20.
“மேடம் இந்தாங்க உங்க ரிப்போர்ட்” என்று கையில் ரிப்போர்ட் தந்தவுடன் அதை பிரித்து பார்க்க கூடஅவளுக்கு பயமாக இருந்தது. என்ன ரிசல்டா இருக்கும்? ஒருவேளை நெகட்டிவ்னா என்ன பண்றது ? இதெல்லாம் எப்படி ஏத்துக்க போறேன்? இதெல்லாம் தாங்கும் அளவு என் மனசுக்கு சக்தி இல்லையே ?, என்ன பண்ணட்டும் .என்று மனதளவில் முழங்கிக் கொண்டிருந்தவளை தேற்றினாள் பார்வதி.
“என்ன லதா இப்படி யோசிக்கிறீங்க”
“இல்லை பாரு எனக்கு ஒரு மாதிரி பயமா இருக்கு”என்றாள் லதா.
“இல்லை பார்வதி இங்கே வேணாமே நம்ம வீட்ல போய் ரிலாக்ஸாக பார்ப்போமே ” என்க சரி என்று அழைத்துக் கொண்டு வீட்டை நோக்கி பயணித்தனர். பங்கஜம் பாட்டி வேறு போன் மேல் போன்…
“கன்னு எல்லாம் நல்லதே நடக்கும் பயப்படாத நம்பிக்கை மட்டும் விடாத ” என்றெல்லாம் கூறி பாட்டி திடப்படுத்தியது அவளை. அவளும் பங்கஜம் சொன்ன தைரியமும் பார்வதி கொடுக்கும் ஆதரவுடன் ரிசல்ட் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்பது போல் இருந்தால் ஆனாலும் மனசுக்குள்ள ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்தது. அதுவும் இந்த விஷயத்தில் எல்லா பெண்களும் படபடப்புடன் தான் இருப்பார்கள். கேட்டட் கம்யூனிட்டி வாயில் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் மதிய நேரத்தில் ஆனால் இன்று ஏனோ மூடியே இருந்தது.
“வாச்மேன் வாச்மேன் ” என்று குரல் கொடுத்தாள் பார்வதி.
“என்ன பார்வதி நேரம் காலம் புரிஞ்சிக்காம இந்த வாச்மேன் வேற படுத்துறான் “என்றாள் லதா.
பார்வதி சற்று சிரித்துவிட்டு”நீ டென்ஷன் ஆகாத லதா. இரு அவரே வந்து திறந்து விடுவார்” என்று காத்துகிடக்க வாட்ச் மேன் நீர் பாய்ச்சும் வேலையை விட்டுவிட்டு வந்து கேட்டை திறந்தார்.
ஏன் இவ்ளோ லேட் என்றதற்கு அவர் ஆங்கிலத்தில் நீர் பாய்ச்சும் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தேன்,இன்று அந்த வேலையை செய்யும் கார்டனர் லீவ் போட்டதால் தான் செய்வதாக கூறினார்.
சரி சரி வா பாரு லிப்ட்ல போலாம் …என்று இருவரும் லிப்டில் நின்றனர்.
‘ஸ்ஸிக் ‘ அலுங்காமல் குலுங்காமல் மூன்றாவது மாடிக்கு வந்தனர். பங்கஜம் பாட்டி ஏற்கனவே சக்கரை தண்ணியோடு காத்திருந்தது.
“வா வா உக்காருங்க இரண்டு பேரும்” என்று அமர சொல்லி ஏசி ஆன் செய்து விட்டு ஆசுவாசப்படுத்தினார் பங்கஜம்.
‘ஐயோ புள்ள என்ன மனநிலைல இருக்கும்னு நல்லா தெரியுது. டாக்டர் வேற என்ன சொல்லி அனுப்புனாரு தெரியலை.’ என்று யோசித்தவாறு.
“பாரு உனக்கும் லதாவுக்கும் மோர் எடுத்துட்டு வரவா ” என்க அதே சமயம் ஜாடையில் என்ன ஆச்சு என்று வினவ. பாருவோ கையை விரித்து தெரியலை என்று கூற பங்கஜத்திற்கு இன்னும் சங்கடங்கள் ஏற்படுத்தியது.
‘என்னடா இது ,இவ மனசை விட்டு அழுதா கூட தேவலாம் போலருக்கு ஆனால் இவ அமைதியா இருக்கிறதை பார்த்தா பயமா இருக்கு ‘.என்று நினைத்துக் கொண்டு…
“அம்மாடி அந்த ரிப்போர்ட் கொடு நான் பார்த்து சொல்றேன் “- பங்கஜம்.
“இல்லை அத்தை வேணாம் எனக்கு பயமா இருக்கு எதுக்கும் சாமி ரூம்ல வச்சிக்கிட்டு அப்றம் எடுத்து பார்க்கலாம்*- லதா
“லதா நீ இவ்ளோ பயப்படுற அளவு ஒன்னுமில்லை எடுத்து பார்க்கலாம் கொடேன் ” – பார்வதி.
“இல்லை பாரு சாமி ரூம்ல வச்சிட்டு வந்துடறேன் ” – லதா.
“விடு பாரு அவ எப்போ தோணுதோ எடுத்து பார்க்கட்டும் ” என்று பங்கஜம் கூறிவிட்டு மோர் எடுத்து வந்து தந்தார். மோரை குடித்துவிட்டு சற்று நேரம் ஆராமாக அமர்ந்தாள். இவள் மருத்துவமனை சென்று வந்தது கோபிக்கு தெரிந்ததால் அலுவலகத்திலிருந்து விரைவாக வந்தான். அவன் வந்ததும் பங்கஜம் மற்றும் பாரு எழுந்து சென்றனர்.
இனி எல்லாம் கோபி பார்த்துக்கொள்வான் என்று பங்கஜம் புரிந்துக்கொண்டு நகர…பாரு சட்டென்று…
“அம்மா,அவளை இந்த நிலையில் விட்டு வந்துட்டோம் பரவாயில்லையா”
என்க..
“அதான் அவ புருஷன் வந்துட்டான்ல அவனே கவனிச்சிக்குவான் ” என்று சிரிக்க…
“அம்மா அவ இன்னும் ரிசல்ட் எடுத்து பார்க்கலை பாசிட்டிவ்னா பரவாயில்லை ஆனால் நெகட்டிவ்னா அவளை சமாளிக்க கோபியால முடியுமானு தெரியலை” என்க
“அப்படி முடியலைனா அவனே கூப்பிடுவான் நீ வா பாரு”
வீட்டுக்கு வந்த பாரு லதாவை பற்றி நினைத்துக்கொண்டு இருந்தாள். தனிஷ்க் ஓடி வந்து…
“மாம் இன்னைக்கு என்னோட பிறந்தநாள், எதுவும் செல்ஃப்ரேஷன் இல்லையா” என்றதும் தோன்றியது..
ஆஹா இது நல்ல ஐடியாவாச்சே நம்ம லதாவோட மனநிலையை சரி பண்ண இது ஒரு நல்ல ஐடியாவா இருக்கு. என்று நினைத்துவிட்டு தன் மகன் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தாள்.
கோபி லதாவை ஏறெடுத்து பார்த்தான்
“லதா அந்த ரிப்போர்ட் எடு பார்ப்போம்”
“எனக்கு பயமா இருக்கு கோபி”
“எதுனாலும் பரவாயில்லை எடு பார்த்துடலாம்” என்று அவனே சாமி ரூமில் இருந்த அந்த ரிப்போர்ட் எடுத்தான். அவனுக்குள் ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்கிறது ஆனால் வேறு வழியின்றி அதை எடுத்துப் பார்க்க அவன் முகத்தில் சிரிப்பு தொற்றிக்கொண்டது…
“வாவ் சூப்பர் லதா….கங்க்ராட்ஸ் “என்று கத்தினான்.
“என்ன சொல்ற கோபி”
“அச்சோ நீ அம்மா ஆக போற நான் அப்பா ஆக போறேன் டி பைத்தியம் “என்க..
அவளால் இயல்பாக இருக்க இயலவில்லை வானத்துக்கும் பூமிக்கும் குதித்தாள்.
“ரியலி….நம்பவே முடியல”
“நம்பி தானே ஆகனும் இந்தா நீயே பார்” அவளும் வாங்கி பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தாள்.
“கோ…கோபி என்னால நம்ப முடியலை “என்று அவனை கட்டியணைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தாள். இருவரும் தங்களுக்குள் மகிழ்ச்சி பரிமாற்றம் செய்துகொண்டு இருக்க உடனே பார்வதியிடம் இருந்து போன் வந்தது.
“லதா தனிஷ்க் இன்னைக்கு பிறந்தநாள் கேக் கட்டிங் பண்ண போறோம் நீயும் கோபியும் வந்திடுங்க “என்று அழைக்க இவளும் சரியென்று தலையசைத்து போனை வைத்தாள்.
பலூன் ,கேக் எல்லாம் வைத்து அவள் வீட்டில் அவனுடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டது . அந்த கொண்டாட்டத்தில் கோபி மற்றும் லதாவுடன் மற்ற நண்பர்களும் கலந்துக்கொண்டு கொண்டாடினர். அந்த கொண்டாட்டத்திற்கு நடுவே பங்கஜம் அவளுடைய விசேஷம் பற்றி அறிந்துக் கொண்டு சந்தோஷம் அடைந்தாள். பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எல்லோரும் லதாவுக்கு கன்சிவ் ஆன வாழ்த்தையும் தெரிவித்தனர். இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது
பங்கஜம் கோபியிடம் “கோபி இவ இனிமே என் வீட்ல என்னோட அரவணைப்பில் இருக்கட்டும். இந்த மாதிரி நேரத்துல பெரியவங்க துணை தேவைப்படும் சொல்வாங்க ,நான் இவளை நல்லா சாப்பிட வச்சு வேளா வேளைக்கு மருந்து எல்லாம் கொடுத்து நல்லா கவனிக்கிறேன் ஓகேவா”
“அம்மா அது வந்து “- கோபி.
“என்ன வந்து போய்னு ஓஹோ அவளை விட்டு பிரிஞ்சி இருக்க முடியாது நினைக்கிறியா அப்படினா நீயும் அங்க வந்து நைட் நேரத்தில் தங்கிட்டு போ” – பங்கஜம்.
“சரி மா”
இவள் கருவுற்ற செய்தி ஊரில் உள்ள கோபி குடும்பம் மற்றும் லதா குடும்பத்திற்கு தெரிய வந்தது. எல்லோரும் அவளை வந்து எங்க விட்டுப் போகும்படி அறிவுறுத்தினர் ஆனால் அவள் இங்கு நல்ல முறையில் பங்கஜம்மாள் பார்த்துக் கொள்ளப்படுகிறாள் என்று கூறியதால் சரி என்று விட்டுவிட்டனர்.
நாட்கள் அப்படியே மெதுவாக உருண்டோடி சென்றது. அங்கு சித்தி இருக்கும் நான்கு தமிழ் குடும்பமும் அவ்வப்போது வந்து லதாவை பார்த்துவிட்டு சாப்பிடுவதற்கு ஏதேனும் கொடுத்துவிட்டு செல்வர். மருத்துவமனைக்கு செல்லும் போதெல்லாம் பார்வதியின் துணையை தேடினாள் லதா. லதாவுக்கும் பார்வதிக்கும் நடுவே ஒரு நல்ல தோழமை ஏற்பட்டது. தினமும் பார்வதியும் லதாவும் கார்டனில் வாக்கிங் செல்வது வழக்கமாகவும் மாறியது.
“என்ன லதா டையர்டா இருக்கா கொஞ்ச நேரம் பெஞ்ச்ல உட்காரலாமா “என்றாள் பார்வதி.
“ம்ம் ஆமா பாரு வா உட்காரலாம்”
“உனக்கு இந்த சிங்கப்பூர் பிடிச்சதா”
“எனக்கு சிங்கப்பூர் பிடிச்சதோ இல்லையோ இந்த கேட்டட் கம்யூனிட்டில இருக்கிற வாழ்க்கை ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க எல்லாரையும் பாக்குறப்ப ரொம்ப ஹேப்பியா இருக்கு. நம்ம எங்க இருக்கிறோம்னு முக்கியமில்லை நம்மள சுத்தி யார் இருக்கிறாங்க அப்படிங்கறதுல தான் சந்தோஷமே அடங்கியிருக்கு ” என்றாள் லதா.
“உண்மை தான் லதா” என்று அவளும் புன்னகை உதிர்த்தாள் ” எதர்ச்சையாக மதன் கார்டனுக்கு வந்தான்.
“ஹாய் சிஸ்டர்ஸ் உங்க கூட்டணில என்னையும் சேத்துப்பீங்களா”.என்றான் மதன்
“அதற்கு என்ன ப்ரோ வாங்க”என்றாள் பார்வதி.
“லதா இப்போ உங்க ஹெல்த் எல்லாம் எப்படி இருக்கு ” என்றான் மதன்.
“ம்ம் பரவாயில்லை நார்மலா இருக்கேன் ஆனா வாமிட்டிங் சென்சேஷன் மட்டும் இருக்கு ” என்றாள் லதா.
“ஓஹோ…இட்ஸ் ஓகே சில் பேபி ” என்று கண்சிமிட்டி அவளை ஆசுவாசபடுத்தினான்.
“லதா…மதன் ரொம்ப நல்லவன் தெரியுமா , ஒருவாட்டி எங்க அப்பா கீழே விழுந்து கால் அடிபட்டு இருந்தப்ப இவன் தான் வந்து ஹெல்ப் பண்ணான். பார்க்க தான் மார்டன் பட் ஸோ ஸ்வீட்” என்றாள் பார்வதி.
“ஹாஹா க்ரேட். பொதுவாக மார்டனா இருக்கிறவன் எல்லாம் கெட்டவங்க திமிர் பிடிச்சவங்கன்னு மக்கள் நினைப்பாங்க அதுவும் நம்ம ஊர் பக்கம்லாம் ஆனால் நடை உடை பாவனை அவங்க அவங்க சவுகரியம். அதை வச்சு எல்லாம் ஒருத்தரோட கதாபாத்திரத்தை முடிவு பண்ணக்கூடாது அப்படிங்கிறது என்னுடைய கருத்து. “என்றாள் லதா.
“கரெக்டா சொன்னிங்க லதா” என்றான் மதன்.
“ஆமா மதன் நீங்க ஏன் மித்ராவை கல்யாணம் பண்ணிக்க கூடாது?”என்று வெடுக்கென்று கேட்டாள் லதா.
“நல்ல கேள்வி…ஆனால் பதில் சொல்ல தெரியல லதா. எங்களுக்குன்னு பெருசா உறவுன்னு யாருமில்லை அதுவும் மித்ரா ஒரு ஆஸ்ரமம்ல வளர்ந்த பொண்ணு,அவ வேலை பார்த்த கம்பெனில நான் மேனஜரா இருந்தேன் இந்தியால இருக்கிறப்போ அப்போ இரண்டு பேருக்கும் பிடிச்சது. சிங்கப்பூர் வந்தோம் நல்லா சம்பாதிக்கலாம்னு இப்போ எங்களுக்கு எல்லாம் இருக்கு கை நிறைய பணம் ,லக்ஸரி லைஃப் எல்லாம். எனக்கு அவ துணை அவளுக்கு நான் துணை இதுக்கு நடுவுல கல்யாணம் எதுக்குன்னு தோணுது ?, சோஷியல் ப்ரஷர்னால மே பி நீங்க எல்லாரும் கல்யாணம் பண்ணிருக்கலாம் ஆனால் உண்மையை சொல்லுங்க நீங்க எல்லாரும் விரும்பியவரையே கட்டிக்கிட்டிங்களா ? ” என்க ….
இல்லை என்பது போல் தலை குனிந்தாள் லதா .
“ஸோ விரும்பியவரு உங்க யாருக்கும் கிடைக்கலை , அட்லீஸ்ட் அவங்கள நினைச்சு பார்க்க கூட உங்களுக்கு நேரம் இருக்கா? கிடையாது தானே ? ஆனால் எனக்கு அப்படி இல்லை…எனக்கு பிடிச்ச பொண்ணோட நான் சந்தோஷமா எந்த சோஷியல் ப்ரஷர் இல்லாமல் வாழ்றேன். இந்த லைஃப் எனக்கு மட்டும் இல்லை மித்ராவுக்கும் பிடிச்சிருக்கு.” என்று புன்னகையித்தான்..
தொடரும்.