி புட்டேஜ் எல்லாம் என்ன சொல்லுது..?” என்றான் கார்த்திக்கிடம்.
“சார்..! அதைப் பத்தி உங்ககிட்ட தனியாத்தான் பேசணும்..!” என்றான் கார்த்திக் யோசனையுடன்.
“உங்க பெரியப்பா பேமிலி இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க…!” என்றான் சக்தியிடம்.
“எனக்கு அவங்களைப் பார்க்க விருப்பம் இல்லை சார்..!” என்றாள் பட்டென்று.
“ஏன்னு தெரிஞ்சுக்கலாமா..?” என்றான்.
“அது சொந்த விஷயம்..!” என்றாள் சக்தி. அவள் அப்படி சொன்னதும் வருணுக்கு அப்படி ஒரு கோபம். கொஞ்சம் இளகியிருந்தவன் மீண்டும் இறுகிக் கொண்டான்.
“இவரைக் காணோம்ன்னு தான கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தாங்க..!” என்றான் கார்த்திக்கிடம்.
“ஆமா சார்..!”
“கம்ளைண்ட் கொடுத்தவங்க யாரு..?”
“அவங்க அப்பா சார்..!”
“இவருக்கு கல்யாணம் ஆயிடுச்சா..? அப்படி ஆயிருந்தா அவங்க மனைவி எங்க..?” என்றான் வருண்.
“இவங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு சார். சம்பவம் நடந்த அன்னைக்கு கொடைக்கானலை சுத்திப் பார்க்க வந்ததாகவும், வரும் போதே, அவங்க மனைவியை இடையில இறக்கி விட்டுட்டு, அவர் வேற ஒரு பொண்ணு கூட போயிட்டதாகவும், இறந்தவரோட மனைவி அவங்க வீட்ல சொல்லிருக்காங்க சார். அதோட இல்லாம, குழந்தையைத் தூக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டதாகவும் சொல்றாங்க சார். இவரோட அப்பாதான் மனசுக் கேட்காம கம்ப்ளயின்ட் குடுத்திருக்கார்..!” என்று தெளிவாக சொன்னான் கார்த்திக்.
“எல்லாமே நேருக்கு மாறா இருக்கே..?” என்று வருண் யோசித்துக் கொண்டிருக்க, இதையெல்லாம் கேட்ட சக்திக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘அண்ணி வீட்டை விட்டு போயிட்டாங்களா..? குழந்தை அவங்க கூடத்தான் இருக்கா..?’ என்று அவள் மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்க,
“என்ன சக்தி..? யோசனை பலமா இருக்கு..?” என்றான்.
“அதெல்லாம் ஒண்ணுமில்லை சார்..!” என்று அவள் சொல்ல,
“உனக்கு அந்த வாட்சை பரிசா கொடுத்தது இவரோட மனைவியா..?” என்றான் யோசனையுடன்.
“ஆமா சார்..!” என்றாள் வெறுமையான குரலில்.
டிரைவரை அழைத்து அவளை வீட்டில் விடும்படி கூறினான் வருண்.
“என்னை மீறி எங்கையாவது தப்பிச்சுப் போயிடலாம்ன்னு நீ நினைச்ச… அப்பறம் என்னோட நடவடிக்கையைத் தாங்க மாட்ட..!” என்று சக்தியிடம் ஒரு எச்சரிக்கையையும் விடுத்தான்.
அவளும் அவனுக்குத் தலையை ஆட்டியபடி, இனி எல்லாம் விதி விட்டது என்பதைப் போல சென்றாள்.
அவள் சென்றவுடன்,
“சொல்லுங்க கார்த்தி… மேபி அக்யூஸ்ட்டை நெருங்கிட்டோம் போல..?” என்றான் கூர்மையாக.
“அதெப்படி சார்..! இப்படி கரெக்ட்டா கேஸ் பண்றிங்க..?” என்றான் கார்த்திக்.
“என் ஸ்பீட்க்கு இந்நேரம் அக்யூஸ்ட்டை அரஸ்ட் பண்ணியிருப்பேன். உங்களை நம்பி பொறுப்பை கொடுத்துட்டு போனதுக்கு, இன்னமும் ஜவ்வா இழுத்துட்டு இருக்கீங்க..?” என்றான் எரிச்சலுடன்.
“உங்க ஸ்பீட் எல்லாம் எங்களுக்கு வராது சார்..!” என்றான் கார்த்திக்.
“அது நக்கலாக சொன்னானா..? இல்லை நார்மலாக சொன்னானா..?” என்று அவனின் முகத்தைப் பார்க்க, அதில் இருந்து ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.
அதே நேரம் கார்த்தியின் செல் போன் அடிக்க,
“எக்ஸ்கியுஸ்மி சார்,,!” என்றவன், போனை எடுத்துப் பேச, சாதனா அழைத்திருந்தாள்.
“சொல்லுமா..!”
“எங்க இருக்க கார்த்தி..?” என்றாள் சாதனா.
“எஸ்பி சார் கூட..!” என்று அவன் சொன்னவுடன் புரிந்து கொண்டாள் சாதனா.
“கார்த்தி அவன்கிட்ட போனை குடுக்குறியா..?ஒரு இரண்டு வார்த்தை பேச சொல்றியா..?” என்றாள்.
“நம்ம ரொம்ப தப்பானவங்க..! நம்ப கூட பேசுனா அவங்க கவுரவம் குறஞ்சிடும். எதுக்கு அந்த சிரமத்தை அவங்களுக்குக் குடுக்கணும்..?” என்றான் கார்த்திக்.
அதுவும் சரிதான் என்றவள்,
“என்னால சாப்பிடவே முடியலை..!” என்றாள்.
“இன்னைக்கு டாக்டர் கிட்ட போகலாம்..!” என்றான் வருண்.
அவன் சாதனாவிடம் தான் பேசுகிறான் என்று வருணுக்கு தெரிந்திருந்தது. தன்னையும் மனதையும் கட்டுப் படுத்திக் கொண்டு நின்றிருந்தான்.