அத்தியாயம் 16
கண்களில் கனவாக
இருப்பேன் என்றாய்,
இப்போதோ கானல்
நீராக ஆனாய்!!!
எங்கே செல்கிறார்கள் என்று மாயா சொல்வாள் என்று சுமன் எதிர் பார்க்க அவளோ அன்று முழுவதும் அவனிடம் சொல்லவே இல்லை. சுமனும் அதை அத்தோடு விட்டு விட்டான். ஆனால் அடுத்த நாளும் அதே நேரத்துக்கு அவர்கள் இருவரையும் யுவன் அழைத்துச் செல்ல சுமனுக்கு குழப்பம் தான் வந்தது. கேசவுக்கும் எங்கே என்று தெரிய வில்லை.
அன்று அவர்கள் மூவரும் திரும்பி வந்ததும் யுவனிடமும் மாயாவிடம் கேட்க துணிவில்லாத சுமன் சுசீலாவிடம் “எங்கே போனீங்க சுசீ?”, என்று கேட்டான்.
“கட்டின பொண்டாட்டிக்கிட்ட உரிமையா கேக்குரதை விட்டுட்டு எப்படி பம்மிக்கிட்டு இருக்காங்க பாரு?”, என்று எண்ணிய சுசீலா “பர்சேஸ்”, என்று சொல்லி ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.
அவர்கள் பொருள் வாங்கி வந்ததற்கான எந்த அடையாளமும் இல்லாததால் அவனுக்கு குழப்பம் வந்தாலும் வேறு எதுவும் கேட்க வில்லை. ஆனால் அவர்கள் அடுத்த நாளும் செல்ல “சுசீ அப்படி எங்க தான் போறீங்க? பர்சேஸ்னு பொய் சொல்லாதீங்க. நீங்க ஒண்ணுமே வாங்கிட்டு வரலை. எங்கன்னு சொல்லுங்களேன்”, என்று கேட்டான்.
“இதை ஏன் என்கிட்ட கேக்குறீங்க? யுவன் கிட்ட கேக்க வேண்டியது தானே?”
“அம்மாடியோ பையா கிட்ட போய் அதெல்லாம் கேக்க வாய் வராது. அதனால தான் உங்க கிட்ட கேட்டேன். கேக்க கூடாதுன்னு நினைச்சாலும் குழப்பமா இருக்கு. பிளீஸ் சொல்லுங்க”
“இப்ப என்ன? நாங்க எங்க போனோம்னு உங்களுக்கு தெரியணும் அவ்வளவு தானே? உங்களுக்கு காரணம் தெரியனும்னா நேரா உங்க பொண்டாட்டிக்கிட்ட போய்க் கேளுங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் சுசீலா.
மாயாவிடம் கேட்க அவனுக்கு கடைசி வரை தெம்பு வரவே இல்லை. உரிமையான பொண்டாட்டியாக இருந்தால் கேட்டிருப்பான் தான். ஆனால் அந்த உரிமையை மாயா கொடுக்காத போது அவனால் எப்படி கேட்க முடியுமாம்?
இப்படியே நாட்கள் கடக்க மாயாவின் கவுன்சிலிங்க் முடிய இன்னும் இரண்டு நாட்கள் இருந்தது. அன்று யுவனுக்கு வேலை அதிகமாக இருந்ததால் அவர்களை எப்படி அழைத்துச் செல்ல என்று யோசித்தான்.
வேறு வழி இல்லாததால் மாயாவுடன் சுமனை அனுப்ப முடிவு செய்தான். அதை சுசீலாவிடம் சொல்ல அவளும் “அப்ப நானும் இன்னைக்கு போகலை யுவன். சுமனும் மாயாவும் மட்டும் போகட்டும். போகும் போது ஏதாவது பேசிக்குவாங்க. சுமனுக்கும் உண்மை தெரியட்டுமே?”, என்று சொல்லி விட்டாள்.
அவன் சரி என்றதும் மாயாவிடம் சொல்ல இருவரும் காத்திருந்தார்கள். மாயா கிளம்பி வந்ததும் உடனே சுமனை அழைத்தான் யுவன்.
“சொல்லுங்க பையா”, என்ற படி வந்தான் சுமன்.
“இன்னைக்கு நீ மாயாவை கூட்டிட்டு போய்ட்டு வா. எனக்கு வேலை இருக்கு. மாயா, இன்னைக்கு சுமன் கூட போ”, என்று யுவன் சொன்னதும் எங்கே என்று கேட்க முடியாமல் “சரி”, என்றான் சுமன்.
ஆனால் அவனுக்கு குழப்பமாக இருந்ததால் “எங்கே?”, என்று கிசுகிசுப்பாக சுசீலாவிடம் கேட்டான்.
அவளும் “உங்க பொண்டாட்டியே உங்களை கூட்டிட்டு போவாங்க”, என்று கிசுகிசுப்பாக சொல்லி விட்டு சென்று விட்டாள்.
வேறு வழி தெரியாததால் காரை எடுத்தான் சுமன். மாயாவுக்கு தான் பதட்டமாக இருந்தது. எதற்காக செல்கிறேன் என்று தெரிந்தால் என்ன சொல்வானோ என்று பயத்துடன் தான் அவன் அருகே அமர்ந்திருந்தாள்.
அவளிடமும் அவன் எங்கே என்று கேட்க வில்லை. மாயாவே தான் வழி சொல்லிக் கொண்டே வந்தாள். அவள் தினமும் வரும் இடம் வந்ததும் வண்டியை நிறுத்தச் சொன்னாள். அவனுக்கும் அவள் சொன்ன இடத்தைக் கண்டதும் குழப்பம் தான்.
“மாயா இங்க எதுக்கு?”, என்று தயக்கத்தை உதறிக் கேட்டே விட்டான். அதற்கு மேல் அவனுக்கு பொறுமை இல்லை.
“உள்ள போயிட்டு வந்து சொல்றேன்”, என்று சொல்லி அப்போதும் அவன் பொறுமையை சோதித்து விட்டே உள்ளே சென்றாள் மாயா.
“என்னவா இருக்கும்?”, என்று யோசனையில் இருந்தான் சுமன்.
அவள் வரவுக்காக அவன் காத்திருக்க அவளோ என்ன சொல்லி அவனை சமாளிக்க என்ற யோசனையிலே வெளியே வந்தாள். கூடவே அதை எப்படிச் சொல்ல என்ற தயக்கமும் வந்தது. அவள் அமர்ந்ததும் காரை எடுத்தவன் போக்குவரத்தில் கலந்து பின் பை பாஸ் வந்த பிறகு தான் அவளை திரும்பி பார்த்தான்.
“இப்ப சொல்லலாமே? எதுக்கு சைக்காட்டிஸ்ட் பாக்க வந்த? தினமும் இங்க தான் வறீங்களா? எதுக்கு மாயா?”, என்று கேட்டான் சுமன்.
“அது அது வந்து…”, என்று எப்படிச் சொல்ல என்று தெரியாமல் இழுத்தாள் மாயா.
இவ்வளவு கேட்டும் அவள் சொல்லாதது அவனுக்கு கடுப்பை வரவழைக்க “என்னை உன்னோட கணவனா தான் ஏத்துக்கலை. அட்லீஸ்ட் ஒரு மனுசனா கூட என்னை நினைக்கலைன்னு இப்ப தான் தெரியுது மாயா. சாரி. இனி கேக்க மாட்டேன். என்னோட எல்லைக்குள்ளே நான் நின்னுக்குறேன்”, என்று விரக்தி குரலில் சொல்ல அவளுக்கு ஐயோ என்று இருந்தது.
“என்னங்க இப்படி பேசுறீங்க?”
“வேற எப்படி பேச சொல்ற? இத்தனை நாளா எங்க போறீங்கன்னு தெரியாம மண்டை காஞ்சு போய் இருக்கேன். நீயாவது சொல்லுவேன்னு பாத்தா நீயும் சொல்லலை. அப்ப நான் உனக்கு யாரோ தானே?”
“ஏன் நான் சொல்லாட்டியும் நீங்க கேட்டுருக்க வேண்டியது தானே?”
“நாம சாதாரண கணவன் மனைவியா இருந்துருந்தா கேட்டிருப்பேன். ஆனா நாம என்ன அப்படியா? இப்ப கேட்டும் கூட நீ சொல்லலை தானே?”
“எப்படி சொல்லனு தான் யோசிச்சேன். சொல்லக் கூடாதுன்னு யோசிக்கலை. என்னோட மனசுல இருக்குற பயம் எல்லாத்தையும் போக்குறதுக்கு தான் இங்க வந்தேன் போதுமா?”
“பயமா? உனக்கு என்ன பயம்? அதான் நாங்க எல்லாம் உன் கூடவே இருக்கோமே. எங்களை மீறி யாராவது உன்னை நெருங்க முடியுமா?”
“இவனுக்கு எப்படி புரிய வைக்க?”, என்று அவள் விழிக்க “என்ன மாயா யோசனை? எதுக்கு இங்கன்னு தானே கேட்டேன்?”, என்றான்.
“இல்லை.. அது வந்து… எப்படிச் சொல்லன்னு…”, என்று அவள் தடுமாற அவன் ஆர்வம் அதிகமானது.
“என்ன ஆச்சுன்னு என்கிட்ட சொல்லக் கூடாதா? நான் வேண்டாத ஆள்ன்னு சொல்லாம சொல்றியா? இவ்வளவு கஷ்டப் பட்டு நீ சொல்லவே வேண்டாம்”
அதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியாது என்று உணர்ந்தவள் “இல்லை.. அது.. அன்னைக்கு நீங்க என் கிட்ட வந்தப்ப, உங்களை காயப் படுத்தினேன்ல?”, என்று ஆரம்பித்தாள்.
“ஆமா, இது பெரிய விஷயமா? இதுக்கு எதுக்கு இங்க வரணும்?”
“அன்னைக்கு காயப் படுத்துன மாதிரி இன்னொரு தடவையும் நடக்க கூடாதுல்ல? அதுக்கு தான் வந்தேன்”
“அது எப்படி நடக்கும்? நான் தான் அன்னைக்கே உன்னை கஷ்டப் படுத்துற மாதிரி உன் பக்கத்துல வரக் கூடாதுன்னும் உனக்கு கனவு வந்தா கூட சுசீலாவை தான் கூப்பிடணும்னு முடிவு பண்ணிட்டேனே?”
“டியூப் லைட், இவனுக்கு எப்படி புரிய வைக்க?”, என்று அவள் பல்லைக் கடிக்க அவன் குழப்பம் அதிகமானது.
“எத்தனை நாள் தான் நீங்க என் கிட்ட வராம இருக்க முடியும்? எப்பவும் சுசீலாவையே கூப்பிட முடியுமா?”, என்று என்னைப் புரிந்து கொள்ளேன் என்ற பார்வையைப் பார்த்த படி கேட்டாள்.
“அவங்களை கூப்பிட முடியாட்டி என்ன? என்னை நீ எப்படி காயப் படுத்தினாலும் நான் வாங்கிக்குவேன். அதுக்காக டிரீட்மெண்ட் எல்லாம் எடுத்து கஷ்டப் படணுமா? இனிமே இங்க எல்லாம் வர வேண்டாம். நீ என்னை எவ்வளவு காயப் படுத்தினாலும் நான் உன் கூடவே இருப்பேன் மாயா”, என்று அவன் சொன்னதும் அவன் காதலில் உருகிப் போனாள் மாயா.
“என்னை சமாதானப் படுத்த என்கிட்ட நீங்க வரும் போது நான் உங்களை காயப் படுத்தினா பரவால்ல தான். ஆனா நாம சேந்து வாழணும்னா இந்த பிரச்சனை சரியானா தானே முடியும்? கல்யாணம் முடிஞ்சு எத்தனை நாள் ரெண்டு பேரும் தனி தனியா தூங்குறது? இதுக்கு ஒரு முடிவு வேண்டாமா?”, என்று எங்கோ பார்த்துக் கொண்டு கேட்க அதிர்ச்சியில் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் சுமன்.
தன்னுடைய காதில் விழுந்த வார்த்தைகளை கிரகிக்கவே அவனுக்கு சிறிது நேரம் எடுத்தது. அவளோ வெட்கத்தில் அவன் புறம் திரும்பவே இல்லை. அவனைப் பார்க்க அவளுக்கு தைரியமும் இல்லை.
“மாயா”, என்று ஆழ்ந்த குரலில் அழைத்தான். திரும்பி அவனைப் பார்த்தாள்.
“எனக்காகவா?”
“இல்லை, நமக்காகா?”
“ஏன் மாயா, நான் உன்கிட்ட இருந்து அது மட்டும் தான் எதிர்பாக்குறேனா?”, என்று கேட்டவனின் குரலில் சிறிது வலியும் எட்டிப் பார்த்தது. தனக்காக தான் கஷ்டப் படுகிறாளோ என்று எண்ணி அவ்வாறு கேட்டான்.
அதை சரியாக உணர்ந்து கொண்டவள் “உங்களுக்கு எப்படியோ எனக்கு தெரியாது. ஆனா சில நேரம் எனக்கு உங்களை தேடுது சுமன். உங்க தோள்ல சாஞ்சிக்கணும்னு தோணுது. ஏன்னா அந்த அளவுக்கு உங்களை எனக்கு பிடிக்கும். உங்களுக்கும் என்னைப் பிடிக்கும்னு தெரியும். நான் கஷ்டப் படுவேனோனு தான் நீங்க விலகி விலகி போறீங்க. அதுவும் எனக்கு தெரியும். ஆனா இது எத்தனை நாளைக்கு. என்னைக்காவது நான் உங்க தோள்ல சாஞ்சிக்கணும்னு நினைக்கும் போது நீங்க கண்டிப்பா தோள் கொடுப்பீங்க தான். ஆனா நான் அப்ப வேற மாதிரி நடந்துக்கிட்டா என்ன பண்ணுறது? அதனால தான் செக் பண்ண போனேன்”
“டாக்டர் என்ன சொன்னாங்க?”
“முன்னேற்றம் இருக்குனு தான் சொன்னாங்க. ஆனா எனக்கு வித்தியாசம் எதுவும் தெரியலை”
“எதனால அப்படி சொல்ற?”
“நான் என்னை செக் பண்ணுற மாதிரி எந்த விஷயமும் நடக்கலை”, என்று வேறு பக்கம் பார்த்துக் கொண்டே சொல்ல அவன் கண்கள் மின்னின.
“இப்ப செக் பண்ணுவோமா?”, என்று கிசுகிசுப்பான குரலில் அவன் கேட்க வெட்கம் அதிகமானதால் தன்னுடைய கைகளால் தன்னுடைய முகத்தை மூடிக் கொண்டாள் மாயா.
அவள் வெட்கத்தை ரசித்தவன் அடுத்த நொடி அவளை நெருங்கி அவள் முகத்தில் இருந்த கையை விலக்கினான்.
அவன் முகம் காண முடியாமல் அவன் நெஞ்சிலே தன்னுடைய முகத்தை அவள் மறைக்க அவளை சுற்றி தன்னுடைய கையை போட்டுக் கொண்டான்.
தங்களின் முதல் தொடுகையை இருவரும் ரசித்த படி அசையாமல் இருந்தார்கள்.
வேறு எதுவோ ஒரு காரின் சத்ததில் இருவரும் நடப்புக்கு வந்தார்கள். அவன் அவளை நெருங்கியும் அவள் விலகாமல், கோபப் படாமல் இருப்பதைக் கண்ட சுமன் “டாக்டர் கேட்டா முன்னேற்றம் இருக்குன்னு சொல்லு மாயா”, என்று சொல்லி அவளை மேலும் வெட்கப் பட வைத்து விட்டே காரை எடுத்தான். அவனையும் அவன் கிண்டலையும் ரசித்த படியே வந்த மாயாவுக்கு இப்போதெல்லாம் பழைய நினைவுகள் வருவதே இல்லை.
கடைசி நாள் கவுன்சிலிங்குக்கும் அவளை சுமன் தான் அழைத்துச் சென்றான். அந்த நாளும் நல்ல படியாக முடிந்தது.