காவல் 10:
“உன்னோட மொத்த குடும்பமும் இப்போ வந்தாச்சு…!” என்றான் வருண்.
அதைகேட்ட சக்திக்கு உடனே அவர்களை சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அண்ணன் இல்லாது போன துக்கத்தை அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் அப்படி அவள் போனால் அவர்கள் என்ன நினைப்பார்கள்? என்று யோசித்தாள். கொடைக்கானலில் இருக்க வேண்டியவளுக்கு இங்கு என்ன வேலை என்று கேட்க மாட்டார்களா..? அதுவும் வருணுடன் தனியே பார்த்தால் அவளின் பெரியம்மா யமுனா பேயாட்டம் ஆடித் தீர்த்து விடுவார் என்று சக்தி நினைத்தாள்.
“என்ன யோசனை சக்தி..? அவங்களைப் போய் பார்க்கனுமா..?” என்றான் வருண்.
“போய் பார்க்கணும்ன்னு மனசு கிடந்தது அடிச்சுக்குது சார். ஆனா, நான் போய் பார்க்குறதால பிரச்சனை இன்னமும் கூடுமே தவிர குறையாது சார். அவங்க இப்ப இருக்கிற மனநிலையில, நான் போய் ஏன் அவங்க கவலையைக் கூட்டனும்..?” என்றாள்.
“நீ அவங்களைப் பார்க்கப் போகாததுக்கு இது ஒன்னு தான் காரணமா..?” என்றான் அவளை ஊடுருவிப் பார்த்தவாறு.
“வேற எந்த காரணமும் இல்லை சார்..!” என்றாள் சக்தி.
“அப்போ கிளம்பு..! அவரோட இறுதி நிமிஷத்துல அவங்க கூட இருக்கனும்ன்னு உனக்குத் தோணலையா.? இங்க இருக்குற மின் மயானத்துலையே எல்லா காரியமும் முடிச்சுடுவாங்க. இந்த நேரத்துல நீ கண்டிப்பா அவங்க கூட இருந்தே ஆகணும்..!” என்றான் வருண் தெளிவாய்.
“நோ சார்..! என்னால அது முடியாது. ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாதிங்க..!” என்று முடிவாய் சொல்லி விட்டாள்.
“நீ ஏன் போக மாட்டேங்குற அப்படின்ற காரணம் எனக்குத் தெரியும்..!” என்றான்.
“நீங்க நினைக்கிற மாதிரி எந்த காரணமும் இல்லை சார்..!” என்றாள்.
“நான் என்ன நினைக்கிறேன்னு உனக்கு என்ன தெரியும்..?” என்றான் வருண்.
“உங்ககிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது சார்..! ஆளை விடுங்க..!” என்றாள்.
“நான் கேட்ட கேள்வி அப்படியே தான் நிற்குது. யார்கிட்ட இருந்து தப்பிச்சு வந்த..? உனக்கு என்ன பிரச்சனை..?” என்றான் நேரடியாக.
“எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை சார். நீங்க தான் என்னை குற்றவாளியைக் கேள்வி கேட்குற மாதிரி கேட்டுட்டே இருக்கீங்க. அப்படி ஏதாவது பிரச்சனைன்னா நானே சொல்ல மாட்டேனா..?” என்று சக்தி சொல்ல,
“என்னால எதையும் கண்டு பிடிக்க முடியாதுன்ற தைரியமா..?” என்றான்.
“இல்ல சார்..! இல்லவே இல்லை. நீங்கல்லாம் யாரு…பெரிய ஆள் சார். உங்க கிட்ட பொய் சொல்லி நாங்க தப்பிக்க முடியுமா..?” என்று சொல்லிவிட்டு நிறுத்தியவள்,
“இதுக்குமேல நான் இங்க இருக்க வேண்டிய அவசியம் இல்லைன்னு நினைக்கிறேன் சார். நான் கிளம்பிடலாம்ன்னு இருக்கேன்..!” என்றாள்.
“அதை நான் சொல்லணும்..?” என்றான்.
“நீங்க ஏன் சார் சொல்லணும்..? நான் என்ன தப்புப் பண்ணினேன். ஏதோ உதவி பண்ணிங்கன்னு பொறுமையா இருந்தா, உங்க இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கணும்ன்னு நினைக்கிறிங்க. அது ஒரு காலமும் நடக்காது. நான் கிளம்பித்தான் ஆவேன். எந்த காரணத்துக்காகவும் நீங்க என்னைத் தடுக்க முடியாது..!” என்றாள் மூச்சு வாங்க.
பேசியதில் அவள் முகம் சிவந்து போக,பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தம் இல்லை என்பதைப் போல் அவள் உடல் வெடவெடத்தது.
“ஓகே..! நீ கிளம்பலாம்..! நான் திரும்பி வரும் போது நீ இங்க இருக்க கூடாது. கெட் லாஸ்ட்..!” என்று கோபமாய் சொன்னவன், டியுட்டிக்கு கிளம்பி விட்டான்.
அவனுடைய பேச்சு சக்திக்குத் தான் ஒரு மாதிரியாகிப் போனது. அவன் அப்படி சட்டென்று சொல்லுவான் என்று அவளும் எதிர்பார்க்கவில்லை. ஏனோ அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று நினைத்தாலே அவ்வளவு பயமாய் இருந்தது அவளுக்கு. கூட்டை விட்டு வெளியே செல்லும் புறா, எந்த வேடனின் கையில் அகப்பட்டு சித்திரவதைப் படப்போகிறதோ…? என்ற நிலைதான் அவளின் நிலையும். அதே சமயம் தொடர்ந்து அவளால் வருணுடனும் இருக்க முடியாது. அது எல்லாருக்கும் ஆபத்தாய் முடியும் என்பதை அவள் உணர்ந்தே இருந்தாள். இனி நடக்கும் எந்த பிரச்சனைக்கும் தானே கடைசி பலியாய் இருக்க வேண்டும் என்று நினைத்தாள்.
கோபத்தில் சென்ற வருணுக்கு எரிச்சலாய் வந்தது. எதற்கு கோபப் படுகிறோம் என்று தெரியாமல் கத்திக் கொண்டிருந்தான்.
“இப்போ எதுக்கு வருண் இவ்வளவு கோபம் உனக்கு. அவ போனா என்ன..? போகாட்டி என்ன..? அதனால உனக்கு என்ன பிரச்சனை..? ஒரு வயசுப் பொண்ணு உன்கூட தனியா எத்தனை நாளைக்கு தங்க முடியும். வெளிய நாலு பேர் நாலு விதமா பேசமாட்டங்க..?” என்று மனசாட்சி கேட்க,
“எவன் என்ன பேசுவான்..?” என்றான் திமிராய்.
“எல்லாரும் தான் பேசுவாங்க. உனக்கு கேஸ் சம்பந்தமா விசாரிக்கணும்ன்னா.. ஸ்டேஷன்ல வச்சு விசாரி. அதை விட்டுட்டு இதெல்லாம் சரியா இல்லை..!” என்று அவனின் மனம் அவனுக்கு ஒரு தெளிவான பதிலைக் கூறியது.
அவன் நேராய் சென்று சந்தித்தது சக்தியின் குடும்பத்தை தான். தர்மராஜ் அப்படியே நொடிந்து போயிருந்தார். யமுனாவோ சொல்லவே வேண்டாம், வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.ஜெயப்பிரகாஷ் அவர்களை சமாதனம் செய்து கொண்டிருக்க, அபூர்வாவோ கவலையுடன் நின்று கொண்டிருந்தாள். அவர்களை தூரத்தில் இருந்து பார்வையால் எடை போட்டவன், முகத்தை கடினமாக வைத்துக் கொண்டே அவர்களின் அருகில் சென்றான்.
“நீங்க தான் இறந்த பையனோட அப்பா,அம்மாவா..?” என்றான் தெரியாதவனைப் போல்.
“ஆமா சார்..!” என்று தர்மராஜ் பலகீனமான குரலில் சொல்ல,
“சார் உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு..!” என்றான் ஜெயப்பிரகாஷ்.
“இருக்கலாம்..!” என்றான் பொதுவாக.
“உங்க பையனை நீங்க எப்போ கடைசியா பார்த்திங்க..?” என்றான் வருண்.
“பத்து நாளைக்கு முன்னாடி தான் சார்… பொண்டாட்டியையும் பிள்ளையையும் கூட்டிட்டு கொடைக்கானலை சுத்திப் பார்க்க வந்தான் சார்..!” என்றான் ஜெயப்பிரகாஷ்.
“அங்க இருந்து இங்க கொடைக்கானல் வர வேண்டிய அவசியம் என்ன..?” என்றான்.
“எங்க பொண்ணு கொடைக்கானல்ல இருக்குது சார். அவளையும் பார்த்துட்டு, அப்படியே கொடைக்கானலையும் சுத்திப் பார்த்துட்டு வரலாம்ன்னு என் மருமக தான் சார் மகனை கூப்பிட்டுச்சு..!” என்றார் தர்மராஜ்.
“உங்களுக்கு ரெண்டு பையன்னு தானே ஸ்டேட்மென்ட்ல இருக்கு..?” என்றான் கேள்வியாய்.
“என்னோட தம்பி பொண்ணு சார்..!” என்றார் தர்மராஜ்.
“அவங்க கொடைக்கானல்ல என்ன பண்றாங்க..?” என்றான் வருண்.
“அங்க வேலை பார்த்தா சார். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி அவ கல்யாணத்துல ஒரு பிரச்சனை. அதனால என் சின்ன மருமகளுக்கும், மகளுக்கும் ஒரு சின்ன மனஸ்தாபம். அவகிட்ட மன்னிப்புக் கேட்டு, அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரேன்னு சொன்னா சார்..!” என்றார் யமுனா.
“உங்க மருமக பேரு..?” என்றான் வருண்.
“ருத்ரா சார்..!” என்றனர்.
“இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியுமா..?” என்றான்.
“இவன் பண்ண வேலையில, அவ வீட்டை விட்டே போய்ட்டா சார்..!” என்று யமுனா கதற,
“உங்க பையனை கொலை பண்ணது யார்ன்னு தெரியுமா..?” என்றான் வருண்.
“அது யார்ன்னு எங்களுக்குத் தெரியலை சார். ஆனா, என் பையனைக் கொலை பண்ற அளவுக்கு அவனுக்கு எதிரின்னு யாரும் இல்லை சார்..!” என்றார் தர்மராஜ்.
“எல்லாம் அவ நேரம். அவளைப் பார்க்க போறேன்னு போயிதான் என் மகன் உசுரோடவே இல்லை..!” என்று சொல்லி யமுனா அழுக,
வருணுக்கு உள்ளுக்குள் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. என்ன பெண் இவர்..? என்று தான் தோன்றியது.
“உங்க அந்த பொண்ணோட பேர்..?” என்றான் கோபத்தை அடக்கிக் கொண்டு.
“சக்தி பிரியதர்ஷினி சார்..!” என்றான் பிரகாஷ்.
அபூர்வா மட்டும் தான் அங்கிருந்தவர்களில் அமைதியாக இருந்தாள். எதுவும் பேசவில்லை. அவளைப் பார்த்து திரும்பிய வருண்,
“நீங்க ஏன் எதுவும் பேசாம அமைதியாவே இருக்கீங்க..?” என்றான் வருண்.
“பேச ஒண்ணுமில்லை சார்..!” என்றாள் பொதுவாய்.
“சிவப்பிரகாஷ் கொலை சம்பந்தமா உங்களுக்கு ஏதாவது தோணுதா..?” என்றான்.
“எனக்குத் மனசுல தோணுறதை சொன்னா யாரும் ஏத்துக்க மாட்டாங்க சார்..!” என்றாள்.
“நீங்க சொல்லுங்க..? அதை ஏத்துக்கறதா இல்லையான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்..” என்றான்.
“இந்த கொலையை ருத்ராவைத் தவிர யாரும் பண்ணியிருக்க முடியாது. அவ பண்ணலைன்னாலும் ஆள் வச்சாவது அவதான் செஞ்சிருப்பா..!” என்று அலுங்காமல் இடியை இறக்கினால் அபூர்வா.
வருனே ஒரு நிமிடம் அசந்து போனான். அதெப்படி அவள் சரியாக சொல்கிறாள் என்று..?
“அதெப்படி சொல்றிங்க..? இது உங்க அனுமானமா..? இல்லை உறுதியா…?” என்றான் வருண்.
“எப்படி வேணும்ன்னாலும் எடுத்துக்கலாம். ஆனா, அவ சரியில்லை. சிவா அமெரிக்காவுல இருந்து வந்து ரெண்டு நாள் கூட ஆகலை. வெளிய கூட்டிட்டு போக சொல்லி அடம் பிடிச்சா. எதை சொன்னா சிவா வருவான்னு அவளுக்கு நல்லாத் தெரியும். சக்திகிட்ட மன்னிப்பு கேட்கணும்ன்னு பொண்டாட்டி சொன்னதை நம்பி அவனும் கிளம்பினான். அவனுக்கு எப்படியாவது சக்தியை பேசி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடனும் அப்படின்ற எண்ணம். எப்படியோ சந்தோஷமா தான் கிளம்பிப் போனாங்க. ஆனா,மறுநாளே வந்து ருத்ரா ஒரு கதையை சொல்லிட்டு அவங்க வீட்டுக்கு போய்ட்டா. எதையும் நம்புற மாதிரி இல்லை. முதல்ல சிவா அப்படிப் பட்ட பையனே கிடையாது. தப்பான என்னமோ, வேற பொண்ணோட தொடர்பு வச்சுக்குற அளவுக்கு கேடுகெட்ட நடத்தையோ சுத்தமா கிடையாது…” என்றாள் அபூர்வா தெளிவாய்.
“ரொம்ப தெளிவா பேசுறிங்க…!” என்றான் வருண்.
“இது தான் உண்மையும் கூட சார்..!” என்றாள் அபூர்வா.
“ஏய் அபூர்வா…என்ன பேசிட்டு இருக்க..? ருத்ரா அப்படிப்பட்ட பொண்ணு எல்லாம் கிடையாது..? உனக்கு அவளைக் கண்டாலே ஆகாது. அதான் பழியைத் தூக்கி அவமேல போடுற..?” என்று யமுனா சண்டைக்கு வர,
“செத்தது உங்க பையன். என்னமோ அவங்க பையன் இறந்த மாதிரி அவங்க கவலைப் பட்டு பேசிட்டு இருக்காங்க. இப்படி எதையும் யோசிச்சு பார்க்காம அவங்க கூட சண்டைக்கு போயிட்டு இருக்கீங்க..?” என்று அதட்டினான் வருண்.
“பின்ன என்ன சார்..? பொண்டாட்டியே புருஷனைக் கொல்லணும்ன்னு நினைப்பாளா..? அதுலயும் ருத்ரா, எங்க வீட்டு மகாலட்சுமி சார்..!” என்றார் யமுனா.
அபூர்வா அவரை வெறுப்புடன் பார்த்தாள். அது அவள் பார்வையிலேயே தெரிந்தது வருணுக்கு.
“அவ உங்க வீட்டு மகாலட்சுமி இல்லை. உங்க வீட்டுக்கு வந்த மூதேவி..! இவங்க சொன்னது தான் சரி. உங்க பையனை கொலை செஞ்சது யாருமில்லை. உங்க மருமக ருத்ரா தான்..!” என்றான் வருண் தெளிவாய்.
என்னதான் மனதில் அனுமானமாக இருந்தாலும், வருண் சொன்னதை அபூர்வாவாலேயே ஜீரணிக்க முடியவில்லை. அவளுடைய கணிப்பு வெறும் கணிப்பாகவே போயிருக்கக் கூடாதா என்ற எண்ணம் தான் அது.
அவளுக்கே அப்படி என்றால் யமுனாவை சொல்லித்தான் ஆக வேண்டுமா..? பித்துப் பிடித்த நிலைதான் அவருடைய நிலையும். தர்மராஜ் அப்படியே அதிர்ந்து அமர்ந்து விட்டார். பெற்ற மகனைப் பறி கொடுத்த துக்கம் அவருக்கு. பிரகாஷுக்கு ரத்தம் கொதித்தது.தம்பியின் இறப்புக்கு காரணமானவளை கொலை செய்யும் அளவிற்கு கோபம் வந்தது.
“நீங்க சொல்றது நிஜமா சார்..?” என்றார் தர்மராஜ் மீண்டும்.
“எஸ்…! இன்னைக்கு ஈவ்னிங்குள்ள ருத்ராவை அரெஸ்ட் பண்ணிடுவாங்க..! எங்க டீம் இந்நேரம் அவ இருக்குற இடத்தை நெருங்கியிருப்பாங்க..!” என்றான் வருண்.
“அவ எங்க சார் இருக்கா..?” என்றான் பிரகாஷ்.
“நீங்க எல்லாம் நினைக்கிற மாதிரி அவ அவங்க அம்மா வீட்ல இல்லை. இப்போ அவ இருக்குறது மங்களூர்ல…!” என்றான் வருண்.
“சார் எங்க பேத்தி..!” என்றார் யமுனா.
“குழந்தையும் அவ கூட தான் இருக்கு…!” என்றான்.
“சார்..! அந்த குழந்தையை மட்டும் எப்படியாவது வாங்கிக் குடுத்துடுங்க சார். இல்லைன்னா எங்க பேத்தியையும் ஏதாவது பண்ணாலும் பண்ணிடுவா சார்..!” என்றார் தர்மராஜ்.
“அதை கோர்ட் தான் முடிவு பண்ணும். அதுவரைக்கும் குழந்தையை நீங்க வச்சுக்கலாம்…!” என்றன வருண்.
“என் தம்பியை கொலை பண்ற அளவுக்கு அவளுக்கு என்ன பிரச்சனை..?” என்றான் பிரகாஷ்.
“வேறென்ன..? எல்லாம் கள்ளக் காதல் தான்..!” என்றான் வருண்.
யாரும் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. பிரம்மை பிடித்தவர்கள் போல் பார்த்துக் கொண்டிருக்க,
“எஸ்..! கூடப் போன டிரைவரை அரெஸ்ட் பண்ணிட்டோம்..! அவனோட வாக்குமூலத்தில் சொன்ன உண்மைதான் இது. அவன் வெறும் கையாள் தான். நிஜமான குற்றவாளி ருத்ராவும், அவள் கள்ளக் காதலனும் தான்..!” என்றான் வருண்.
“யார் சார் அவன்..?” என்றான் பிரகாஷ்.
“அது ருத்ரா தான் சொல்லணும். ஆனா, குற்றவாளி கொடைக்கானல்ல தான் இருக்கணும். கூடிய சீக்கிரம் என்கிட்டே பிடிபடுவான்..!” என்றான் வருண்.
“அவளுக்கு கண்டிப்பா தண்டனை கிடைச்சே ஆகணும் சார்..! இல்லைன்னா அவளை என் கையாலேயே கொன்னுடுவேன் சார்..!” என்றான் பிரகாஷ்.
“எமோஷ்னல்ல பேசாதிங்க பிரகாஷ். சட்டப்படி என்ன செய்யணுமோ அதை நாங்க செய்வோம்..! நீங்க அடுத்து ஆக வேண்டியதைப் பாருங்க. பார்மாலிடிஸ் எல்லாம் முடிஞ்சா நீங்க பாடியை வாங்கிக்கலாம். ஒரு ரிட்டன் ஸ்டேட்மென்ட் எழுதிக் குடுத்துட்டுப் போங்க…” என்று சொல்லிவிட்டு திரும்பியவன், மீண்டும் யமுனாவிடம் திரும்பினான்,
“குழந்தை பெத்துக் குடுக்குற மருமக நல்ல மருமக. கொஞ்சம் லேட்டா பெத்துக் குடுக்குறவங்க ஆகாத மருமகன்னு யாரு சொன்னது..? உங்க வீட்ல நடக்குற எல்லா கெட்டதுக்கும், உங்க கண்மூடித்தனமான நம்பிக்கையால நடக்குற எல்லா அசம்பாவிதத்துக்கும் ஒரு பொண்ணு எப்படி காரணமாக முடியும்..? உங்க வீட்ல யாருக்காவது காய்ச்சல் வந்தா கூட சக்தி தான் காரணம்ன்னு சொல்லுவிங்க போல..?
இனியாவது கண்ணைத் திறந்து உலகத்தைப் பாருங்க. நடக்குற எல்லாத்துக்கும் மத்தவங்களை பழி சொல்ற பழக்கத்தை முதல்ல விடுங்க. ஆண்கள், பெண்களைப் பார்க்குற விதத்தை மாத்தணும் சொல்றவங்க, பெண்கள் முதல்ல பெண்களை மற்ற கோணத்துல பார்க்குறதை மாத்த சொல்லுங்க. இங்க பாதிப் பிரச்சனை தானே முடிவுக்கு வந்துடும். பெண்ணுக்கு முதல்ல அவள் இனம் தான் எதிரி..!” என்றவன், அதற்கு மேல் அங்கிருந்த காவலரிடம் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான்.
அவனுக்கு இந்த ஒரு வழக்கு மட்டுமா இருக்கிறது. பத்தோடு பதினொன்று அவனுக்கு. அவ்வளவு தான். இவர்களிடம் இவ்வளவு தூரம் பேசியதே வருணின் அகராதியில் கொஞ்சம் அதிகப் படி தான்.
“என்ன சார் கிளம்பிட்டிங்க போல..?” என்றபடி வந்தான் கார்த்திக்.
“எஸ்..! இந்த கேசை சீக்கிரம் முடிச்சுடுங்க. அந்த ருத்ராவை அரெஸ்ட் பண்ணி, கோர்ட்ல புரடியூஸ் பண்ணிடுங்க…!” என்றான்.
“சாரி சார் ..! நான் இன்னையில இருந்து ஒரு டென் டேஸ்க்கு மெடிக்கல் லீவ் சார். இன்சார்ஜ் இன்ஸ்பெக்டர் பார்த்துப்பாங்க சார்….!” என்றான் கார்த்திக்.
“யாரைக் கேட்டு லீவ் எடுத்திங்க..? உங்களுக்கு லீவ் அப்ரூவல் கொடுத்தது யாரு..?” என்று கத்தினான் வருண்.
“சாரி சார்..! ஒன் மன்ந்த்க்கு முன்னாடியே லீவ் பார்ம் அனுப்பிட்டேன்..!” என்றான்.
“எப்படியோ போய் தொலைங்க..!” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு வருண் ஜீப்பில் ஏறப் போக, அவன் பின்னாடியே வந்தான் கார்த்திக்.
“இன்னும் என்ன வேணும் உங்களுக்கு..?” என்றான் வருண்.
“சார்..! உங்க வீடு வரைக்கும் என்னை டிராப் பண்ண முடியுமா சார்..?” என்றான் பணிவாக.
“வாட்..? என் வீட்டுல உனக்கென்ன வேலை..?” என்றான்.
“என் வொய்ப்போட பேமிலி வந்திருக்காங்க சார். அவங்களுக்கு என் மனைவியைப் பார்க்கணுமாம். அவங்கதான் வர சொன்னாங்க..!” என்றான் கார்த்தி, வருணைப் பார்த்துக் கொண்டே.
‘எல்லாரும் வந்திருக்காங்களா…? என்கிட்டே ஒருவார்த்தை கூட சொல்லலை..’ என்று வருண் மனதில் யோசித்துக் கொண்டிருக்க,
“நான் வரலாமா சார்..?” என்றான் கார்த்தி மீண்டும்.
“ம்ம்..!” என்ற வருண் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. டிரைவர் வண்டியை எடுக்க, முன்னால் இருந்த வருண், பின்னால் அமர்ந்திருந்த கார்த்தியை அவ்வப்போது பார்த்துக் கொண்டே வந்தான். கார்த்தியோ முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
‘எதுக்காக எல்லாரும் வந்திருக்காங்க…? நாம சொன்னதையும் மீறி, அவங்களுக்கு பொண்ணு தான் பெரிசா போய்ட்டா போல. எல்லாம் கௌசி பண்ண வேலையா தான் இருக்கும்..’ என்று வருண் நினைக்க,
‘டேய்…! வீட்ல சக்தி வேற இருந்தா. இவங்க வந்து அவளைப் பார்த்தா என்ன நினைப்பாங்க..?” என்று மனசாட்சி கேட்க,
‘அதெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டாங்க..! அப்பாகிட்ட சொல்லிட்டேனே. நான் என்ன தப்பா பண்ணேன். விசாரணைக்காக, அவளோட பாதுகாப்புக்காகத் தங்க வச்சிருந்தேன். இதில் என்ன இருக்கு..? அதுமட்டுமில்லாம அவ இந்நேரம் கிளம்பியிருப்பா’ என்று அவனே பதிலும் சொல்லிக் கொண்டான்.
இருந்தாலும் மனதின் ஒரு ஓரத்தில் கொஞ்சம் பக்கென்று தான் இருந்தது அவனுக்கு. மோகனா அத்தை மட்டும் வந்திருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே போனான் வருண்.ஆனால் அவனின் வேண்டுதல் கடவுளின் காதில் கேட்கவேயில்லை போல.
ஜீப்பை விட்டு இறங்கியவன், கார்த்திக்கை கண்டுகொள்ளவே இல்லை. அவனை ‘வா’ என்றும் சொல்லவில்லை. அவன் பேசாமல் உள்ளே செல்ல, அவனை முதல் ஆளாய் வரவேற்றது மோகனா அத்தை தான்.
அவரைப் பார்த்து உள்ளுக்குள் சலிப்பாய் இருந்தாலும்,
“வாங்க அத்தை..!” என்றான் சம்பிரதாயமாய். மோகனாவோ எதுவும் பேசாமல் முறைத்துக் கொண்டு நின்றார்.
“இப்ப எதுக்கு நம்மை முறைக்கிறாங்க..?” என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, பின்னால் வந்த கௌசல்யாவும் அவனை முறைத்தாள். நித்யாவோ எதுவும் சொல்லாமல் யோசனையுடன் இருந்தார்.
“வாப்பா வருணு..? நீ இப்படி செய்வன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..!”என்று மோகனா அத்தை ஆரம்பித்தார்.
“அம்மா..! வந்தவனை முதல்ல உள்ள விடுங்க. அப்பறம் உங்க விசாரணைக் கமிஷனை வச்சுக்கலாம்..!” என்ற முரளி, பின்னாடியே வந்த கார்த்திக்கைப் பார்த்து, சிரிப்பதா? வேண்டாமா? என்று குழம்பிப் போனான். சிரித்தால் வருணுக்கு பிடிக்காது.பேசாமல் இருந்தால் கௌசல்யாவிற்கு பிடிக்காது..? அவனும் என்ன தான் செய்வான்.
அவனுடைய நிலைமை கார்த்திக்கிற்கு நன்றாகப் புரிந்தது.அதனால் அவனே,
“முரளி அண்ணா எப்படி இருக்கீங்க..?” என்று பேசி வைத்தான்.வருண் முறைக்க, மோகனாவும் இப்போது வருண் கட்சி. அவருக்கும் கார்த்திக்கை ஏனோ முதலில் இருந்து பிடிப்பதில்லை.
“நான் நல்லா இருக்கேன் கார்த்தி..!” என்று முரளி பதில் சொல்லி வைத்தான்.
“சாதனா எப்படி இருக்கா கார்த்தி..?” என்றாள் கௌசல்யா.
“நல்லா இருக்கா அக்….” என்று சொல்ல வந்தவன் நிறுத்தி, “நல்லா இருக்கா அண்ணி..!” என்றான். அவனின் இந்த பதிலில் வருணுக்கு கேலியான ஒரு சிரிப்பு தான் வந்தது. அதையெல்லாம் கார்த்தி கண்டு கொள்ளவே இல்லை.
‘இவங்க வரதுக்கு முன்னாடியே கிளம்பி போய்ட்டா போல…! ஒரு போன் பண்ணி சொல்லனும்ன்னு கூடத் தோணலை..?’ என்று எண்ணியவன் ஏனோ வெறுமையாய் உணர்ந்தான்.
‘அவ போனதுக்கு எதுக்கு இப்படி பீல் பண்ற..? என்னமோ உன் பொண்டாட்டியே உன்னை விட்டுட்டு போன மாதிரி..!’ என்று உள்மனம் நக்கல் அடித்துக் கொண்டிருந்தது.
“எப்போ கிளம்பலாம் கார்த்தி..?” என்றாள் கௌசல்யா.
“உங்க பிரியம் அண்ணி..!” என்றான்.
“இன்னைக்கு கண்டிப்பா முடியாது. நாளைக்குப் போகலாம்..!” என்றான் முரளி.வருண் அவனை முறைத்தான்.
‘ஏற்கனவே டிராவல் பண்ணி வந்தது டயர்டா இருக்கு கௌசி…’ என்று அந்த இடத்தில் இருந்து நகரப் பார்த்தான் முரளி.
“அப்போ நாளைக்கு கிளம்பிட்டு கூப்பிடுங்க.வந்து கூட்டிட்டு போறேன்..!” என்ற கார்த்தி கிளம்பப் போக,
“என்ன கார்த்தி அதுக்குள்ள கிளம்பிட்ட..? இருந்து சாப்பிட்டு போ..!” என்றாள் கௌசி.
“இருக்கட்டும் அண்ணி..! நான் வரேன்..!” என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்று விட்டான் அவன்.
அவன் சென்ற அடுத்த நிமிடமே…
“நீ செய்றது கொஞ்சம் கூட சரியில்ல வருண்..? என்னமோ எதிரியைப் பார்த்த மாதிரி பார்க்குற அவனை. அவன் உன் பிரண்டுடா..” என்றாள்.
“அது அப்போ..!” என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டான்.
“அதைவிடு வருணு… இன்னும் அந்தப் பொண்ணை கூட வச்சுட்டு சுத்திட்டு இருக்கியே..? இது நல்லாவா இருக்கு..?”என்றார் மோகனா.
“நீங்க பார்த்திங்களா அத்தை, நான் சுத்துனதை..?”என்றான் இடக்காய்.
“அதான் நாங்க வரும் போது, ஏதோ சொந்த வீட்ல இருக்குற மாதிரி இருந்தாலே…?” என்றார் மோகனா.
‘இவங்க வரும் போது இருந்தாளா..?அப்போ எங்க காணோம்..?’ என்று அவன் யோசிக்க,
“ஒரு வயசுப் பையன் கூட தனியா இத்தனை நாள் இருந்திருக்கான்னா அவ நல்ல குடும்பத்து பொண்ணா இருக்கவே முடியாது..”என்று அவர் பேசிக் கொண்டே போக,
“கொஞ்சம் நிறுத்தறிங்களா..? அவளை நான் தான் கட்டாயப்படுத்தி இங்க இருக்க வச்சேன்.நீங்க வந்தப்போ இருந்தான்னு சொல்றிங்க..? இப்போ ஆளையே காணோம்..? சக்தி..சக்தி..!” என்றான் சத்தமாய்.
“அவ இப்போ இல்லை..!” என்றார் மோகனா.
“இல்லைன்னா, என்ன அர்த்தம்..?” என்றான்.
“வீட்டை விட்டு அனுப்பிட்டேன்..!” என்றார்.
“யாரைக் கேட்டு அனுப்புனிங்க..?”
“யாரைக் கேட்கணும்…?”
“என்னைக் கேட்கணும்..!” என்றான் சத்தமாய்.அவனின் சத்தத்தில் வீடே அதிர்ந்தது. அவனின் கோபத்தில்,மிரண்டு போய் பார்த்தார் மோகனா.